bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 29 மார்ச், 2016

ம.ந.கூ வா? கே .ந.கூ வா?? ஒரு சித்தாந்த நெருக்கடி.???

CPI மற்றும் CPI(M) தோழர்களுக்கு இப்படி ஒரு சித்தாந்த நெருக்கடி இதற்கு முன் எப்போதும் வந்ததில்லை. 
அவர்கள் சீனாவை ஆதரிப்பதா..?
 ரஷ்யாவை ஆதரிப்பதா...? 
என்று தங்களுக்குள் குடுமிச்சண்டை போட்டு பிரிந்த போதுகூட இவ்வளவு குழப்பத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.
 ஆனால் இன்று மிகவும் குழப்பத்திலும், வருத்தத்திலும் உள்ளனர். திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு வலுவான அரசியல் அணியைத் தமிழகத்தில் உருவாக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய இரண்டு கட்சித் தோழர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தையும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் கூடவே அண்ணன் திருமாவையும் இணைத்து ஓர் உலகப் புகழ்பெற்ற கூட்டணியை உருவாக்கிக் காட்டிவிட்டார்கள்.
ஆரம்பத்தில் ஐவர் அணியாக இருந்து, அதில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி நைசாக கழன்று கொள்ள, இப்போது மீண்டும் அது ஐவர் அணியாக பரிணமித்துள்ளது. 
நடந்து முடிந்த இந்த பெரும் புரட்சிக்குப் பின்னால் தோழர்களின் செயல்தந்திரம், போர்த்தந்திரம் எல்லாம் ராஜதந்திரமாக நமக்கு காட்சியளிக்கின்றது. ஆனால் கூட்டணி போட்ட சில நாட்களிலேயே தங்களுக்குள் பிரச்சினை வரும் என்று இயக்கவியல் பொருள் முதல்வாதத்தால் காலை மாலை என இரண்டு வேளையும் சித்தாந்தக் குளியல் செய்யும் நம்ம தோழர்கள் எதிர்பார்க்கவில்லை. 
நாகப்பதனி பெரிய சாதியா, இல்லை நாகபதனி பெரிய சாதியா என புலிகேசி பட ஸ்டைலில் மக்கள் நலக்கூட்டணி என்று அழைப்பதா... இல்லை விஜயகாந்த் அணி என்று அழைப்பதா என பெரும் சித்தாந்தக் குழப்பத்தில் தோழர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். 
திரும்ப ஒரு முறை மார்க்ஸையும், ஏங்கல்சையும், லெனினையும், மாவோவையும் புரட்டிப் பார்க்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
ஆனால் கட்சியில் உள்ள நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன் போன்ற மார்க்சிய அறிஞர்கள் மக்கள் நலக் கூட்டணி என்றுதான் அழைப்போம் என மார்க்ஸ்-ஏங்கல்சை மேற்கோள் காட்டி உறுதியாக சொல்லிவிட்டனர்.
நம்ம அண்ணன் திருமா சற்று தயங்கி அம்பேத்கார் அப்படி எதுவும் சொல்லவில்லை, எனவே எனக்கு விஜயகாந்த் அணி என அழைப்பதில் எந்தக் கெளரவப் பிரச்சினையும் இல்லை என சிம்பிளாக முடித்துக் கொண்டார். 
அடுத்து அந்தக் கூட்டணியில் இருக்கும் வைகோ அவர்கள், இந்திய அரசியலில் மட்டும் அல்லாமல் தமிழக அரசியலிலும் பழம் தின்று கொட்டையை மட்டும் போட்டவர் அல்ல... 
அதையும் தின்று விட்டையையும் போட்டவர். அவர் தற்போது விஜயகாந்த் சேர்ந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கின்றார். விஜயகாந்த் கூட்டணி என்று அல்ல, பிரேமலதா நலக் கூட்டணி என்று சொன்னால் கூட அவர் கவலைப்பட மாட்டார்.
மாற்று அணி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள் எந்த வகையில் தற்போது இருக்கும் சீரழிவு அரசியல் கலாச்சாரத்துக்கு மாற்று என்று தான் நமக்குத் தெரியவில்லை. 
ஒரு கட்சியின் கடந்த கால செயல்பாடுகளில் இருந்துதான் அவர்களை நாம் மதிப்பிட முடியும். அப்படி இந்தக் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடந்த கால செயல்பாடுகளையும் பரிசீலித்தோம் என்றால் இது ஒரு சரியான கூட்டணிதான் என்பது புலப்படும். 
எந்த வகையில் என்றால் இவர்கள் அனைவருக்கும் ஓர் ஓற்றுமை உள்ளது. அது, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டும் என்றாலும் இறங்கிச் செல்வது.
ம.தி.மு.கவை எடுத்துக்கொண்டால் அந்தக் கட்சியின் தலைவர் வைகோ அவர்கள் ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பதும், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக தன்னை பொடாவில் தள்ளிய ஜெயாவிடமே திரும்பப் போய் கூட்டணி வைத்த மானஸ்தர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
