bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

வடிவேலு - விஜய்

suran-vinavu
வறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும்.
சான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ் கொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும்.
தற்போது ‘தலைவா’ படப் பிரச்சினையை முன் வைத்து சிலர் ஜனநாயக உரிமை பேசுகிறார்கள். சினிமா எனும் முதலாளிகளின் தொழிலை முன் வைத்துதான் ஒரு நாட்டின், சமூகத்தின் ஜனநாயக உரிமை பேசப்படும் என்றால் அந்நாட்டில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே உரிமை இல்லை என்று பொருள்.
அதன் பொருட்டே சிட்னி நகரில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிடுவதற்கு கருத்துரிமை இல்லை என்று பேச முடிகிறது.
 விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் நம் பார்வைக்கு வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளம் என்றால் இப்பேற்ப்பட்ட கருத்துரிமையே நமக்கு வேண்டாம்.
விஜயை பிடிக்கவில்லை என்றாலும், அவரது அசட்டுத்தனமான படங்களை விரும்பவில்லை என்றாலும் அவரது படத்தை வெளியிடும் ஜனநாயக உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்த கருத்துரிமைக் காவலர்கள் சீறுகிறார்கள்.
suran
 தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா?
 இதனால் விஜயை ஆதரிக்கிறேன், தலைவா படம் வெளியிடப்பட வேண்டும் என்று இணையத்தில் பிரச்சாரமும் செய்கிறார்கள்.
சரி இவர்களுக்காக இவர்களே உருவாக்கி வைத்திருக்கும் வாத வழிப்படியே கருத்துரிமையின் இலட்சணத்தை புரிய வைப்போம்.
முதலில் விஜயின் தலைவா படம் ஏன் வெளியிட முடியவில்லை?
அதற்கு, ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள தமிழக அரசுதான் காரணம் என்பது உலகறிந்த விசயம். அதை நாமும் மறுக்கவில்லை.
 இந்த மறைமுகத் தடைக்கு என்ன காரணம்?
அது ஏதோ தனிப்பட்ட ஈகோ சார்ந்த காரணங்கள். இருக்கட்டும். இந்நிலையில் விஜயை ஆதரிப்போர் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசை எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழக அரசை எதிர்க்க முடியுமா? இல்லை அவர்கள் தரும் ஆதரவை நடிகர் விஜய்தான் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
முதலில் தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா? இல்லை அவரது தந்தை, தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பினர்தான் சொல்லியிருக்கிறார்களா? இல்லையே! உயிரோடிருப்பவன் செத்துவிட்டான் என்று சொல்லி எப்படி ஐயா அழ முடியும்? அவர்கள் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, என்ன சொன்னார்கள் என்பதும் முக்கியம்.
தலைவா படப் பிரச்சினைக்காக விஜய் தரப்பு கொடநாட்டிற்கு சென்று ஜெயாவை பார்க்க முடியவில்லை.
 பிறகு ஜெயா சென்னை திரும்புகிறார் என்றதும் அடித்துப் பிடித்து, “அம்மா ஆட்சியின் மகிமைகள்” என்று விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டாரே! அது ஏன்?
ஜெயலலிதா எப்படி மறைமுகமாக தடை செய்திருக்கிறாரோ அது போல விஜயும் செய்த பாவத்துக்கு மன்னியுங்கள் என்று மறைமுகமாக இறைஞ்சுகிறார். இப்படி அவர்களது சண்டையும், மன்னிப்பும், சமாதானமும் அந்தரங்க, கிசுகிசு, மறைபொருள் வழியில் இருக்கும் போது இங்கே ஜனநாயக உரிமைக்கு எங்கே இடம்?
suran
வெளிப்படையாக இருப்பது உண்மையான ஜனநாயகத்தின் விதிகளில் ஒன்று. மறைமுகமாக பேசுவது என்பது சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் முதலாளிகளுக்கு உரியது.
விஜய் தரப்பினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது கூட தமிழக அரசை திட்ட முடியாதவர்கள். ஆனால் திட்டும் விருப்பம் உள்ளவர்கள். அதனாலேயே வெளிப்படையாக தினமும் அம்மா பஜனையை செய்து வருபவர்கள். அதிலும் நடிகர் விஜய், புரட்சித் தலைவியின் சாதனைகளை பட்டியல் போட்டு தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக வைத்திருக்கிறார் என்று தீர்ப்பே அளித்து விட்டார். இப்பேற்பட்டவரை யாரய்யா ஆதரிக்க முடியும்?
