bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 16 டிசம்பர், 2015

படு கொலைகளுக்கு நிகரான குற்றம்!

தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.




இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 16ஆம் தேதியன்றே, இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட தமிழகத்தில் 112 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்ததா இல்லையா?
தலைமைச் செயலாளரின் அறிக்கையில், 30-11-2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 50 செண்டி மீட்டர் மழை பெய்யும் என்று தெரிவிக்க வில்லை என்றும், ஆங்காங்கு மிக மிகுந்த கனத்த மழை பெய்யும் என்று தான் கூறப் பட்டிருந்தது என்று சமாளித்திருக்கிறார்
ஆனால் “இந்து” நாளிதழில், “Bloggers predict heavy rain on Monday 
(30-11-2015) and Tuesday in Coastal Regions of the State” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 27ஆம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறும்போது, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமனாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிகக் கன மழை பெய்யும்” என்று கூறி, அது நாளேடுகளில் வெளி வந்திருக்கிறதா இல்லையா?

இஸ்ரோ வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குனர் சிவன் அவர்கள் அளித்த பேட்டியில், “சென்னையில் கன மழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து, தமிழக அரசுக்குத் தகவல் கூறினோம். ஆனால் அரசு முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை” என்றே தெரிவித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், 1-12-2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30-11-2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1-12-2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார். 
தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் இதையெல்லாம் மூடி மறைத்து விட்டுத் திசை திருப்பும் அறிக்கை விடுவது சரிதானா? நீதி விசாரணை நடத்த முன் வராமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு அ.தி.மு.க. அரசு உண்மைக்கு மாறாக இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடச் செய்திருப்ப திலிருந்தே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைத் திறந்து சென்னை மாநகரையும், இங்கே வாழும் மாநகரத்து மக்களையும், சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியதில் அ.தி.மு.க. அரசின் நிர்வாகம் மாபெரும் தவறு செய்து விட்டது என்பதையும், அதை மூடி மறைக்கும் முயற்சி தான் தலைமைச் செயலாளரின் இந்த அறிக்கை என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
1ஆம் தேதிக்கு முன்பே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து போதிய நீரை வெளி யேற்றியிருந்தால், 1ஆம் தேதி ஒரே நாளில் 29,000 கன அடி என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா?
நவம்பர் 17ஆம் தேதி ஏரியிலே 22.3 அடியாக நீர் மட்டம் இருந்த போது, 18 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியவர்கள்., நவம்பர் 30ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 22.05 இருந்த போது 800 கன அடி நீரை மட்டுமே அனுப்பியது தவறா இல்லையா? 
அதைத் தான் அனைத்து எதிர்க் கட்சிகளும் கேட்கின்றன. 
அதைத் தான் 11-12-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேயும், நவம்பர் 17ஆம் தேதி 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. ஆனால் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை மிகக் குறைந்த நீரே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விட்டது தான் சென்னை மாநகரிலே வெள்ளப் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம். இந்தத் தவறை தலைமைச் செயலாளரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே வெள்ளத்திற்குக் காரணம் தமிழக அரசின் நிர்வாகம் தான் என்பதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை என்பது அ.தி.மு.க. அரசின் ஒப்புதல் வாக்குமூலம் தான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில், 1-12-2015 அன்று காலை 10 மணிக்கு 10,000 கன அடி நீரும், 12 மணிக்கு 12,000 கன அடி நீரும், 2 மணி முதல் 20,960 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டதாகவும், மாலை 5 மணி அளவில் அது 25,000 கன அடியாகவும், மாலை 6 மணிக்கு 29,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த அளவுக்கு ஒரே நாளில் நீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறும் தலைமைச் செயலாளர், அதற்கு முதல் நாள், அதிக நீரை வெளியேற்றாமல், வெறும் 800 கன அடி நீரை மட்டுமே வெளியேற்றியது மிகப் பெரிய, கொடுமையான தவறு தானே? அந்த அளவுக்கு நீரை மிக அதிகமாக வெளியேற்றிய காரணத்தினால் தானே சென்னை மாநகரிலே பேரழிவு ஏற்படவும், பிணங்கள் மிதக்கவும் நேர்ந்தது. அதற்கு இந்த அ.தி.மு.க. அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்?
தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு 10 ஆயிரம் கன அடி நீரையும், 12 மணிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரையும் திறந்து விட்டதாக சொல்லி விட்டு, அவரே அதே அறிக்கையின் அடுத்த பக்கத்தில் சென்னை மாவட்டக் கலெக்டர் 11.20 மணிக்கு 7,500 கன அடி நீரை வெளியேற்றப்பட்டதாக அறிக்கை கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். இதிலே எந்தப் புள்ளி விவரம் சரியானது?
பொறியாளர்கள் யாரும் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர், முதலமைச்சர் ஆகிய யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை, அவ்வாறு கூறுவது தவறு என்று தலைமைச் செயலாளர் அறிக்கையிலே கூறுகிறார். அதனை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், கீழ் மட்டத்திலே உள்ள அதிகாரிகள் அவர்களாகக் கேட்காவிட்டாலும், மேலே உள்ள அதிகாரிகள் தாங்களாக மழையின் நிலைமையை உணர்ந்து ஆணை பிறப்பித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? எனவே பழியை கீழ் மட்ட அதிகாரிகள் மீது போட்டு, தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.
                                                                                                                                 - கலைஞர்,
======================================================================================================
இது உண்மையா?
அந்த இணைப்பில் சென்றால் இணைப்பு கிடைக்கவில்லை.
நீக்கம்  செய்து விட்டார்களா என்ன?
உண்மைதான்.
அந்த பக்கம் இதுதான்.
ஆனால் தற்போது நீக்கப்பட்டு விட்டது.




சனி, 22 ஆகஸ்ட், 2015

தேர்தல் வரும் பின்னே !

வழக்கு வரும் முன்னே?

