bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

கீழடி: இந்துத்துவா எரிச்சலடி.

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.
இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
கீழடி அகழ்வாராய்ச்சி உட்புறக் காட்சி
சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய பொருள் காட்சி
அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. 
சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய பொருள்
குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 
பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய குடுவை
இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. 
இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. 
ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய பானை
வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. 
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.
அழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. 
அந்த வகையில் அழகன் குளம் துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 
அந்தவகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய செங்கல்
முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. 
“அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.
மத்திய தொல்லியல்துறையின் சார்பில் 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணி நடைபெற்றது. 

இந்த அகழாய்வில் சுமார் 7000 க்கும் அதிகமான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
தமிழகத்தில் முதன்முறையாக சங்க கால நகரமொன்று கண்டறியப்பட்டது. வீடுகள், கிணறுகள், தொழிற்கூடங்கள், வடிகால்கள் எல்லாம் மிக விரிவான அளவில் கண்டறியப்பட்டன. இக்கண்டு பிடிப்பானது சங்ககாலத்தில் தமிழகத்தில் செழிப்புற்ற நகர நாகரிகம் இருந்ததை மெய்ப்பிப்பதாக அமைந்தது. 

கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் நிரூபண மானது.

இந்துத்துவா கும்பல் எரிச்சல்.

ஆனால் வேத நாகரிகமே இந்தியாவின் பூர்வ நாகரிகம் என்று நிறுவ முயலும் இந்துத்துவாவாதிகளுக்கு கீழடி ஆய்வும் அதன் கண்டுபிடிப்புகளும் ஏற்புடையதாக இல்லை. 


எனவே இவ்வாய்வை முன்னெடுத்த அதிகாரி அமர்நாத் இராம கிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு மாற்றி னர். தங்களுக்கு ஏற்ற ஓர் அதிகாரியை நியமித்து ஆய்வினை தொடராமல் முடக்கி னர். 

கீழடி போலவே 2014 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட்நகர், அரியானா மாநிலம் பிஞ்சூர், பீகார் மாநிலம் உரைன் ஆகிய இடங்களில் இப்பொழுதும் அகழாய்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் இவற்றில் மிக அதிக பொருட்கள் கண்டறி யப்பட்ட கீழடி அகழாய்வு மட்டுமே தொட ராமல் நிறுத்தப்பட்டது.

அராஜக உத்தரவு.

இந்தப் பின்னணியில் இப்பொழுது மத்திய தொல்லியல் துறை புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. அவ்வுத்தர வின் படி கீழடியில் 2014-16 ஆம் ஆண்டு வரையிலான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான அறிக்கையை அமர்நாத் இராம கிருஷ்ணன் தயாரிக்க வேண்டியதில்லை. 

அவருக்கு பதிலாக, தற்போது பெங் களூரு அகழாய்வுப்பிரிவின் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் அந்த அறிக்கையை தயாரிக்கவேண்டும் என்கிறது அவ்வுத்தரவு.

 அதேபோல அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு கண்டறிந்துள்ள தொல்பொருட்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் மூடி முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக உள்ளன.

அதனை பெங்களூரு அதிகாரி கதவை உடைத்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவ்வுத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

எந்த அதிகாரி ஆய்வு நடத்தி புதியன வற்றை கண்டறிகிறாரோ அவர் தான் அதற்குரிய ஆய்வறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். இதுதான் தற்போது வரை உள்ள நடைமுறை. 

ஆனால் இந்திய தொல்லியல் துறை வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத வகையில் கண்டறிந்தவர் ஆய்வறிக்கையை எழுத வேண்டியதில்லை என்றும் இவ்வாய்வில் எந்த வகையிலும் தொடர்பே இல்லாத நபர் ஆய்வறிக்கையை எழுதவேண்டும் என்றும் கூறுகிறது இவ்வுத்தரவு.

முடக்குவதற்கு தொடர் முயற்சிகள்

கீழடியின் ஆய்வினை சீர்குலைக்க முதலாமாண்டோடு ஆய்வினை முடக்கமுயன்றனர். பொதுவெளியில் வந்தஅழுத்தத்தின் காரணமாக இரண்டா மாண்டுக்கு அனுமதி வழங்கினர். 

ஆனால் நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தனர். பின்னர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பின் நிதிஒதுக்கினர். 

தொடர்ந்து மூன்றாமாண்டு அனுமதியை வழங்க மறுத்தனர். நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் என்று எல்லா இடங்களிலும் கீழடி பேசுபொருளான பின், மூன்றாமாண்டு பெயரளவுக்கு ஆய்வு நடத்தி வெறும் பத்து குழிகள் மட்டுமே தோண்டி கண்துடைப்பாக ஆய்வினை நடத்தி நிரந்தரமாக மூடிவிட்டனர்.

இந்தப் பின்னணியில் முதல் இரண்டு ஆண்டு நடந்த ஆய்வும், அதன் கண்டுபிடிப்பும் எல்லா வகையிலும் முக்கிய மானவையாகின்றன. 
எனவே அந்த ஆய் வறிக்கையை சீர்குலைக்கும் முயற்சியில் இப்பொழுது இறங்கியிருக்கிறார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 


ஆய்வு நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களே ஆய்வறிக்கை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமுஎகச வலியுறுத்துகிறது. தமிழரின் தொல் நாகரிகத்தை குழிதோண்டி புதைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை :மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பன்முகப்பண்பாட்டை மறுத்து, இந்துத்துவா அடிப்படையிலான ஒற்றைப் பண்பாட்டை திணிக்க அனைத்து முயற்சி களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆனால், இந்தியநிலப்பரப்பு வரலாறு அவர்களுக்கு எதிராக உள்ளது.எனவே வரலாற்றை தங்கள் வசதிக்கேற்ப வளைத்து எழுதும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறையின் சார்பில் நடைபெற்ற அகழ் வாய்வை முடக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டது. 

மிகுந்த ஆர்வத்துடனும், அர்ப் பணிப்புடனும் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டு, தமிழரின் தொன்மை மிகுந்த நாகரிகத்தை நிரூபிக்க முயன்ற அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன், அசாம்மாநிலத்திற்கு எவ்வித காரணமுமின்றி இடமாறுதல் செய்யப்பட்டார். 

அதன்பின் பெயரளவுக்கு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கண்டறிந்த தொல் பொருள்கள் குறித்த அறிக்கையை அவர் எழுதக் கூடாது என்றும், இந்த ஆய்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு தலைவர்தான் எழுத வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள உத்தரவு முற்றிலும் நயவஞ்சக எண்ணம் கொண்டது ஆகும். 


அகழ்வாய்வை மேற்கொண்ட அதிகாரியே அறிக்கையை எழுத வேண்டும் என்ற தொல்லியல்துறையின் நடைமுறை முதல்முறையாக மாற்றப்படுவதன் நோக்கம் என்ன? 

கீழடியில் கிடைத்த பொருள்களின் தொன்மையை மறுதலிக்கும் சதியோ என சந்தேகம் வருகிறது.

எனவே, மத்திய தொல்லியல்துறை தன்னுடைய உத்தரவை திரும்பப் பெற்று, அகழ்வாய்வை மேற்கொண்ட அமர்நாத் இராமகிருஷ்ணன், அது தொடர்பான அறிக்கையை எழுத அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...