ஒருவேளை விஜய் வெளிப்படையாக பேச இயலாத சூழ்நிலையில் இருக்கிறார், அதனால்தான் இப்படி சரணடைந்து பேசுகிறார் என மேற்கண்ட கருத்துரிமைக் காவலர்கள் சொல்லக்கூடும். சரி, அவர் என்ன ‘அல்கைதா’வின் பணையக் கைதியாகவா இருக்கிறார்?
 ஏன் வெளிப்படையாக பேச முடியவில்லை?
 விஜயின் ரசிகர்கள் கூட அப்படி வெளிப்படையாக பேசக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப உத்தரவாகவே போட்டு வருகிறார்களே அது ஏன்? தன்னால்தான் முடியவில்லை என்றால் மற்றவர்களை வைத்துக் கூட பேச முடியாதபடி உங்களை யார் பிடித்து வைத்தது?
விஜய், வடிவேலு
“வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்”
மொத்தத்தில் வடிவேலுக்கு இருக்கும் தைரியம் கால்வாசி கூட விஜய்க்கு இல்லை.
சில இடங்களில் விஜய் ரசிகர்கள் இருக்கும்உண்ணாவிரதத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று விஜய் தரப்பு போலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று பதிவு செய்கிறது. ஏனிந்த பயம்?
 இத்தனைக்கு பிறகும் அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்க வில்லை என்பதால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் காமரா முன்னால் கண்ணீர் விட்டு வேறு பார்க்கிறார்.
 படம் வெளியாகவில்லை என்றால் இவர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவாராம்.
இதென்ன சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் வேலை, வசதிகளை இழந்து வாடுபவர் போலவா?
இந்த தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டும் என்று யாராவது அழுதார்களா? இல்லை 50 கோடி தயாரிப்பில் விஜய் விரலை அசைத்து பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்று எவராவது தவமிருந்தார்களா? ஏதோ சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்வது போலவும், அந்த சேவை நிறுத்தப்பட்டது போல அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் இவர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ‘நன்றாக’ நடிக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். இல்லையென்றால் இந்த சமூக சேவகர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த தலைவா படத்திற்கு விஜயுக்கு கருப்பும் வெள்ளையுமாக எவ்வளவு கொடுத்தார் என்ற உண்மையையாவது சொல்ல முடியுமா? அவருக்கு கடன் கொடுத்தவர்கள் கருப்பில் எவ்வளவு கொடுத்தார்கள் என்று சான்றிதழைத்தான் காட்ட முடியுமா?
இல்லை பாடல் உரிமை, சாட்டிலைட் உரிமை, தமிழகம் தவிர்த்த ஏனைய ரிலீஸ் இவற்றில் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை சொல்வாரா? இத்தனை கோல்மால் இருந்தும் இவர்கள் அழுகாச்சி புராணத்தின் மூலமாவது ஏதாவது சிம்பதி கிடைக்குமா என்று வெறியுடன் அலைகிறார்கள். இடையில் விஜய் தரப்பு, தலைவா படத்தை வெளியிடக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி.
அதுவும் போலிஸ் அனுமதி கொடுத்தால், தானும் கலந்து கொள்வதாக விஜய் தெரிவித்திருக்கிறாராம்.
suran
 ஏன் அனுமதி கொடுக்க வில்லை என்றால் மீறி இருக்க மாட்டீர்களா? அப்படி இருந்தால் கைது செய்வார்கள் என்று பயமா?
முதலில் அந்த உண்ணாவிரதம் யாரை எதிர்த்து?
தலைவா படத்தை யார் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலேயே யாரை எதிர்த்து இந்த அறப் போராட்டம்? ஒருவேளை சத்யம் திரையரங்க புரஜெக்டர் எந்திரம்தான் எங்கள் தலைவா படத்தை டிஸ்பிளே செய்ய மறுக்கிறது என்றாவது சொல்லித் தொலையுங்களேன்! உங்களது ஜனநாயகப் போராட்டத்தின் தரம் என்ன என்பதை இதற்கு மேலும் விளக்கினால் அந்த ஜனநாயகமே அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓடிவிடும்.
சரி, விஜய்தான் சூழ்நிலைக் கைதி நாங்கள் களத்துக்கு வருகிறோம் என்று ஏனைய நாயகர்கள் எவராவது களத்திற்கு வந்தார்களா?
வெந்த ஸ்டார், விளக்கெண்ணை ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொள்வதில் உள்ள வீரம் இங்கே ஜெயாவை எதிர்ப்பதற்கு ஏன் வரவில்லை?
 கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சினிமாக்காரனுக்கு இன்னொரு சினிமாக்காரனே போராட மாட்டான் என்றால் மக்கள் மட்டும் என்ன எழவுக்கு போராட வேண்டும்? விஜயை ஆதரிக்கும் அப்பாவிகள் பதில் சொல்லட்டும்.
ஜெயலலிதா நினைத்தால் ஒரு படத்தைக்கூட வெளியிட அனுமதிக்க மாட்டார், வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் இதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.
இங்கேதான் மீண்டும் அந்த கேள்வியை நினைவுபடுத்துகிறோம். சினிமா வழியாகத்தான் உங்களுக்கு ஜனநாயக உணர்வும் அதன் உரிமை குறித்த கவலையும் நினைவுக்கு வருமா? அதுவும் தலைவா படத்தை எந்தப் பிரச்சினையுமின்றி அனுமதித்திருந்தால் ஜெயலலிதா மாபெரும் ஜனநாயகப் போராளி என்று இவர்களே நம்மிடம் சண்டைக்கும் வருவார்கள்.
கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்கு, தருமபுரியில் நேற்று போலி சுதந்திரம் என்று பிரசுரம் வினியோகித்த எமது தோழர்கள் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையிலடைப்பு, பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு என்று ஜெயலலிதா இந்த ஆட்சிக் காலத்திலேயே தனது ஜனநாயக ரிக்கார்டுகளை ஏராளம் பதித்துத்தான் வைத்திருக்கிறார்.
ஆகவே நம்மைப் பொறுத்த வரை இந்த அரசு சர்வாதிகாரமாகத்தான் செயல்படுகிறது என்பதற்கு தலைவா படம் தேவையில்லை.
suran
அன்றாடம் நமது வாழ்க்கையிலேயே அதை சந்தித்து வருகிறோம்.
தமிழ் சினிமா என்பது கருப்பு பணத்தில் தயாரிக்கப்பட்டு, மக்களின் பணத்தை சட்டபூர்வ பிக்பாக்கெட் கொள்ளையுடன் ஓரிரு வாரங்களில் பறிமுதல் செய்யும் ஒரு அநீதியான தொழில்.
இதற்கு அரசும் உடந்தை என்பதும், அரசியல் கட்சிகள் சினிமா நட்சத்திரங்களை பிரபலம் காரணமாக தமக்கு பயன்படுத்திக் கொள்வதும், பதிலுக்கு சினிமா முதலாளிகள் கேளிக்கை வரி ரத்து, படம் வெளியாகும் போது டிக்கெட் விலைக்கு வரம்பில்லாமல் கட்டணம் வைக்கலாம் என்று சலுகைகள் பெறுவதும் கண்கூடு.
எனவேதான் தமிழகத்தில் அரசியல் விவாதம், உரிமைப் போராட்டம் அதிகம் நடக்காமல் மக்கள் மீது திணிக்கப்படும் சினிமாவில் வாரம் முழுவதும் கழிக்கிறார்கள்.
மக்களின் இந்த போதையை பயன்படுத்திக் கொண்டுதான், ரெண்டு சைக்கிள், மூன்று அயனிங் மிஷன், நான்கு தையல் எந்திரத்தை கொடுத்து விட்டு அடுத்த முதல்வர் என்ற எரிச்சலூட்டும் வரியை அலறவிடும் நட்சத்திரங்களின் ஊளையை அடிக்கடி எதிர்கொள்கிறோம்.
ஆகவே அதன் பொருட்டு அதாவது உண்மையான ஜனநாயகம் வளர விரும்புவோர் தலைவா படத்தில் இரண்டு தரப்பும் அடித்துக் கொள்வதை ஆதரிக்க வேண்டும். எத்தரப்பையும் ஆதரிப்பதோ இல்லை கருத்துரிமையின் பாற்பட்டு பேசுவதோ அபத்தம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவின் மாயையிலிருந்து விடுபடுவதும், பாசிச ஜெயாவின் அரசியலை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல. ஆளும் வர்க்கங்களுக்குள் சண்டை நடக்கும் போது நாம் அதில் ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது என்பது இங்கேயும் பொருந்தும்.
 தலைவா படத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போர் எக்காலத்திலும் பாசிச ஜெயவை எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்கள்.
 ஏனெனில் அவர்களுக்கு எது ஜனநாயக உரிமை, எது கருத்துரிமை என்பதே தெரியாது.
நன்றி :வினவு.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

புதன், 14 ஆகஸ்ட், 2013

67 ஆண்டுகள் வந்து விட்டோம்.?

suran
பகத் சிங்




நாட்டின் 67வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
28 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
இவைதான் ஒன்றுபட்ட இந்தியா.

சுதந்திர போராட்டத்தில் "வெள்ளையனே வெளியேறு' போராட்டம்முக்கிய பங்கு வகித்தது. இது எப்படி உருவானது?
 இரண்டாம் உலகப்போர், 1939ல் பிரிட்டன், ஜெர்மனி இடையேமூண்டது. 1942ல் பிரிட்டன் அரசு, கிரிப்ஸ் என்பவர் தலைமையில் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. இவர்கள் காங்., தலைவர்களைசந்தித்து, உலகப் போரில்பிரிட்டனுக்கு ஆதரவளித்தால், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
தேசத்தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாமல், நடுநிலை வகித்தனர்.இந்நிகழ்வு "கிரிப்ஸ் மிஷன்' என அழைக்கப்பட்டது. 1942 ஜூலை 14ல் காங்கிரஸ், "இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தேவை' என தீர்மானம் நிறைவேற்றியது. இதை ஆங்கிலேயர் ஏற்கவில்லையெனில், "கீழ்படியாமை' போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.
இதற்கு ராஜாஜி உள்ளிட்ட சிலதலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 1942 ஆக.9ல்"வெள்ளையனே வெளியேறு' போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்த 67 ஆண்டுகளில் நம்நாடு, சாதனை, சோதனை,ஏற்றம், இறக்கம் என பல தருணங்களை வரலாற்று பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
ஆனால் இந்த இந்திய விடுதலை லட்சக்கணக்கான மனிதர்களின் ரத்தத்தில் பெறப்பட்ட போதும்.
இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தவர் காந்தி என்று ஏதோ கடையில் தனது காசில் அவர் வாங்கி தந்தது போல் பாடங்கள் படிக்கப்படுகின்றன.
வெள்ளைக்காரன் காந்தியை பார்த்துபயந்துதரவில்லை.அவர் ராட்டையில் நூல் நூற்றத ற்காகவோ -உண்ணா நிலைக்கோ பயம் கொள்ளவில்லை.
பகத் சிங்,வாஞ்சிநாதன்,சுபாஷ் சந்திரபோஸ்,வ.உ.சி.,திலகர் போன்றோர்  வழியில் ஒட்டு மொத்த இந்தியா வும் திரும்பும் அபாயம் அவனுக்கு உரைத்ததால் காந்தியை தனது கையாளாக எடுத்துக்கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப்போ ரை
நகர்த்தி சென்றான்.
suran
ஆயுதப்போராட்டமும்,கம்யு ணிசம் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே காந்தியை கையில் எடுத்து தலைப்பாய் கட்டிவிட்டு சென்றான்.மொத்தத்தில் காந்தி பகத் சிங் தூக்கிற்கும்,சுபாஷ் தலைமறைவுக்கும் முக்கிய காரணம்.இதுதான் இந்திய விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை நிலைகள்.
 * 1947 ஆக., 15ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாசுதந்திர நாடானாது. பிரதமராக நேரு பொறுப்பேற்றார்.
* 1948: ஐதராபாத் சமஸ்தானம், காஷ்மீர் ஆகியவை இ
ந்தியாவுடன் இணைப்பு; ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பதவிகளில் பெண்கள் பங்கேற்பதற்கு அனுமதி
* 1950 ஜன., 26: இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் இந்தியா குடியரசு நாடானது. முதல் ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத் பதவியேற்றார்.
* 1952 : முதல் லோக்சபா தேர்தல்நடந்தது; முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
* 1953: மொழி அடிப்படையில் முதல் மாநிலமாக ஆந்திரா உருவானது.
* 1954 : பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியில் இருந்து, இந்தியாவுடன் புதுச்சேரி இணைப்பு.
* 1955 : "தீண்டாமை ஒரு குற்றம்' என்ற மசோதா நிறைவேற்றம்; இந்துதிருமணச்சட்டம் நிறைவேற்றம்.
* 1956: இந்தியாவின் முதல் அணுஉலை, மகாராஷ்டிராவின் தாராப்பூரில்துவக்கம்; மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு.
* தசம முறையிலான ரூபாய் (காயின்கள்) அறிமுகம்.
* 1959 : ரூர்கேலா இரும்பு ஆலை துவக்கம்
* 1961 : போர்ச்சுகீசியர்கள் ஆட்சி புரிந்த கோவா, இந்தியாவுடன் இணைப்பு.
* 1963: நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக "இந்தி' தேர்வு; குடும்ப கட்டுபாட்டு பிரிவு தொடக்கம்
* 1966 : பஞ்சாப், அரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் உருவாக்கம்.
* 1969 : 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
* 1971 : போரில் பாகிஸ்தான் சரணடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடுஉருவானது.
* 1974: பொக்ரானில் முதன்முறையாக அணுகுண்டு சோதனை.
* 1975 : இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் "ஆர்யபட்டா' ஏவப்பட்டது.
* 1977: சுதந்திரத்துக்குப்பின், காங்., அல்லாத கட்சி சார்பில், மொராஜி தேசாய் பிரதமர் ஆனார்.
suran
* 1981 : நாட்டின் முதல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் "ஆப்பிள்', விண்ணில் ஏவப்பட்டது.
* 1982: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, அண்டார்டிகாவில் கால் பதித்தது.
* 1983: உலககோப்பை கிரிக்கெட்போட்டியில், இந்தியா சாம்பியன்.
* 1984: இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா, முதன்முறையாக விண்வெளிக்குபயணம்.
* 1988: ஓட்டுரிமை வயது 21ல் இருந்து, 18 ஆக குறைப்பு.
* 1990: தரையிலிருந்து, விண்வெளிக்கு சென்று தாக்கும் "ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி.
* 1996: அட்லாண்டிக் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் லியான்டர் பயஸ் வெண்கலம் வென்றார்.
* 1999: பொக்ரானில் மீண்டும் அணுகுண்டு சோதனை. இதன்மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. காஷ்மீரின் கார்கில்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல். இதையடுத்து ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி.
* 2000: இந்திய மக்கள்தொகை 100 கோடியை தொட்டது.
* 2000: பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம் துவக்கம்; உத்தரகண்ட், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாகின.
* 2002: அணுஆயுதங்களை தாங்கிசெல்லும் "அக்னி' ஏவுகணை வெற்றிகர சோதனை.
* 2005 : "தகவல் அறியும் உரிமை' சட்டம் அமல்.
* 2007: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பொறுப்பேற்பு.
* 2008: இந்தியா முதன்முறையாக "சந்திராயன்-1' என்ற விண்கலத்தைநிலவுக்கு அனுப்பியது. இது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா, தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா இச்சாதனையை நிகழ்த்தினார்.
suran
சுதந்திரமாக கொடியேற்ற சுதந்திரம் கிடைப்பதெப்பொ ?

* 2011 : உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 2வது முறைசாம்பியன்; இந்திய மக்கள்தொகை 121 கோடியாக உயர்வு.
* 2012: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 100வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை.
* 2013: ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு அனுமதி.

 சுதந்திரம் அடைந்தபோது நாடு, 565 சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்தன.
இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர்.அனைத்து சமஸ்தானங்களும், இந்தியாவுடன் இணைய வேண்டும் என அரசு அறிவித்தது. அதன்படி பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலியவை உடனடியாக இணைந்தன. மற்றவற்றை இணைக்கும் பொறுப்பு, அப்போதைய உள்துறை அமைச்சர், "இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
 அவரின் முயற்சியால், 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948 மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவிதாங்கூர், ஜூனாகத் போன்றவை இணைய மறுத்தன. பின் ராணுவ நடவடிக்கை மூலம் இவை இணைக்கப்பட்டன.
1956ல் மொழிவாரி அடிப்படையில், மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன்பின், பெரிய நிலப்பரப்பை கொண்ட மாநிலங்கள், தனிமாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

 நாட்டில் தற்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
சமீபத்தில் ஆந்திராவை பிரித்து "தெலுங்கானா' தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அமைதியாக இருந்த மகாராஷ்டிரா (விதர்பா), குஜராத் (சவுராஷ்டிரா), உ.பி., (பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், அவாத் பிரதேசம், பச்சிம் பிரதேசம்), மேற்கு வங்கம் (கூர்க்காலேண்ட்), அசாம் (போடோலேண்ட்), மணிப்பூர் (குகிலேண்ட்), மேகாலயா( கரோலேண்ட்) என தனி மாநிலபிரிவினை கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அருணாசலப் பிரதேசம், அரியானா, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேம், பீகார், சட்டீஸ்கர், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தி, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.
ஆனால் தற்போது ஒரே மொழி பேசும் மாநிலங்களில் கூட, பிரிவினை கோரிக்கை எழுப்பப்படுகிறது.
தற்போது எழுப்பப்படும் தனிமாநில கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு அனுமதித்தால், இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50யை தொட்டு விடும்.
 இந்தியாவில் பெரிய நிலப்பகுதியை கொண்ட, வளர்ச்சியடைந்த மாநிலங்களும் இருக்கின்றன. சிறிய பரப்பளவு கொண்ட வளர்ச்சி பெறாத மாநிலங்களும் இருக்கின்றன. வளர்ச்சி என்பது அம்மாநிலமக்களின் கல்வியறிவு, கலாசாரம், பொருளாதாரம், அங்கு ஆட்சி செய்யும் அரசு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.
 எனவே, மாநில பிரிவினை இந்தியாவுக்கு எந்தளவுக்கு பயன்தரும் ?
suran

ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷக்==============================
மும்பையில் நேற்று முன்தினம் இரவு வெடிவிபத்தில் சிக்கிய நீர்மூழ்கியின் விபரம்:
கட்டுமான நிறுவனம்: அட்மிரால்டி ஷிப்யார்டு(ரஷ்யா)
கட்டும்பணி தொடக்கம்: 16.2.1995.
கடலில் இறக்கம்: 26.6.1997.
கடற்படையில் சேர்ப்பு: 24.12.1997.
வகை:
ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி.
எடை: 2325 டன்.
நீளம்: 238 அடி.
அகலம்: 32 அடி.
பயணத்துக்கு தேவையான ஆழம்: 22 அடி.
என்ஜின்: 2ஙீ3650 எச்.பி டீசல்,எலக்ட்ரிக் மோட்டார்.
* 1,5900 எச்.பி மோட்டார்.
* 1,204 எச்.பி. துணை மோட்டார்கள்.
* 1,130 எச்.பி ஸ்பீடு மோட்டார்.
வேகம்:
கடலுக்கு மேல்: மணிக்கு 19 கி.மீ
கடலுக்குள்: மணிக்கு 31 கி.மீ.
செல்லும் தூரம்:
கடல் மேல் பயணம்: மணிக்கு 13 கி.மீ வேகத்தில் 9,700 கி.மீ தூரம்.
மூழ்கிய நிலையில்: மணிக்கு 5.6 கி.மீ வேகத்தில் 640 கி.மீ தூரம்.
திறன்: தண்ணீருக்குள் 45 நாள்.
மூழ்கும் திறன்: 980 அடி ஆழம்.
ஆயுதங்கள்:
* 9எம்36 ஸ்டெரலா,3 ஏவுகணை.
* 3எம்,54 கிளப்,எஸ் ஏவுகணை.
* தண்ணீருக்குள் பாயும் டைப் 53,65 டார்பிடோ குண்டு
* டெஸ்ட் 71/76 டார்பிடோ.
* 24 டிஎம்,1 கடல் கண்ணிவெடி.


 நீர்மூழ்கி கப்பல்
 நீர்மூழ்கி கப்பல் 19ம் நூற்றாண்டில் முழு வடிவம் பெற்றது.
முதல் உலகப் போரில்(1914,18) ஒரு சில நாடுகளிடம் மட்டுமே நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் இருந்தன. தற்போது பல நாட்டு கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் இடம் பெற்றுள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும், நீளத்தில், அகலத்தில், எடையில் வேறுபட்டவை. அமெரிக்க கடற்படையில் 2 விதமான நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. விரைந்து சென்று தாக்குதல் நடத்தும் யு.எஸ்.எஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் வகை நீர்மூழ்கி கப்பல்கள் 363 அடி நீளமும், 33 அடி அகலமும், 6.900 டன் எடையும் உள்ளது.  யு.எஸ்.எஸ் ஓகியோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் பல வகை ஏவுகணைகளை வீசக்கூடியது. இது 560 அடி நீளமும், 42 அடி அகலமும் 17 ஆயிரம் டன் எடையுள்ளது.
* ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் 70 முதல் 74 மீட்டர் நீளம் உள்ளது. இதன் அகலம் 9.9 மீட்டர். மும்பையில் தற்போது விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷாக் நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்தான். இதில் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் என்ஜின்கள் உள்ளன. கடலுக்கு மேலே பயணிக்கும்போது, டீசலில் நீர்மூழ்கி இயங்கும். கடலுக்கு அடியில் பயணிக்கும் போது பேட்டரி மின்சக்தியில் கப்பல் இயங்கும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் அணுஉலையில் ஆரம்பத்தில் நிரப்பப்படும் எரிபொருள், கப்பலின் ஆயுள் 33 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருளை சப்ளை செய்யும். அதனால் அது நீண்ட நாட்கள் கடலுக்குள் இருக்க முடியும்.
* அமெரிக்க தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 35 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம். ரஷ்ய தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 25 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம்.
* நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் போது, அதன் மேல்பரப்பில் உள்ள தண்ணீர் தொட்டியின் வால்வுகள் திறக்கப்பட்டு கடல் நீர் நிரப்பப்படும். இதன் மூலம் நீர்மூழ்கியின் எடை அதிகரித்து கடலில் மூழ்கும். நீர்மூழ்கியை கடலின் மேல் பரப்புக்கு கொண்டு வர, அதிக அழுத்தம் உள்ள காற்று தண்ணீர் தொட்டிக்குள் செலுத்தப்பட்டு நீர் வெளியேற்றப்படும். அப்போது நீர்மூழ்கியின் எடை குறைந்து மேலே எழும்பும்.
* நீர்மூழ்கி கப்பல் 800 அடி முதல் 900 அடி ஆழம் வரை மூழ்கும். கடலுக்கு மேலே பயணிக்கும் போது மணிக்கு 20 முதல் 24 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலுக்கு அடியில் பயணிக்கும்போது மணிக்கு 50 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் நீர்மூழ்கி செல்லும்.
* நீரில் மூழ்கி பயணிக்கும்போது, வீரர்கள் சுவாசிக்க இயந்திரங்கள் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படும். காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்களும் நீர்மூழ்கியில் உள்ளன.
* டீசல் மற்றும் பேட்டரி சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் 45 நாள் வரையும், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நீண்ட நாட்களுக்கும் நீரில் மூழ்கியிருக்கும் திறன் படைத்தவை.
* வீரர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீர்மூழ்கியின் ஸ்டோர் ரூம்கள், ரெப்ரிஜிரேட்டர்களில் சேமித்து வைத்திருக்க முடியும். சேமித்து வைத்து தயார் செய்யக்கூடிய அனைத்து வகை உணவுகளும் நீர்மூழ்கியில் பணியாற்றுபவர்களுக்கு நான்கு வேளை வழங்கப்படுகிறது. பிரட், சப்பாத்தி, கேக், பிட்சா முட்டை, பால், பருப்பு, காய்கறிகள், பழங்கள், சிக்கன், மட்டன், மீன் என அனைத்து வகை உணவுகளும் வழங்கப்படுகிறது.  24 மணிநேரமும் நீர்மூழ்கி செயல்பட வேண்டும் என்பதால், மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். 6 மணி நேரம் ஷிப்ட் முறையில் அவர்கள் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் அவர்கள் ஓய்வெடுப்பர்.
* கேப்டன் உட்பட 2 உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே நீர்மூழ்கியில் தனி அறை இருக்கும். மற்றவர்களுக்கு ரயிலில் உள்ள பெர்த் அளவுக்குத்தான் படுக்க இடம் இருக்கும். இதன் காரணமாகவே நீர்மூழ்கி கப்பல்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவதில்லை.
* விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அட்மிரல்டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1997ம் ஆண்டு இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டது.
suran
* இக்கப்பலில் இதற்கு முன்பும் ஒருமுறை தீவிபத்து ஏற்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் பணியில் இருந்த போது இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீரர் பலியானார். இந்த விபத்து காரணமாக கப்பலில் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து கப்பலை புதுப்பிக்க ரஷ்யாவை சேர்ந்த ஸ்வெஸ்டோக்கா கப்பல் கட்டும் தளத்துடன் ரூ.450 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த புதுப்பிக்கும் பணிக்கு பிறகு மீண்டும் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் இப்போது பெரும் விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளது.

"தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து தீர விசாரிக்க வேண்டியிருக்கிறது. கப்பலில்  ஓட்டை விழுந்து தண்ணீர்  உள்ளே புகுந்து விட்டது. 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தோம். சதி வேலை காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்."
-என கடற்படை அட்மிரல் டிகே ஜோஷி தெரிவித்துள்ளார் .
67 ஆண்டுகளாகியும் இந்தியா தனது பாதுகாப்பில் இருக்கும் ஓட்டையை இதுவரை அடைக்கவில்லை.
தீவிரவாதிகள் இங்கு வந்து குண்டுகளை வைத்து செல்லும் சுற்றுலாத் தளமாகத்தான் உள்ளது.
பாகிஸ்தான் படையினர் நமது வீரர்கள் தலையை கொய்து கால்பந்து விளையாடும் நிலையிலும்,
சீனா அவ்வப்போது நமது நாட்டில் வந்து நமக்கு செலவு வைக்காமல்.
சாலைகளை போடவும்,கட்டிடங்கள் கட்டி தங்கி செல்லும் வகையில்தான் பாதுகாப்பு உத்திரவாதம் உள்ளது.
அதற்கு காரணம் நமது ராணுவம் அல்ல.
காங்கிரசு ஆட்சியினர்தான் என்பதும் வெட்ககேடான உண்மையாகவும் உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------
suran





Ties with Pak can't improve if terror acts continue: PM
In a strong message to Pakistan, Prime Minister Manmohan Singh today said anti-India activities emanating from there will have to stop for relations to improve and asserted that all steps will be taken to prevent "dastardly" acts like the recent killing of jawans on the LoC.
Read complete PM speech in E Newspaper of India
Log on www.news24online.com

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

இடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னம்


suran

மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கட்டிடத்தின் கூரைப்பகுதி அரசியல் பிரமுகர் ஒருவரால் இடிக்கப்பட்டது.
 உலகின் மிகப்பெரும் பழைய நகரங்களில் ஒன்றான மதுரை நகரின் பல பகுதிகளில் பலரும் அறியாத வரலாற்றுச் சின்னங்கள் ஏராளமாக பொதிந்து கிடக்கின்றன.

அவற்றைப்பற்றி மக்களுக்கு அறிமுகம் இல்லாததால் பல அழிக்கப்பட்டு விட்டன. அரசும் அவற்றைப்பற்றி கவலைப்படுவதில்லை
. பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்களை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் அரசே அவற்றை அழித்து வருகிறது.
மதுரை நகரில் கீழமாசி வீதியில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்  இடிக்கப்பட்டு விட்டது. அந்தக் கட்டிடத்தில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதை நவீனப்படுத்துவதற்காக அரசே அதை இடித்து விட்டது.
வரலாற்று ஆய்வாளர்களும், பாரம்பரிய பாதுகாப்பு அமைப்புகளும் மாவட்ட ஆட்சியரிடம் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்று முறையிட்டனர். முறையீடு பலனற்றுப் போனது.
கடந்த ஜூலை 15ந் தேதியன்று மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இருந்த ராணி மங்கம்மாள் அரண்மனையின் பின்புறப் பகுதிகளை அண்டை வீட்டுக்காரரான அதிமுக கட்சிக்காரர்  இடித்து விட்டார்.
 அரண்மனையின் பின்புறப்பகுதிக்கும் அது இருக்கும் நிலத்துக்கும் உரிமை கொண்டாடிய அதிமுக கட்சிக்காரர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தற்போது இந்த அரண்மனையில் பொதுப்பணித்துறை (நீர்வள கோட்டம்) பெரியாறு - வைகை வடிகால் வட்டார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் உள்ள ஒரு கற்பலகையில் ‘ நாயக்க மகாராணி மங்கம்மாளின் அரண்மனை, 1689’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால் போன்று சிறப்பானது இல்லை என்ற போதும், ஒரு மகாராணி எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்கு இந்த அரண்மனை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அரண்மனையின் தூண்கள் இரண்டாக உடைக்கப்பட்டுள்ளன.
சுண்ணாம்பு உதிர்ந்த இடங்களில் பல ஓவியங்கள் தென்படுகின்றன. சுண்ணாம்புக் காரை கொண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் கூரையின் பெரும்பகுதி இடிந்துவிழுந்துள்ளது.
இந்த மாளிகையின் மேற்குப்பக்கத்தில் உள்ள உப்பரிகைகளில் நின்று பார்த்தால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் நான்கு கோபுரங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். காலையில் எழுந்ததும் கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் மங்கம்மாள் கோவிலின் அருகே தனக்கு ஒரு மாளிகையை கட்டிக்கொண்டு வாழ்ந்தார்.
அதே மாளிகையில் பேரன் விஜய ரங்க சொக்கநாத நாயக்கரால் சிறை வைக்கப்பட்டு 1704ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்தார் என்று வரலாறு கூறுகிறது .
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தளபதியின் மகளான மங்கம்மாளை திருமணம் செய்து கொண்டார்.
தஞ்சாவூர் இளவரசியை திருமணம் செய்து அவரை பட்டத்தரசியாக்க விரும்பிய சொக்கநாத நாயக்கர் மங்கம்மாளை பட்டத்து ராணியாக்கவில்லை. சொக்கநாத நாயக்கரின் விருப்பம் நிறைவேறவில்லை. மங்கம்மாளுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
சொக்கநாத நாயக்கர் மறைந்த போது மூன்று மாதங்களே ஆன மகனுக்காக மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை. மகனுக்கு பதிலாக காப்பாட்சியராக அரசு பொறுப்பை ஏற்றார். அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
அவரும் ஏழாண்டுகளில் மரணமடைந்த பின் பேரனுக்காக மங்கம்மாள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடத்தினார்.
அவர் மிகவும் திறமையாக ஆட்சி நடத்தினார். அண்டை அரசுகளுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளவே அவர் விரும்பினார். ஆனாலும், தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவிதாங்கூர் அரசர் போன்றவர்களால் உருவான சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. சிறந்த அரசியல் தந்திரமும், திறமையும் கொண்ட மங்கம்மாள் இவற்றை முறியடித்தார். ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்களை தீட்டி சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
இவர் இந்து சமயப்பற்றுடையவராக இருந்த போதும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களையும் மதித்து நடந்தார்.
மதுரை ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் உள்ளிட்ட பல சத்திரங்களை வழிப்போக்கர்கள் தங்குவதற்காக நாடு முழுவதும் உருவாக்கினார். மதுரையை நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் சாலைகளை இவர் உருவாக்கினார்.
 மதுரை - கன்னியாகுமரி சாலை மங்கம்மாள் சாலை என்று அழைக்கப்பட்டு வந்தது. ஏராளமான அறப்பணிகளை இவர் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்கள் சரியாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளன. பல சமணக்குகைகளை நெருங்க முடியாத அளவுக்கு அவ்விடங்களைச் சுற்றி மனிதக்கழிவுகள் கிடக்கின்றன. இதற்கு யானைமலை குகைகளை உதாரணமாக கூறலாம். கீழவளவில் கிரானைட் குவாரிகளால் பல சமணச்சின்னங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அரசு இவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மக்களும் அறியாமையால் அவற்றை பாதுகாக்க முன்வருவதில்லை.
வடக்கு ஆவணி மூலவீதியில் வசிக்கும் ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்:
"இது ஒரு பழமையான கட்டிடம் என்று தான் நினைத்தேன்.
இவ்வளவு சிறப்புடையது என்று தெரியாது" என்கிறார்.

வரலாற்றுச் சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.கட்டிடத்தை இடித்தவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்து விட்டது. சட்டம் தன் கடமையை செய்யும் என்ற எதிர்பார்ப்பை காவல்துறை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை அல்லது மாநில தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இல்லாத வரலாற்று கட்டிடங்களுக்கு ஏற்படக்கூடிய கதியை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
இடிக்கப்பட்ட அரண்மனையின் பல பகுதிகள் முன்னரே இடிக்கப்பட்டு விட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அரண்மனையை ஒட்டி ஒரு சிறைக்கூடமும் இருந்திருக்கிறது. பழைய சென்ட்ரல் மார்க்கெட்டும், மாநகராட்சிப் பள்ளியும் அரண்மனையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மாநில அரசு இந்தக்கட்டிடத்தை மாநில தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும். இடித்தவரிடம் கட்டிடத்தை புதுப்பிக்க ஆகும் செலவை வசூலிக்க வேண்டும். வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்களை பராமரிப்பதற்கும், பாதுகாப்பிற்கும் இந்தியன் நேஷனல் டிரஸ்ட் பார் கல்ச்சர் அண்ட் ஹெரிட்டேஜ் போன்ற அமைப்புகளுக்கு அரசு உரிமையும் அதிகாரமும் கொடுக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள வரலாற்றுச்சின்னங்களின் பெருமை குறித்து அருகில் வாழும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், அவர்களையும் பாரம்பரிய வரலாற்று பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் ஈடுபடவைக்க வேண்டும்.
---------------------------------------------------------------------
மேலும் ஒரு ஐஎம்எப் ஆசாமி ...
---------------------------------------------------------------------

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மிகப்பெரிய பொருளாதார மேதை என்றும், அவருக்கு மூளை வளர்ந்து வெளியே தொங்குகிறது என்றும் இந்திய பொருளாதாரத்தை இவர் உடனடியாக தூக்கி நிறுத்திவிடுவார் என்றும் முதலா ளித்துவ ஊடகங்கள் புகழ்பாடியுள்ளன.
ஆனால் இவரது பூர்வாசிரமத்தை பார்க்கும்போது, இந்திய அதிகார வளையத்தில் மேலும் ஒரு ஐஎம்எப் ஆசாமி என்றே கருதத்தோன்றுகிறது.
 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக இவர் பணியாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டில் இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது அரிய சேவையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் 2012ம் ஆண்டில் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவர் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
 இந்திய பங்குச்சந்தை 449 புள்ளி களாக சரிந்துள்ளதை சரி செய்யவே இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளாரே தவிர ஏழை, எளிய மக் களின் நலனுக்காக அல்ல.
ஏனென்றால் மன்மோகன் சிங் அரசினால் நிதித்துறை சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இவர் இருந்துள் ளார். பொதுத்துறைகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது.
அந்நிய வங்கிகளுக்கு தாராளமாக கசின்னம்தவு திறக்கவேண்டும். நலிந்த பிரிவினருக்கு வங்கிகள் கடன்கொடுக்கக்கூடாது. கல்விக்கடன் போன்றவை கூடாது என்பன போன்ற ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியவர்தான் இவர். 
 இந்த யோசனைகளை அமல்படுத்தத்தான் இப்போது இவருக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி.
ஏற்கெனவே பிரதமராக உள்ள மன்மோகன் சிங் ஐஎம்எப் அதிகாரியாக பணியாற்றியவர்தான்.
மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் ஐ.எம்.எப் தயாரிப்பு தான். நிதியமைச்சராக உள்ள ‘வேட்டி கட்டிய தமிழர்’ ப.சிதம்பரம் அமைச்சர் பதவி இல்லையென்றால் பன்னாட்டு நிறுவனங்களில் வழக்கறிஞராக மாறி விடுபவர்தான். போதாக்குறைக்கு இந்தப் படையில் ரகுராம் ராஜனும் சேர்ந்திருக் கிறார்.
தாராளமய கொள்கையை தாராள மயமாக்கத்தான் இந்தப்படை சேர்ந்திருக் கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...