bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு-1.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு  யாருக்கு பயனளிக்கும் என்ற கேள்விக்கு விடையைத் தேடுமுன் பொதுவாக மேலை நாட்டு அந்நிய முதலீடுகள் பற்றிய ஞானம் தேவைப்படுகிறது. 
இன்றைய உலகில் பொருளாதாரம் என்றால் பணத்தை பெருக்குவது என்ற பார்வை தான் மேலோங்கி உள்ளது. பணத்தை பெருக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி  சரக்குகளை உற்பத்தி செய்து  சந்தை மூலம் லாபம் சம்பாதித்து பணத்தை பெருக்குவது. அடுத்த வழி இப்படி சிரமப்படாமலே பணத்தை பெருக்கும் குறுக்கு வழிகளை தேடி உருவாக்குவது.

அமெரிக்க, ஐரோப்பிய தொழில் முனைவர் களும், அவர்கள் காட்டுகிற வழியில் போகிற இதர நாட்டு தொழில் முதலீட்டாளர்களும், இன்று சங்கடமான சரக்கு உற்பத்தியை தொங்கலில் போட்டுவிட்டு, அல்லது பின்னுக்கு தள்ளிவிட்டு, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வங்கிகளையும், கடன் அமைப்புகளையும் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பங்களால்  செல் போனுக்குள் திணிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டனர். 

(அமெரிக்க தொழில் மூலம் வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் தேச மொத்த வருவாயில் 25 சதமாக இருந்தது12 சதமாக குறைந்து நிதி மூலதன சேவை வருவாய் 10 சதத்திலிருந்து 25 சதமாக உயர்ந்து போனதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்)  இதற்கு உலகமயம் என்ற ஒரு நல்ல பெயரையும் வைத்து விட்டனர். 

 கடல் கடந்த வாணிபத்திற்கு வயது 3 ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிற்கிறது என்பதை மறந்து உலக வங்கி அதன் முயற்சியால்  வர்த்தகத்தில் உலக உறவு வந்தது போல் இந்த பெயரை சூட்டி விட்டது. வரலாறு அறியாதவர்களுக்கு இது புதுமையே!

இப்படி கூறும் பொழுது இன்று சரக்கு உற்பத்தியும், உலக வர்த்தகமும் உலக நாடுகளின் பெரும்பான்மை மக்கள் பங்கேற்கிற முறையில்  முன்னேறியுள்ளன  என்ற உண்மையை புறக் கணித்துவிட்டதாக கருதிவிடக் கூடாது. உலக வர்த்தகம் வேகப்பட்டுள்ளது. 
எடையிலும் கொள் அளவிலும் பல ஆயிரம் மடங்கு பெருகி யுள்ளது. அன்றைய வர்த்தகம் கடுகு என்றால் இன்றைய வர்த்தகம் இமயமலை. வங்கிகள், கடன் அமைப்புகள் இல்லாமல் இந்த முன் னேற்றத்தை உலக நாடுகள் பெற்று இருக்க முடியாது என்பதையும் மறுக்க இயலாது.
இன்று இந்த அமைப்புகளை  குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க உதவிடும் கருவிகளாக்கிவிட்டனர் என்பதே நமது குற்றச்சாட்டு. இன்றைய மேலை நாட்டு பொருளாதார நெருக்கடிக்கு இதுவே காரணமாகும். அதைப்பாராமல் இத்தகைய குறுக்கு வழிகள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டு கோல் என்ற பார்வை மூடநம்பிக்கையாகும்.
 அப்படி நம்புகிறவர்கள் அதிகார மையங்களில் அமரும் பொழுது ஒரு நாடு நெருக்கடியில் தள்ளப்படுகிறது. மக்களை மறந்து டாலரை பெருக்க நினைப்பதாலேயே  நெருக்கடியை  இன்று அமெரிக்கா சந்திப்பதாக அமெரிக்க நிபுணர்களே எழுதிவருவதை நாம் கவனிக்க வேண்டும்.

