bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

இடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னம்


suran

மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கட்டிடத்தின் கூரைப்பகுதி அரசியல் பிரமுகர் ஒருவரால் இடிக்கப்பட்டது.
 உலகின் மிகப்பெரும் பழைய நகரங்களில் ஒன்றான மதுரை நகரின் பல பகுதிகளில் பலரும் அறியாத வரலாற்றுச் சின்னங்கள் ஏராளமாக பொதிந்து கிடக்கின்றன.

அவற்றைப்பற்றி மக்களுக்கு அறிமுகம் இல்லாததால் பல அழிக்கப்பட்டு விட்டன. அரசும் அவற்றைப்பற்றி கவலைப்படுவதில்லை
. பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்களை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் அரசே அவற்றை அழித்து வருகிறது.
மதுரை நகரில் கீழமாசி வீதியில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்  இடிக்கப்பட்டு விட்டது. அந்தக் கட்டிடத்தில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதை நவீனப்படுத்துவதற்காக அரசே அதை இடித்து விட்டது.
வரலாற்று ஆய்வாளர்களும், பாரம்பரிய பாதுகாப்பு அமைப்புகளும் மாவட்ட ஆட்சியரிடம் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்று முறையிட்டனர். முறையீடு பலனற்றுப் போனது.
கடந்த ஜூலை 15ந் தேதியன்று மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இருந்த ராணி மங்கம்மாள் அரண்மனையின் பின்புறப் பகுதிகளை அண்டை வீட்டுக்காரரான அதிமுக கட்சிக்காரர்  இடித்து விட்டார்.
 அரண்மனையின் பின்புறப்பகுதிக்கும் அது இருக்கும் நிலத்துக்கும் உரிமை கொண்டாடிய அதிமுக கட்சிக்காரர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தற்போது இந்த அரண்மனையில் பொதுப்பணித்துறை (நீர்வள கோட்டம்) பெரியாறு - வைகை வடிகால் வட்டார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் உள்ள ஒரு கற்பலகையில் ‘ நாயக்க மகாராணி மங்கம்மாளின் அரண்மனை, 1689’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால் போன்று சிறப்பானது இல்லை என்ற போதும், ஒரு மகாராணி எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்கு இந்த அரண்மனை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அரண்மனையின் தூண்கள் இரண்டாக உடைக்கப்பட்டுள்ளன.
சுண்ணாம்பு உதிர்ந்த இடங்களில் பல ஓவியங்கள் தென்படுகின்றன. சுண்ணாம்புக் காரை கொண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் கூரையின் பெரும்பகுதி இடிந்துவிழுந்துள்ளது.
இந்த மாளிகையின் மேற்குப்பக்கத்தில் உள்ள உப்பரிகைகளில் நின்று பார்த்தால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் நான்கு கோபுரங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். காலையில் எழுந்ததும் கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் மங்கம்மாள் கோவிலின் அருகே தனக்கு ஒரு மாளிகையை கட்டிக்கொண்டு வாழ்ந்தார்.
அதே மாளிகையில் பேரன் விஜய ரங்க சொக்கநாத நாயக்கரால் சிறை வைக்கப்பட்டு 1704ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்தார் என்று வரலாறு கூறுகிறது .
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தளபதியின் மகளான மங்கம்மாளை திருமணம் செய்து கொண்டார்.
தஞ்சாவூர் இளவரசியை திருமணம் செய்து அவரை பட்டத்தரசியாக்க விரும்பிய சொக்கநாத நாயக்கர் மங்கம்மாளை பட்டத்து ராணியாக்கவில்லை. சொக்கநாத நாயக்கரின் விருப்பம் நிறைவேறவில்லை. மங்கம்மாளுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
சொக்கநாத நாயக்கர் மறைந்த போது மூன்று மாதங்களே ஆன மகனுக்காக மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை. மகனுக்கு பதிலாக காப்பாட்சியராக அரசு பொறுப்பை ஏற்றார். அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
அவரும் ஏழாண்டுகளில் மரணமடைந்த பின் பேரனுக்காக மங்கம்மாள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடத்தினார்.
அவர் மிகவும் திறமையாக ஆட்சி நடத்தினார். அண்டை அரசுகளுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளவே அவர் விரும்பினார். ஆனாலும், தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவிதாங்கூர் அரசர் போன்றவர்களால் உருவான சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. சிறந்த அரசியல் தந்திரமும், திறமையும் கொண்ட மங்கம்மாள் இவற்றை முறியடித்தார். ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்களை தீட்டி சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
இவர் இந்து சமயப்பற்றுடையவராக இருந்த போதும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களையும் மதித்து நடந்தார்.
மதுரை ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் உள்ளிட்ட பல சத்திரங்களை வழிப்போக்கர்கள் தங்குவதற்காக நாடு முழுவதும் உருவாக்கினார். மதுரையை நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் சாலைகளை இவர் உருவாக்கினார்.
 மதுரை - கன்னியாகுமரி சாலை மங்கம்மாள் சாலை என்று அழைக்கப்பட்டு வந்தது. ஏராளமான அறப்பணிகளை இவர் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்கள் சரியாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளன. பல சமணக்குகைகளை நெருங்க முடியாத அளவுக்கு அவ்விடங்களைச் சுற்றி மனிதக்கழிவுகள் கிடக்கின்றன. இதற்கு யானைமலை குகைகளை உதாரணமாக கூறலாம். கீழவளவில் கிரானைட் குவாரிகளால் பல சமணச்சின்னங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அரசு இவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மக்களும் அறியாமையால் அவற்றை பாதுகாக்க முன்வருவதில்லை.
வடக்கு ஆவணி மூலவீதியில் வசிக்கும் ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்:
"இது ஒரு பழமையான கட்டிடம் என்று தான் நினைத்தேன்.
இவ்வளவு சிறப்புடையது என்று தெரியாது" என்கிறார்.