2G வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அடித்த கமெண்ட் தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது. சி.ஏ.ஜியின் குற்றச்சாட்டான "1,76,000 கோடி நட்டம்" என்பதை அவர் எப்படி புரிந்துக் கொண்டார் என்பது இது வரை விளங்கவில்லை.
"Mind boggling", என்றார். அதிமுகவின் நாலாந்தர பேச்சாளர் சந்துமுனையில் நின்று "நட்டம்" என்று முழங்கியது போலவே. சிபிஐ சூராதிசூரனாய் ஊடகங்கள் முன் குதித்தது. 
கோர்ட்டில் கதகளி ஆடியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுத்தது போலவே பத்திரிக்கைகள், ஊடகங்கள் பொங்கி தீர்த்தனர். இன்று நாடாளுமன்றம் முடங்குவதற்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க அன்று எதிர்கட்சியாய் நின்று, நாடாளுமன்றத்தை முடக்கி நேர்மைக்கு மொத்தக் காவலனாய் காட்டிக் கொண்டது.
கீழ் கோர்ட் விசாரிக்கும் வழக்கு தன் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இந்தியாவின் உயர்ந்த அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டது. 
இவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கொரு கோணத்தில் நின்று, "ஒற்றை மனிதரை" பிடுங்கித் தின்று, நீதியை நிலைநாட்டுவதாய் காட்டிக் கொள்ள துடியாய் துடித்தனர்.

ஆனால் அவர் துவளவில்லை, அசரவில்லை, அயர்ந்து வீழ்ந்து விடவில்லை. கைது செய்து அடைத்த போதும் பயந்து விடவில்லை. நெஞ்சுரத்தோடு விசாரணையை எதிர்கொண்டார். 
எப்.ஐ.ஆர் போடப்பட்ட போது தான் , 1.76,000 கோடி நட்டம் காணாமல் போய்,4,000 கோடி நட்டம் பதிவு செய்யப்பட்டது.
அது தவறு என சி.ஏ.ஜி வாதிடவில்லை. தனது வேடத்தை திறம்பட கட்டியதில் திருப்திப்பட்டு உறங்கிப் போனார். மூளை ஸ்தம்பித்தவர் , கோமா நிலையிலேயே இருந்து விட்டார். குறைந்தத் தொகை தான் நட்டம் என காதில் போய் சொல்லி இருந்தால், மீண்டிருப்பார் பாவம். அந்த பழி சி.பி ஐயையே சேரும்.
சி.பி.ஐ வழக்கமான பூச்சாண்டி எல்லாம் காட்டியது. இந்தியா முழுதும் ரெய்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என செய்திகளை கூவியது. ஊழல் எதிர்ப்பு புண்ணியாத்மாக்கள் வெதும்பி வெடித்தார்கள்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
1.76 லட்சம் போய், 4000 போய், 200 கோடி பரிவர்த்தனை தான் குற்றம் என இறுதி செய்யப்பட்டது. இந்த வித்தியாசமும் "பரமாத்மாக்களின்" கண்களில் படவில்லை.
வழக்கு நீதிமன்றத்தில் துவங்கியது. அவர் ஓடி ஒளியவில்லை. வாய்தா வாங்கவில்லை. வழக்கறிஞர்களின் கருப்பு கவுனுக்கு பின் போய் பதுங்கவில்லை.
நாள் தவறாமல் கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்டவராய் பதிலளித்தார். சாட்சியாய் கூண்டில் ஏறி சாட்சியளித்தார். வழக்கறிஞர்களுக்கு குறிப்பெடுத்துக் கொடுத்தார். 
ஒரு கட்டத்தில், அவரே வழக்கறிஞராய் நின்று வாதாடினார். டில்லி வக்கீல்கள் அவரது வாதத் திறமை கண்டு, மனதிடம் கண்டு பிரமித்துப் போயினர்.
சி.பி.ஐ தடுமாறியது, வழக்கின் போக்குக்கு தாக்கு பிடிக்க முடியாமல். அடுத்த வழியை தேடியது. அமலாக்கத் துறை களமிறங்கியது. அதே ரெய்டு, அதே விசாரணை. ஆனால் அடுத்த வழக்கு. பிரிவுகள் அதே, குற்றச்சாட்டு அதே.
அனுமதி வழங்கப்பட்டதில் தவறு என்றும், பணம் கைமாறியது என்றும் நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். திடீரென விசாரணை முடியவில்லை என்றார்கள், 
வாய்தா கேட்டார்கள்.
கடுப்பான நீதிபதி நேரடியாகவே கேட்டார்,"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கமாக வழக்கை இழுத்தடிப்பார்கள். அவர் ஒத்துழைக்கிறார், நீங்கள் இழுத்தடிக்கிறீர்களே. உங்கள் நோக்கம் என்ன?"
பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி போட்டார்கள், வெளிநாட்டுக்கு பணம் சென்றதை கண்டு பிடித்து விட்டார்கள். பரபரத்தனர்.
பிரதமர் முதல்வர் சந்திப்பு நடந்தது.
மீண்டும் ரெய்டு, மீண்டும் விசாரணை. ஊடகங்கள் பரபரப்பு. புதிய வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு. ஆவணங்கள் சிக்கின என்று ஆரவாரம்.
மூன்று முறை ரெய்டு செய்ததும் அதே இடம். மூன்று முறை ஆய்வு செய்ததும் அதே ஆவணங்கள். மூன்று முறை விசாரணை செய்யப்பட்டதும் அதே நபர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புது பரபரப்பு. ஆண்டுகள் தான் அய்ந்து உருண்டோடி விட்டன.
இன்னும் எத்தனை நாட்கள் இந்த நாடகமோ? விசாரணையின் போதே தீர்ப்பு கொடுத்து, அதற்கு இப்போது வழக்கு புனைய முடியாமல் தவிக்கிறார்கள்.
அன்று துடித்தெழுந்த நீதிவான்களை காணவில்லை. மீண்டும், மீண்டும் தலைப்பு செய்தி போடும் பத்திரிக்கைகள் அத்தோடு சரி, வழக்கு ஏன் அரசு தரப்பில் இழுத்தடிக்கப் படுகிறது எனக் கேட்க மனமில்லை.
கழுகுக் கண் கொண்டு நோக்கிய உச்ச நீதி கனவான்களுக்கு, கண் அவிந்தே போனது.
நேர்மை திறம் அற்றவர்கள், நெஞ்சில் வஞ்சம் நிறைந்தவர்கள்.
ஆ. ராசா இதையும் எதிர் கொள்வார். வென்று வருவார்.
உண்மையை மறைத்து, வீண் பழி போட்டு வெற்றியை மீண்டும் களவாடத் துடிக்கிறார்கள்.
                                                                                                                               எஸ்_எஸ்_சிவசங்கர்‬,
இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