 மேலும் பாஜகவுடன் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து பெரியாரின் கொள்கைகளுக்கு வலிமை சேர்ந்த மாவீரர் என்பதும் , கூடுதலாக சுபாஸ் சந்திர போஸ் உயிரோடு இருப்பதைப் பற்றி அறிந்த, அதை நிரூபிக்கத் தகுதிவாய்ந்த ஒரே இந்தியன் என்பதும் இவரது அரசியலில் நேர்மையையும், பொதுவாழ்வில் தூய்மையையும், இலட்சியத்தில் உறுதியையும் காட்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவை எடுத்துக்கொண்டால் அம்பேத்காருக்குப் பின் இந்திய அளவில் அவரது கருத்துக்களை வலுவாக ஓங்கி ஒலிப்பவர் என்ற பெருமையைப் பெற்றவர். 
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் ஞானக்கண்களைப் பெற்றவர்களுக்கு மத்தியில் ராமதாசின் சிரிப்பில் அம்பேத்காரைப் பார்த்தவர். வாடிவாசலில் ‘அடங்க மறு’க்கும் ஜல்லிக்கட்டு மாடுகள் கொல்லப்படுதைப் பார்த்து துடித்துபோகும் அகிம்சைவாதி. 
கொள்கையை விட்டுக் கொடுத்தால் தான் சீட்டு கிடைக்கும் என்றால் எனக்கு கொள்கை தான் முக்கியம் என ‘திருப்பி அடி’க்கும் கருஞ் சிறுத்தை!.
நம்ம தோழர்களைப் பற்றி நாம் சொல்வே தேவையில்லை. அவர்களது வளர்ச்சியைப் பார்த்து ஆலமரமே வெட்கப்பட்டுக் கிடக்கின்றது. தமிழ்நாட்டில் ஒரு தளப்பிரதேசத்தையும் அதற்குத் தலைமை தாங்க ஒரு கார்ல் மார்க்சையும் உருவாக்கத் துடிக்கும் அவர்களது முயற்சி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. 
‘புரட்சித்’ தலைவரை வைத்து அகில இந்திய அளவில் புரட்சியைக் கொண்டுவரும் அவர்களது முயற்சி வெற்றி பெறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டுவிட, அடுத்து ‘புரட்சி’த் தலைவியை வைத்து பட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டுவந்தே தீரவேண்டும் என களத்தில் இறங்க... அந்த முயற்சியும் அந்நிய சக்திகளால் சீர்குலைக்கப்பட்டது.
 இப்போது கடைசி கட்டமாக கைவசம் புரட்சியை நிறைவேற்ற இருக்கும் ஒரே தலைவரான ‘புரட்சி’க் கலைஞரை தங்களது அளப்பறிய உழைப்பால் தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். சிவகாசியில் ஆர்டர் கொடுத்த துப்பாக்கிகள் தோழர்களின் கைகளில் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் கேப்டன் தலைமையில் ஒரு பெரும் ஆயுதப்போராட்டம் நடத்தி முடிக்கப்படும். 
தமிழ்நாடு ஒரு விடுதலைப் பிரதேசமாக கேப்டன் தலைமையில் அறிவிக்கப்படும்.
தே.மு.தி.கவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ‘தள்ளாடிக்’ கொண்டிருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்த ஒரே கட்சி. மேலும் அந்தக் கட்சியின் தலைவர் இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த 'குடிமகன்'களில் ஒருவர். நீங்கதான் கீங் என்று யாராவது சொன்னால் மகிழ்ச்சியில் கட்டிய வேட்டியைக் கூட கழற்றி கொடுத்துவிடுவார். பல கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை வாங்கி அதை அழகாக வெட்டி தன்னுடைய கழிப்பறையில் தொங்கவிட்டுள்ளார். 
அதில் அவருக்கு மிகவும் பிடித்தது, தோழர்கள் கொடுத்த கொள்கை அறிக்கைதானம். 
இன்னும் நிறைய மாஸ்கோ வெளியீடுகள் தோழர்கள் கைவசம் உள்ளதாக யாரோ கேப்டனிடம் சொல்லிவிட, வரும்போதெல்லாம் கொள்கையறிக்கை கொண்டுவரவில்லையா என கேட்டு நச்சரிக்கின்றாராம் கேப்டன். 
தமிழக மக்களுக்காக அவரும், அவரது மனைவியும், அவரது மைத்துனரும் நடத்திய போராட்டங்கள் பற்றி ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகம் விரைவில் பாரதி புத்தகாலய வெளியீடாக வெளிவர இருக்கின்றதாம்.
இப்படி பல ஒற்றுமைகளைத் தங்களுக்குள் கொண்டுள்ள இவர்கள் கேவலம் ஒரு பெயருக்காக அடித்துக் கொள்வது வாக்காளர்களை அதிருப்தியடையச் செய்துவிடும்.
 பின்னால் இது ஓட்டுவங்கியைப் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பிருக்கின்றது. 
பெயரில் போய் என்ன இருக்கின்றது? 
அம்மணம் என்றாலும், நிர்வாணம் என்றாலும் ஒன்றுதானே தோழர்களே!
உங்கள் நிலையும் இப்போது அதுதானே தோழர்களே!!
                                                                                                                                                                                                     - செ.கார்கி
நன்றி:கீற்று.