 இப்பொழுது மேலை நாடுகளிலிருந்து  நுழைகிற எல்லாவகையான அந்நிய முதலீடுகளும்  பணம் தேடிகளாக மாறிவிட்ட மேலை நாட்டு மக்கள் பிரிவுக்கு குறுக்கு வழிகளில் பணத்தை பெருக்கும் வழிகளை அமைத்து கொடுப்பதே பிரதான நோக்கமாகும்.அமெரிக்க, ஐரோப்பிய பணம் தேடிகளுக்கு இருக்கும் அடங்கா பணப்பசிக்கு உணவாக உலகமே தேவைப்படுகிறது.
 வடஅமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருகிற அந்நிய முதலீடுகள் அனைத்தின் நோக்கமே பணத்தைப் பெறுக்க குறுக்கு வழிகளை உருவாக்குவதே. அங்கிருந்துவரும் அந்நிய முதலீடு புகுந்த நாட்டில் விளைவுகளைப்பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. 
அவர்கள் நாட்டு பணம் தேடிகளின் பணம், பியுச்சர்களிலும், பங்குகளிலும்,  பணவடிவுகளிலும் (ஆங்கிலத்தில் டெரிவேட்டிவ்ஸ்) விளையாடி பெருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது, ராணுவ பாதுகாப்பு கொடுப்பது இவைகளே அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின்  உறுதி, உணர்வு, லட்சியம்  எல்லாம்.
உதாரணமாக விவரம் அறிந்த ஒருவர் அமெ ரிக்காவில் இருந்து கொண்டே இந்திய தங்க சந்தையிலே புகுந்து பல கோடிகளை முடக்கி சில கோடிகளை லாபமாக  தினசரி அறுவடை செய்ய இயலும். அதற்காக அவர் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டியதில்லை. 
 சொல்லப் போனால் அவர் தங்கத்தை கண்ணால் கூட பார்க்க வேண்டியதில்லை. 
அவருடைய புரோக்கர் அவர் சொல்லும் பொழுது  அவர் அணுப்பிய டாலரை ரூபாயாக மாற்றி இங்கேயே தங்கத்தை வாங்கி அவர் சொல்லும் பொழுது இங்கேயே விற்பார். ரூபாயாக இருக்கும் லாபம் மீண்டும் டாலராக மாற்றப்பட்டு அவர் கணக் கிலே ஏறிவிடும்.பியுச்சர்களையும், பங்குகளையும் இதே போல் வாங்கி விற்று லாபத்தை குவிக்க முடியும். 

ஆனால் எப்பொழுது வாங்கவேண்டும், எப்பொழுது விற்க வேண்டும் என்ற மர்மத்தை தாண்ட துணிய வேண்டும். இப்படி சூதாடக் கூடிய முதலீட்டாளர்கள் அமெரிக்க மக்கள் தொகையில் 4ல் ஒருவர் (சுமார் 8 கோடி மக்கள்) என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு என் பதின் உள் பொருள் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை பியுச்சர்மயமாக்கி பணம் தேடிகள் பணப்பெருக்க சூதாட்டத்திற்கு கொடுத்து விடுவது என்பதே.
 சுருக்கமாக சொன்னால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்றால் மொத்த வர்த்தகத்தையும்  முழுங்குவது என்பதே. 
இப்பொழுது பெட்ரோலுக்கு நேரும் கதி  கத்திரிக்காய் முதல் கடுகு வரை எல்லா பொருள் களுக்கும் வரும் என்று பொருள்.

அந்நிய முதலீடு ஜிபூம்பாவா? அல்ல!
மாபெரும் ஊடகங்களிலும் மாபெரும் சர்ச்சைகள் நடக்கின்றன. பொதுவாக ஊடக சர்ச்சைகள் உண்மையை தேட மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் இந்த சர்ச்சைகள் மக்களை குழப்புகிறது. 
ஒரு பக்கம் சில்லரை வர்த்தகர் களுக்கு அந்நிய முதலீட்டால் வரும் ஆபத்துக் கள் பட்டியலிடப்படுகின்றன. ஏதோ அவர் களுக்கு மட்டும் பாதிப்பு வருவது போல் பய முறுத்துகின்றனர். 
மறு பக்கம் அதனால் வரும் நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. விவசாயி தனது பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை கிடைப்பதால் கட்டுப்படியான விலை கிடைக்கு மென விளம்பரம் செய்கின்றனர். அவனது விவசாய இடு பொருள்களின் விலைகள் என்ன வாகும் என்பதை மறைக்கின்றனர்.
இதில் மத்திய அரசின் அமைச்சர்களும் விடு கிற பீலாவிற்கு எல்லையே இல்லை.