2 ஜி வழக்கில் கோர்ட் உத்தரவின் படி வருவாய் அமலாக்க துறை, வருமான வரி துறை, சி.பி.ஐ., என 3 துறைகளும் பரிமாறி எடுத்த முடிவின்படி , 2004 முதல் 2010 வரை எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் வருமான ஆவணத்தை கேட்டு பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. 
2013 ல் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷி , கோர்ட் உத்தரவின் படி நாங்கள் நடத்திய சோதனையில் ராஜாவிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து இல்லை என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளார்.
 தொலைக்காட்சிகள் ஒப்புக்கொண்டதை இதனை நான் விளக்கி இருக்கிறேன். 
இத்தனையும் மீறி, டில்லி சி.பி.ஐ.,க்கு தெரியாமல் சென்னை சி.பி.ஐ., சோதனையும் செய்துள்ளனர். 
சி.பி.ஐ., ஒரு வழக்கு பதிவு செய்து இருப்பது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுகிறது. சி.பி.ஐ,.,க்குள் மோதல் உள்ளதையே இது காட்டுகிறது. 

பிரிவினை உள்ளது என்றே தோன்றுகிறது. 
சுப்ரீம் கோர்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது. 
இது குறித்து சி.பி.ஐ., புலன் அதிகாரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அனைத்து உண்மைகளையும் சொல்லியிருக்கிறேன். 
மறைந்த சாதிக்பாட்சாவின் சொத்து கிரீன் ஹவுஸ், என்னுடையது என்று சொல்லியிருக் கிறார்கள். 
ஆனால் கோர்ட் குற்றப்பத்திரிகையில் இல்லை. 

இதற்கு அரசியல் காரணம் உள்ளது. 2014ல் நான் நீலகிரியில் போட்டியிடும் போது வெளியிட்ட சொத்துக்கள் இணையதளத்தில் அப்பேட் செய்துள்ளேன். 
இதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ராஜா தங்கம் வைத்து கொள்ளக்கடாது என்று சட்டம் சொல்லவில்லை. 
இதற்கு மேல் என்னிடம் இல்லை. 
என்மீது சொத்துக்குவிப்பும் இல்லை. 
தங்களிடம் உள்ள ஆவணங்களை ஆராயாமல், இவ்வாறு வழக்கு பதிவு செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இது கோர்ட்டுக்கு எதிரானது. 
தேர்தல் நேரத்தில் வேண்டும் என்றே வழக்கு பதியப்பட்டுள்ளது. 
சென்னை வந்த மோடி-ஜெயலலிதா சந்திப்புக்குப் பின்னர் பழைய குப்பையை சி.பி.ஐ.கிளறுவது தேர்தல் கால பழி வாங்கல், திமுகவுக்கு ஆதரவாக குவிந்து வரும் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் அசிங்கமான அரசியல் தந்திரம் தான்.இதற்கு பொது நிறுவனமான சி.பி.ஐ துணை போவது மிக ஆபத்தானது.
இவ்வாறு ராஜா கூறியுள்ளார். 

=================================================================================

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தமிழ்நாடு மின்சார வாரியம்

 அல்லது

அம்மா “கமிசன்” மண்டி!

ம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.
பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனுக்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.
அதானி ஒப்பந்தம்
சூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.
பொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.
“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை  யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.
அதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.
கமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன? “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.
அம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட்  ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.
தமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.
திட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.
எண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.
2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.
நாகல்சாமி
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.
“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சேர்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.”  என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.
அரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.
நாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான்  செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன?
                                                                                                                                             – இளங்கதிர்______________________________
நன்றி:புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
_______________________________

திங்கள், 13 ஜூலை, 2015

அதானியின் ‘சோலர்’ மின்சாரம்

யாருக்கு இலாபம்?

