bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 12 டிசம்பர், 2019

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதோ...
தரமற்ற குழாய் நீர்
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணித்த புத்தசாகர் என்ற சமண துறவி, குடிநீர் மளிகைக் கடைகளில் விற்கப்படும் என்று தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தார். தற்போது அது உண்மையாகிவிட்டது. தூய்மையான நீர் என்று கருதி வீட்டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைகளிலிருந்து நாம் கேன் வாட்டர் வாங்கிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஏன் நாம் முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது?
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்காது என்று நாம் கருதுகிறோம். குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதைக் காணும் கொடூரம் அடிக்கடி நமக்கு நேர்கிறது. இந்தக் கொடூர அனுபவம் ஒரு மத்திய அமைச்சருக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக சமீபத்தில் தரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நகரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து 11 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த 11 இடங்களில் ஒன்று
டெல்லி கிரிஷிபவன், எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் அலுவலகம்.
அனைத்து மாதிரி நீர்களும் 19 வகையான தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. சோகம் என்னவென்றால், தரச்சோதனையில் ஒரு நீர் மாதிரிகூட வெற்றிபெறவில்லை.
அசுத்தம், கடினத்தன்மை, காரத்தன்மை, தாதுப்பொருள்கள், நுண்ணுயிர் தடயங்கள் என எந்த ஒரு சோதனையிலும் இந்த 11 நீர் மாதிரிகளும் வெற்றிபெறவில்லை.
இறுதியில் இந்தச் சோதனை அரசியல் மோதலுக்கு வித்திட்டுவிட்டது. டெல்லி அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகப் பொங்கி எழுந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமற்றது என்பதை நேர்மையாகவும் அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்க முடியுமா என அதிரடியாக சவால் விடுத்தார்.
அனைத்து மாநில அரசுகளும் சுத்தமான குடிநீரை விநியோகிக்க ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் டெல்லி அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் அல்ல என்றும் கூறி சர்ச்சையை தணிக்க முயன்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
நாட்டின் அனைத்து நகரங்களிலும் விநியோகிக்கப்படும் குடிநீர், இந்திய தர ஆணையம் நிர்ணயித்துள்ள அளவுகோலின்படி, தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் உறுதி அளித்துள்ளார். அதோடு, இந்திய தர ஆணையம் நிர்ணயித்துள்ள அளவுகோலுக்கு இணங்க தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்று அனைத்து தண்ணீர் நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய தர ஆணையத்தின் அளவுகோள்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என்றும், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் அனைத்து மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருப்பதால், இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.
நாடு தழுவிய சோதனை சாத்தியமா?
வாட்டர் கேன்களும் பிற 140 தயாரிப்புகளும் இந்திய தர ஆணையத்தின் அளவுகோலின்படி இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு உற்பத்திப் பொருளாக இருந்தாலும், எந்த ஒரு சேவையாக இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது.
விநியோகிக்கப்படும் குடிநீர் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கான சமீபத்திய முயற்சிகள், குடிநீரின் தரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையே காட்டுகிறது. குடிநீரின் தரத்தை சோதிப்பதற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பொது சுகாதாரத் துறைகளுடனும் நகராட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய தர ஆணைய அலுவலர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.
குழாய்கள் மூலமாக பயன்படுத்தப்படும் தண்ணீர் தரமற்றதாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வரையறுக்கப்பட்டதைவிட அதிக மாசு கொண்டதாக யமுனா நதி நீர் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் இந்திய தர ஆணையத்தின் அளவுகோலின்படி இருக்க வாய்ப்பு உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுவரும் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டுவரும் குடிநீர் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்துவருகிறது.
குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தர அளவுகோலுக்கு இணங்க நாட்டில் உள்ள மாநிலங்களும் சீர்மிகு நகரங்களும் மாவட்டங்களும் விரைவில் தரவரிசைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான இந்திய தர அமைப்பு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு குடிநீர் மாதிரிகளைக் கொண்டு இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், பெரும்பாலான மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 10 குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அந்த மாதிரிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், சர்வதேச அளவில் தரமான குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகரங்களில் ஒன்றாக மும்பை உருவெடுத்துள்ளது.
ஹைதராபாத், புவனேஸ்வரில் எடுக்கப்பட்ட தலா 10 குடிநீர் மாதிரிகளில் ஒரு மாதிரி மட்டும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக, மும்பைக்கு அடுத்த இடத்தை ஹைதராபாத்தும் புவனேஸ்வரும் பெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேசத்தின் அமராவதி மாநகரில் பரிசோதிக்கப்பட்ட 10 குடிநீர் மாதிரிகளில் 6 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதே நேரத்தில் டெல்லி, சண்டிகர், திருவனந்தபுரம், பாட்னா, போபால், குவஹாத்தி, பெங்களூரு, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டேராடூன், கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் பரிசோதிக்கப்பட்ட தலா 10 குடிநீர் மாதிரிகளில் ஒன்றுகூட நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மற்ற மாநில தலைநகரங்களில் பரிசோதிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் குறித்த தர அறிக்கை வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களிலிருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்
நீர் வளங்களைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி ஆர்வம் உண்டு. தண்ணீர் என்பது கொள்கை ரீதியாக கையாளப்பட வேண்டிய விவகாரம் என்பதில் அவர் காட்டிய ஆர்வத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் 2002ஆம் ஆண்டுக்குப் பயணிக்க வேண்டும்.
நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வடக்கு குஜராத், செளராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவிவந்தது. ரயில்கள் மூலமாகவும் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகிப்பதில் உள்ள சிரமங்களை அலுவலர்கள் அவரிடம் தெரிவித்தனர். இந்தப் பிரச்னைக்கு தற்காலிக தீர்வை தேடுவதற்குப் பதிலாக நிரந்தர தீர்வினை எட்டுவதே மிகவும் முக்கியம் என்பதை அலுவலர்களுக்கு மோடி அறிவுறுத்தினார்.
அடுத்த ஆறு ஆண்டுகளில் தீர்வு எட்டப்பட்டது. மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் 2008ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. மாநிலத்தின் 80 விழுக்காடு வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
மழை காரணமாக குஜராத்தில் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட்டதோ அந்த வெள்ளநீர் தெற்கு குஜராத்திலிருந்து செளராஷ்டிராவுக்கும் வறண்டு காணப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் திருப்பிவிடப்பட்டது. இதனால், நீர்த்தேக்கங்கள் நிரம்பின. பாசனத்திற்காக கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. நிலத்தடி நீர் புத்துயிர் பெற்றது.
2019 இல் குஜராத்தில் கனமழை பெய்தபோது, மாநிலத்தின் ​​நீர்த்தேக்கங்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் நீரை தேக்கின. குஜராத்தில் ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களால், மாநிலத்தின் மொத்தமுள்ள 18 ஆயிரத்து 500 கிராமங்களில் 14 ஆயிரம் கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து விடுபட்டன.
தண்ணீரை சேமிப்பதிலும் அவற்றை பயன்படுத்துவதிலும் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறை என்பது மிகச்சிறந்த உதாரணம் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை. குஜராத்தில் கிடைத்த இந்த வெற்றி நாடு முழுமைக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.
அசுத்தமான குழாய்நீரை குடித்ததால் 2009ஆம் ஆண்டு ஹைதராபாத்திலும் போலாக்பூரிலும் ஏழு பேர் உயிரிழந்தனர். தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்தமான தண்ணீர், நன்னீர் குழாய்களுக்குள் சென்றதே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இது குறித்து புகார் அளித்தும் அலுவலர்கள் அலட்சியம் காட்டியதாலேயே ஏழு அப்பாவி உயிர்கள் பறிபோனதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.
குடிநீரின் தரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் ஆனால், அலுவலர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியது.
தற்போதும் சமையலறை குழாய்களைத் திறந்தால் அதில் அசுத்தமான தண்ணீர் வருவதைப் பார்க்க முடிகிறது. என்ன ஒரு துர்பாக்கிய நிலை!

வளரும் ஆனா வளராது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அயோத்தி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 

உச்சநீதிமன்றத்தில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு 18 மனுக்களையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதற்கு மனுக்களை ஏற்க வேண்டும்.ஐந்து பேர்கள் கொண்ட அமர்வை உருவாக்க வேண்டும்.
இது தொடர்பாக மேல் முறையீடு கிடையாது என அறிவித்து விடலாமே.
--------------------------------+-------------------------------------
பொருளாதார மந்தநிலைதான் இப்போது இந்தியா சந்தித்துள்ள மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே நாட்டின் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 

இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இன்னும் மோசமாக, பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகக் குறைந்தது. 
இந்த முழு நிதியாண்டிலும் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. முன்னதாக வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வேளாண் துறையில் அறுவடை மந்தமாக இருந்ததாலும், போதிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால் நுகர்வு குறைந்துள்ளதாலும்தான் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது மற்றும் கடன் சேவை சிறப்பாக இல்லாதது போன்ற காரணங்களாலும் பொருளாதார வளர்ச்சி மங்கியுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


செப்டம்பர் மாதத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், 2019ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும், 2020ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருக்கும் என்று கூறியிருந்தது. ஆட்டோமொபைல், உற்பத்தித் துறைகளில் மந்தநிலை நிலவுவதால் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் மூடிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 2019-20ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று கூறியது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபிட்ச் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்திய வளர்ச்சி மதிப்பீட்டை 5.6 சதவீதமாகக் குறைத்தது நினைவுகூறத்தக்கது.
-----------------------------------------------------+++

ஞாயிறு, 24 நவம்பர், 2019

ஆளுநரின் முடிவானது தெளிவில்லை

பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்த மகாராஷ்டிரா ஆளுநரின் முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியது. 