 அந்நிய முதலீடு ஒரு ஜீபூம்பா என்கின்றனர், அது கண் இமைக்குமுன் கிராமங்களை இணைக்கும் சாலை களை கட்டிவிடும், எல்லா கிராமங்களிலும் விவசாயப் பொருட்கள் கெடாமல் இருக்க குளிர் பதன ஏற்பாடுகள் அமைத்து கொடுத்துவிடும். அதிவேக குளிர்பதன லாரிகள், அதிவேக குளிர் பதன கூட்ஸ் ரயில்கள் சர்வதேச சந்தையில் நமது காய்கறிகளும் பூக்களும் மலிவு விலையில் கிடைத்திட  ஜம்போ விமான சர்வீஸ் எல்லாவற்றையும் வேகமாக கட்டி கொடுத்துவிடும் என் றெல்லாம் சரடு விடுகின்றனர்.
சென்ற ஆண்டில் அமெரிக்க இந்திய முதலீட்டாளர்கள் அமைப் பில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க முத லாளிகள் உங்க நாட்டிலே மின்சாரம் முதல் போக்குவரத்து வரை மோசமாக இருப்பதை சரி செய்யுங்கள்  நாங்கள் வருகிறோம் என்று சொன்னவர்கள்  இன்று சில்லரை வர்த்தகத்தில் நுழைவோம் என்று சொல்வதின் மர்மமென்ன? 
அதைப் புரியும் ஞானம், நம் நாட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கோ, டாலர் வெறி கொண்ட லையும் முதலாளிகளுக்கும் கிடையாது.

 மேலை நாட்டு சந்தை நிலவர தகவல்களை ஆழ்ந்து பரிசீலித்தால் மேலை நாடுகளின் பணவடிவில் இருக்கும் சேமிப்புகள் மதிப்பிழப்பதால் ஏற்படும் பண புழக்க நெருக்கடியை சமாளிக்கவே அது வருகிறது  என்ற உண்மை புலப்படும்.
ஏற்கனவே இந்தியாவில் அந்நியமுதலீடு எதில் விழுந்திருக்கிறது, எவ்வளவு வந்திருக்கிறது என் பதை கவனித்தாலே போதும் 2012ம் ஆண்டு நிலவரப்படி அந்நிய முதலீடு 1.796 லட்சம் கோடி வந்துள்ளது . இது முழுவதும் பங்குகள் கடன் பத்திர முதலீடுகளே தவிர அடிப்படைவசதி களை கட்ட வரவில்லை. (ஆதாரம்: பிரண்ட் லைன் ஜனவரி11,2013)
இவ்வாறு முதலீடு செய்பவருக்கு பணப் பெருக்க வழிகளை புதிது புதிதாக உருவாக்காமல் இருந்தால். அவரது பணவடிவில் இருக்கும் சேமிப்பு  மதிப்பிழந்துவிடும் என்று மேற்கத்திய பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர். 
ஆனால், அந்த சேமிப்புகள் உலகை மேய போவ தால் அங்கு  வேலையில்லா திண்டாட்டத்தை யும், சம்பளம் வெட்டையும் கொண்டுவருவதை அவர்கள் கணக்கிலே கொள்வதில்லை.

இப்பொழுது நடப்பதென்ன?

உலக நாடுகளின் பொருளாதார ஆற்றலை பணத்தைப் பெருக்கும் குறுக்கு வழிக்கு இழுத்து விடும் நோக்கோடு இன்று அமெரிக்காவின் தலைமையில்  உலக வர்த்தக அமைப்பு செயல் பட்டு வருகிறது. 
இதன் வேலை உலக நாடுகளை எதையும் பணமாக்கும் முறைக்கு  பக்குவப் படுத்துவதுதான். எல்லா தொழில்களையும், பங்கு நிறுவனங்களாக ஆக்க அது வற்புறுத்து கிறது. தனி நபருக்கோ அரசிற்கோ அந்த நிறு வனத்தின் மீது உரிமை கொண்டாட  இடமளிக்க கூடாது என்கிறது.  
எல்லா சரக்குகளும், சேவை களும் பியுச்சர்களாக  ஆக்கப்பட வேண்டும் என்கிறது.

 தனி நபர்கள் பங்குகளையும், பியுச்சர் களையும் சுதந்திரமாக வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கும் உரிமை அடிப்படை உரிமையாக ஆக்கப்படவேண்டும் என்கிறது.
 தங்களது சேமிப்பை பெருக்க விவரம் தெரியாதவர்கள் இதற்கென சந்தை நிபுணர்கள் நடத்தும் ஹெட்ஜ் பன்ட், மியூச்சுவல்பன்ட் உதவியை பெற்று காலை ஆட்டிக் கொண்டே சம்பாதிக்க சட்டம் இருக்க வேண்டும். இதற்கு பெயர்தான் தாராள மய தனியார் மயமாக்கலாகும்.
இத்தகைய தாராள தனியார்மய இலக்கோடு மேலை நாடுகளின் வங்கிகள் நிதி நிறுவனங்கள் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் மூலம்  பல நாடுகளில் புகுந்தன. உலக வங்கி தரும் புள்ளி விபரப்படி 1980ல் 52 நாடுகளில் தான் பங்குச் சந்தை  செயல்பட்டன. 
இன்று 142 நாடுகளில் பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் உலகளவில் பங்குகளிலும் சரக்கு களிலும் அந்நிய நாடுகளில் மூதலீடு செய்வதில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா.

