bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 29 டிசம்பர், 2018

2018இல் இணையச் செய்திகள்


11,943 செயற்கைக்கோள்கள் .

உலகம் முழுவதும் எவ்வித வேறுபாடுமின்றி அதிவேக இணையதளத்தை வழங்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் என்னும் திட்டத்தின்படி மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி, தொலைத்தொடர்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் சீரான அதிவேக இணையதள சேவையை வழங்கும் 'ஸ்டார்லிங்க்' என்னும் மிகப் பெரிய திட்டத்தை அந்நிறுவனம் செயற்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்படி, சுமார் 11,943 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும்.
 ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள்கள் பூமியின் அனைத்து பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும்.

இதற்கான முதற்கட்டமாக 4,425 செயற்கைக்கோள்களை விண்ணில் செல்வதற்குரிய அனுமதியை அமெரிக்காவின் தொலைத்தொடர்பு அமைப்பான எஃப்.சி.சியிடம் ஸ்பேஸ்எக்ஸ் பெற்றிருந்த நிலையில் மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அனுமதி கேட்டு அந்நிறுவனம் எஃப்.சி.சியிடம் முன்வைத்த கோரிக்கை கடந்த நவம்பர் மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு தேவையான 11,943 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான மொத்த அனுமதியும் ஸ்பேஸ்எக்ஸிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஸ்டார்லிங்க்' திட்டத்தில் பாரம்பரிய ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் அலைகள் பயன்படுத்தப்படுவதால், ஒரு நொடிக்கு பல ஜிபி வேகத்தில் இணையதள சேவை பெற முடியுமென்று கருதப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வீழ்ச்சியில் பிட்காயின்.
கிரிப்டோகரன்சி எனப்படும் மின்னணு பண வகைகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை 2018ஆம் ஆண்டு சந்தித்தது.


ஒவ்வொரு நாட்டுக்கும் டாலர், பவுண்ட், ரூபாய் என தனித்தனியே நாணயங்கள் இருப்பது போல,
முற்றிலும் இணையத்தையே இருப்பிடமாக கொண்ட மின்னணு பணங்கள் உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிகப்பட்சமாக 17,100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயின் பிறகு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் பிட்காயினின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் இல்லாத வகையில் 3,200 டாலர்கள் என்ற அளவை அடைந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இ-சிம்.

உங்களது கைபேசிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள குண்டூசி போன்ற பொருளை பயன்படுத்தி சிம் கார்டு வைக்கும் டிரேவை கவனமாக திறந்து, மிகச் சிறிய பகுதியில் சிம் கார்டு கீழே விழாமல் உள்ளே வைப்பதற்கு சிரமப்படுபவரா நீங்கள்?
அதற்கு மாற்று ஏதாவது உள்ளதா என்று நீங்கள் நினைத்ததுண்டா?
இதுவரை நினைத்ததில்லை என்றால் இனியும் நினைக்காதீர்கள்!
ஏனெனில் அப்படி ஒரு மாற்று பயன்பாட்டுக்கே வந்துவிட்டது.

சாதாரண சிம் கார்டு பயன்பாட்டு முறைக்கு முடிவுக்கட்டும் இ-சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இ-சிம்களை கொண்டு ஆப்பிளின் புதிய ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடிப்படையில் இ-சிம் என்பதும் ஒருவகை சிம் கார்டுதான்.
 ஆனால், ஏற்கனவே திறன்பேசியின் மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த சிம் கார்டை நீங்கள் வெளியே எடுக்கவோ, மாற்றவோ முடியாது.
 அதாவது, நீங்கள் அந்த திறன்பேசியை வாங்குவதற்கு முன்னரே அதனுள் சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும்.

வருங்காலத்தில் உற்பத்தி செய்யப்படும் திறன்பேசிகளில் சிம் கார்டே இல்லாமல் பயன்படுத்தும் நிலை உருவாகலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கூகுளுக்கு  அபராதம்.
கூகுள் நிறுவனம் தனது அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டின் மூலம் தேடுபொறி சேவையில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு,
விதிகளை மீறி செயல்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அந்நிறுவனத்துக்கு வரலாறு காணாத வகையில் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதத்தை கடந்த ஜூலை 18ஆம் தேதி விதித்தது.


கூகுளின் வணிக செயல்பாடு போட்டி நிறுவனங்களை மட்டுப்படுத்தும் வகையில் விதிகளுக்கு புறம்பாக உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி கட்டுப்பாட்டு அமைப்பில் தொடங்கப்பட்ட இதுகுறித்த வழக்கில் 39 மாதங்களுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையின்போது அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் கூகுள் தேடுபொறி செயலியையும், குரோம் உலாவியையும் நிறுவாவிட்டால் அதில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கூகுள் பிளே உள்ளிட்ட சேவைகளை பெற முடியாது என்று அந்நிறுவனம் மறைமுகமாக தனது ஆதிக்கத்தை திணிப்பதற்கு முற்பட்டது.

இந்த  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளை முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 'இணைய சமநிலை'

இணையதள சேவை நிறுவனமும், அரசாங்கமும் சட்டப்பூர்வமாக நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து இணையதளங்களையும் எவ்வித பாகுபாடுமின்றி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்வதே இணைய சமநிலை அல்லது நெட் நியூட்ராலிட்டி எனப்படும்.


 உலகம் முழுவதும் இணைய சமநிலை குறித்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில்,
சுமார் 500 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட "இணைய சமநிலை" குறித்த பரிந்துரைகள்,
 உலகளவில் வலுவானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி இணையதள சேவையை வழங்கும் "இணைய சமநிலை" குறித்த டிராயின் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்) பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இணைய சமநிலை பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள:-இணைய சமநிலை 

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பப்ஜி
"நீங்க ஃபேஸ்புக்குல இருக்கீங்களா" என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், அதையே மிஞ்சும் அளவுக்கு உலகம் முழுவதையும் கட்டிப்போட்டிருக்கிறது பப்ஜி என்றழைக்கப்படும் 'பிலேயர் அன்னோன்ஸ் பாட்டில்கிரவுண்ட்' என்னும் விளையாட்டு.

2017ஆம் ஆண்டு விண்டோஸுக்கும், எக்ஸ்பாக்ஸ் ஒண்ணுக்கும் முதன்முதலாக வெளியிடப்பட்ட பிறகு கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பப்ஜி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் 100 பேரை இணையம் மூலமாக இணைக்கும், சண்டையை அடிப்படையாக கொண்ட இந்த விளையாட்டில் 99 எதிர்ப்போட்டியாளர்களை கொன்று கடைசிவரை இருக்கும் ஒருவரே வெற்றிபெற்றவராக கருதப்படுகிறார்.

இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள விளையாட்டை, ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்.

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'பப்ஜி கார்பொரேஷன்' என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த விளையாட்டை 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, 'பப்ஜி கார்பொரேஷன்', 'டென்சென்ட் கேம்ஸ்' ஆகியவை இணைந்து ஆறு பிராந்தியங்களை சேர்ந்த 20 அணிகள் தேர்ந்தெடுத்து, 600,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை கொண்ட தனது முதலாவது சர்வதேச போட்டியை கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்-பாக்ஸ், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் போன்ற கேம்களுக்கான பிரத்யேக சாதனங்களில் மட்டுமே சாத்தியமானதாக இருந்த பப்ஜி போன்ற விளையாட்டுகள், தற்போது கேம் பிரியர்களின் கைகளில் தவழும் அலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே இதன் சாதனைக்கு காரணமாக கருதப்படுகிறது.
===================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...