அதானி குழுமத்துடன் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தினை அரசு செய்து கொண்டிருக்கிறது. மரபுசாரா மின்சாரம் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையைத் தீர்க்கப் போவதாக அரசு சொல்கிறது. இது உண்மைதானா என்பதனை ஆய்வு செய்வதுதான் நம் நோக்கம்..முதலிலேயே ஒன்றை வலியுறுத்திவிடுவது நம் கடமையாகும். நாம் மரபுசாரா மின்னுற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக நாம் அதன் பயன்பாட்டை வலியுறுத்துகிறோம்; வற்புறுத்துகிறோம்.
இது 648 மெ.வா. 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம். ஒரு யூனிட் ரூ 7.01 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் 4536 கோடியை முதலீடு செய்யப் போவதாக செய்திகள் சொல்லுகின்றன. அதாவது ஒரு மெ.வா.க்கு ஏழு கோடி மூலதனச் செலவாகிறது. இதில் 3175 (70%) கோடியை கைமுதலீடு, எஞ்சிய பகுதி கடன் என்கின்றனர். ஒரு மெ.வா.க்கு ஓர் ஆண்டில் 15 லட்சம் யூனிட் (1.5 மில்லியன் யூனிட்) உற்பத்தியாகும் என்று கணக்கிடப்படுகிறது. ஓர் ஆண்டில் மட்டும் 972 மில்லியன் யூனிட் (97.2 கோடி)யை அரசு இந்த குழுமத்திடமிருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது. ஒரு மெகாவாட்க்கு செலவிடப்படும் ஏழு கோடி ரூபாய் மூலதனம் ஆண்டுக்கு 1.05 கோடி வருமானத்தைத் தரும். இந்த மின் உற்பத்தி நிலையத்திற்குத் தோரயமாக 4000 ஏக்கர் நிலம் தேவைப்படக் கூடும். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இது அமையவிருக்கிறது.
guajrat solar park
2012ல் அரசு சூரிய மின் கொள்கையினை அறிவித்தபோது இங்கு 100 மெ.வா. சூரிய மின் பூங்கா அமைக்கப் போவதாக நிலங்களை அரசு கையகப்படுத்திருக்கிறது. இந்த நிலங்கள் அதானி குழுமத்திற்கு தரப்பட போகிறதா என்பது தெரியவில்லை. ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக செய்திகள் முன்னதாக இருந்தது. ‘ராசி கிரின் எர்த்’ என்ற நிறுவனமும் அரசும் சேர்ந்து இந்தப் பூங்காவை அமைப்பதாக இருந்தது.
மின்சாரச் சட்டம் 2003_ சூரிய மின்சாரம் போன்று மரபுசார மின்சாரத்தினை மின் வினியோக நிறுவனங்கள் வாங்கி பயன் படுத்த வேண்டுமெனவும், ஆண்டு உபயோகத்தில் இந்த மின்சாரத்தின் அளவை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கவும் சொல்லுகிறது. 2012ல் அரசு சூரிய மின் கொள்கை அறிவித்தபிறகு பல வழக்குகளுக்குப்பின் இந்த அளவை 0.25% என ஆணையம் நிர்ணயித்தது. இதனை ஒரு விழுக்காட்டிற்கு உயர்த்த ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதியாண்டு 2016ல் தமிழகத்தின் மின் தேவை 92,000 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒரு விழுக்காடு என்ற நிலையில் வாரியம் 920 மில்லியன் யூனிட் (92 கோடி) சூரிய மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அதானி குழுமத்துடன் மற்றவர்களுடன் மின்வாரியம் செய்து கொண்ட மொத்த சூரிய மின்சாரத் திறன் 1058 மெ.வா. ஆகும். ஆக 920 மி.யூ. பதிலாக 1587 மி.யூ.டை ரூ7.01க்கு வாரியம் வாங்கும்.
2010 ஆண்டில் சூரிய மின்சாரத்தின் விலை என்பது யூனிட் ரூ18 ஆக இருந்தது. இன்று படு வேகமாகக் குறைந்து 5.86க்கு வந்து விட்டது. உலக அளவில் சூரியத் தகடுகளின் தேவை வெகுவாக குறைந்து விட்டது. சூரிய மின் உற்பத்தியை முன்னெடுத்த ஜெர்மன், ஸ்பெய்ன், இத்தாலி, செக்கோஸ்லோவகியா போன்ற நாடுகள் தற்போது பின் வாங்கி விட்டன. சீனா, ஜெர்மன் நாடுகளில் சூரிய தகடு உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் திவலாகியுள்ளன. இந்நிலையில்தான் இந்தியா ஒரு லட்சம் மெ.வா. சூரிய மின்சாரத்திற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. தகர்ந்து கொண்டிருக்கும் இந்த அன்னிய நிறுவனங்களுக்கு இது ஒர் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கும். (நடுவண் அரசின் இலக்கு எட்ட முடிந்ததல்ல. இதனைத் தனியாகப் பார்ப்போம்.) அதனால்தான் ஆணையம் சூரிய மின்சாரத்தின் விலையை மட்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாற்றிட விதியினை வகுத்துள்ளது.
முன்னே சொன்னதுபோல இந்த கொள்முதல் விலை யூனிட்க்கு ரூ1.15 அதிகமாக இருக்கிறது.
 ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ 5.50 என்று இருக்கிறது. 
இங்கும் அதானி குழுமம் வெறும் 40 மெ.வா.க்கு மட்டுமே நிலையத்தை அமைத்துள்ளது. 
எதிர்காலத்தில் இந்த விலை மேலும் குறையக்கூடும். 
தமிழக ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கானது.
 இன்றைய சந்தை விலைக்கே கூடுதலாக கொடுக்கும் விலையைத் தான் 25 ஆண்டுகளுக்கும் கொடுக்க வேண்டும். 
ஒவ்வொரு ஆண்டும் 111.72 கோடியை கூடுதலாக அதானி குழுமத்திற்கு தரப் போகிறோம். 
எதிர் காலத்தில் இந்த விலை குறைந்தால் இது மேலும் கூடும்.
 25 ஆண்டுகளில் 2793 கோடியை தமிழகம் கூடுதலாக தர வேண்டியிருக்கிறது. இதற்கான வட்டியையும் சேர்த்தால், 25ஆண்டுகளில் இக்கூடுதல் விலை இரண்டரை மடங்காகும். 
அதாவது 6982 கோடியாக இருக்கும். 
அதானியின் மூலதனத்திற்கு மேலே இருக்கும்.
இன்று இதனை வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாத பொழுது ஏன் இந்த கொள்முதல்?
ஏழு ரூபாய்க்கு வாங்கப்படும் மின்சாரம் பயனீட்டாளர் முனைக்கு வரும் போது ரூ10.50 ஆக மாறும்.
மரபுசாரா மின்சாரத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர கொஞ்ச கட்டண உயர்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்ற சித்தாந்தத்தை அரசு ஒருவேளை முன் வைக்கலாம். இது சரியானால் சந்தைவிலையை விட அதிகம் தருவதின் காரணம் என்ன? மரபுசாரா மின்சாரம் என்ற பெயரில் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதும் அதனை மக்கள் தலையில் கட்டுவதும் எப்படி நியாயமாகும்?
எல்லாவற்றையும் விட தொழில்நுட்ப ரீதியாக, நிறுவப்பட இருக்கும் நிலையத்தின் உற்பத்தியை தமிழகத்தில் பயன்படுத்த முடியுமா என்ற பெரிய கேள்விக்கு விடையளிப்பார் யாரும் இல்லை. பிரச்சினை இதுதான்.
சூரிய மின்சாரம் இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காற்றாலை மின்உற்பத்தி காற்றின் வேகத்திற்கு ஏற்ப மாறுவது போல் இந்த மின்சாரமும் சூரிய ஒளிக்கேற்ப வேகமாக கூடவும் அதே வேகத்தில் குறையவும் செய்யும். இந்த உற்பத்தி மாற்றம் வினாடிகளில் இருக்கும். மின்சாரத்தை பெரிய அளவில் சேமிக்க முடியாது. எனவே மாறும் வேகத்திற்கேற்ப மற்ற உற்பத்திகளைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டும். ஆனால் மாறும் இம் மின்சாரத்தின் வேகத்திற்கு ஏற்ப வினாடிகளில் இதனைச் செய்ய இயலாது. அப்படிச் சரி செய்யும் பொழுதும் கூட நிலையற்ற இம் மின்சாரம் எதிர்த்திசையில் மீண்டும் மாறக்கூடும். இந்த காரணத்தாலும் செக்கஸ்லாவோக்கியா போன்ற நாடுகள் இம் மின்சார உற்பத்தியிலிருந்து பின் வாங்கின.
