bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 11 அக்டோபர், 2011

மக்களின் உயிரைக் காவு கேட்கும் மருந்து நிறுவனங்கள்.


அலைக்கற்றை ஊழல் வழக்கில் இரண்டு கைகளிலும் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கும்  மாட்சிமை தாங்கிய உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் சாணியை வழித்து அடித்தது போன்றதொரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் தொடுத்திருக்கும் அறிவுச் சொத்துடைமை தொடர்பான வழக்கினை விசாரிக்கும் நீதிபதி தல்வீர் பண்டாரி, மேற்படி பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பதன் காரணமாக இவ்வழக்கை அவர் விசாரிக்க கூடாது என்று அறிவுத்துறையினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆட்சேபம் எழுப்பினர். இதன் விளைவாக இவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி பண்டாரி விலகிக் கொண்டார்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி
                       
பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி

இது தனிப்பட்ட நீதிபதி ஒருவரின் நடத்தை நெறிமுறை சம்மந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்களின் உயிரை விலை கேட்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரமுமாகும். புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அதற்கேற்ப தீர்ப்பை வாங்க முயற்சிக்கின்றன. அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
நோவார்ட்டிஸ் என்ற சுவிஸ் பன்னாட்டு நிறுவனம், இமாடினிப் மெசிலேட் என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்தை (வணிகப்பெயர் கிளிவெக்  Glivec) உற்பத்தி செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உரியதென்றும், தன்னுடைய காப்புரிமையை மீறி இந்திய மருந்து நிறுவனங்கள் இம்மருந்தை உற்பத்தி செய்து வருவதைத் தடை செய்ய வேண்டுமென்றும், இதற்கேற்ப இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக இந்திய அரசை நிர்ப்பந்தித்து வருகிறது.
இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவுக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் செய்த மேல்முறையீட்டை இந்திய அரசின் ‘அறிவுசார் சொத்துடைமைக்கான மேல்முறையீட்டு வாரியம்’ நிராகரித்து விட்டது. இது தொடர்பாக நோவார்ட்டிஸ் தொடுத்த வழக்கையும் 2007ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.
மேற்கூறிய வழக்கில் நோவார்ட்டிஸின் மேல்முறையீடு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான தல்வீர் பண்டாரி என்பவர், அறிவுசார் சொத்துடைமை மற்றும் காப்புரிமைச் சட்டம் தொடர்பாக, அமெரிக்க அறிவுச் சொத்துடைமையாளர்கள் சங்கம் (அதாவது பன்னாட்டு கம்பெனிகள்) நடத்திய நீதிபதிகளுக்கான சர்வதேசக் கருத்தரங்கில் இரண்டு முறை (2009, 2011) கலந்து கொண்டிருக்கிறார். 2007இல் அறிவுசார் சொத்துடைமை தொடர்பாக இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் (சி.ஐ.ஐ.), அமெரிக்க  இந்திய வர்த்தகக் கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் சட்டப் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டத்திலும் முதன்மை உரை ஆற்றியிருக்கிறார்.
“அறிவுச் சொத்துடைமையைத் தேச எல்லை கடந்து அமலாக்குவதில் இந்திய நீதித்துறை மற்றும் இந்திய வழக்குகளின் அனுபவமும், அறிவுச்சொத்துடைமையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும்” என்பது, 2009ஆம் ஆண்டு கருத்தரங்கில் நீதிபதி பண்டாரி ஆற்றிய உரையின் தலைப்பு. “மருந்துகள் தொடர்பான காப்புரிமை… குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு இருக்கிறது; எல்லா நாடுகளும் (அறிவுச் சொத்துடைமையைப் பாதுகாப்பதற்கு ஏற்ற) பொருத்தமான காப்புரிமைச் சட்டங்களை இயற்ற வைப்பதற்கும் அவர்கள்தான் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்’’  இது அந்த உரையில் அவர் தெரிவித்திருந்த கருத்து.
டெல்லி அறிவியல் கழகம் என்ற அமைப்பும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல அறிவுத்துறையினரும், நீதிபதி தல்வீர் பண்டாரி குறித்து மத்திய சட்ட அமைச்சருக்கும் ஒரு பகிரங்க கடிதம் எழுதினர். இதன் பிறகுதான் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் பண்டாரி. ‘வழக்கிலிருந்து நீதிபதி விலகல்’ என்று ஒரு துணுக்கு போல வெளியான இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கும் இவ்வழக்கின் ‘மதிப்பு’ என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
_______________________________
நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.
நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.
