கேரள தொலைக்காட்சிகளில் ஒரு கத்தோலிக்க ஜிகினா ! கத்தோலிக்க திருச்சபை லீலைகளை மறைக்கும் திரைச்சீலை !
பண்டைய எபிரேயு மொழியில் “ஷேக்கினா” (Shekinah) என்கிற
வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. கூடு அல்லது இருப்பிடம் அல்லது
வசிப்பிடம் என்பது ஒரு அர்த்தம்.
இந்த வார்த்தை பைபிளில் கிடையாது.
பண்டைய
ரப்பானிய இலக்கியத்தில் உண்டு.
பண்டைய யூத மதத்தில் இருந்த பல்வேறு
போக்குகளில் ஒன்றான கப்பாலிசத்தில் (kabbalism) இதே ஷேக்கினா என்கிற
வார்த்தைக்கு இறையின் பெண் தன்மை கொண்ட (ஸெஃபிரா) புனிதமான ஒளி அல்லது
நிலவின் ஒளி என்கிற ஒரு பொருளும் உண்டு.
இப்போது
இந்த வார்த்தையைப் பற்றி ஆராய்வதல்ல எமது நோக்கம்.
கடந்த ஏப்ரல் மாதம்
28-ம் தேதி கேரள கத்தோலிக்கத் திருச்சபையின் பின்புலத்தில்
துவங்கப்பட்டுள்ள தொலைக்காட்சியின் பெயர் ஷேக்கினா.
பாலியல் வல்லுறவுக்
குற்றங்கள், ஊழல்கள் எனத் தொடர்ந்து கேரள கத்தோலிக்க திருச்சபை
அம்பலப்பட்டு, அதன் பெயர் கிறிஸ்தவர்களிடையே நாற்றமெடுக்கத்
துவங்கியிருக்கும் நிலையில் தங்களைக் குறித்து நேர்மறையான செய்திகளை
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த தொலைக்காட்சியை
துவங்கியுள்ளதாக இது குறித்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு
நிகழ்ச்சிகளோடும் தனது ஒளிபரப்பைத் துவங்கியுள்ள இத்தொலைக்காட்சியில் பிற
வணிக விளம்பரங்கள் இல்லை (இப்போதைக்காவது) என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒற்றுமைக்கான செய்தி, நம்பிக்கை மற்றும் புனிதம்” போன்றவற்றை மக்களிடையே
பரப்புவதே தமது நோக்கம் என தொலைக்காட்சியின் நிர்வாகத்தினர்
தெரிவிக்கின்றனர்.
தற்போது கேரளாவில் மட்டும் ஒளிபரப்பாகும் இந்தத்
தொலைக்காட்சியை ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாடெங்கும் விரிவுபடுத்தும்
திட்டமும் உள்ளதாம்.
“விசுவாசிகள் கெட்ட செய்திகளால் சோர்ந்து போயிருக்கிறார்கள்.
அவர்களிடையே நற்செய்தியைப் பரப்புவதன் மூலம் ஆற்றுப்படுத்தும் வேலையை
ஷேக்கினா தொலைக்காட்சி மேற்கொள்ளும்” என்கிறார் அதன் நிர்வாக இயக்குனர்
சந்தோஷ் கருமாத்ரா.
கத்தோலிக்க திருச்சபையின் கீழ் செயல்பட்டு வரும்
ஷேக்கினா மினிஸ்ட்ரீஸ் எனும் திருச்சபையைச் சேர்ந்த போதகராக இருக்கிறார்
சந்தோஷ் கருமாத்ரா.
கேரள கத்தோலிக்க வட்டாரத்தில் அறியப்பட்ட பெருந்தலைகளான கார்டினல்
ஜோர்ஜ் அலெஞ்சாரி, மறைமாவட்ட ஆயர் (ஆர்ச் பிஷப்) பேசிலியோ க்ளெமீஸ் மற்றும்
திருவனந்தபுரம் ஆர்ச் பிஷப் சூசை பாக்கியம் ஆகியோரின் முன்னிலையில் இந்த
தொலைக்காட்சியின் துவக்க நிகழ்ச்சி நடந்துள்ளது.
இதில் அலெஞ்சாரி ஊழல்
புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஷப் ஃப்ரான்கோ முலக்கல்
கேரள கத்தோலிக்க திருச்சபையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு
வந்தவர் இழிபுகழ் பெற்ற பிஷப் ஃப்ரான்கோ முலக்கல். பஞ்சாப் மாநிலம்
ஜலந்தரின் மறை மாவட்ட ஆயராக இருந்த முலக்கல், கோட்டையத்தைச் சேர்ந்த
கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்தில் ஈடுபட்டவர். கைது
செய்யப்பட்ட முலக்கல் தற்போது பிணையில் விடப்பட்டுள்ளார்.