வரலாற்றுச் சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.கட்டிடத்தை இடித்தவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்து விட்டது. சட்டம் தன் கடமையை செய்யும் என்ற எதிர்பார்ப்பை காவல்துறை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை அல்லது மாநில தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இல்லாத வரலாற்று கட்டிடங்களுக்கு ஏற்படக்கூடிய கதியை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
இடிக்கப்பட்ட அரண்மனையின் பல பகுதிகள் முன்னரே இடிக்கப்பட்டு விட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அரண்மனையை ஒட்டி ஒரு சிறைக்கூடமும் இருந்திருக்கிறது. பழைய சென்ட்ரல் மார்க்கெட்டும், மாநகராட்சிப் பள்ளியும் அரண்மனையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மாநில அரசு இந்தக்கட்டிடத்தை மாநில தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும். இடித்தவரிடம் கட்டிடத்தை புதுப்பிக்க ஆகும் செலவை வசூலிக்க வேண்டும். வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்களை பராமரிப்பதற்கும், பாதுகாப்பிற்கும் இந்தியன் நேஷனல் டிரஸ்ட் பார் கல்ச்சர் அண்ட் ஹெரிட்டேஜ் போன்ற அமைப்புகளுக்கு அரசு உரிமையும் அதிகாரமும் கொடுக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள வரலாற்றுச்சின்னங்களின் பெருமை குறித்து அருகில் வாழும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், அவர்களையும் பாரம்பரிய வரலாற்று பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் ஈடுபடவைக்க வேண்டும்.
---------------------------------------------------------------------
மேலும் ஒரு ஐஎம்எப் ஆசாமி ...
---------------------------------------------------------------------

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மிகப்பெரிய பொருளாதார மேதை என்றும், அவருக்கு மூளை வளர்ந்து வெளியே தொங்குகிறது என்றும் இந்திய பொருளாதாரத்தை இவர் உடனடியாக தூக்கி நிறுத்திவிடுவார் என்றும் முதலா ளித்துவ ஊடகங்கள் புகழ்பாடியுள்ளன.
ஆனால் இவரது பூர்வாசிரமத்தை பார்க்கும்போது, இந்திய அதிகார வளையத்தில் மேலும் ஒரு ஐஎம்எப் ஆசாமி என்றே கருதத்தோன்றுகிறது.
 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக இவர் பணியாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டில் இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது அரிய சேவையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் 2012ம் ஆண்டில் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவர் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
 இந்திய பங்குச்சந்தை 449 புள்ளி களாக சரிந்துள்ளதை சரி செய்யவே இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளாரே தவிர ஏழை, எளிய மக் களின் நலனுக்காக அல்ல.
ஏனென்றால் மன்மோகன் சிங் அரசினால் நிதித்துறை சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இவர் இருந்துள் ளார். பொதுத்துறைகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது.
அந்நிய வங்கிகளுக்கு தாராளமாக கசின்னம்தவு திறக்கவேண்டும். நலிந்த பிரிவினருக்கு வங்கிகள் கடன்கொடுக்கக்கூடாது. கல்விக்கடன் போன்றவை கூடாது என்பன போன்ற ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியவர்தான் இவர். 
 இந்த யோசனைகளை அமல்படுத்தத்தான் இப்போது இவருக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி.
ஏற்கெனவே பிரதமராக உள்ள மன்மோகன் சிங் ஐஎம்எப் அதிகாரியாக பணியாற்றியவர்தான்.
மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் ஐ.எம்.எப் தயாரிப்பு தான். நிதியமைச்சராக உள்ள ‘வேட்டி கட்டிய தமிழர்’ ப.சிதம்பரம் அமைச்சர் பதவி இல்லையென்றால் பன்னாட்டு நிறுவனங்களில் வழக்கறிஞராக மாறி விடுபவர்தான். போதாக்குறைக்கு இந்தப் படையில் ரகுராம் ராஜனும் சேர்ந்திருக் கிறார்.
தாராளமய கொள்கையை தாராள மயமாக்கத்தான் இந்தப்படை சேர்ந்திருக் கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...