லுகேமியா என்று அழைக்கப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளை மேலும் சில ஆண்டுகள் உயிர் வாழ வைக்கும் மருந்து  இமாடினிப் மெசிலேட். இமாடினிப் மெசிலேட்  என்ற இந்த அடிப்படை மருந்தின் (generic drug) மூலக்கூறில் சிறியதொரு மாற்றம் செய்து, ‘கிலிவெக்’ என்று வணிகப்பெயர் (brand name) வைத்து, 40 நாடுகளில் இதற்குக் காப்புரிமையும் பெற்று வைத்திருக்கிறது நோவார்ட்டிஸ் நிறுவனம். ரத்தப் புற்றுநோயாளிகள் நாளொன்றுக்கு 4 மாத்திரைகள் வீதம் ஆயுள் முழுவதும் இம்மாத்திரையை சாப்பிட வேண்டும். கிலிவெக் மாத்திரை ஒன்றின் விலை 1000 ரூபாய். அதாவது ஒரு நாள் உயிர் வாழ்வதற்கு 4,000 ரூபாய். மாதத்துக்கு ஒன்றேகால் இலட்சம் ரூபாய்.
இம்மருந்தின் வேதியல் மூலக்கூறுக்கு (molecule) இந்தியாவில் யாருக்கும் காப்புரிமை வழங்கப்படவில்லை. எனவே இந்த அடிப்படை மருந்தை (generic drug) ரான்பாக்ஸி, சிப்லா, நாட்கோ, ஹெடெரோ என்பன போன்ற பல இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கின்றன. இந்திய கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரை ஒன்றின் விலை 90 ரூபாய். அதாவது நாளொன்றுக்கு 360 ரூபாய்.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் 24,000 பேர். இவர்களில் 18,000 பேர் நாளொன்றுக்கு 360 ரூபாய் கொடுத்து மருந்து வாங்க முடியாதவர்களாகையால், மருத்துவமே பார்க்காமல் இவர்கள் இறந்து விடுகின்றனர். மீதமுள்ள 6000 பேர் இந்திய மருந்துகளால்தான் உயிர் பிழைத்திருக்கின்றனர். உலகெங்கிலும் ஏழை நாடுகளில் உள்ள ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  பல இலட்சக்கணக்கான நோயாளிகளும் இந்திய மருந்தை இறக்குமதி செய்து, அதனை உட்கொண்டுதான் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
நோவார்ட்டிஸ் தனது மருந்துக்குக் காப்புரிமை பதிவு செய்துள்ள 40 நாடுகளில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் இந்திய மருந்தை இறக்குமதி செய்து பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறது காப்புரிமை விதி. அதாவது நாளொன்றுக்கு 4000 ரூபாய் செலவிட வசதியில்லாத ரத்தப் புற்றுநோயாளிகள் சத்தம் காட்டாமல் செத்துவிட வேண்டியதுதான். அத்தகையதொரு சூழ்நிலையை இந்தியாவில் இனிமேல்தான் வரவேண்டும் என்பதில்லை. இதனை ஏற்கெனவே நாம் அனுபவித்திருக்கிறோம்.
_______________________
2003ஆம் ஆண்டில், தன்னைத் தவிர வேறு யாரும் ரத்தப்புற்றுநோய்க்கான இம்மருந்தை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற உரிமையை காட்டிரிப்ஸ் (GATT-TRIPS) ஒப்பந்தத்தின் கீழ் நோவார்ட்டிஸ் நிலைநாட்டிக் கொண்டது. இமாநிப், இமாலெக், டெம்சாப், சொலேடா (Imanib, Imalek, Temsab, Zoleta) என்ற பெயர்களில் விற்கப்பட்டு வந்த பிற இந்திய கம்பெனி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது நோவார்ட்டிஸ் நிறுவனம். ஜனவரி 2004இல் நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடியவர், மைய அமைச்சரான ப.சிதம்பரம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடையின் விளைவாக, கிலிவெக் மாத்திரையை 1000 ரூபாய் கொடுத்து வாங்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் செத்து மடிந்தனர். பொதுநலன் கருதி இந்தத் தடையை நீக்குமாறு இந்திய கம்பெனிகளும் புற்று நோயாளிகள் சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். எனினும், நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது.
2005ஆம் ஆண்டில் புதிய காப்புரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (1994இல் உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த இந்தியா, 1970இல் இயற்றப்பட்ட இந்தியக் காப்புரிமைச் சட்டத்தைப் பத்து ஆண்டுகளுக்குள் ரத்து செய்வதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் புதிதாக இயற்றப்பட்ட சட்டம் இது) நோவார்ட்டிஸ் நிறுவனம், கிலிவெக் மருந்தில் சிறிய சில மாற்றங்களைச் செய்துவிட்டு, இப்புதிய சட்டத்தின் கீழ் அதற்கு காப்புரிமை கோரியது. ‘புதியது’ என்று நோவார்ட்டிஸ் கூறும் மருந்தில் புதுமையோ, கண்டுபிடிப்போ (novelty or invention) ஏதுமில்லையென்று கூறி இந்திய காப்புரிமை ஆணையம் காப்புரிமை வழங்க மறுத்துவிட்டது. காப்புரிமை ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நோவார்ட்டிஸ், தான் செய்திருப்பது ‘மேம்படுத்தும் கண்டுபிடிப்பு’ (incremental innovation) என்றும், ஆகவே இதற்கும் காப்புரிமை தரவேண்டும் என்றும் வாதாடியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்
இந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. 1995க்கு முன்னரே புழக்கத்தில் இருக்கின்ற இமாடினிப் மெசிலேட் என்ற காப்புரிமை இல்லாத மருந்தின் இலேசாகத் திருத்தம் செய்யப்பட்ட மறுபதிப்பே இந்த மருந்து என்றும், இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3 d பிரிவு கூறும் கண்டுபிடிப்புத்தன்மை (inventiveness) இதில் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் இம்மருந்துக்கு விலை வைக்கப்பட்டிருப்பதால், இதற்கு வழங்கப்படும் காப்புரிமை என்பது இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமைக்கு (அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு) எதிரானதாக அமையும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. “இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்  3 d பிரிவு, உலக வர்த்தகக் கழகத்தில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது” என்ற நோவார்ட்டிஸின் வாதத்தையும் நிராகரித்த உயர் நீதிமன்றம், சர்வதேச ஒப்பந்தங்கள் பற்றி தான் கருத்து கூற இயலாது என்றும், உலக வர்த்தகக் கழகத்திடமே முறையிடுமாறும் கூறி நோவார்ட்டிஸின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
பிரச்சினையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றால், தன் யோக்கியதை உலக அளவில் அம்பலமாகும் என்பதால் நோவார்ட்டிஸ் இப்பிரச்சினையை உலக வர்த்தகக் கழகத்துக்குக் கொண்டு செல்லவில்லை. ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட கோடிக்கணக்கான டாலர்களைத் திரும்ப எடுக்கத்தான் காப்புரிமை கோருவதாக, நோவார்ட்டிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், உண்மை வேறாக இருக்கிறது.
கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு என்றும் தெரிவித்திருக்கிறார். தனியார்துறைபொதுத்துறை கூட்டு என்று கூறிக்கொண்டு, தன் பங்குக்கு உமியைக் கொண்டு வரும் முதலாளித்துவம், அவலை ஊதித் தின்கிறது என்ற உண்மைதான், நோவார்ட்டிஸ் விசயத்திலும் அம்பலமாகியிருக்கிறது.
1970 இந்திய காப்புரிமை சட்டம், எந்தப் பொருளுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேல் காப்புரிமையை அனுமதிக்கவில்லை. உ.வ.கழகத்தில் இணைந்த இந்தியா, காப்புரிமையின் காலத்தை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. நோவார்ட்டிஸ் காப்புரிமையைக் காலவரையறையற்றதாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறது. அதன்பொருட்டு, மருந்தில் சில சில்லறை முன்னேற்றங்களை செய்து காப்புரிமையை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கு ஏற்ப (evergreening) சட்டத்தைத் திருத்த முனைகிறது.
2007இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, காப்புரிமைச் சட்டங்களைத் திருத்துவதற்காக ஒரு குழுவை மைய அரசு நியமித்தது. மஷேல்கர் குழு என்று அழைக்கப்பட்ட அக்குழு, காப்புரிமை சட்டத்தின் 3 d பிரிவை முடக்கும் வகையிலான சிபாரிசுகளை முன்வைத்தது. அவை அனைத்தும் மண்டபத்தில் வைத்து நோவார்ட்டிஸால் எழுதித் தரப்பட்டவை என்பதும், அந்த ‘சிபாரிசுகளில்’ இடம்பெற்றிருந்த வாக்கியங்கள்கூட  நோவார்ட்டிஸ் உள்ளிட்ட மருந்து கம்பெனிகளுடைய நன்கொடையில் வயிறு வளர்க்கும் ஐரோப்பிய ‘சிந்தனையாளர்களால்’ ஏற்கெனவே எழுதப்பட்டவைதான் என்ற உண்மையும் அம்பலமானது. வேறு வழியின்றி அரசு பின்வாங்கியது.
நவம்பர் 24, 2009 அன்று அமெரிக்க வர்த்தகக் குழுவுக்கும் இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரத்தை தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.  நோவார்ட்டிஸைப்  போலவே, கிலியாட் என்ற அமெரிக்க மருந்துக்கம்பெனி, தான் தயாரிக்கும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தில் சிறு மாற்றங்களைச் செய்துவிட்டு, புதிய மருந்து என்ற பெயரில் அதற்கு இந்தியாவில் காப்புரிமை கோரியிருக்கிறது. இந்தியக் காப்புரிமை ஆணையம் 3 d பிரிவின்படி அதனை நிராகரித்து விட்டது. ஆனால், “மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்குவதே பயனுள்ளது என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்” எனக் கூறுகிறது பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டக்குறிப்பு.
உலக வர்த்தகக் கழகத்துக்குப் போவதை விட, இந்திய அதிகார வர்க்கத்தையும், அரசாங்கத்தையும் பயன்படுத்தித் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும், உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை வாங்குவதுமே எளிமையான வழிமுறைகள் என்று நோவார்ட்டிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கருதுகின்றன. அதற்காகத்தான் சர்வதேச நீதிபதிகள் மாநாடு, பண்டாரியைப் போன்ற நீதிபதிகளின் கருத்துரைகள்!
நீதிபதிகள் மட்டுமல்ல, இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் தேடிப் பிடித்திருக்கும் வழக்குரைஞர்களும் நமது கவனத்துக்கு உரியவர்கள். முன்னாள் மத்திய அமைச்சரும், மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பெற்றிருந்தவருமான ப.சிதம்பரத்தைத்தான் 2003இல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கிற்கு பிடித்துப் போட்டது நோவார்ட்டிஸ். இன்று, 2011, ஜூலை 23ஆம் தேதியன்று சொலிசிட்டர் ஜெனரலாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் ரோகிந்தன் நாரிமன் என்பவர்தான், ஜூலை 22ஆம் தேதிவரையில் நோவார்ட்டிஸின் வழக்குரைஞர். ஜூலை 22ஆம் தேதியன்று தனது சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்த கோபால் சுப்பிரமணியம்தான் ஜூலை 23 முதல் நோவார்ட்டிஸின் வழக்குரைஞராக நியமனம் பெற்று விட்டார். இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தை நீதிமன்றத்தில் உடைப்பதற்கு, அத்தகைய சட்டங்களை உருவாக்கியவர்களையே அமர்த்திக் கொண்டுள்ளது நோவார்ட்டிஸ். சட்டத்தின் வரிகளுக்கும் எழுத்துக்களுக்கும் இடையில் நுழைந்து வியாக்கியானமளித்து, பன்னாட்டுக் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்பை  வாங்கித் தருவதற்கு இந்த விலைமாந்தர்கள் பாடுபடுவார்கள்.
இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் வெற்றி பெற்றால் ரத்தப் புற்றுநோய் மருந்துக்கான காப்புரிமை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நோவார்ட்டிஸின் கையில் இருக்கும். மாதம் 1.2 இலட்சம் ரூபாய் மருந்துக்குச் செலவிட முடியாமல் பல ஆயிரம் மக்கள் சாகவேண்டியிருக்கும். சில ஆயிரம் மக்கள் தமது சொத்து, சேமிப்பு அனைத்தையும் நோவார்ட்டிஸின் காலடியில் சமர்ப்பித்து, போண்டியான பிறகு உயிரை விட வேண்டியிருக்கும். நோயாளிகளின் உறவினர்கள் மருந்துக்காகக் கடன் வாங்கி, வாங்கிய கடனைக் கட்ட இயலாமல் தற்கொலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்
இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்
இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவை நெகிழ்த்துவதில் நோவார்ட்டிஸ் வெற்றி பெறுமானால், அடுத்து 10,000 மருந்துகள் வரிசையில் நிற்கின்றன. அவை அனைத்துக்கும் இந்திய அரசு காப்புரிமை வழங்க வேண்டியிருக்கும். எயிட்ஸ் முதல் காசநோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட எல்லா நோய்களுக்கான மருந்துகளும்  எட்டாக்கனியாகிவிடும். அது இந்திய மக்களை மட்டுமின்றி, மலிவான இந்திய மருந்துகளைச் சார்ந்து உயிர் வாழும் ஏழை நாட்டு மக்களையும் மரணத்துக்குத் தள்ளிவிடும்.
ஏனென்றால், இந்தியாவின் மொத்த மருந்து உற்பத்தியில் கணிசமான பகுதி ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முக்கியமாக யூனிசெப், ஐ.நா. மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் 87 ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படும் மருந்துகளில் 70% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. உலகம் முழுவதும் நுகரப்படும் எயிட்ஸ் நோய்க்கான மருந்துகளில் 80 சதவீதமும், எயிட்ஸ் நோயுடனேயே பிறக்கும் குழந்தைகளுக்கான மருந்தில் 92 சதவீதமும் இந்தியாவிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. பல்வேறு நோய்களுக்குமான மூல மருந்துகளை (generic drugs),  இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்குத் தருவதனால்தான், ‘உலகின் மருந்து தொழிற்சாலை’, ‘ஏழை நாடுகளின் மருந்துக்கடை’ என்ற நற்பெயர்களை இந்தியா ஈட்டியிருக்கிறது. இந்தியாவின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்திவிட்டால் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற்றுவிட்டால், இந்தியாவின் மருந்து உற்பத்தி  ஏற்றுமதி முழுவதையும் நிறுத்தி, உலக மருந்துச் சந்தை முழுவதிலும் தங்களது தீவட்டிக் கொள்ளையை நடத்த முடியும் என்பதே பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு.
நீதிமன்றத் தீர்ப்புக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. இந்திய மருந்துக் கம்பெனிகளை ஒவ்வொன்றாக விழுங்கி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்(பார்க்க: பு.ஜ. மார்ச், 2011). இதன் காரணமாக காப்புரிமை இல்லாத மருந்துகளின் விலையே கடுமையாக உயர்ந்து விடும் என்று அஞ்சுவதாக நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. (எகனாமிக் டைம்ஸ், பிப்.24) அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய மருந்து சந்தையின் 40 சதவீதத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றி விடும் என்று கூறுகிறார் எஸ்.பாங்க் என்ற பன்னாட்டு வங்கியின் உதவித் தலைவர். மருந்து உற்பத்தித் துறையில் அந்நிய மூலதனம் நுழைந்ததன் ‘பயன்’ இதுதான்.
“காற்றில்லாத வெற்றிடத்தைக் கண்டு இயற்கை அஞ்சுவதைப் போல, இலாபம் இன்மை அல்லது மிகக் குறைந்த இலாபம் ஆகியவற்றைக் கண்டு மூலதனம் பீதி கொள்கிறது. பொருத்தமான இலாபம் இருக்கும் பட்சத்தில் மூலதனம் விழித்துக் கொள்கிறது. 10% இலாபம் என்றால் எங்கேயும் வரத் தயார். 20% என்றால் மூலதனம் குஷியாகிவிடுகிறது. 50% என்றால் கேட்கவே வேண்டாம், கம்பீரம்தான். 100% இலாபம் என்றால் எல்லா மனிதச் சட்டங்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு மூலதனம் தயாராகிவிடுகிறது. 300% இலாபம் என்றால் எத்தகைய கிரிமினல் குற்றத்தைச் செய்வதற்கும் மூலதனம் தயார். தூக்கு மேடை ஏறுவதற்கும் மூலதனம் துணிந்து விடும்” என்று மூலதனத்தின் இலாபவெறி பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.
கிலிவெக் மாத்திரையில் மட்டும் நோவார்ட்டிஸ் 1000% இலாபம் பார்க்கிறது. இந்த இலாப விகிதத்தோடு ஒப்பிட்டால், நோவார்ட்டிஸ் நிறுவனம் நீதிபதிகளுக்குச் செய்திருக்கும் விருந்துபசாரம் என்பது மிகவும் சாதாரணமான குற்றமாகவே தெரிகிறது. அல்லது நோவார்ட்டிஸின் மிகச் சாதாரணக் குற்றங்களைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது என்றும் கூறலாம்.
_நன்றி:______________________________________
                                                   

புதன், 5 அக்டோபர், 2011

மோசடிகளின் ’குரு’[பாய் அம்பானி]


அம்பானிகளின் வரலாறே ‘ஏமாற்றுகளும்-புரட்டுகளும் தான்”.அம்பானிகள் மக்களை மட்டுமல்ல,அரசையும் [வரிகள்,சட்டதிட்டங்களை] ஏமாற்றுவதே அவர்களின் முதல் கடமை என்றாகிவிட்டது.இன்றுவரை அவர்களின் ஏமாற்று வேலை தொடர்கிறது.ஆனால் அரசும் அவர்களின் சொல்படி ஆடுவதுதான் இதில் உச்சக்கட்ட சோகம்.
இந்த ஏமாற்றுக்காரரின் வரலாறை நமக்கு படமாக்கித்தந்து அம்பானிகளை உழைப்பின் சிகரம் என ஏமாற்றும் மணிரத்தினம்  தேச விரோதிதான்.
2-ஜி,கே-ஜி படுகை,ரிலயன்ஸ் தொலைத்தொடர்பு என அம்பானிகளின் கொள்ளைகள் காங்கிரசாரின் ஆதரவுடன் தொடர்கிறது.நம்மால் முடிந்தது அவர்களின் முகமூடிகளை அவ்வப்போது அகற்றி கோர முகத்தைக்காட்டுவதுதான்.
இதோ மற்றொரு மீள்பதிவு.வினவு தளத்தில் இருந்து புதிய ஜனநாயகக் கட்டுரை.
                     
90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.
எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.
ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.
குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.
வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.
நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.
இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். “என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்” என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.
“எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா” என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.
அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.
குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். “நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்” என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.
1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: “அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.” அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.
அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், “அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்” என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?
தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.
அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.
பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.
அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.
அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. “நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்” என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.
வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.
எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.
இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.
நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.
தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.
90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.
திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.
இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.
பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.
இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.
பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் “ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்” என்று அம்பானியிடம் உருகுவார்கள்.
70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.
இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: “ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்” என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.
ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.
மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.
எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.
“நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா” என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.
வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.
“ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம்  திருபாய் அம்பானி கனவுத் திட்டம்” என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?
‘அம்பானி ஒரு வெற்றிக் கதை’ என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி  “இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.” கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.
அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.
இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.
குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.
ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.
சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.
குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு “நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்” என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி   இயக்கலாமே!
ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!
அம்பானியின் குரு : மோசடியின் கரு,
குரு திரைப்பட விமரிசனம், புதிய கலாச்சாரம் பிப்ரவரி  – 07
           

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

பிசாசின் கடல்

                               
பிசாசின் கடல்.. கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’. அதாவது டிராகன் முக்கோணம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல். ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம். இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை. இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துகிறது.

அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன் கடல் பகுதியில் உள்ள பிரபலமான மர்ம பகுதி ‘பெர்முடா டிரையாங்கிள்’. இந்த வழியாக சென்ற கப்பல்கள், இப்பகுதியை கடந்து சென்ற விமானங்கள் போன்றவை இப்பகுதியில் மர்மமான முறையில் மாயமானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப் பந்தின் மறு புறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா-நோ-உமி’ முக்கோணம். பெர்முடா முக்கோணம் போல, மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்களும் அடிக்கடி மாயமாகியிருக்கின்றன. 1952 - 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் தெரியவில்லை.

இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை. அதற்கு பிறகு, ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள். விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறுமாதிரி சொல்கிறார்கள். ‘‘ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது, நிலஅதிர்வு ஏற்படுவது அடிக்கடி நடப்பதுதான். கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள், நில அதிர்வுகள் காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன. டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள்கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன. இதற்கெல்லாம்கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும்தான் காரணம்’’ என்கின்றனர்.

நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர். ‘‘மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்துவிட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன’’ என்கின்றனர் அவர்கள். பெர்முடா முக்கோணம் போலவே.. இன்னமும் மர்மமாக இருக்கிறது பிசாசு கடல்.

சனி, 1 அக்டோபர், 2011


புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம்


புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .


சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி


தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்


நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்


இப்போது மருந்து தயாராகி விட்டது.


மருந்தை உட்கொள்ளும் விதம்


இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும்
ஒரு முறை தயாரித்த மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் இடைவெளி விட்டு மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .


இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .


இதை வாசிப்பவர்கள் இயன்றவரையில் தங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி:தாளம் உடல் நலம்

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

உன்னையே நீ அறிய

                       

 மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில்அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.
 
மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
 
மற்றவர்களின் எண்ணங்களை அறிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெற செய்வது மட்டும் தான். அதன் பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அபிப்ராயத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா? அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய சித்திரத்தை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.எப்படியும் தினந்தோறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நம்மைப்பற்றி ஒரு அபிப்ராயம் தோன்றும். அந்த அபிப்ராயங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
 
அபிப்ராயம் என்பதும் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சனங்களோ கிடையாது. அபிப்ராயங்கள் அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது. சகஜமாக பேசக்கூடியவர், கூச்ச சுபாவம் உள்ளவர், புத்திசாலியானவர், அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.
 
புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இனையவாசிகள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம். இணையவாசிகளின் அபிப்ராயம் சேர வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப்பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.
 
ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து தங்களுக்கு தோன்றும் முதல் எண்ணத்தை தெரிவிக்கலாம்.இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.
 
ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
 
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப்பற்றிய மற்றவர்களின் முதல எண்ணங்களை அறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப்பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

மூளைக் கோளாறு மாற்றும் மூலிகை.


சர்பகந்தி
 

சம்ஹிதாவில் இதனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஐரோப்பாவில் இதனுடைய பயன் 1785 ஆம் ஆண்டில்தான் தெரிய வந்தது. சர்பகந்தியின் திறன் 1946-ம் ஆண்டிற்குப் பின்னரே நவீன மருத்துவத்தில் பரவ ஆரம்பித்தது. இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம் பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. இந்தியாவில் பஞ்சாப், சிக்கிம், பூடான், அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கிறது.

சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கி வளரும். அதிக குளிரும், அதிக மழையும் இத்தாவரத்திற்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிளையாகப்பிரியும்.பதினெட்டு மாதங்கள் வளர்ந்த தாவரங்களின் வேர் மருத்துவ பயனுக்காக தோண்டி எடுக்கப்படுகிறது. புதர்செடியான சர்ப்பகந்தாவின் இலைகளும் வேரும் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

சர்பகந்தியின் மருத்துவ குணத்திற்கான அடிப்படை வேதிப்பொருள் ஒரு இன்டோல் ஆல்கலாய்டு ஆகும். இதனை ரெசர்பைன் என்றும் அழைக்கின்றனர். இத்துடன் அஜ்மலிசைன், டெசர்பிடைன், ரெஸ்சின்னமைன் மற்றும் செர்பென்டைன் ஆகியவையும் உள்ளன. இவற்றுக்கும் ரெசர்பைன் பண்புகள் உள்ள போதிலும் அதைவிட குறைவான செயலாற்றல் கொண்டவை. பக்க விளைவுகள் இல்லாத அரிய மருந்து ரெசர்பைன் ஆகும்.

நரம்பு நோய்களை குணமாக்கும்

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர்டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் மக்கட் பேறுகாலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல், ஆகியவற்றினை போக்கக் கூடியது.

வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய்,மலேரியா, மனஅழுத்தம் (ஹைப்பர்டென்சன்), இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்ற வற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

ஆப்பிரிக்க மருத்துவத்தில், மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் சிற்றினமான, Rauvolfia vomitoria எனும் தாவரம் தூக்கம் தரும் மருந்தாகவும், பால் உணர்வு தூண்டுவியாகவும், மற்றும் வலிப்பு எதிர்ப்பானாகவும் பயன்படுத்தப்பட்டது

சனி, 3 செப்டம்பர், 2011

வாக்குமூலங்கள்.


பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!' என நீள்கின்றன கண்ணீர்க் கோரிக்கைகள். கடந்த 21 வருடங்களாகக் கடிதங்கள், புத்தகங்கள் மூலமாக ஒலிக்கும் இந்தக் கதறல் யார் மனதையும் உலுக்காமல் போனதுதான் வேதனை. இவர்கள் மீதான குற்றத்துக்கு சாட்சிகள் இல்லை; ஆவணங்கள் இல்லை. 'தூக்குத் தண்டனையைச் சுமக்க வேண்டிய ஆட்கள்தான் இவர்கள்� என்பதற்கு அதிகாரி கள் காட்டும் ஒரே ஆதாரம்... இவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்தான். "செய்த தவறையும் சதிக்கான பங்களிப்பையும் அவர்களே ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படி இருக்க, வேறு சாட்சி எதற்கு?" என்கிறது அதிகாரத் தரப்பு.
                                         
மரணத்தின் நிழலில் தவிக்கும் அந்த மூவரும் இதற்குச் சொல்லும் பதில், நெஞ்சை நொறுக்குகிறது.
முதலில் பேரறிவாளன்...
"மிகக் கொடூரமான சித்ரவதைகளுக்குப் பிறகே, ஒப்புதல் வாக்குமூலத்தைத் தயாரித்தார்கள் அதிகாரிகள். 'சாதாரண விசாரணை� எனச் சொல்லி போலீஸ் அழைத்தபோது, இவ்வளவு பெரிய பிரளயத்தில் சிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. 'பெல்ட் பாம் தயாரிக்க உதவியவன் நீதானே?' என்கிற கேள்விதான் என் மேல் முதல் அடியாக விழுந்தது. 'புலிகளிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்?' எனக் கேள்விகள் நீள நீள... எனக்கு உலகமே சுற்றுவதுபோல் இருந்தது. அடி மேல் அடி. 'இல்லை' என்கிற வார்த்தையைத் தவிர, நான் எதுவும் சொல்லவில்லை. தெரிந்தால்தானே சொல்வதற்கு? ஆனாலும், புனைய வேண்டிய அனைத்தையும் புனைந்து, ஒப்புதல் வாக்குமூலமாக்கிக் கொண்டுவந்தார்கள்.
'இதில் கையெழுத்துப் போடு� என்றார்கள். நான் அறவே மறுத்தேன். அதிகாரிகளின் ஆங்காரத்தில் என் முகம் முழுக்கக் காயங்கள். அடித்த களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்கள் அதிகாரிகள். அப்போது ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்தார்.
'உன்னையப் பார்க் குறப்ப பாவமா இருக்கு தம்பி. நீ அடி வாங் குறப்ப என் மகனோட ஞாபகம்தான் வருது. ஒப்புதல் வாக்குமூலம்னு இவங்க சித்திரிச்சு இருக்கிற கதையில நீ தயங்காமல் கையெழுத்துப் போடு. ஆனா, கோர்ட்டில் 'வற்புறுத்தி வாங்கிய கையெழுத்து�னு சொல்லிடு. நீ அப்படிச் சொல்லிட்டாலே ஒப்புதல் வாக்குமூலம் உண்மை இல்லைனு கோர்ட் அறிவிச்சிடும். இப்படி அடி உதை வாங்கி சாகாதப்பா!� என்றார்.
அவருடைய கண்களில் திரண்டு இருந்த கண்ணீர்என்னை நம்பவைத்தது. 19 வயதில் எனக்கு சட்டம் குறித்து எதுவும் தெரியாது. எனக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் கிடையாது. 'இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதே தெரியாமல், இவ்வளவு சித்ரவதைகளுக்கு ஆளாகிவிட்டோமே� என மனதுக்குள் அந்த போலீஸ்காரருக்கு நன்றி சொல்லியபடியே, ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டேன். ஆனால், அதன் பிறகு எந்த கோர்ட்டுக்கும் நான் அழைக்கப்படவில்லை. என்னுடைய கையெழுத்து என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதால், பரப்பிய பழிகளை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்குச் சிரமம் இல்லாமல் போனது. என்னுடைய தூக்குக்கு நானே கையெழுத்துப் போட்ட கொடுமையை நான் யாரிடம் சொல்ல முடியும்?"
பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் மீது கொடூர சித்ரவதைகளைப் பாய்ச்சிய அதிகாரிகள், நளினி, முருகன் இருவரையும் அப்படி ஏதும் செய்யவில்லை.
                                     

"ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துபோடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள் அதிகாரிகள். நான் மறுத்தபோது, நான் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பக்கத்தில் என் மனைவி நளினியை உட்காரவைத்தார் கள். கேட்கவே பொசுங்கவைக்கும் அபவாத அர்ச்சனைகளை நடத்தினார்கள். மிகக் கேவலமான வார்த்தைகளால் அவர்கள் நளினியைக் கேலி செய்தபோது என்னால் பொறுக்க முடியவில்லை. அசிங்கம் என்றால் அப்படி ஒரு அசிங்கம்... ஒரு வார்த்தையின் வலி எத்தகையது என்பதை அறிந்தவன் நான். என் மனைவியை நோக்கி விழுந்த வார்த்தை கள் பொறுக்காமல், அதிகாரிகள் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன்.
ஆனாலும், என் தந்தை மற்றும் ஊர் பெயரை வேண்டும் என்றே தவறாக எழுதிக் கொடுத்தேன். 'இது திட்டமிட்ட பொய்� என்பதை அப்பட்டமாகச் சொல்ல நினைத்தே, அந்தத் தவறைச் செய்தேன். ஆனால், அந்தத் தவறான விவரங்களையே என்னுடைய நிரந்த விவரமாக்கி அதிகாரிகள் சித்திரித்துவிட்டார்கள்.
என் தந்தையின் பெயர்கூடத் தவறாக இருக்கும் அந்த வாக்குமூலம், எப்படி என்னுடைய வாக்குமூலமாக இருக்கும்? என்னிடமும் நளினியிடமும் தனித்தனியே ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாகச் சொல்லும் அதிகாரிகள், இரண்டுக்கும் ஒரே நேரத்தைக் குறித்திருக்கிறார்கள். 'நேரம்தவறா கக் குறிக்கப்பட்ட வாக்குமூலம் நிச்சயம் செல்லாது� என நினைத்தேன். ஆனால், சரியில்லாமல் போனது எங்கள் நேரம் தான்!"- முருகனின் கதறல் இது.
ஒப்புதல் வாக்குமூலத்தில் எப்படி எல்லாம் குளறுபடிகளைச் செய்தார்கள் என்பதற்கு ராபர்ட் பயாஸின் கதறலே சரியான சாட்சி. "தளபதி கிட்டுவுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்து விசாரித்தார்கள். 'இல்லவே இல்லை� என்றேன். இரவு முழுக்க காட்டுமிராண்டித்தனமாக அடித்து கைகளில் விலங்கு மாட்டி, அங்கு உள்ள ஒரு இரும்பு கேட்டில் கட்டித் தொங்கவிட்டார்கள். இரவு முழுக்க அந்த கேட்டிலேயே தொங்கினேன். சுவருடன் சாய்த்து தலைகீழாக நிற்கவைத்து அடிப்பார்கள். உச்சந்தலையே தெறிப்பதுபோல் வலிக்கும். தாகத்தில் செத்துப்போய்விடலாம் எனத் தோன்றும். ஒரு நாள் அப்படித்தான் தாகத்திலேயே படுத்துக் கிடந்தேன். தரையில் தண்ணீரை ஊற்றி நக்கிக் குடிக்கச் சொன்னார்கள். அவர்கள் நினைத்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற எத்தகைய சித்ரவதையையும் செய்வார்கள்!"
கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றி இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்ட அலுவலகத்தின் பெயர் 'மல்லிகை'. மரண தண்டனையை நோக்கி மூன்று உயிர்களை அனுப்பிவைத்ததும் இதே 'மல்லிகை'தான்.


                     

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...