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க அணிக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர்.
பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் இன்னும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவாருக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதில் தெளிவில்லை.
 உச்சநீதிமன்ற நீதிபதிகள், பாஜகவை மகாராஷ்டிர ஆளுநர் ஆட்சி அமைக்கக் கோரி அழைப்பு விடுத்த கடிதத்தையும், தங்களுக்கு உள்ள ஆதரவை தெரிவிக்க பட்னவிஸ் ஆளுநரிடம் சமர்ப்பித்த கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டனர்.
மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்க தொடங்கியது உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக நேற்று பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித் பவரின் முடிவை தாங்கள் ஆதரிக்கவில்லை என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
இன்றே (ஞாயிற்றுக்கிழமை) பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
மனுதாரர்களின் சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிங்வி ஆஜரானார்கள்.

பாரதிய ஜனதா கட்சி இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதம் .
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தை தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று தனது வாதத்தை தொடங்கினாட் கபில் சிபல்.
அவர், "சுயேச்சையாக செயல்படுவதற்கு ஆளுநருக்கென சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால், அது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும், அரசமைப்புக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்"என்றார் கபில்.
அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் என்றும் கபில் சிபில் வாதிட்டார்.

மேலும் அவர், "மகாராஷ்டிரா ஆளுநர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்".
எதன் அடிப்படையில் பட்னவிஸை முதல்வராக பதவி ஏற்க செய்தார் ஆளுநர்? பெரும்பான்மை கோரப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார் கபில்.
"காலை 5.57 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அடுத்து 3 மணி நேரத்திற்குள்ளேயே பட்னவிஸும், அஜித் பவாரும் பதவி ஏற்கிறார்கள். இது மிகவும் விநோதமாக உள்ளது. நாட்டில் எமெர்ஜென்ஸி நிலவுகிறதா?" என்று தனது வாதத்தை முன் வைத்தார் கபில் சிபல்.
பெரும்பான்மை இருப்பதாக அவர்கள் கருதினால், அவர்கள் இன்றே அதனை நிரூபிக்க வேண்டும் என்றார் கபில்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு இதே போன்றதொரு சூழ்நிலை நிலவியபோது, 24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை தனது தரப்பு வாதத்தின்போது கபில் சிபல் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரான துஷார் மேத்தா, எந்த தரப்புக்காக இந்த வழக்கில் ஆஜராகியுள்ளதாக நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த மேத்தா, "இந்த வழக்கு குறித்த தகவல், எனக்கு நேற்று நள்ளிரவு அளிக்கப்பட்டதால்தான் நான் இங்கு இருக்கிறேன். எனினும், நான் இந்த வழக்கில் எந்த தரப்புக்காக வாதிட வேண்டும் என்பது குறித்து எனக்கு எவ்வித வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

சட்டம் நிலைநிறுத்தப்படும் என தாங்கள் நம்புவதாக ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்.
இப்படியான சூழலில், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காக்கடே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 16 நவம்பர், 2019

திப்புவின் புலி

 கர்நாடக பாரதிய ஜனதா அரசு. திப்புசுல்தான் பற்றிய பாடங்களை வரலாற்று புத்தகங்களில் இருந்து நீக்கியுள்ளது.
திப்புசுல்தான் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒருவர் .



வெள்ளையருக்கெதிரான போர் இந்திய விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கம் என்பது நமக்கு தெரியும். 

ஆனால் பாஜக செயல் அவர் தேசிய தலைவரா?


 சுதந்திர போரட்ட வீரரா?


 சர்வாதிகாரியா என்ற பன்முககோண அலசலுக்கு வித்திட்டுள்ளது. 

கேரளா – கர்நாடக மாநில வட – தென் எல்லைப்பகுதியை உள்ளடக்கிய மலபார் பகுதி முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியாகும். 
அப்பகுதியைச் சேர்ந்தவர்தான் திப்புசுல்தான்.

“திப்பு” என்பது பன்முகத்தன்மை கொண்டவர் என்பது பொருள். “சுல்தான்” என்பது மன்னன் என்று பொருள்.
தற்போது இந்திய வரலாற்றில் கேரளாவை யொட்டியுள்ள மைசூர் பகுதியை தனது போரின் மூலம் கைப்பற்றி மைசூர் மகாணத்தை ஆண்டவர் திப்பு சுல்தான் என்பது வரலாறு.
தற்போது கர்நாடக பாரதிய ஜனதா அரசின் இந்த நடவடிக்கை (அவரது வரலாற்றைக் நீக்கியது) அவரைப்பற்றிய வரலாற்றை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளாவண்ணம் இருட்டடிப்பு செய்வதுதான்.

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால்விடும் வகையில் ஆட்சி செய்தவர். ஆங்கிலேருக்கு எதிரான மைசூர் போரில் உயர்ந்தவர்.
 ஆனால் போரினால் கேரளாவில் உள்ள மலபார் பகுதிகளையும், கர்நாடகாவில் உள்ள குடகு பகுதியையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்.
 ஆனால் அவரது ஆட்சியின் கீழ் மாற்றுமதத்தினரையும் கையகப்படுத்திய பகுதியை சேர்ந்த மக்களையும் அவரது இராணுவத்தினர் நடத்திய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திப்புவின் ராணுவ வீரர்கள் மாற்று மதத்தினரை அவர் நடத்திய விதத்தையும் மதம் சார்ந்த தவறான கண்ணோட்டமாக கருதப்படுகிறது.

கர்நாடக அரசின் முடிவான திப்புசுல்தான் வரலாறு பற்றிய பாடங்கள் பள்ளிப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்ட விதம் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகிறது. 2013ல் கர்நாடகாவில் பதவியேற்ற காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் பிறந்த நாளை “திப்பு ஜெயந்தி” என்று அரசு விழாவாக கொண்டாடியது.
திப்பு சுல்தானை சுதந்திர போரட்ட வீரர் என்றே கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்து விழா எடுத்தது. இந்நிலையில் வரலாற்றில் திப்புசுல்தானை எவ்வாறு ஒப்பிடுவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து திப்பு சுல்தானுக்கு எதிராகவே உள்ளது.
அப்போது கேரளாவில் துறைமுகங்கள் மூலமாக ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு ஏற்றுமதியும் மரங்கள் ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தது.
 இது மைசூர் மன்னனால் கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 1766ம் ஆண்டு திப்புவின் தந்தையான ஹைதர் அலி தனது படையுடன் மலபார் பகுதிக்கு சென்று கண்ணனுரைச் சேர்ந்த முஸ்லிம் மன்னரிடம், அவரது ஆளுமைக்கு அடுத்துள்ள பகுதியை சேர்ந்த மன்னனான கொலித்ரி மன்னரை வீழத்தி கோழிக் கோடு சமஸ்தானத்தை கைப்பற்ற உதவுதாக உறுதியளித்தான்.
மலபார் பகுதியில் குறுநில மன்னர்கள் பிரிந்திருந்த வேளையில் மைசூர் மன்னன் மலபார் பகுதியை படையெடுத்து வென்றான்.
இதனால் கொச்சி சமஸ்தானமும் மைசூர் மன்னனின் கீழ் வந்தது.
 வீரர்களின் பிணக்குவியல் மத்தியில் திப்பு
இருப்பினும் ஹைதர் மற்றும் திப்புவின் கனவான தென்கேரளாவிலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கைப்பற்றும் கனவு நிறைவேறவில்லை.

கேரளாவை சேர்ந்த வரலாற்று நிபுணர் எம்.ஜி.எஸ். நாராயணன் “திப்பு தனது ஆளுமையின் கீழ் பல சமஸ்தானங்களை கொண்டு வரவேண்டுமென்ற தீராத வேட்கை கொண்டவர்”. அதிகாரத்திற்காகவே தனது ஆளுமையின் கீழ் பல்வேறு தென் பகுதிகளை கொண்டு வந்த பிறகு மாற்று மதத்தினரையும் தனது கருத்துக்கு உட்பட செய்தார், உன்றே குறிப்பிடுகிறார்.