முலக்கலின் மீது பாலியல் குற்றம் சுமத்திய கன்னியாஸ்திரி,
அப்பிரச்சினைக்குப் பின்னர் திருச்சபை பெருச்சாளிகளால் அடைந்த துன்பங்களை
பட்டியலிட்டு மாளாது. அவரது குற்றச்சாட்டுகளுக்கு திருச்சபை தொடர்ந்து
செவிமடுக்க மறுத்ததோடு அல்லாமல், அவரையே குற்றவாளிபோல் நடத்தியது.
பணி
பறிக்கப்படுவது, மிரட்டல் என திருச்சபையின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க
முடியாத நிலையிலேயே அவர் ஊடகங்களை நாடினார்.
ஊடகங்களின் மூலம் முலக்கல்
அம்பலமானதைத் தொடர்ந்து மக்களிடமும் – குறிப்பாக கிறுஸ்தவர்களிடமும் –
ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்தே முலக்கலின் மீதான சட்ட நடவடிக்கைகள்
முடுக்கி விடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இன்றைக்கும் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரியின் ஒழுக்கத்தை கேடாக
சித்தரிக்கும் வேலையில் திருச்சபை ஈடுபட்டு வருகின்றது. மறுபுறம், கைது
செய்யப்பட்ட முலக்கல் பிணையில் வெளியான போது அவருக்கு உற்சாக
வரவேற்பளித்தனர் திருச்சபையினர்.
என்றாலும், பொதுமக்களிடையே பெயர் நாறிப்
போயிருப்பதால் தற்காலிகமாக முலக்கலை “ஆன்மீகப்” பணிகளில் இருந்து
விடுவித்திருப்பதாக அறிவித்துள்ளது வாடிகன்.
திருச்சபையின் வெள்ளுடை பொறுக்கிகளின் காமக் களியாட்டங்களை மறைக்கும்
திரைச்சீலையாகவே ஷேக்கினா தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. என்றாலும்,
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார் அதன் நிர்வாக இயக்குனர் கருமாத்ரா.
தங்களுடைய தொலைக்காட்சி மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர்
மற்றும் கூலி வேலை செய்யும் சாதாரண மக்களுடைய நிதிப் பங்களிப்புடன்தான்
துவங்கப்பட்டுள்ளது என்கிறார் கருமாத்ரா.
கருமாத்ராவின் நைச்சியமான விளக்கத்தை ஷேக்கினா தொலைக்காட்சியின்
புரவலர்கள் பட்டியலே அம்பலப்படுத்துகின்றது.
கத்தோலிக்க திருச்சபையின்
மறைமாவட்ட ஆயர்கள் ஆண்ட்ரூ தாழத், ஜோசஃப் கலதிபரம்பில், ரஃபேல் தாட்டில்,
சாமுவேல் மார் போன்றோர் ஷேக்கினா தொலைக்காட்சியின் புரவலர்களாக
அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். துவக்க நிகழ்ச்சியிலும் இவர்கள்
பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர்கள் கருத்து ரீதியில் ஆதரவாக
இருப்பார்களே ஒழிய தொலைக்காட்சியின் கொள்கை முடிவுகளில் தலையிட
மாட்டார்கள் என பதிலளித்துள்ளார் கருமாத்ரா.
முலக்கல் விவகாரத்தையே
உதாரணமாக எடுத்துக் கொண்டு விளக்கிய கருமாத்ரா, தங்கள் தொலைக்காட்சி ஒரு
குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடைய எல்லா தரப்பினரின் குரல்களுக்கு
இடமளிக்கும் என்றும் அந்த வகையில் முலக்கல் தனது தரப்பு உண்மைகளை விளக்க
வாய்ப்பளித்திருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தை “அப்பன் குதிருக்குள் இல்லை” என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஷேக்கினா என்பது இறைவியின் ஒளி என்கிறது பண்டைய யூத மதத்தின் ஷப்பாலா
மரபு; இவர்களோ திருச்சபை மைனர்களின் களியாட்டங்களுக்கு பிடிக்கும்
விளக்கின் ஒளி என்கிறார்கள்.
நமக்கு கடவுளின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை –
உண்மையில் கடவுள் இருப்பது உண்மையெனில் ஷெஃபீராவின் ஒளி முதலில் இந்த
அயோக்கியர்களை அல்லவா பொசுக்கியிருக்க வேண்டும்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக