bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 13 அக்டோபர், 2018

காப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்

மத்திய அரசு டிசம்பர் 2004ல் ஒரு அவசர சட்ட பிரகடனத்தின் மூலம் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970ல் (3வது – திருத்த) மசோதாவை பிறப்பித்துள்ளது. இப்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதனை ஒரு சட்டமாக கொண்டுவர மத்திய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது. 
இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் மருந்து, இரசாயனம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மருந்துத் துறையை பொறுத்தவரையில் இதுவரை பின்பற்றி வந்த செய்முறை காப்புரிமை பொருள் காப்புரிமையாக மாற்றப்படும். இதனால் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலை சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவிற்கு உயரும்.

சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான உலக ஏகாதிபத்தியம் ஒரு முனை பொருளாதார உலகை உருவாக்க எடுத்த முயற்சி உருகுவேயில் தொடங்கிய 8-வது சுற்று GATT பேச்சுவார்த்தை மாரகேசில் 1994 டிசம்பர் மாதம் WTO-வாக உருவாகியது. 
உட்டோ ஒப்பந்த அடிப்படையில் பத்து வருட கெடு என்பது 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்து உள்ளது. அதன் வெளிப்பாடே இந்த காப்புரிமை சட்ட திருத்த முயற்சி.
இந்திய காப்புரிமை சட்டம் 1970 இந்திய மருந்து உற்பத்தி துறையை தன்னிறைவு அடைய செய்கிறது. 1982 ஆம் ஆண்டு லிபனில் நடைபெற்ற உலக மருந்துத்துறை மாநாடு இந்தியாவின் இந்த வளர்ச்சியை பதிவு செய்து பாராட்டியது.
இந்தப் பின்னணியில் காப்புரிமை சட்ட மாற்றத்தினால் மருந்துத் துறையில் ஏற்படும் விளைவுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.
சுதந்திரம் அடைந்த போது இந்திய மருந்துத் துறை
இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய மக்கள் தொகை சுமார் 40 கோடி. மருந்து உற்பத்தி 10 கோடியாக இருந்தது. உலகிலேயே அதிக விலையில் மருந்து விற்பனையாகிய நாடு இந்தியாவாக இருந்தது. அன்றைக்கு அமுலில் இருந்த Patents & Designs Act 1911-ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்தியாவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துகளை இங்கே உற்பத்தி செய்யாமல் தங்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். அவர்கள் தங்கள் நாட்டு விலையை விட 5லிருந்து 6 மடங்கு உயர்த்தி அதிக விலையில் கொள்ளை லாபத்திற்கு விற்றனர். அமெரிக்க அரசு அங்குள்ள Food & Drugs Act என்ற சட்டத்தை திருத்தி அந்நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் (Senator) திரு கெஃபாவர் தலைமையிலான ஒரு குழு (1959) தன்னுடைய அறிக்கையில் இந்திய நாட்டில் மருந்து விலைகள் அதிகமாக உள்ளது. மிக முக்கியமாக உயிர்காக்கும் மருந்துகளான (சயனமைட் என்ற அமெரிக்க நிறுவனம் தயாரிக்கும்) ஆரியோமைசின், அக்ரோமைசின் போன்ற ஆன்டிபயோடிக் அதிக விலையில் விற்கப்படுகின்றன என்று கூறியது.
இந்நிலையிலிருந்து இந்திய மருந்து உற்பத்தி இன்று ரூ. 20,000 கோடியாக உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் நாடாக இன்று இந்தியா மாறியுள்ளது.

இந்த மாற்றம் உருவானதற்கு மிக முக்கிய காரணம் இந்திய காப்புரிமை சட்டம் 1970. மருந்துத் துறையில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் திறமையினால் மாற்று வழியில் இங்கு கிடைக்கின்ற மூலப் பொருளையும் தொழில்நுட்பத்தையும் வைத்து மருந்து உற்பத்தி செய்தது, இந்த விலை குறைப்பிற்கு உதவியது.
காப்புரிமையின் தோற்றம்
முதல் காப்புரிமை சட்டம் கொலம்ப அமெரிக்காவை கண்டு பிடிப்பதற்கு முன்பே ஆதிரியா நாட்டில் 1474 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கைவினை கலைஞர்கள் (Artisans) தங்கள் உற்பத்தி வார்ப்படங்களை அவர்களிடம் பயிற்சிக்காக வந்தவர்கள் நகல் செய்து அவர்களுக்கு போட்டியாக வராமல் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்ட போது அதன் கூடவே போட்டியும் வளர்ந்தது. ஏகபோக உரிமைக்கும், பொது நலனுக்கும் உண்டான முரண்பாடுகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான காப்புரிமை சட்டமாக பரிணமித்தது.
பாரி கன்வென்ஷன்
பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தொழிலதிபர்கள் தங்களின் புதிய பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் பாரி, ஜெனிவா, வியன்னா போன்ற நகரங்களில் நடைபெறும் பொருட்காட்சிகளில் விளம் பரத்திற்காக காட்சியில் வைத்தனர். மற்றவர்கள் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை நகல் செய்வதை தடுக்க முடியவில்லை. ஒரு நாட்டின் காப்புரிமை மற்ற நாடுகளில் செல்லாத நிலை. இப்பின்னணியில் ஆதிரிய அரசு 1873ஆம் ஆண்டு வியன்னா கண்காட்சியில் மற்ற நாடுகளுடன் பேசி ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சித்தது. பின்னர் 1863ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் 1880 ஆம் ஆண்டு அமெரிக்கா தயாரித்த நகலின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் உருவானது. இதில் 15 நாடுகள் கையொப்பமிட்டன. இதுதான் பாரி கன்வென்ஷன் என்று அழைக்கப்படும் காப்புரிமை சட்டம். இவ்வொப்பந்தம் கண்டுபிடிப்பாளர் அல்லது உற்பத்தியாளர் நலனை பாதுகாக்கப் பயன்படவில்லை. மாறாக அந்த நாட்டின் தொழில் சொத்துரிமை பாதுகாக்க உருவாக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
  • ஆசிய நாடுகள் எவரும் கையொப்பம் இடவில்லை.
  • அன்று காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.
  • பல நாடுகளில் காப்புரிமை என்பதே இல்லாமல் இருந்தது.
  • பொருளுக்கான காப்புரிமை 14-20 வருடங்களுக்கு.
  • காப்புரிமை பெற்றபின் உற்பத்தி செய்ய கட்டாயமில்லை.
  • தொழில் உரிமை என்பதில் தொழில் / வர்த்தகம் / வேளாண்மை போன்ற அனைத்து துறைகளும் அடங்கும்.

உதாரணமாக ஒரு மூலிகையிலிருந்து கிடைக்கும் மருந்தை ஒருவர் கண்டுபிடித்து காப்புரிமை செய்து விட்டார் என்றால் ஒப்பந்த நாடுகளில் உள்ள வேறு எவரும் அந்த மூலிகையை பயிரிட முடியாது. அந்த மருந்ததை உபயோகிக்க முடியாது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தக் காப்புரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தங்கள் லாபத்தை பெருக்கி கொண்டன. இதனால் வளரும் நாடுகளின் சுயசார்பும் / அன்னிய செலாவணியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்திய காப்புரிமை சட்டம் 1970
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் அன்று அமுலில் இருந்த பாரி கன்வென்ஷன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட Patents & Designs Act 1911 மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டது. இப்பின்னணியில் 1948-50ல் நீதிபதி தேக் சாந்த் தலைமையிலான குழுவும், பின்னர் 1957-59ல் நீதிபதி இராஜகோபால் ஐயங்கார் தலைமையிலான குழுவும் ஆய்வு செய்து தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தது. அவர்கள் அறிக்கையில்,
  • அமலில் உள்ள காப்புரிமை சட்டம் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கத் தவறிவிட்டது.
  • காப்புரிமை நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் போட்டியை தவிர்ப்பதற்காகவே உள்ளது.
  • 90 சதவீதமான காப்புரிமைகள் உற்பத்திக்காக மாறவில்லை.
  • நாட்டிற்கு தேவையான பொருளாக இருந்தாலும் அதனை உற்பத்தி செய்ய முடியாத நிலை.
ஆகவே இந்நிலையினை மாற்ற நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஒரு காப்புரிமைச் சட்டம் – உருவாக்கப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்தது.
மேற்கூறிய பரிந்துரைகளை கருத்தில் கொண்டு பாராளுமன்றம் விவாதித்து பல்வேறு மசோதாக்களை கொண்டு வந்தது.
Comprehensive Patent Bill
Patent Bill 1965
Patent Bill 1967
இறுதியாக இருபது ஆண்டுகள் விவாதித்து 1970ஆம் ஆண்டு இந்திய காப்புரிமை சட்டம் 1970 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
இந்த சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
  • உணவு உற்பத்தியில் காப்புரிமை என்பதே கிடையாது.
  • இரசாயனம் மற்றும் மருந்துத் துறையில் செய்முறை காப்புரிமை மட்டுமே. பொருள் காப்புரிமை கிடையாது.
  • செய்முறை காப்புரிமையும் 5 முதல் 7 வருடங்களுக்கு மட்டுமே.
  • இச்சட்டம் கண்டுபிடிப்பாளர் மற்றும் நுகர்வோர் நலன்களை சமமாக பாதுகாக்கிறது.
  • தேசிய நலனுக்கு முன்னுரிமை.
  • காப்புரிமை பெற்றவர்கள் கட்டாயமாக உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நாட்டு நலன் கருதி மற்றவர்களுக்கு உற்பத்தி உரிமம் கொடுக்க வழிமுறை.
  • செய்முறை காப்புரிமை புதிய மாற்று தொழில்நுட்ப முறையில் உற்பத்தியை ஊக்குவித்தது. (Reverse Engineering)

மருந்துத்துறை
1956 ஆம் ஆண்டு தொழில் கொள்கையின் அடிப்படையில் சோவியத் யூனியன் உதவியுடன் இந்தியாவில் மருந்துத் துறையில், பொதுத்துறை நிறுவனம் இந்தியன் டிரக் அண்ட் பார்மாசூடிக்கல் லிமிடெட் (IDPL) 1961 ஆம் ஆண்டு மூன்று ஆலைகள் ரிஷிகேஷில் ஆண்டிபயோடிக் ஆலை, ஹைதராபாத்தில் சின்தடிக் டிரக் ஆலை, சென்னையில் சர்ஜிகல் இன்ட்ரூமெண்ட் ஆலை – நிறுவப் பட்டது. UNICEF நிறுவனத்தால் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் இந்துதான் ஆண்டிபயோடிக் லிமிடெட், பிம்பரி இவ்விரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் இந்தியாவில் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அடிப்படையிலிருந்து (Basic Stage) உற்பத்தி செய்ய தொடங்கின. இந்நிறுவனங்கள் மூலம் மருந்துகளை (Bulk Drugs) மட்டும் அல்லாமல் சந்தைக்கு தேவையான பார்முலேஷன்களையும் தயாரிக்க தொடங்கின. அவ்வாறு தயாரிக்கப்பட்ட மருந்துகளை மிகக் குறைந்த விலையில் சந்தையில் விற்கத் தொடங்கின.
அட்டவணை – 1
மருந்துகளின் விலை ஒப்பீடு – இந்திய நாணயத்தில்
மருந்துகள்இந்தியாபாகிஸ்தான்இந்தோனேசியாபிரிட்டன்அமெரிக்கா
ஆண்டிபயோடிக்
சிப்ரோஃபிளாக்சின்
500 மி.கி. 10 டாப்டெல்
29.00423.86393.001,185.702,352.35
நார் ஃப்ளாக்சின்
400 மி.கி. 10 டாப்லெட்
20.70168.71130.63304.781,843.66
வயிற்றுப்புண் மருந்து
ரானிடிடின்
150.மி.கி. 10 டாப்லெட்
6.0274.09178.35247.16  863.56
லான்ஸோ ப்ரஸால்
30 மி.கி. 10 டாப்லெட்
39.00684.90  226.15708.081,909.64
இருதய நோய் /பி.பி.
அடினனால்
50 மி.கி. 10 டாப்லெட்
7.5071.82119.70338.28660.21
அமிலோடிபின்
5.மி.கி. 10 டாப்லெட்
7.80200.3478.42338.28660.29
வலி நிவாரணி
டைக்ளோ ஃபெனாக்
50 மி.கி. 10 டாப்லெட்
3.5084.7159.7560.96674.77
கான்சர்
போபோசைட்
100 மி.கி. இன்ஜெக்ஜன்
  190.00554.69242.901,217.436,210.30
1 அமெரிக்க டாலர்ரூ. 45.50
1 பிரிட்டிஷ் பவுண்ட்ரூ. 83.51
உதாரணம்
பன்னாட்டுDPL
டெட்ராசைனின்ரூ. 2/- காப்சூல்ரூ. 0.50/- காப்சூல்
அனால்ஜின்ரூ. 0.75/- டாப்லெட்ரூ. 0.15/- டாப்லெட
இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் / இந்திய நிறுவனங்கள் தங்கள் விலைகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது. 1970 காப்புரிமை சட்டத்தினால் இந்தியாவில் மருந்து உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் ஒரு சில ஆண்டிற்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிலை உருவானது. அதே சமயத்தில் IDPL / HAL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் விலைகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு உதவியாக இருந்தது. இந்த இரண்டு தூண்கள் – காப்புரிமை சட்டம் / பொதுத்துறை நிறுவனம் – இந்திய மருந்து துறையை தூக்கிப் பிடித்தன. புதிய மருந்துகள் ஓரளவிற்கு குறைந்த விலையில் கிடைத்ததால் மருந்து வாங்கும் திறன் பரவலாக்கப்பட்டது உற்பத்தி 20,000 கோடியாக வளர்ந்தது.

இத்தனை வளர்ச்சி மருந்துத் துறையில் ஏற்பட்டும் கூட இன்றும்
  • 20 சதமான மக்களுக்கு மட்டுமே நவீன மருந்துகள் கிடைக்கிறது.
  • வருடத்திற்கு 15 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கால் இறக்கின்றனர்.
  • 12 லட்சம் தாய்மார்கள் பிரசவ கவனிப்பு இல்லாமல் இறக்கின்றனர்.
  • உலக காச நோயாளிகளில் 50 சதம் இந்தியாவில்.
இந்நிலையில் உடனடி தேவை மக்களுக்கான மருந்து கொள்கையை உருவாக்கி பொதுத்துறை நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தி இந்திய காப்புரிமை சட்டத்தின் 1970 உதவியோடு உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்வது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக கடைபிடித்த கொள்கைகளால் இந்திய மருந்து கொள்கை நீர்த்து போய் விட்டது. IDPL / HAL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அனேகமாக மூடப்பட்டு விட்டன. இப்போதும் காப்புரிமை சட்டத்தையும் மாற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. இது நிறைவேறுமேயானால் இந்தியா மீண்டும் சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலையை அடைய நேரிடும்.
காப்புரிமை சட்டம் 1970-ஐ பாதுகாக்க, இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட, மக்களுக்கான மருந்து கொள்கை உருவாக்கிட, இன்றைய தேவை நாடு தழுவிய மக்கள் இயக்கம்.
கே. நடராஜன்
நன்றி:மார்சிஸ்ட்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...