 பங்கு களிலும், இதர பணவடிவுகளிலும் வெளி நாடு களில் அமெரிக்கர்களின் முதலீடு 14 டிரில்லி யன்(14 000.000,000,000,) டாலரை தாண்டிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. வெளிநாடுகளின் முதலீடுகளை கணக்கிட்டால் 90 சதம் அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள் ஜப்பான் நாடுகளிலிருந்து வருபவைகளே. 
இந்திய பங்குச் சந்தையில் புரளும் பங்குகளின் எண்ணிக்கை போதாத காரணத்தால் சரக்குகளையும் பியுச்சர் களாக ஆக்கிட வற்புறுத்தி வருகிறது.
தாதுக்களும், இயற்கை வளங்களும் நிறைந்த இந்தியாவையும் இந்த வட்டத்திற்குள் தள்ளி விட்டால் டாலர்  முதலீட்டாளர்களுக்கு  வாய்ப்புகள் பல மடங்கு பெருகும். 
இவைகள் எல்லாம்  ஓரே நாளில் இங்கு வந்து விடாது  என்பதை அவர்கள் அறிவர். முதலில் வேலை தேடும் உணர்வை படுக்கவைத்து, படுத்துக்கிடக்கிற பணம் தேடி உணர்வை மக்களுக்கு அணிச்சை செயலாக ஆக்க வேண்டும். அடுத்து இதற்கான தொடர்பு கொள்ளும் கருவிகள், வங்கி அமைப்புகள், விலை நிலவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள் பற்றிய ஆரூடங்கள் இவைகளை பரப்புகிற நிபுணர்கள் மற்றும் அமைப்புகள் வளர்க்கப்பட வேண்டும். இதற்கென படிப்பு முறைகள் புகுத்திட வேண்டும்,.
 பவுதீக விஞ்ஞானத்தின் அணுவிற்குள் இருக்கும் இயக்கங்களை கணக்கிடும் குவாண்டம் விதிகளை சந்தைக்கும் பிரயோகித்து ஊசலாடுகிற பங்குகள் விலை, சரக்குகளின் விலைகள் பற்றி  ஆரூடம் சொல்லும் முறைக்கு  விஞ்ஞான சாயம் பூசி மக்களை மயக்க வேண்டும்.
பதஞ்சலி


எதையும் பணமாக்கலாம் யார் வேண்டுமானாலும் பணக்காரனாக ஆகலாம் என்ற மாயை பரவ ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். தள்ளு வண்டிக்காரர் தனவந்தரானார், உனது முட்டாள்தனமே உனது வறுமைக்கு காரணம் என்றெல்லாம் ஊடகங்கள் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். 
பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு, ஆசையை வளர்க்க வேண்டும், வரி ஏய்ப்புக்களையும், இதர தில்லுமுல்லுகளையும் அரசை இதமாக அணுகவைக்கவும், லஞ்சமும் ஊழலும் வேலைகள் சுழுவாக நடக்க உதவுகிறது என்ற மயக்கத்தை புலம்பிக் கொண்டே ஏற்க வைக்கவும் அது தான் மானுட இயல்பு என உள வியல் ஆய்வு  கூறுவதாக  கூலி நிபுணர்களைக் கொண்டு செய்தி பரப்ப வேண்டும். 

 எதையும் பணமாக்கலாம் என்பதை காட்ட வேண்டும். உதாரணமாக கடந்த காலங்களில் ஆடம்பர திருமணங்கள் என்றால் பொருட் செலவு. ஆனால் இன்று மகிழ்ச்சியூட்டும் தொழிலாக்கப் பட்டு பணம் சம்பாதிக்கும் ஏற்பாடாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மாற்றிவிட்டன.
 ஐஸ்வர்ய ராய், சிநேகா, திருமண சடங்குகள் நல்ல விலை போனதாக கிசு கிசுக்கள் உள்ளன.
 மூளையை கசக்காமலே, உடலை வருத்தாமலே, அதிருஷ்டம் ஒருவனை பணக்காரனாக்கிவிடும் என்ற நம்பிக்கையை, வதந்திகளாக பரவ விட்டுவிட வேண்டும்.