திங்கள், 28 மார்ச், 2016

கடவுள் இருக்கின்றாரா?

உலகில் கடவுள், மத நம்பிக்கை யற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

நார்வே நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பெருகிவருகிறார்கள் என்கிற ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.
நார்வே நாட்டில் சுமார் நான்காயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 39 விழுக்காட்டினர் முற்றிலும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாகக் குறிப் பிட்டுள்ளனர். 
37 விழுக்காட்டினர் கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பதாகக்குறிப்பிட்ட அதேநேரத் தில், 23 விழுக்காட்டினர் கடவுள்குறித்து எவ்வித கருத் தையும் கொண்டிருக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே 1985ஆம் ஆண்டில் முதல்முறையாக கடவுள் நம்பிக்கைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக 50 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். தற்போது அவ்வெண் ணிக்கை பெருமளவில் சரிந்து 37 விழுக்காடாகிவிட்டது. 
1985ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக அய்ந்தில் ஒரு பங்கினர் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது அவ்வெண்ணிக்கை 39 விழுக்காட் டளவில் உயர்ந்துள்ளது.
நார்வே நாட்டைச்சேர்ந்த ஜான் பால் பிரெக்கே தற்போது நார்வேயினரிடையே கடவுள் நம்பிக்கைகுறித்த ஆய்வை 4000 பேரிடம் மேற்கொண்டார். அவர் கூறும்போது,
30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பணியைத் தொடங்கியதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவிலான மாற்றத்தைக் காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சம அளவிலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால் தற்போது கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் 29 விழுக்காட்டினர் மட்டுமே கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பவர்களாக உள்ளனர். 
ஆய்வுத் தகவல் குறித்து பிரெக்கே கூறும்போது, நாடுமுழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், பிறப்பால் அனைத்து மதங் களைச் சேர்ந்தவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. கேள்வியில் கடவுள் என்பது குறித்த வரை யறையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார்.
ல்வேறு நாடுகளிலும் அதிகரித்துள்ள நாத்திகர் களின் எண்ணிக்கை
கேல்லப் இன்டர்நேஷனல் மற்றும் பியூ ஆய்வு மய்யம் இணைந்து கடவுள்மீதான நம்பிக்கை குறித்த ஆய்வு மேற்கொண்டன. ஆய்வு முடிவுகளின்படி, கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் மற்றும் மதமற்றவர்கள் பன்னாட்டளவில் மக்கள் தொகையில் 33 விழுக்காட்டளவில் உள்ளனர்.
சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற நாத்திகர்கள் நாடுகளின் வரிசைப்படி,
சீனா 
சீனாவில் 90 விழுக்காட்டினரும், ஹாங்காங்கில் 70 விழுக்காட்டினரும் தங்களை மதமற்றவர்களாக அல்லது நாத்திகர்களாக குறிப்பிட்டுள்ளனர்.
செக் குடியரசு
யுஎஸ்எஸ்ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது. 45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்துவந்துள்ளதாகவும், 30 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நாத்திகர்களாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஜப்பான்
பழைமைகள் மற்றும் மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு இருப்பவர்களாக 25 விழுக்காட்டினரும், மேலான சக்தி என ஒன்றும் நம்புவதற்கில்லை என்கிற அளவில் 31 விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனி
ஜெர்மனி நாட்டில் 60 விழுக்காட்டினர் தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல்
இசுரேலியர்களில் 57 விழுக்காட்டினர் தங்களை மதமற்றவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் நம் பிக்கையிலிருந்து நாத்திகர்களாக 8 விழுக்காட்டினர் மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இசுரேல் நாளிதழ் ஹாரெட்ஸ் நாத்திகக் கருத்துகள் இசுரேல் சமூகத்தினரிடையே ஆழமாக வேரூன்றி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, கனடா, அய்ஸ்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளில் கடவுள் நம்பிக்கை என்பதில் சுதந்திர அணுகு முறையுடன் இருந்துவருவதாக ஆய்வுத்தகவல் சுட்டிக் காட்டி உள்ளது.
====================================================================================