குறிப்பாக மேல் ஜாதி இந்துக்களின் கலாச்சார நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காமல் புறந்தள்ளியதாகவும்;, இது போன்ற அடக்கு முறைகள் இந்திய, பிரிட்டீஷ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திப்பு போர் திறனில் வலிமைமிக்கராகவும் சிறந்த நிர்வாக திறன் படைத்திருந்தாலும் அவரை தேசிய தலைவராகவோ அல்லது சுதந்திர போரட்ட வீரராகவோ கருத இயலாது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள் கோவில்களை கொள்ளையடிப்பதையும், தடுத்தவர்களை கொலை செய்து அவரும் அவரது படையினர் வென்றவிதம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திருக்கிறது.
அத்துடன் இந்து பெண்களை கற்பழித்த செயல்பாடுகளும் அவரை சிறுமைப்படுத்தியுள்ளது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சசிபூஷண். அதே நேரத்தில் தனது ராணுவத்தில் கேரளா உயர் சாதி இந்துக்களையும் முக்கிய பொறுப்பில் நியமித்தார் திப்பு.
 அவரது ஆட்சியின் விரைவான சமூக, பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது.
சாதிய கட்டமைப்புக்களையும் தாண்டி நிலசீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மலபார் பகுதியில் உயர் சாதி மக்களான நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான நிலங்கள் நிலமில்லாத சமுதாய மக்களுக்கு மாறின.
ஹைதர் அலி காலத்தில் தான் முதன் முதலாக நில சர்வே நடைபெற்றது. நிலவரி கட்டாயமாக்கப்பட்டதால் நிலச்சுவான்தார்கள் திப்பு சுல்தான் மீது அதிருப்படைந்தனர் என்று வரலாற்று போராசிரியர் முனிபூர் ரஹ்மான் தொவிக்கிறார்.
திருவனந்தபுரத்திலுள்ள கல்வி மையத்தின் வரலாற்று ஆராய்ச்சியாளர் தேவிகா திப்பு மலபார் பகுதியிலுள்ள ஏழை முஸ்லிம்களை மட்டும் தான் திப்பு அதிகாரம் படைத்தவர்களாக மாற்றினார் என்று குறிப்பிடுகிறார்.
அவர்களுக்கு நிலமானியங்களை அள்ளி வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரலாற்று ஆய்வாளர் திப்புவை வரையறை செய்ய இயலாது.
அவரது காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கேற்ப அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகிறார். இத்தகைய வரலாற்று ஆளுமை கொண்ட திப்புவின் மீதான நிகழ்வுகள், நிழல்களாக நம் கண்முன் தோன்றுகின்றன.
வரலாற்று ஆராயச்சியாளர்கள் பிரிவினைவாதிகள் அல்ல ஆனால் வரலாற்று நிகழ்வுகளை தங்களது குறுகிய லட்சியங்களுக்கான பயன்படுத்துபவர்கள் தான் பிரிவினைவாதிகள்.
மன்னர் என்பவர் கூட்டு ஆளுமை குணாதிசயங்களை கொண்டவர்.
அவரது ஆட்சியின் முடிவுகள் அப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமையும் ஆனால் நம்மில் பலர் வரலாற்று ஆளுமைகளுக்கு பல்வேறு வகையில் வண்ணங்களை தீட்டி வருகிறோம்.
திப்புசுல்தான் தேசிய தலைவரா?
சுதந்திரா போராட்ட வீரரா?
சர்வாதிகாரியா?
என்று விவாதிப்பதைவிட அவர் ஒரு சூழலுக்கு ஏற்றவாறு செயல்பட்டார் என்பதையும் மறுக்க முடியாது.
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் சாதி, மதத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் கொலைக்களமாக மாறியிருப்பதை பாத்திமா லத்தீப் மரணம் உறுதி செய்திருக்கிறது.

கடந்த 8ஆம் தேதி கேரள மாநிலம் கொள்ளத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவியின் செல்போனை அவரது குடும்பத்தினர் ஆராய்ந்த போது, அதில் தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் என மாணவி பதிவிட்டுள்ளார்.
அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மாணவியின் இந்த பதிவு, தற்கொலைக்கு முந்தைய நாள் அன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியின் தந்தை, தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.
அமைதியான பெண், மானுடவியல் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னை ஐ.ஐ.டி.,க்கு வந்தவர் பாத்திமா.
அவரது பெயர்தான் அவர் சாவுக்கு காரணமா?.
 தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் தானே என் மகளை படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பினேன் என்று அந்த மாணவியின் தாய் கண்ணீர் வடிக்கும் போது, நம் மனசாட்சி நீதிதேவதையை நோக்கி நியாயக் கேள்விகளை எழுப்புகிறது.
இந்திய உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும், பொருளாதாரரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் தவறான கல்விக் கொள்கைகளை இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளன.

ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.
அதுபோல ஐஐடி-க்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றி மையப்படுத்தப்பட்ட விதிமுறைகளில்லை. உதாரணமாக பல துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும், வாய்மொழித்தேர்வையும் வைத்தே மாணவ, மாணவிகளுக்கு கிரேடு எனும் தகுதி வழங்கப்படுகிறது.

ஒரு மாணவன் எடுக்கும் தகுதி மதிப்பெண்ணை வைத்தே அவன் எதிர்காலம் நிச்சயிக்கப்படும்.
அது, சம்பந்தப்பட்ட பேராசிரியரின் கையில்தான் இருக்கிறது. அதாவது, ஐ.ஐ.டி.,யில் படிக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவியின் எதிர்காலமே சம்பந்தப்பட்ட பேராசிரியர் வசம் சென்றுவிடும்.
அவர் நினைத்தால் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதே மத்திய அரசின் உயர்கல்வி கொள்கையாக உள்ளது.
ஐஐடி போன்றஉயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் உயர் சாதியினரிடம் சிக்கியிருக்கிறது. படிக்க வரும் உயர் சாதியல்லாத மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடுமையாக தொல்லைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்ற கேவலமான நிலை உள்ளது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கூட முழுமையாக வழங்கப்படுவது இல்லை.

ஒரு மாணவனோ, மாணவியோ பேராசிரியரால் பாதிக்கப்பட்டால் யாரிடமும் முறையிட முடியாது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதால், இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தாக்குதலில் சூரஜ் என்ற மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஓர் அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

சுதர்சன் பத்மநாபன்
சமீபத்தில் ஐ.ஐ.டி சைவம் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு எனத் தனித் தனி வழி ஒதுக்கப்பட்டதாகப் பிரச்னை எழுந்தது.
இப்படி நவீன தீண்டாமைகள் சென்னை ஐ.ஐ.டி.,யில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.,யில் 14 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மேமாதம் சந்திப் என்ற வட இந்திய மாணவர் தற்கொலை,
2011ம் ஆண்டு பிப்ரவரியில் அனூப் வலாப்ரியா என்ற மாணவர் தற்கொலை,
2011 ஆம் ஆண்டு மே மாதம் நிதின்குமார் ரெட்டி என்ற மாணவர் தற்கொலை,
2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெருகு மானசா என்ற மாணவி தற்கொலை,
 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மாணவன் ஷஹல் கொர்மத் தூக்கிட்டுத் தற்கொலை,
 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ரஞ்சனா குமாரி என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை, கடந்த ஜனவரி மாதம் 28ந் தேதி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் கோபால்பாபு தற்கொலை, இப்போது பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவியின் தற்கொலை என ஐ.ஐ.டி கல்விக்கூடம், கொலைக்கூடமாக உள்ளது.
 இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஒரு பெண் பேராசிரியரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஐ.ஐ.டி.,யில் நிகழும் ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னரும் ஒவ்வொரு கதை ஜோடிக்கப்படும். பத்திரிகையாளர்கள் கூட ஐ.ஐ.டி.,க்குச் சென்று செய்தி சேகரிக்க முடியாது. காவலாளிகளை ஏவி பேராசிரியர்கள் தாக்குதலில் ஈடுபடுவார்கள்.
இதெல்லாம் கடந்த கால நிகழ்வுகள்.
தற்போது பாத்திமா லத்தீப் முக்கியமான தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.

சாதி, மத ஆதிக்க அரக்கனான அந்த பேராசிரியர் சுதர்சன பத்மநாபனையும், மற்ற சாதி வெறியர்களையும் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்தியா முழுவதிலிருந்து பாத்திமா மரணத்திற்கு நீதிகேட்டும், சாதி- மத வெறியர்களுக்கு தண்டனை அளிக்கக்கோரியும் போராட்டக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்கள் அணி, அணியாக திரள்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி., போராட்டக்களமாக மாறி உள்ளது.
படித்தவன் சூதும், வாதும் பண்ணினால்... போவான்.. போவான் அய்யோ எனப் போவான் என்ற பாரதியின் கவிதை வரிகள் சுதர்சன பத்மநாபன்களை நினைவுப்படுத்துகின்றது.
 கல்வி நிலையங்களில் இந்துத்துவகும்பல்களின் அத்துமீறல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதை சுதர்சன பத்மநாபன்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினோம்... என் மகளை இப்படி செய்துவிட்டீர்களே...” என அந்த மாணவியின் தாய் கேட்டபோது தமிழர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டுமா?
அநீதிக்கு எதிராக கொதிக்க வேண்டுமா?

கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
தமிழர்கள் மதசார்பற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய காலம் இது. 
உயர்கல்வியில் மதம் கோலோச்சுவதை எதிர்த்து, சிறுபான்மையினருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவாக  அணைவரும் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இதுதான்!
 நன்றி:கலைஞசர் செய்திகள் 
 -------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 15 நவம்பர், 2019

மண்ணின் மைந்தன் பிர்சா

 "தர்த்தி அபா" பிர்சா முண்டா
இந்தியாவுக்கான சுதந்திர போராட்டம் என்பது நாடு தழுவிய போராட்டமாக அமையாமல், ஆங்காங்கே பிராந்திய குழுக்களின் போராட்டங்களாக, அவரவர்கள் தேவைக்கான போராட்டமாகவே அமைந்த காலகட்டம் அது.
1857ம் ஆண்டு சிப்பாய் கலகம் ஏற்பட்ட காலத்தில் அந்த போராட்டம் வடக்கே பஞ்சாப், தெற்கே அமராவதி, கிழக்கே ராஜ்புதானா, மேற்கே ஆவாத்தை தாண்டாத போராட்டமாகவே அது இருந்தது.


ஊதிய உயர்வு, நில உரிமைகள் மீதான சட்டம், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த வரி, மத தலைவர்களுக்கு அளித்து வந்த சலுகைகள் நிறுத்தம் போன்ற பிரச்சனைகளால் அவதியுற்ற சாதாரண வீரர்கள், விவசாயிகள், மதத்தலைவர்கள் என அனைவரும் எதிர்கால திட்டங்கள் குறித்த பிரஜை ஏதும் இல்லாமல் போராடிய போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு மற்ற மாகாணங்களில் இருந்து வீரர்களையும் நிதி உதவியும் கிடைத்தது என்பது வரலாறு.

அந்த போராட்டம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட பின்னர் தான் ஒட்டு மொத்த  இந்தியாவுக்கான சுதந்திரத்தின் தேவை என்பதே பலருக்கும் புரிபட துவங்கியது.
இருநூறு ஆண்டுகால சுதந்திர போராட்டத்தில் தியாகம் செய்த பலரின் பெயர்கள் வரலாற்றின் சிதைந்த பக்கங்களில் வெறும் சிதிலமாகவே கிடைக்கப்பெறுகிறது.
பல நேரங்களில் கவனிப்பாரன்றி காணாமலும் போய்விடுகின்றார்கள்.

தமிழ்நாட்டில்  பிர்சா முண்டா கதையை திரைப்படமாக எடுப்பதாக சில இயக்குநர்கள் கூறிவருவதால் பிர்சா முண்டா யார் ?அவர் இப்படி பேசப்பட என்ன காரணம் ?என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.
  இதோ உங்களுக்காக பிர்சா முண்டா வரலாறு

முண்டா பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் பிர்சா முண்டா.
1875ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ராஞ்சி மாநிலம், குந்தி மாவட்டத்தில் அமைந்திருக்கும் உலிகாட் என்ற பகுதியில் சுகணா முண்டா மற்றும் கர்மி ஹத்து தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார் பிர்சா.
இவருக்கு நேர் மூத்த அண்ணன் கொமட்டா முண்டா, அக்காக்கள் தக்ஸிர்,  சம்பா மற்றும் தம்பி பஸ்னா முண்டா ஆகியோருடன் இளமை காலத்தை செலவழித்தார் பிர்சா முண்டா.

 முண்டா பழங்குடியினர்
முண்டா பழங்குடியினர் ஜார்கண்ட், ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலஙகளில் அதிகமாக வாழும் பழங்குடியினர் முண்டா மக்கள். இவர்கள் முந்தாரி என்ற மொழி பேசும் மக்களாக இருந்தனர்.
இவர்கள் இந்த மாநிலங்களில் மட்டுமில்லாமல் பிஹார், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வாழ்கின்றனர்.
ஆரம்ப காலங்களில் காட்டில் வேட்டையாடும் நாடோடிகளாக இம்மக்கள் வாழ்ந்து வந்தனர். காடுகளில் பழங்குடிகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட பின்னர் இவர்கள் விவசாயம் செய்யவும் கூடை முடையும் தொழிலையும் மேற்கொண்டு வந்தனர்.
ராயத்து வரி விதிக்கப்பட்ட பிறகு ஒப்பந்த முறையில் பணியாற்ற பல்வேறு இடங்களுக்கு இம்மக்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தனர்.
 இவ்வாறே பிர்சாவின் குடும்பமும் ஒவ்வொரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்தது.
சாதாரண ஒரு முண்டா பழங்குடி குழந்தை போலவே வளர்ந்த பிர்சா முண்டாவுக்கு புல்லாங்குழல் என்றால் மிகவும் விருப்பம். அதே போன்று ஒற்றை நரம்பால் இயற்றக் கூடிய பூசணிக்குடுவையில் செய்யப்பட்ட இசைக்கருவி ஈட்டுவதையும் பழக்கமாக கொண்டிருந்தார் பிர்சா.
 இன்னும் ஜார்கண்டின் தெருக்களில் பாடப்படும் பழங்குடி  மக்களின் பாடல்களில் இசையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிர்சா.
பின்பு சில காலம் சாலக்காட்டில் இருந்தார் பிர்சா முண்டா. வறுமையில் உழன்று கொண்டிருந்த பிர்சாவை அவருடைய மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பிர்சாவின் தந்தை. அயுபதூ என்ற கிராமம் அவரின் வாழ்வை மாற்றும் ஒன்றாக அமைந்தது.

அங்கு சென்ற பிர்சா பள்ளிக் கல்வியை கற்க துவங்கினார். சல்காவில், ஜெய்பால் நாக் என்பவர் நடத்திய பள்ளியில் இரண்டு வருடங்கள் படித்தார். பின்பு அங்கிருந்து கந்தகா சென்ற அவரை வெகுவாக கவர்ந்தது மிசனரி அமைப்புகளின் செயல்பாடுகள்.  ஆங்கிலேயர்கள் பழங்குடிகளை கிறித்துவர்களாக மாற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்ட வந்த காலம் அது.
 பழங்குடி மக்களிடம் இருந்த பிற்போக்கு தனங்களை சுட்டிக்காட்டி கிறித்துவ மதத்தினை ஆங்கிலேயர்கள் பரப்பி வந்தனர்.
பிர்சாவின் அறிவுக்கூர்மையை கவனித்த ஜெய்பால் நாக் பிர்சா நிறைய படிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அருகில் இருக்கும் ஜெர்மனியின் மிசனரி பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தார். ஆனால் கிறித்துவர்கள் மட்டும் படிக்கும் பள்ளி என்பதால் பிர்சாவை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசானின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அவர் பிர்சா டேவிட்டாக அந்த பள்ளியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.

கல்வியில் படி சுட்டித்தனமாக  இருந்த பிர்சாவுக்கு அனைத்திலும் சந்தேகம். அனைத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கத் துவங்கினார். கிறித்துவத்தில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக் காட்டினார். முண்டா பழங்குடிகளின் பிற்போக்கு தனத்தையும் விட்டுவைக்காமல் கேள்வி கேட்க துவங்கினார்.
ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் மதத்தை பரப்பவும், மக்களை அடிமையாக்கவும் எடுக்கும் முயற்சிகளை கூர்ந்து கவனித்த அவர் ஜெர்மன் பள்ளியில் இருந்தும் வெளியேறினார். தன் மக்கள் பின்பற்ற ஏதுவான கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு புதிய மதத்தை தோற்றுவித்து தன் மக்கள் அனைவரிடமும் பரப்பும் வேலையிலும் ஈடுபட்டார் பிர்சா.
தனித்துவமான முறையில் விவசாயம் செய்து வந்த முண்டாக்களால் அளவுக்கு அதிகமான விளைச்சலை கொண்டு வர இயலவில்லை. ராயத்து போன்ற நிலவரிகள் விதிக்கப்பட்ட காரணத்தால், அவர்களின் உழைப்பு ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தவே போதுமானதாக இருந்தது.

அண்டை மாநிலங்களில் இருந்து வரும் உற்பத்தியாளர்கள் ஆடை, உப்பு போன்ற பொருட்களை கொடுத்துவிட்டு விலைப் பொருட்களை திருப்பி எடுத்துச் சென்றனர். இதனால் முண்டாக்கள் மட்டுமில்லாமல் பல்வேறு இனக்குழுக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இதனை எதிர்த்து முண்டா குரல் கொடுக்க துவங்கினார். விக்டோரியா ராணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து முண்டாக்கள் ஆட்சி மலரும் என்று மக்கள் மத்தியில் போராட்டத்துக்கான விதையை தூவினார்.
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வனச்சட்டம் 1882-ன் படி காடுகளில் பழங்குடிகளுக்கான உரிமைகள் குறைக்கப்பட்டது.
 மேலும் காடுகளில் விவசாயத்திற்காக பயன்படுத்தும் நிலங்கள் மீதும் அரசு அதிகப்படியான அதிகாரம் செலுத்த துவங்கியது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து காடுகளையும் தங்களுக்கென உரிமை கொண்டாட ஆரம்பித்தான். வனப்பகுதியில் இருக்கும் நிலங்கள் அனைத்தும் ஆங்கில அரசுக்கு சொந்தமானது என்றும், அங்கு வீடு கட்டவும், குடியிருக்கவும், கால்நடைகளை மேய்க்கவும், விவசாயம் செய்யவும் ஆங்கிலர்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும்.