மின்சாரத்தின் தேவையும், உற்பத்தியும் மின் அலையால் (Hertz) கட்டுப்படுத்தப்படுகின்றன. 49.5 - 50.2 அலைக்குள் மாநிலத்தின் மின் கட்டமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். 50 அலைக்குமேல் இருந்தால் உற்பத்தி, தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருளாகும். 50.2 அலைக்குமேலே சென்றால் மாநில மின்கட்டமைப்பு மற்ற மாநிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடும் ஆபத்து உண்டு. ஒருவேளை மாநிலமே இருளில் மூழ்க வேண்டியும் வரலாம். அது மட்டுமல்ல. 50.2 அலை வரிசையை எட்டும் போது எந்த மாநிலமும் கூடுதல் உற்பத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த மின்சாரம் இலவசமாகும். அதற்கு விலையைக் கோர முடியாது.
தமிழகத்தின் மின்கட்டமைப்பு 500 - 700 மெ.வா. அளவுக்கு மட்டுமே இந்த நிலையற்ற மின்சாரத்தினை ஏற்க முடியும். ஆனால் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. தமிழகத்தில் 7440 மெ.வா. காற்றாலைகள் இருக்கின்றன. சூரிய மின்சாரம் போன்றே இந்த உற்பத்தியும் நிலையற்ற மின்சாரமாகும். காற்றாலை மின்சாரத்தை தமிழகம் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதன் விலையோ யூனிட் ரூ 3.12 தான். இந்த உற்பத்தியை முடக்குவதாக காற்றாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பல நேரங்களில் 1,200 மெ.வா. உற்பத்தி முடக்கப்படுகிறது. அவசர காலத்தில் காற்றாலைகளையாவது உற்பத்தி செய்யாமல் நிறுத்த முடியும். ஆனால் சூரிய மின்சாரத்தில் இது சாத்தியமில்லை. அதானியின் 4000 ஏக்கருக்கும் உடனடியாக பந்தல் போட்டு மூட வேண்டும். இது நடக்கக் கூடியதல்ல. இந்த மின்சாரம் கட்டமைப்பில் வீணாகப் போவதற்கே, விலையில்லாமல் போவதற்கே சாத்தியம் அதிகம்.
அப்படியானால் சூரிய மின்சாரத்தினை தமிழகம் பயன்படுத்தவே முடியாதா, இந்த வளம் வீணாக வேண்டியது தானா என்ற கேள்வி மிக முக்கியமானது.
இல்லை. இந்த வளம் தமிழகத்தின் பெரிய வரமாகும். திட்டமிடுதலில் தான் தவறு இருக்கிறது. நாட்டின் எந்தத் தேவையையும் முதலாளியிடமிருந்து ஆரம்பிப்பதில் தான் இந்தத் தவறு இருக்கிறது. மாறாக மக்களிடமிருந்து துவங்கினால் மிகப் பெரிய பயனை நாம் பெறமுடியும்.
2013ல் தமிழகத்தில் மாதத்திற்கு 50 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் 89.45 லட்சம் வீடுகளாகும். வாடகை வீட்டில் பொது மின் இணைப்பில் இருப்போரை கணக்கில் எடுத்தால் இது இன்னமும் கூடும். இந்த மின் இணைப்பில் உள்ளோர் பகுதியில் சூரிய தகடுகளை அமைத்து அவர்களுக்கு மின்சாரம் வழங்கலாம். அவர்கள் வாரிய பொது கட்டமைப்பில் இணைக்கப் படவேண்டியதில்லை. இதற்கு ஸ்டேன்ட் எலோன்(stand alone) என்று பெயர். சிறிய கிராமமாக இருந்தால் அந்த கிராமத்திற்கே தனியாக மின்கட்டமைப்பை ஏற்படுத்தலாம். இது மைக்ரோ கிரிட் (micro grid) எனப்படும். சூரியத் தகடுகளை வீட்டின் கூரையில் கூட அமைக்கமுடியும். நிலத்தின் பயன்பாடும் குறையும்.
மாநிலத்தின் கட்டமைப்பிலிருந்து விடுபட்டுவிடுவதால் மின் உற்பத்தியின் ஏற்ற இறக்கங்கள் மாநில கட்டமைப்புக்கு வராது. சிறியளவிலான உற்பத்திக்கு சேமிப்பு மின்கலங்கள் சாத்தியமாகும். இதில் ஏற்படும் மின் இழப்பு குறித்து கேள்வி எழுப்பப்படலாம். இந்த இழப்பும், பொது கட்டமைப்பிலிருந்து மின்சாரம் கொண்டு வரப்படும் இழப்பும் ஒன்றாகவே இருக்கும். எனவே புதிய இழப்பு என்று சொல்வதற்கு ஏதுமில்லை. அத்துடன் எளிய மக்களுக்கு 24*7 மின்சாரம் வழங்க முடியும். சூரிய மின்சாரத்தில் இருக்கும் வசதியே சிறு, குறு மின்உற்பத்தி செய்ய முடிவதுதான். இந்த வசதியைப் பயன்படுத்தியே திட்டமிடப்பட வேண்டும். முதலாளிகளுக்கு லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக இது மாற்றப்பட்டதுதான் இத்தனை துயரத்திற்கும் காரணமாகிறது
பொருளாதார அடிப்படையிலும் அரசுக்கு லாபமானது. 89.45 லட்சம் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ரூ1.20 ஆகும். தற்போது இவர்கள் முனையில் வாரிய மின்சாரத்தின் விலை ரூ6.20 ஆகிறது. அரசின் மானியம் மற்றும் தொழில், வணிக கட்டணங்களிலிருந்து ஒரு பகுதி என யூனிட்க்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. 89.45 லட்சம் வீடுகள் ஆண்டுக்கு பயன்படுத்தும் மின்சாரம் 5330 மில்லியன் யூனிட் (533 கோடி) ஆகும். மானிய செலவில் ஆண்டுக்கு 533 * 5 = 2667 கோடி மிச்சமும் ஆகும். இந்தத் தொகையில் ஆண்டுக்கு 388 மெ.வா. சூரிய நிலையம் அமைக்க முடியும். 5330 மில்லியன் யூனிட்க்கு செலவிடப்படும் மூலதனம் மானியச் சிக்கனத்தின் மூலமே 10 ஆண்டுகளில் ஈடு கட்டப்பட்டு விடும். (2667/7= 388 மெ.வாட். 5330/1.5 = 3553 மெ.வாட்.) ஆண்டு மின் கட்டணமான 640 கோடி வருமானமும் குறையாமல் கிடைத்துக் கொண்டிருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக 25 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு கட்டண உயர்வும் இருக்காது. சமூகத்தின் எளிய மக்களுக்கு தொழில்நுட்பம் இவ்வாறு தான் பயன்பட வேண்டும்.
இது போன்றே ஆண்டுக்கு 12,000 மில்லியன் யூனிட் செலவாகும் 20 லட்ச விவசாய இணைப்புகளையும் தனித் தனி 5 கிலோவாட் மின் உற்பத்தி நிலையமாக்கிவிட முடியும். நடுவண் அரசு மானியத்தில் சிறிய அளவில் நடைமுறையிலும் இத்திட்டம் உள்ளது.
கேரளத்தின் ‘விழிங்ஞம்’ துறைமுக ஒப்பந்தத்தினை அதானி குழுமம் பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரையில் ஆந்திரத்தின் ‘கங்காவரம்’, புதுச்சேரி துறைமுகங்களைப் பெறுவதில் இதனால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது எண்ணூர் துறைமுகம் இதன் குறியாக இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. நடுவண் ஆளும் கட்சிக்கு கேரளமும், தமிழகமும் தீவாக உள்ளது. அரசியல் மூலதனத்திற்கு அதானியா(?) என்று தமிழக அரசியல் வட்டம் இதனைக் கணிக்கிறது. இதன் பின்னணி பல யூகங்களுக்கு விதையாக இருப்பது உண்மைதான்.
                                                                                                                                           - சா.காந்தி
நன்றி:கீற்று.
========================================================================
========================================================================