மத நம்பிக்கைகளை வலுப்படுத்தும் கருத்துக்களை தத்துவம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்ட வேண்டும். உழைப்பே  மானுடத்தின் உயிர் நாடி என்ற சோசலிச லட்சியத்தை இழிவுபடுத் திக் கொண்டே இருக்க வேண்டும். 
வரலாற்றை சிதைத்து சோசலிசம் என்றால் ஒரு பயங்கரம் என்று பயமுறுத்திக்கொணடே இருக்க வேண் டும். வரலாற்றையும், வர்க்க போராட்ட அரசி யலையும் மறைத்து எல்லா மற்றங்களும், டார் வின் இயற்கையின் தேர்வு விதிப்படி நடப்பதாக விஞ்ஞான கண்டுபிடிப்புக்களைக் கொண்டு விளக்கம் கொடுக்க வேண்டும். மொத்தத்தில் தனி மனிதனின் மூளையில் அழுக்குகளை சேர்க்க வேண்டும்.பாதுகாப்பற்ற உணர்வை அவனது உந்து சக்தியாக ஆக்க வேண்டும்.

மேலை நாட்டு முதலாளித்துவம் ஊடகங்கள் வாயிலாக இத்தகைய நடவடிக்கைகளில் திட்ட மிட்டே ஈடுபடுகிறது.
 தூதுவர்கள் மூலம், ஆட்சி யாளர்களையும், அரசியல் தலைவர்களையும், பெருமுதலாளிகளையும்,அதிகாரிகளையும் அணுகி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்கிறது. இதில் பாலியல் அடிமைகளின் பங்கு அளப் பரியது.சமீபத்தில் வால்மார்ட் என்ற நிறுவனம் மெக்சிகோவிலும், இந்தியாவிலும் ஆதரவு திரட்டிய முறைகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது எதெற்கென்றால்  பிசினசில் இதெல் லாம் சகஜம் என்ற உணர்வை காலப்போக்கில் உருவாக்கும் திட்டமே.
 இன்று உலக நாடுகளில் பெரும்பகுதி அரசு கள் உலக வங்கியின் பிடியில் மயங்கி கிடக்கின்றன. இதனால் அமெரிக்க ஜனாதிபதி தயவில் பல சிறிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சியும்,இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாடாளுமன்றத்தை நடைப்பிணமாக்கும் சுரண்டும் வர்க்க ஆட்சியும் நடப்பதை காணலாம். 
ஆனால் அவர்கள் என்ன தான் முயற்சித்தாலும் அதன் விளைவு தற்காலிக மானதே என்பதை இன்றையச் செய்திகள் உறுதி செய்கின்றன.


இந்த நாடுகளில் மக்களின் போராட்ட அலைகள் அடிப்பதை காணலாம் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு பயன்படாமல் போவதால் வர்க்க போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் தீவிரமடைவதை காணலாம்.
உலக வங்கியை நம்பி மோசம் போகும் நாடுகளில் இந்தியா, மெக்சிகோ முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது. மறுபக்கம் உலக வங்கியின் சொல் பேச்சை கேட்டு  மக்களை தவிக்கவைத்த அரசுகள் இருந்த அர்ஜென்டைனா, பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகளில் மக்கள் மேலை நாட்டு அந்நிய முதலீடெனும் காட்டு வெள்ளத்தை சமாளித்து உலக வர்த்தக உறவை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல் தலைமையை உருவாக்கிவிட்டதையும் காணலாம். 
அந்த நாடுகள் மீது நாட்டோ ராணுவம் தாக்கு தல் தொடுக்க தயாராய் வருவதையும் பத்திரிகை கள் தெரிவிக்கினறன. 
அதேநேரம் யுத்தத்தில் நேரடியாக ஈடுபடுவது லாபகரமான சேவை தொழில் அல்ல என்ற சங்கடமும் அவர்களுக்கு இருப்பது தெரிகிறது. எனவே இந்தியா- பாகிஸ் தான், இந்தியா – சீனா, இஸ்ரேல்- அரபு நாடுகள், கொலம்பியா – வெனிசுலா, மோதலுக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டு கலவரத்திற்கு உதவுவது ராணுவசேவை லாபகரமான தெழிலாகிவிடும் என்பதால் அந்த முயற்சியிலும் ஈடுபடுவதை உலக அரசியலை கவனிப்பவர்களால் உணர முடியும். 
அதே வேளையில் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள் மூலதனம் எனும் சமூக சக்தியை ஒழுங்கமைக்கவும், புதிய உலக வர்த்தக உறவை உருவாக்கவும் போராடி வருகிறார்கள் .அவர் களது முயற்சிகளோடு நமது முயற்சிகளையும் இணைப்பதன் மூலமே வெற்றி அடைய முடியும்.
                                                                                                               -வரும்.
நன்றி:மார்க்சிஸ்ட்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...