அனுமதி அளித்த பின்பு அவர்கள் பயன்படுத்தும் நிலங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை கட்ட இயலாதவர்கள் காடுகளில் இருந்து வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பழங்குடிகள் நிலத்திற்கு ஜமீன்தார்களை நியமனம் செய்தது ஆங்கில அரசு.

ஆயிரக்கணக்கானோர் நேரடியாக காடுகளின் வளங்களை கொள்ளையிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் பிர்சா முண்டா கலகக் குரல் எழுப்பினார். சோட்டா நாக்பூர் முழுவதும் போராட்ட குரல் பலமாக ஒலித்தது.

அதன் பின்னர் எதிர்ப்பு குரலோடு சேரும் போர் தான் நம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்று கொரில்லா திட்டங்களை தீட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் தாக்குதல்களை நடத்தினார்.

“இந்தக்காடும், நிலமும், நீரும், பாரம்பரியமாய் நமது இரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. 
இதை நம்மிடம் இருந்து பறிக்க ஒருபோதும் அனுமதியோம். ஆயுதமேந்தி காப்போம்”
”இந்த நீர் எமது
இந்த நிலம் எமது
இந்த காடு எமது”
என்று அவர் போருக்கான குரல்களை பதிவு செய்து கொண்டே இருந்தார்.

பிர்சாவின் நண்பன் கயா முண்டாவை கைது செய்தால் பிர்சாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று பலமாக எண்ணியது ஆங்கில அரசு. கயாவை கைது செய்ய செய்ல் மலையில் அமைந்திருக்கும் எட்கடிக்கு காவல்துறை விரைந்தது.

  காவல்துறையின் வருகையை உணர்ந்த ஒற்றர்கள் சங்கேத ஒலி கொண்டு எச்சரிக்கை செய்தியை அனுப்பினர். கயாவை கைது செய்ய சென்ற காவல்துறை தலைவர் பழங்குடி மக்களால் கொல்லப்பட்டார்.

இதனை அறிந்த துணை காவல் ஆணையர் மொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு கயாவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

கயா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கு பழிவாங்கும் விதமாக 400 முண்டாக்கள் துணையுடன் பிர்சா குந்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டார்.

ஆகஸ்ட் 23, 1895ம் ஆண்டு பிர்சா கைது செய்யப்பட்டு 1897ம் ஆண்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் மீண்டும் அவருடைய விடுதலைக்கான போர் மேலும் வலுப்பெற்றது.
ஆதிகுடிகளின் கதாநாயகான பிர்சாவை மீண்டும் 1900ல் ஆங்கில அரசு கைது செய்தது.

 1900ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கிய இவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜூன் 9ம் தேதி மர்மமான முறையில் அவர் மரணமடைந்தார்.
அவருடைய உடல் அவருடைய குழுவினருக்கோ அல்லது குடும்பத்திற்கோ கூட வழங்கப்படவில்லை.

பிர்சாவின் சிலைகள் 2016ம் ஆண்டுக்கு முன்பு வரை கையில் கைவிலங்குகளுடன் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிர்சா முண்டா சிலைகள் அனைத்துக்கும் விடுதலை வழங்க உத்தரவிட்டார்.
கைவிலங்குகள் இல்லாத சுதந்திர பறவையாக ஜார்கண்ட் மாநிலம்  முழுவதும் பிர்சாவின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்மாநில தலைநகரான ராஞ்சியில் இருக்கும் விமான நிலையத்துக்கு பிர்சா முண்டாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவரின் வீரதீர செயல்களை கொண்டாடும் வகையில் இந்திய பாராளுமன்றத்தில் இவரின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.
 வட மாநிலங்கள் தாண்டியும் கர்நாடகாவின் சில  பகுதிகளிலும் இவருடைய பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 11 நவம்பர், 2019

ஒரு `நாவல் மரம்' கதை

வாழ்நாளில் நான் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பு நம் ஜனநாயத்தில் உருவான எழுச்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததையே குறிக்கிறது டி.என்.சேஷன் அவர்களின் மறைவு.
90களின் முற்பாதியில் கீழ்படியாமல் இருக்கும் அரசியல்வாதிகளின் மனதில் பயத்தை விதைக்கவும், ஏனைய இந்தியர்களின் மனதில் மரியாதையை விதைக்கவும் சேஷன் அவர்களின் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்தது.

 அவர் இந்திய தேர்தல் முறைகளில் ஏற்படுத்திய மாற்றங்களால் உருவான மகிமையை அவருக்கு பின்னால் வந்த தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பெற்றிருக்கின்றோம் என்பதை கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
 ஆனாலும் அவருடன் நாங்கள் எப்போதும் ஒப்பிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.
அவருக்கு கீழ் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது லாலு பிரசாத் யாதவின் தொகுதியான தனப்பூருக்கு அனுப்பப்பட்டேன்.
பின்பு ஒரு முறை ஜெயலலிதா வாழ்ந்து வந்த பகுதியான மயிலாப்பூருக்கு நான் அனுப்பப்பட்டேன்.
சேஷன் இவர்கள் இருவரிடமும் ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருந்தார்.

அதனால் தான் அங்கு நான் பார்க்க வேண்டிய வேலை இரட்டைப்பளுவாக மாறியது.

1996ம் ஆண்டு பிகார் மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது சேஷன் என்னிடம் “எதற்கும் பயப்படாதே. ஒன்றும் நடக்காது. உன் முகத்தில் யாரேனும் குண்டு வீசப்படலாம். உன் வயிற்றில் துப்பாக்கி குண்டு துளைக்கலாம்” என்று கூறினார்.

சில மீட்டர்கள் தொலைவில் இரண்டு முறை குண்டு வெடித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக என் வயிற்றில் குண்டு துளைக்கமால் உயிருடன் வீடு திரும்பினேன்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் மாவோய்ஸ்ட் பகுதியில் ஒரு முறை நான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.
பழங்குடிகள் வாழும் பகுதியை அடைவதற்கு சரியான சாலைகள் இல்லை என்று நான் புகார் அளித்ததோடு, என்னை நகர்புறங்களில் இருக்கும் தொகுதிகளில் பணிக்கு அமர்த்த வேண்டும் என தைரியம் அனைத்தையும் வளர்த்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தேன்.
ஆனால் மொத்தமாகவே தேர்தல் பணியில் இருந்து எனக்கு அப்போது விலக்களிக்கப்பட்டது.
நான் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது சேஷனை சந்தித்து வாழ்த்துகளை பெற சென்னை சென்றேன். அப்போது அவருடைய மனைவி எனக்கு சந்தனத்தால் ஆன விநாயகர் சிலை ஒன்றை பரிசாக அளித்தார்.
 ல மாதங்களுக்கு முன்பு தான் தி கிரேட் மார்ச் ஆஃப் டெமாக்ரசி : செவன் டிகேட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எலெக்சன்ஸ் (The Great March of Democracy: Seven Decades of India’s Elections) என்ற புத்தகத்தை நான் வெளியிட்டேன்.
அந்த புத்தகத்தில் இந்திய தேர்தல் ஆணையராக செயல்பட்ட போது சேஷன் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை எழுதியிருந்தார். அதே போன்று ஃப்ரெஞ்ச் பேராசிரியர் க்ரிஸ்கோப் ஜெஃப்ரெலோட், டி.என்.சேஷன் குறித்து எழுதியிருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் ஆணையர் சுகுமார் சென் மற்றும் டி.என். சேஷன் ஆகியோருக்கு இந்த புத்தகத்தை நான் அர்பணித்ததை மகிழ்ச்சியாக கருதுகின்றேன்.

சேஷன் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் நான் மீண்டும் பார்க்க  விரும்புகிறேன்,வேண்டுகிறேன்.
(இந்த கட்டுரையை எழுதிய குரேஷி இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)
 `நாவல் மரம்'

  1960-களில், `ஜாமுன் கா பேட்' என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினார் கிருஷன்.

இந்தத் தலைப்பின் பொருள் `நாவற் பழ மரம்'. அரசு அதிகாரம், ஊழல், அரசு அலுவல் முறையிலுள்ள சிக்கல், அதிகாரத்தை மத்திய அரசு மையப்படுத்துதல் முதலானவற்றைப் பகடி செய்தது அந்தச் சிறுகதை.
 
2015-ம் ஆண்டு முதல், ஐ.சி.எஸ்.சி கல்வித் திட்டத்தின் பத்தாம் வகுப்புக்கான இந்திப் பாடத்தில் இந்தச் சிறுகதை இடம்பெற்று வருகிறது.
2019 நவம்பர் 4 அன்று, இந்தப் பாடத்தைத் தேர்வுகளிலிருந்து விலக்குவதாகவும், இதிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது.
 இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல."
எனவும் ஐ.சி.எஸ்.சி கவுன்சில் சார்பாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 `ஜாமுன் கா பேட்'கதை 

பெருமழைக்குப் பிறகு, அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றின் முன் வளர்ந்த நாவற்பழ மரத்தின் கீழ் சிக்கிக்கொள்கிறார் பிரபல கவிஞர் ஒருவர்.
 கவிஞரைக் காப்பாற்ற வேண்டுமானால், மரத்தை வெட்ட வேண்டும் என்ற சூழல் உருவாகிறது.