  • மெல்லிசை மன்னருக்கு தற்போது 87 வயதாகிறது .கடைசிவரை தொலைகாட்சிகளில் இசை நிகழ்சிகள் நடத்திவந்துள்ளார்.
    இதுவரை 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    தனது தோழர் ராமமூர்த்தியுடன் இணைந்து விஸ்வனாதன் -ராம மூர்த்தி என்ற பெயரில் 700 படங்களுக்கும்,தனியாக 500 படங்களுக்கு ம் இசையமைத்துள்ளார்.
    இவரின் சொந்த ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி ஆகும்.
    இவரின் முழுப்பெயர்  பெயர்
    மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வனாதன் ஆகும்.
    தமிழ் மட்டுமின்றி மலயாளம்,இந்தி,கன்னடம் தெலுங்குப் படங்களுக்கும் விஸ்வனாதன் இசையமைத்துள்ளார்.
    உலகநாயகன் கமல்ஹாசனின் காதலா,காதலா,காதல் மன்னன்,உட்பட 11 பட்னக்களில் நடித்துள்ளார்.


    =======================================================================

பூமி மீண்டும் நீரில் மூழ்கும்?

பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன் ஆண்டுகளில், பூமி முழுவதும் மீண்டும் தண்ணீரால் சூழப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது. கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது. 