மரத்தை வெட்டுவதற்காக, தோட்டக்காரர் பியூனிடம் கேட்கிறார்;
பியூன் கிளார்க்கிடம் கேட்கிறார்;
 கிளார்க் அந்தக் கட்டடத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்கிறார்.
மரத்தை வெட்டுவதற்கான உத்தரவை வனத்துறையிடம் கேட்க, சிக்கிக்கொண்டிருப்பவர் பிரபல கவிஞர் என்பதால், கலாசாரத் துறையைத் தொடர்புகொள்ளுமாறு கூறப்படுகிறது.

 கலாசாரத் துறையில், நாவற்பழ மரத்தை நட்டவர் அண்டைநாட்டுப் பிரதமர் எனக்கூறி, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறையிடம் தள்ளி விடுகிறது.

அண்டைநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் என வெளியுறவுத்துறையால் நிராகரிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது மரம் வெட்டுவதற்கான கோரிக்கை.
பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர்.

சுற்றுப் பயணம் முடிந்து நாடு திரும்பும் பிரதமர், ஒரு மனிதரின் உயிரைக் காப்பாற்ற மரத்தை வெட்டுவது தவறில்லை எனக்கூறி உத்தரவிடுகிறார்.
பிரதமர் அலுவலகத்தின் உத்தரவு, அரசுக் கட்டட கண்காணிப்பாளரின் கைகளுக்கு வந்து சேரும்போது, மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டிருந்த கவிஞர் உயிரற்றுக் கிடந்தார் என முடிகிறது இந்தச் சிறுகதை.

 இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல.என்று இன்றைய அரசு சொல்லக்காரணம்?
பிரதமர் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் அதிகநாள் இருப்பதாக இருப்பதுதானாம்.
குற்றம் உள்ள நெஞ்சு ......?1960 லேயே ஆப்பு.??
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 8 நவம்பர், 2019

பணமதிப்பழிப்பு என்ற துல்லிய தாக்குதல் தினம்

மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தங்களின் வருமானம் உயரவே இல்லை என சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

  2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

 மோடி அரசின் இத்தகைய அறிவிப்பின்போது, சரிந்த சிறுகுறு தொழில்கள் தற்போதுவரை எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 
இந்நிலையில், சிறு கடைகளின் மூலம் அன்றாட வாழ்க்கை நடத்திவருபவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்தாகக் கூறுகின்றனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதுமே பல தொழிலாளர்கள் தங்களின் வேதனைகளைக் கொட்டுகின்றனர்.

சென்னையின் முக்கிய பகுதியில் சிறு கடை ஒன்றை நடத்தி வருபவர் சண்முகம் என்பவர் கூறுகையில், “ஓரளவு பரபபரப்பான நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பேன். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு கூட்டம் வந்தாலும் 10 ஆயிரத்திற்கு மேல் வியாபாரம் நடத்தமுடியவில்லை.


இதனால் எனக்கு கிடைத்துவந்த லாபம் குறைந்தது. அதனால் 5 பேர் இருந்த இடத்தில் 2 பேரை மட்டுமே வேலைக்கு வைத்துள்ளேன்.
என்னிடம் இருந்து சென்றவர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்குதான் வேறு இடத்தில் வேலை பார்க்கிறார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பூக்கடை நடத்திவரும் வயதான பெண்மணி ஒருவர் கூறுகையில், “எந்த படிப்பறிவும் இல்லாததால்தான் தினமும் அலைந்துதிரிந்து பூ வாங்கி விற்று வருகிறேன்.

திடீரென அறிவித்ததால் என்னிடம் இருந்த சேமிப்பு பணத்தில் மாற்ற முடிந்தது போக, 3 ஆயிரத்தை மாற்றமுடியாமல் போனது.

அந்த 3,000 ரூபாய் என்பது எனது ஒருவார உழைப்பு. எல்லாம் வீண் தான்.
சிறிது நாட்களில் சரியாகும் என்று சொன்னார்கள்.

 ஆனால் தற்போது என் குடும்பச்செலவுக்கு பணம் சேர்ப்பதே சிக்கலாகிவிட்டது. என்னுடைய பிழைப்பே மோசமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்திய அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இங்குள்ள சிறு - குறு வியாபாரிகள் பலரின் வாழ்க்கையும் முற்றிலுமாக சிதைந்துபோய்விட்டது என்பதில் வேறுகருத்து இருக்கமுடியாது.
படிப்பு இல்லை என்றாலும் ஏதாவது மளிகை கடை, சிறுதொழில் செய்து வாழ்கையை நடத்திவிடலாம் என்று என்று நினைத்த ஏழை மக்கள், இன்று அந்த நம்பிக்கை இல்லாமல் விரக்தியில் வாழ்கிறார்கள். அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு முக்கிய காரணம்.

அதுமட்டுமல்லாமல், ரொக்க பணப்பரிமாற்றத்தை திடீரென முடக்கிவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அவர்களை தள்ளினால் அவர்களால் அதை புரிந்துகொள்ளமுடியுமா?
இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திடீரென தடை செய்தார்கள்.
இவர்களின் அறிப்பால் லட்சக் கணக்கான வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி கட்டுவதற்காக தற்போது உழைத்துவௌகிறார்கள்.
இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அவர்களின் மீது ஜி.எஸ்.டியை திணித்துவிட்டார்கள்.” என காட்டமாக தெரிவித்தார்.

இந்த பிரச்னைகளில் இருந்து மீளமுடியுமா என பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் ஆங்கில நாளிதல் ஒன்று பேட்டி எடுத்தது.
 அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “சிறு வியாபாரிகள் இந்தச் சூழலில் மீள்வது என்பது கடினம். அவர்கள் மீள்வதற்கு காலக்கொடு எதுவும் உறுதியாக சொல்லமுடியாது.
பணமதிப்பிழப்பின் போது கடுமையான வீழ்ச்சியை இந்திய பொருளாதாரம் சந்தித்தது.
அந்தக் காலகட்டத்தில் சிறு வியாபாரிகள் வாங்கிய கடன்களை அடைக்க அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் கடன் பெற்று வியாபாரம் செய்தனர்.
அதனை ஈடுகட்ட கஷ்டப்பட்ட காலத்தில் ஜிஎஸ்டி வரி மீண்டும் வருமானத்தை மோசமாக பாதித்துவிட்டது.

இதனால் வங்கியில் பெற்ற கடனை கட்டுவதா?
தங்களின் வாழ்வாதாரத்திற்கு சேர்ப்பதா என சிக்கலான நிலையில் இருக்கிறார்கள்.
 இந்த சூழலில் இருந்து அவர்கள் மீள்வது சிரமம்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

படுதோல்வி அடைந்த பணமதிப்பழிப்பு

”கருப்புப் பணத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லிய தாக்குதல்” என மெச்சப்பட்ட நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக்கொள்ளப்பட்ட அந்த நோக்கத்தில் கடுகளவைக்கூட நிறைவேற்ற முடியாமல், கேவலமான முறையில் படுதோல்வி அடைந்துவிட்டது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016 – 17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் வழியாக இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதனை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ”காஷ்மீரிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான கருப்புப் பணம் முடக்கப்பட்டுவிடும்” என ஆணித்தரமாக அறிவித்தார்.

இந்திய அரசு வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நவம்பர் 23, 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், ”2.4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 4.8 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பணம் வங்கிக்குத் திரும்பாது.
 இந்தப் பணம் முழுவதும் அரசுக்குக் கிடைத்த இலாபமாகக் கருதப்பட்டு, அந்தப் பணம் நாட்டின் அடிக்கட்டுமானப் பணிகள் தொடங்கி பலவற்றிலும் மூலதனமாகப் போடப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

”நாட்டைத் தூய்மைப்படுத்தும் மகாயாகத்தைத் தொடங்கியிருக்கின்றேன்.
இதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்குபெற வேண்டும். இதனால் ஏற்படும் துன்பங்களை எனக்காக, 50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார், மோடி.
ஐம்பது நாட்கள் அல்ல, கடந்த பத்து மாதங்களாகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்குக் கிடைத்தது என்ன? சமையல் எரிவாயு மானியம் ரத்து, பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வு, ரேஷன் அரிசியின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும் கத்தி, வங்கி சேவைக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. வரிக்கொள்ளை ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள்தான் பொதுமக்களுக்குக் கிடைத்த சன்மானம்.

சரி, இது போகட்டும், உள்நாட்டில் புழுங்கும் கருப்புப் பணத்தையாவது மோடி அண்ட் கம்பெனி முடக்கியதா என்றால், அதிலும் படுதோல்வி அடைந்துவிட்ட உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக 15.44 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்தன.
அதில், 15.28 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது, ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை. வங்கிக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட பணம்தான் கருப்புப் பணம் என்ற அளவுகோலின்படி பார்த்தால், வெறும் 16,000 கோடி ரூபாய் பணத்தைத்தான் மோடியின் நடவடிக்கை கருப்புப் பணமாக முடக்கியிருக்கிறது.
மைய அரசின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரமொன்றில், ”2013 – 14 ஆம் ஆண்டு தொடங்கி, வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 11,000 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டப்படாத தொகையைக் கண்டுபிடித்து வருவதாக”க் கூறப்பட்டிருக்கிறது.

இதோடு ஒப்பிட்டால், வெறும் 16,000 கோடி ரூபாயைக் கண்டுபிடித்திருக்கும் மோடியின் துல்லிய தாக்குதலை, நமத்துப் போன பட்டாசு என்றுதான் குறிப்பிடமுடியும்.

வங்கிக்கு வராமல் வெளியே இருப்பதாகக் கூறப்படும் இந்த 16,000 கோடி ரூபாயிலும், ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய் – 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக இந்தியா வெங்கிலுமுள்ள மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் இருப்பதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுவன்றி, இந்தியாவின் அண்டை நாடான நேபாள மத்திய வங்கியிலுள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் முடக்கப்பட்ட கருப்புப் பணம் எனச் சொல்லிக்கொள்ள ஒரு பைசாகூடத் தேறாது என்பதே உண்மை.
’மலையைக் கெல்லி எலியைப் பிடித்த’ பழமொழியோடுகூட ஒப்பிடத் தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப் பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது.
 அதேசமயம், அவரது சுயதம்பட்ட நடவடிக்கைக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தமது வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டனர்.
பணவரத்து சுருங்கிப் போனதால், விவசாயிகள், தாம் விளைவித்த தானியங்களை விற்க முடியாமல் தெருவில் கொட்டினார்கள். கூட்டுறவு சங்க கடன்களை நம்பி சாகுபடியைத் தொடங்க எண்ணியிருந்த விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலை நோக்கித் துரத்தப்பட்டார்கள்.
கூலிப் பணம் கொடுக்க வழியில்லாததால், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.

திருமணத்திற்கும், மருத்துவத்திற்கும் சேர்த்து வைத்திருந்த பணம் செல்லாது போன நிலையில், பலரும் செய்வதறியாது தவித்துப் போனார்கள்.
 ஓய்வூதியப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியாத முதியவர்கள், மருந்துக்கும் சாப்பாட்டுக்கும் வழிதேடி அலைந்தார்கள்.
 நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வங்கி வாசலிலிலேயே உயிரைத் துறந்தார்கள்.
சிறுதொழில்களும், கடைகளும் பணத்தைப் புரட்ட முடியாமல் நசிந்து நின்றன. சிறுதொழில்களும், கட்டிட வேலைகளும் முடங்கியதால், நாடெங்கும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சில இலட்சங்களைத் தொட்டது.
பொதுமக்களின் மீது திணிக்கப்பட்ட இத்துணை துன்பங்களை, சித்திரவதைகளை மோடி அரசும், பா.ஜ.க. கும்பலும் அனுதாபத்தோடா எதிர்கொண்டனர்.
 ”தேசத்தின் நலனுக்காக கியூவில் நிற்பதைக்கூடவா பொறுத்துக் கொள்ள முடியாது” என எகிறினார்கள், ”நாட்டின் எல்லைப் பகுதியில் நிற்கும் சிப்பாயின் கஷ்டத்தைவிடவா இதெல்லாம் பெரிது” எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள்.
”பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தையோ இலஞ்சத்தையோ ஒழித்துவிட முடியாது. காரணம், கருப்புப் பணம் என்பது இந்த அமைப்பு முறையே திரும்பத் திரும்ப உருவாக்கும் பொருளாதார நடவடிக்கை.
 மேலும், மொத்தக் கருப்புப் பணத்தில் 1 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாகப் புழக்கத்திலுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 

புதன், 6 நவம்பர், 2019

'உலக நாயகன்'- 60

ஐந்து வயதில் சினிமாவில் அறிமுகமான கமலஹாசன், சகலகலா வல்லவனாக இன்றும் திகழ்கிறார்.
அவரது கலைப்பயணம் இன்னமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 
 நடனக்கலைஞர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர், 'உலக நாயகனாக' உச்சம் தொட்டுள்ளார். 

நவ., 7ல் சினிமா துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

தமிழ் மண்ணின் மைந்தனான கமல், 1954 நவ., 7ல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தார். 
ஐந்து வயதில் 'களத்துார் கண்ணம்மா'வில் அறிமுகமானார்.

1974ல் 'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் 'ஹீரோ'வாக அறிமுகமானார். 

தமிழில் 1975ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் தனி 'ஹீரோ'வாக ஒப்பந்தமானார். 'சென்சார்' பிரச்னையால் இப்படம் வெளியாக தாமதமானது. 

இதனால், ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் 1975 பிப்., 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி' தான் 'ஹீரோ'வாக கமலின் முதல் தமிழ் படம். 

அதே ஆண்டு வெளியான பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படம் திருப்புமுனை ஏற்படுத்தியது. 
 1976, ஜூன் 25ல் தான் 'உணர்ச்சிகள்' 'ரிலீஸ்' ஆனது.

ஆரம்ப காலங்களில் காதல் இளவரசனாக அவதாரம் எடுத்தார்.
 சொல்லத்தான் நினைக்கிறேன்,
 நினைத்தாலே இனிக்கும்,
அவள் ஒரு தொடர்கதை, 
மன்மத லீலை, 
மூன்று முடிச்சு, 
16 வயதினிலே,
 இளமை ஊஞ்சலாடுகிறது, 
சட்டம் என் கையில், 
சிகப்பு ரோஜாக்கள்,
 நீயா,
 வறுமையின் நிறம் சிவப்பு, 
மீண்டும் கோகிலா, 
ராஜ பார்வை போன்ற படங்களில் முத்திரை பதித்தார்.
 அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமானவர், 
அவ்வை சண்முகியில் பெண்,
 இந்தியன் படத்தில் முதியவர் என பல்வேறு தோற்றங்களில் களில் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தார்.


மூன்றாம்பிறை,
 புன்னகை மன்னன், 
நாயகன், 
மைக்கேல் மதன காமராஜன்,
 குணா, 
மகாநதி, 
தேவர் மகன், 
அவ்வை சண்முகி, 
இந்தியன்,
 தெனாலி,
 தசாவதாரம், 
விஸ்வரூபம்,
 பாபநாசம் உட்பட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. 
அனைத்து மொழிகளிலும் சேர்த்து 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இளையராஜா இசையில் அதிக படங்களில் நடித்துள்ளார் கமல். 
இருவரும் இணைந்து பல 'ஹிட்' பாடல்களை கொடுத்துள்ளனர்.

பாலசந்தர் இயக்கத்தில் 23 படங்களில் நடித்துள்ளார் கமல்.

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. 
இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்:
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி .
 முதல் படம் ராஜபார்வை (1981)-கடாரம் கொண்டான் (2019) வரை 27 படங்களை தயாரித்துள்ளார்.

இயக்கிய படங்கள்:
அவ்வை சண்முகியின் இந்தி பதிப்பான சாச்சி 420,
 ஹேராம், 
விருமாண்டி, 
விஸ்வரூபம், 
விஸ்வரூபம் -2

உதவி நடன இயக்குநராக
எம்.ஜி.ஆரின் 'சங்கே முழங்கு',நான் ஏன் பிறந்தேன்,
 சிவாஜியின் 'சவாலே சமாளி',
 ஜெய்சங்கரின் 'நுாற்றுக்கு நுாறு', 
எஸ்.பி.முத்துராமனின் 'காசி யாத்திரை' உட்பட பல படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது - 1980
பத்மஸ்ரீ - 1990
கவுரவ டாக்டர் பட்டம் - 2005
பத்ம பூஷன் - 2014
பிரான்சு நாட்டின் செவாலியே விருது - 2016
ஒன்பது முறை தமிழக அரசின் திரைப்பட விருது 
மூன்று முறை  ஆந்திராவின் நந்தி விருது

நான்கு தேசிய விருது:
களத்துார் கண்ணம்மா - 1960
மூன்றாம் பிறை - 1983
நாயகன் - 1988
இந்தியன் - 1996

19 'பிலிம்பேர்'விருது
ஐந்து மொழிகளில் 19 முறை 'பிலிம்பேர்' விருது பெற்று உள்ளார். இனி 'பிலிம்பேர்' விருது தனக்கு வேண்டாம், புதியவர்களுக்கு வழங்கும்படி 2000ல் கேட்டுக்கொண்டார்.

சின்னத்திரையிலும் கால் பதித்த இவர், தனியார் 'டிவி' சேனலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை மூன்று முறை தொகுத்து வழங்கினார்.
 
தசாவதாரம் (2008) படத்தில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட பத்து வேடங்களில் நடித்தவர்.


'ஆஸ்கர்' விருதுக்கு இந்தியாவில் இருந்து இவரது படங்களான நாயகன், 
தேவர்மகன், 
குருதிப்புனல்,
 இந்தியன், 
ஹேராம், 
சுவாதி முத்யம் (தெலுங்கு),  
சாகர் (இந்தி)
 ஆகிய படங்கள் அனுப்பப்பட்டது. 
 
 சொந்த குரலில் 90க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கமல்.
 
இதில் மிகப் பிரபலம் ,

'ஞாயிறு ஒளி மழையில்' - அந்தரங்கம்
'நினைவோ ஒரு பறவை' - சிகப்பு ரோஜாக்கள்
'தென்பாண்டி சீமையிலே' - நாயகன்
'சுந்தரி நீயும்' - மைக்கேல் மதன காமராஜன்
'கண்மனி அன்போடு' - குணா
'இஞ்சி இடுப்பழகி' - தேவர் மகன்
'கலக்கபோவது யாரு' - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,

மதுரையில் 2018 பிப்., 21ல் நடந்த விழாவில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை தொடங்கினார். 2019 ,மக்களவைத்  தேர்தல், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் (ஓட்டு சதவீதம் 3.72) தமிழகத்தில் நடந்தஇவரது கட்சி போட்டியிட்டது.
 

திங்கள், 4 நவம்பர், 2019

1000 கோடி மெகா ஊழல்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.!

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.!

இந்த வழக்கில் குற்றவாளிகள் பலரையும் சி.பி.ஐ. தப்பிக்கவிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்காயர் தலைவர் (அக்கவுண்ட் ஜெனரல்) அலுவலகம் இயங்குகிறது.

தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டையில் இயங்கும் அந்த அலுவலகத்தில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்தவர் அருண் கோயல்.

தமிழக அரசின் பட்ஜெட்டை தணிக்கை செய்து மக்களின் வரிப்பணம் முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா?
 முறையாக பயன்படுத்தப் பட்டதா?

முறைகேடுகள், ஊழல்கள், விதி மீறல்கள், நட்டம், அனாவசிய செலவினங்கள் நடந்துள்ளதா?
என ஆய்வு செய்வது இத்துறையின் முக்கியப்பணி.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி ரிசல்ட்டை அறிவிப்பதும், கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்பும் அதிகாரமும் அக்கவுண்ட் ஜெனரலுக்கு உண்டு.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்வு எழுதுபவர்களை வெற்றி பெற வைக்க அருண்கோயல் லஞ்சம் பெற்றதில் கடந்த வருடம் 2018 மார்ச்சில் அவரை பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ.!

அவருடன் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளியது சி.பி.ஐ.!

ஆட்சியாளர்களின் லஞ்ச- ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டிய அக்கவுண்ட் ஜெனரலே லஞ்சம் பெற்ற விவகாரம் தேசத்தையே உலுக்கியது .

சி.பி.ஐ. விசாரித்த இந்த வழக்கில்தான் சில உத்தரவுகள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட, குற்றவாளிகள் பலரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கோட்டங்கள் இருக்கின்றன. திட்டங்களை செயலாக்கம் செய்யும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு கோட்ட கணக்காளர் உண்டு.

 மக்கள் பணத்துக்கு பாதுகாவலன் என்கிற பெயர் இவர்களுக்கு இருப்பதால் செலவிடப்படும் ஒவ்வொரு காசும் விரயமில்லாமல் நேர்மையாக செலவிடப்படுகிறதா?
 என கண்காணிக்கிற கடமையும் இவர்களுக்கு இருக்கிறது.

பொதுப்பணித்துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலக அதிகாரிகளை அயல்பணியாக ஏ.ஜி. அலுவலகமே நியமிக்கும். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களே நியமிக்கப்படுவார்கள்.
 அந்த தேர்வை நடத்துவதும் அதன் ரிசல்ட்டை அறிவிப்பதும் ஏ.ஜி. அலுவலகம்தான்.
 நெடுஞ்சாலைத்துறையில் உதவியாளர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்துகொள்ள முடியும்.
 தேர்ச்சி பெறுபவர்கள் கோட்ட கணக்காளராக நியமிக்கப்படுவர்.

இந்த நடைமுறைகளில்தான் புகுந்து விளையாடினார் அருண்கோயல். கோட்ட கணக்காளர் பதவி உயர்வுக்கான தேர்வில் மொத்தம் 5 தாள்கள் எழுத வேண்டும். ஒரு தாளில் தேர்ச்சி பெற 1 லட்சம் என 5 தாளுக் கும் 5 லட்சம் என கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக அருண் கோயலை கைது செய்தது சி.பி.ஐ.!

இந்த வழக்கை விசாரித்து முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பதவிக்காக ஏ.ஜி. அலுவலகத்தில் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துகொண்ட நபர்களின் விடைத்தாள்கள் ஹைதராபாத்திலுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது.

 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தடய அறிவியல் ஆய்வகத்தின் இயக்குநர் அறிக்கை தந்திருக்கிறார்.
அதனால், தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்றும், அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் திரும்பப்பெற வேண்டும் எனவும் ஏ.ஜி. அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.சுக்கு கடந்த செப்டம்பர் 16-ந்தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள அக்கவுண்ட் ஜெனரல் ஜெய்சங்கர், ஆறுமுகம், பால்ராஜ், சந்திரன், ஜெய்துன்பி, ஜெய பாலன், பரசுராமன், ராஜா, தங்கதுரை, மலர்விழி, முருகானந்தம் ஆகிய 10 நபர்களின் தேர்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

 இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் பதவி உயர்வை ரத்து செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் கோதண்டராமனுக்கு பிரபாகர் ஐ.ஏ.எஸ் கட்டளையிட, ஆறுமுகம், பால்ராஜ் இருவரும் கோட்ட கணக்காளர் பதவியில் தற்போது இல்லாததால் அவர்கள் இருவரை தவிர மற்ற 8 பேரின் பதவி உயர்வை ரத்து செய்துள்ளார் கோதண்டராமன்.

இதனால் இவர்கள் அனைவரும் கண்காணிப்பாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் நிறைய தவறுகள் நடந்துள்ளன. 2016 மற்றும் 2017 முறையே 32 மற்றும் 24 என 56 கோட்ட கணக்காளர்கள் தேர்ச்சி பெற்றதாக நெடுஞ்சாலைத் துறைக்கு பட்டியலை அனுப்பி வைத்தார் அருண்கோயல்.
அந்த 56 பேருமே அருண் கோயலுக்கு லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள்.
ஆனால், 10 பேர் மீது மட்டும் ஆக்சன் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 46 பேரை காப்பாற்றியுள்ளது நெடுஞ்சாலைத் துறை.

லஞ்சம் கொடுத்தவர்களின் பதவி உயர்வை ரத்து செய்வது மட்டுமே போதுமானதல்ல.

நெடுஞ்சாலைத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 10 ஆயிரம் கோடி ரூபாயில், ஒவ்வொரு கோட்டத்திலும் வருசத்துக்கு 100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அந்த 100 கோடிக்கும் கோட்ட கணக்காளர்கள்தான் பாதுகாவலர்.

ஆனால், லஞ்சத்தால் பதவி உயர்வு பெற்ற இவர்கள் எப்படி 100 கோடி ரூபாயும் முறையாக செலவிடுவதில் அக்கறை காட்டியிருக்க முடியும்?

காண்ட்ராக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை சேர்ந்து கொள்ளையடிக்க கோட்ட கணக்காளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அதற்காக, சேங்ஷன் செய்யப்படும் ஒவ்வொரு பில்லிலும் இவர்களுக்கு 5 சதவீத கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால், மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்த கோட்ட கணக்காளர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதுடன் அவர்கள் ஒப்புதல் அளித்த திட்டங்களுக்கான நிதியில் நடந்துள்ள முறைகேடுகளை தடய அறிவியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தினால் 1000 கோடிக்கான ஊழல்கள் அம்பலமாகும்''’ என சுட்டிக் காட்டுகிறார்கள் ஆவேசமாக.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளரும், ஏ.ஜி.அலுவலக ஊழியர் சங்கத்தின் அகில இந்திய முன்னாள் தலைவருமான எம்.துரைபாண்டியனிடம் விசாரித்தபோது, ’அக்கவுண்ட் ஜெனரலாக அருண் கோயல் நியமிக்கப்பட்டதுமே லஞ்சத்தில் ஊறிப்போனது ஏ.ஜி. அலுவலகம்.

கோட்ட கணக்காளர் பதவிகளை நிரப்புவதில் அருண்கோயலின் லஞ்ச விளையாட்டை ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில் புகார் கொடுத்தேன்.

 என் புகார் மீது ஆரம்பத்தில் அக்கறை காட்டாத சி.பி.ஐ., ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் குதித்தது. அருண்கோயலும் புரோக்கரும் கைது செய்யப்பட்டார்கள்.
லஞ்சம் கொடுத்து பாஸான கோட்ட கணக்காளர்கள் சிலரின் பதவி உயர்வை சி.பி.ஐ.யின் உத்தரவுக்கேற்ப தற்போது ரத்து செய்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை.
ஆனால், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை நியாயமாக இல்லை.
குற்றவாளிகள் பலர் தப்பித்துள்ளனர்''’ என்கிறார் அழுத்தமாக.

-//////////////////-/////////////////--//////-/------------------/////////////-//-///////////////////-///////////////////////////-

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...