அதன் பின் அதன் தடிமன் குறைந்தபடியே உள்ளதாகவும், கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
========================================================================

ஞாயிறு, 5 ஜூலை, 2015

'வியாபம் ' ஊழல்களின் தாய்

" 'வியாபம் ஊழல் 2ஜியில் நடந்ததாக  முறைகேடு கணக்கை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது.இந்த ஊழல்களில் சம்பத்தப்பட்ட வர்கள் பட்டியலில் உள்ளவர்களில் இதுவரை 80 பேர்கள் திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளனர்.வியாபம் ஊழலை ஊழல்களின் தாய்என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. இங்கே பிரம்மாண்டம் என்பது புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.சம்பந்தப்பட்ட காவிக்குமபலையும் சேர்த்துதான்."
நீ ங்கள் ஒரு மருத்துவராக, பொறியியலாளராக அல்லது அரசு ஊழியராக என்ன செய்ய வேண்டும்?
வியாபம் மெகா ஊழல்
வியாபம் மெகா ஊழல்
பதில்: உங்கள் ஏரியா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் அல்லது பாரதிய ஜனதா தலைவர் எவருக்காவது ‘காணிக்கை’ கொடுத்தால் போதுமானது.
என்ன குழப்பமா? 
பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில் உள்ள நிலைமையைத் தான் சொல்கிறோம். விளக்கமாகவே சொல்கிறோம்.
எட்டாம் வகுப்பிலிருந்தே மருத்துவம் போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பிள்ளைகளை தயாரிக்கும் வேலைகள் நடக்கிறது. நீங்கள் விரும்பும் துறைக்கான படிப்புகளுக்கு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தில் இடம் கிடைக்கும்.
தங்களை ஊழல்களுக்கு எதிரானவர்கள் என்று  முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மோடி கட்சியான பாஜக ஊழல்கள் 2-ஜி,3-ஜி,நிலக்கரி சுரங்க ஊழல்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு ஒவ்வொன்றாக வெளி வருகிறது.

போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித் தேர்வை நடத்துவது ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழி பெயர்ப்பு– 
வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் 
சுருக்கமாக – "வியாபம்".
வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் தற்போது வட இந்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வியாபம் ஊழல் என்பதைச் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், தகுதியற்றவர்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு குறுக்கு வழிகளிலோ அரசு வேலை அல்லது மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இடம் பிடிப்பது என்று சொல்லலாம்.
இந்த எளிய விளக்கத்தைத் தாண்டி வேறு சிக்கலான பரிமாணங்களும் இதற்கு உண்டு. அவற்றைப் பார்க்கும் முன், கீழ்மட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளின் செயல்பாட்டு முறை (Modus Operandi) என்னவென்பதைப் புரிந்து கொள்வோம்.
வியாபம் மெகா ஊழல்
தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள்.
தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள் :
1)   ஆள்மாறாட்டம் : தேர்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாக கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வு மைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, மேற்பார்வையாளருக்கு காந்தி தாள் சப்ளை செய்வது மற்றும் மேல் மட்ட ‘கைகளை’ கவனித்துக் கொள்வது மூலம் இது நிகழ்த்தப்படுகிறது.
2)   ரயில் இன்ஜின் / ரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்த துறை பற்றி நன்கு அறிந்த ஒருவரை)  நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 லட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக் கொள்ளலாம்
3)   காலி விடைத்தாள்கள் : அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளை காலியாக வைத்து விட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கி விடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்த காலித் தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டு – தலைசுற்றுகிறதல்லவா? ஆனால், இப்படித் தான் நடந்துள்ளது.
மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு உயர் கல்விப் பிரிவு அல்லது அரசுத் துறை ஒன்றில் வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஒருவர், அதற்காக சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லை – அதாவது காசு இருக்கும் பட்சத்தில். பையில் தயாராக பணக்கட்டுகளோடு இருப்பவரைத் தேடி இடைத் தரகர்கள் வருவார்கள். நீங்களே தேர்வை எழுதுவதானால், உங்களுக்கு முன்னோ பின்னோ ஒருவர் அமர்ந்து உங்களுக்குத் தேவையான பதில்களைத் தருவார்கள்.
வியாபம் ஊழல்
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன.
இல்லையென்றால், உங்கள் பெயரில் வேறு ஒருவர் தேர்வை எழுதிக் கொடுப்பார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் தேர்வாணையத்தை சரிக்கட்டுவது, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களைச் சரிகட்டுவது, விடைத்தாள் திருத்துபவர்களைச் சரிகட்டுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை விட்டமின் ‘ப’ பாய்ச்சும் வேலையை இடைத்தரகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. வியாபம் ஒரு பிரம்மாண்டமான ஊழல் – ஆனால், இங்கே பிரம்மாண்டம் என்பது இந்த ஊழலில் புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாபம் ஊழல் புகாரில் இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் புள்ளிகளில் சிலர். தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை இந்த ‘பெரும்’ புள்ளிகள் தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க முதலை சுதீர் ஷர்மா ஆகியோர் அடங்குவர்.
முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா
கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா
வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 40 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் அடங்குவார்.
வியாபம் பாணி முறைகேடு – அதாவது மத்திய பிரதேச ஊழல் மாடல் – தற்போது பிற வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத், தில்லி, ஹரியானா மற்றும் பீகாருக்கும் மிக வேகமாக பரவியுள்ளது என்கிறார் காங்கிரசு தலைவரான திக்விஜய் சிங். கூடுதலாக இந்த ஊழலில் கீழ்மட்ட காங்கிரசு தலைவர்களும் சிலர் இருக்கிறார்கள்.
2009-ம் ஆண்டு வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க கோரி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மருத்துவ வினோத் ராய் பொது நல வழக்கொன்றை ம.பி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதிலிருந்து 2013-ம் ஆண்டு வரை சுமார் 45 பொது நல வழக்குகள் இது குறித்து விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருபக்கம் ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க, இன்னொரு பக்கம் மாநில அரசாங்கம் மேலும் 64 அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை வியாபத்திடம் அளித்துள்ளது.
2009-ம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாக பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது – ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று நிலைநாட்டியுள்ளனர்.
வியாபம் ஊழல்
மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும் வியாபம் ஊழல்.
இது மருத்துவத்துறையில் மட்டும் தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களில் செய்யப்படும் இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம் அரசு வேலைகளுக்கு செய்யப்படும் பணி நியமனங்கள் என்று தொகுப்பாக பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி கொள்ளையடிக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.
அவ்வளவும் கருப்புப் பணம். யாருடைய ஆட்சியில்? கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ள மோடியின் ஆட்சியில், மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும்!
இது தொடரும் பட்சத்தில் நாடெங்கும் உள்ள அரசுத் துறைகளில் காசுள்ளவர்கள் அமர்வார்கள் – காசுள்ளவனுக்கே உயர் கல்வி என்பது நிலைநாட்டப்படும். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவமனைக்கு ஓடினால், அங்கே பல லட்சங்கள் லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் கல்லூரியில் இடம் பிடித்த மேட்டுக்குடி குலக்கொழுந்து அமர்ந்திருப்பார். தான் கொடுத்த லஞ்சத்தையும் தனது பிள்ளைக்கு எதிர்காலத்தில் கொடுக்கவுள்ள லஞ்சத்தையும் உங்களிடமிருந்து வசூலிப்பது எப்படி என்பதே அவரது அக்கறைக்குரியதாக இருக்குமே ஒழிய உங்கள் உடல் நலனாக இருக்காது.
வியாபம் ஊழல்
வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது.
கல்வி என்பதோ உழைக்கும் மக்கள் அணுக முடியாத இடத்திற்கு ஏற்கனவே சென்று விட்டது. எல்.கே.ஜி வகுப்பில் மூன்று வயது குழந்தையைச் சேர்ப்பதற்கே சாதாரணமாக முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரை விலை பேசப்படுகிறது. அதற்கு மேல் மருத்துவமோ தொழில்நுட்பக் கல்வியோ அல்லது பிற கல்விப் பிரிவுகளிலோ தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க நடுத்தர வர்க்க மற்றும் அடித்தட்டு வர்க்கப் பிரிவு மக்கள் அண்டா குண்டா தொடங்கி தங்கள் சேமிப்பு, உழைப்பு, எதிர்காலம் என்று சகலத்தையும் அடகு வைக்கிறார்கள். கல்வித் துறைக்கென விதிக்கப்பட்டதாக சொல்லிக் கொள்ளப்படும் அற மதிப்பீடுகள் அனைத்தும் காற்றில் பறந்து அந்தத் துறையே முக்கால் நிர்வாணமாக நிற்கிறது.
மேற்படி அரை மற்றும் முக்கால் நிர்வாணத்தை மறைத்து சுற்றிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச கந்தல் துணிகளையும் உருவியெறிந்துள்ள வியாபம் ஊழல், அவற்றை முழு நிர்வாணப்படுத்தியுள்ளது.
வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனி நபரையும் இணைத்து, அவர்களின் செயல்பாடுகளின் ஒத்திசைவையும் தொழில் நேர்த்தியையும் கவனித்தால் இந்த கும்பல் – அதாவது, அரசியல் வாதிகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள், அரசு அதிகாரிகள் – மொத்தமும் ஒரு நிழல் அரசாங்கம் போல் செயல்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ராம் நரேஷ் யாதவ்
வியாபம் ஊழலில் சிக்கிய ம.பி ஆளுனர் ராம் நரேஷ் யாத்வ், சிவ்ராஜ் சிங் சவுகானுடன்
எனவே தான் தவிர்க்கவே இயலாத வகையில் பல்வேறு பொதுநல வழக்குகளுக்கும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களுக்கும், நீதி மன்றங்களின் உத்தரவுகளுக்கும் பின் மத்திய பிரதேசத்தின் சிறப்புக் காவல் துறையின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்த ஊழல் மிகத் தெளிவாக தவறான திசையை நோக்கிச் செல்கிறது. குற்றம் இழைத்த ஒரு சிலரோடு சேர்த்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உடகங்கள் சில தெரிவிக்கின்றன. மேற்கொண்டு மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் எழாமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே கைதுகள் செய்யப்படுகின்றன.
இது ஒருபக்கமென்றால், ஊழல் குறித்த விவரங்களை அம்பலப்படுத்திய  பிரஷாந்த் பாண்டே என்ற முன்னாள் காவல்துறை அதிகாரியின் (பாரன்சிக் பிரிவு) மேலும் முதல் பொதுநல வழக்கைத் தொடர்ந்த மருத்துவர் வினோத் ராயின் மேலும் பல கொலை முயற்சிகள் நடந்துள்ளன. கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வியமைச்சர் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்படாமல் சிறையில் ஐந்து நட்சத்திர வசதிகளை அனுபவித்து வருகிறார். வழக்கின் முக்கிய சாட்சியங்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.
வியாபம் மெகா ஊழல்
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம்.
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம் ஒருபக்கமென்றால் – மோடியின் கருப்புப் பண சாகசத்தை விதந்தோதியவர்களின் ஆழ்ந்த மௌனம் இன்னொரு பக்கம். இந்த இரண்டிலும் எது பெரியது என்பதை கண்டுணர முடியாத வகையில் ஒன்றை ஒன்று விஞ்சுகிறது.
மோடியின் தலைமையில் குஜராத் காவல்துறை மொத்தமும் மாஃபியா கும்பலின் ஒழுங்கமைவை அடைந்தது என்றால், அவரது வழிகாட்டுதலில் அவரது கட்சியைச் சேர்ந்தவர் ஆளும் மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் ஊழல் நிறுவனமயமாகியுள்ளது. குருவுக்குத் தப்பாத சிஷ்யன்.
அவர்கள் தங்கள் வேடத்தை எப்போதோ கலைத்து விட்டார்கள் – அவர்களை நம்பியவர்கள் எப்போது தமது நம்பிக்கையைக் கலைக்கப் போகிறார்கள்?
                                                                                                                                    –    தமிழரசன்,
நன்றி:வினவு.
========================================================================
     அடுத்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகி விட்டது.எப்போ இந்தியா வருவீங்க பிரதமர்?


1500 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகள் ரோமில் கண்டுபிடிக்கப்பட்டன.இறந்த தம்பதிகள் என்று ஊகிக்கப்படும் இந்த எலும்பு தம்பதிகளின் கைகள் இணைத்திருந்தன. 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...