திங்கள், 14 மார்ச், 2016

உலகில் வயதான நகரம் மதுரை

உலகில் வயதான பல நகரங்களில் இன்றும் உயிரோட்டமாக உள்ள ஒரு பழம்பெரும் நகரம் மதுரை.
நகரமயமாக்கலால் மதுரை பரிணாம வளர்ச்சி அடைந்து வந்ததை இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள் போன்ற ஆதாரங்களின் மூலமும் வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள் மூலமும் அறியலாம். வரலாற்றுச் சான்றுகளில் மதுரை மாநகரம் ஒரு பெரிய அடித்தளமாக இருக்கிறது; 
ஆனால் இங்கிருந்து இலக்கிய ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ எந்தவொரு பெரிய அகழ்வாய்வும் நடைபெறவில்லை. 
இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சியாளரும், கல்வெட்டியல் அறிஞருமான வி.வேதாசலம், கீழடி கிராமப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டுள்ளார்.
தொல்லியல் வல்லுநரான அவர், மதுரையில் கடைத்தெருக்களுக்குள் உள்ள பகுதியைச் சுற்றி அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திச் சொல்கிறார்.
தொன்மை நகரமான மதுரையில் உள்ள வரலாற்றுச் சான்றுகள் பற்றி முந்தைய காலத்திலிருந்து இந்த நவீன காலம் வரையில் உள்ள இலக்கியங்களைப் பற்றியோ அதில் கூறப்படும் ஆய்வுப்பூர்வமான அம்சங்கள் பற்றியோ எந்த ஒரு கருத்து விவாதமும் நடைபெறவில்லை; மதுரைக்காண்டம், நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், தேவாரம் மற்றும் திருவிளையாடற்புராணம் போன்ற இலக்கியப் படைப்புகளின் குறிப்புகளில் மதுரையின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் மதம் போன்ற பண்புகள் - கட்டமைப்புகள் நிறைந்து கிடக்கின்றன.
அகழ்வாராய்ச்சியாளர்களின் சான்றுகளில் இதுவரை சங்ககாலம், சாதவாகனர்களின் காலம், பிறகு பாண்டிய , சோழ, விஜயநகர நாயக்கர்களின் காலம் மற்றும் ரோமானிய நாணயங்கள், சிலைகள், தாமிரத் தட்டுகள் மற்றும் மைக்ரோலித்திக் கருவிகள், மறுபுறம் கல்வெட்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வளர்ச்சி என்ற பெயரில் தொன்மையான பொருட்கள் மற்றும் அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு, அவற்றை அகழ்வாய்வு செய்வது அவசரத் தேவையாக உள்ளது என்கிறார் முனைவர் வேதாசலம்.
பழைய மதுரை, மாசி வீதிகளுக்கு உட்பட்டது. அதைச்சுற்றி அகழி சூழ்ந்துள்ளது.
பல பாண்டியர் கால கட்டமைப்புகள் நாயக்கர் மற்றும் பிரிட்டிஷ் கால கட்டமைப்புகளுக்கு வழி கொடுக்கும் விதமாக புதைந்து விட்டன. 
எனவே, அகழ்வாய்வுகள் பழம்பெரும் மதுரையின் வரலாற்றுக்குப் புதிய ஒளியைத் தரும்.நவீன காலத்தின் மொழியில் சொல்வதானால், பழைய மதுரை இன்றும் ‘வாயில்களால் மூடப்பட்ட ஒரு பகுதியாக’ இருக்கிறது. இன்றும் கூட, மதுரையில் கிழக்கு வாசல்(கீழவாசல்) விளக்குத்தூண் அருகிலும், மேற்கு வாசல் (மேலவாசல்) பெரியார் பேருந்து நிலையம் அருகிலும் தெற்கு வாசல் தெற்கு வெளி வீதியிலும், வடக்கு வாசல் (வடக்குமாசி வீதி) செல்லத்தம்மன் கோவிலுக்கு அருகாமையிலும் உள்ளன என்பதைப் பார்க்கிறோம்.
காவேரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், கொற்கை, கரூர், அரிக்கமேடு மற்றும் உறையூர் போன்ற பகுதிகளில் அகழ்வாய்வு நடைபெற்று வருவதாக கூறும் முனைவர் வேதாசலம், இந்நகரங்களைக் காட்டிலும் மதுரை மிகப் பழமையான நகரம் என்பதால் அகழ்வாராய்ச்சிக்கு அது ஒரு சிறந்த இடம் என்கிறார்.
பழைய மதுரை நகர் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், குன்னத்தூர், ஆனைமலை, சமணமலை, கொங்கர் புளியங்குளம், மாங்குளம், அரிட்டாபட்டி, கோச்சடை, தேனூர், துவரிமான், அனுப்பானடி, அவனியாபுரம் மற்றும் அழகர்கோவில் போன்ற இடங்களில் மிகவும் விலைமதிக்க முடியாத தொல்லியல் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன.
மிகவும் ஆதாரமான சான்றுகள் தரும் பழமையான இடங்கள் அனைத்தையும் பி.ஆர்.பி,மற்றும் மணல் 
பழைய மதுரை நகரத்திற்கு வெளியே பழங்காநத்தம் கோவலன் பொட்டல் பகுதியில் 1981ல் மாநில அகழ்வாராய்ச்சித்துறை ஆய்வு மேற்கொண்டது. பிரிட்டிஷ் கால அகழ்வாய்வின் போது துவரிமான் மற்றும் அனுப்பானடி பகுதியில் புதைக்கப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 
ஆனால் அவை அறிவியல் பூர்வமானவை அல்ல என்கிறார் முனைவர் வேதாசலம். 
அனைத்துப் பழம்பெரும் நகரங்கள் போலவே, மதுரையும் அதன் கடந்த காலத்தில் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது.
சோழர் ஆட்சிக் காலத்தில் மதுரை ‘சோழபுரம்’ என்றழைக்கப்பட்டது. மேலும், இங்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு ‘திரிபுவன வீர தேவன்’ என்று முடிசூட்டு விழா நடைபெற்றது.பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்களின் மதம் சார்ந்த புனித இடமாக சிதம்பரமே கருதப்பட்டது. 
கிட்டத்தட்ட அனைத்து சைவ நாயன்மார்களில் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.
ஆனால் 12ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழர்களின் மதம் சார்ந்த புனிதத் தலமாக மதுரை மாறியது.
 கால ஓட்டத்தில் மதுரை பரந்த நகரமாக, மாநகரமாக மாறியது; எல்லா மதங்களுக்கும் ஆதரவு தெரிவித்தது; வெளிநாட்டுப் பயணிகளை உபசரித்தது. ஒன்றுபட்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மதுரை ஒரு முக்கிய இடமாக மாறியது.
எனவே தமிழகத்தின் கலாச்சார, இலக்கியத் தலைநகராமாக விளங்கிய மதுரையின் உண்மையான வயதையும் வரலாற்றையும் அறிய மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறைகள், வரலாற்றாசிரியர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொண்ட குழுவை அமைத்து, மதுரையில் அகழ்வாராய்ச்சிக்கு உகந்த இடங்களையும் தேர்வு செய்து, அதில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் முனைவர் வேதாசலம்.
மதுரை வளர்ச்சியின் காலக்கோட்டினை நிர்ணயிக்க ‘கார்பன் டேட்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இந்த அகழ்வாராய்ச்சி, எதிர்காலத்தில் மதுரை ஒரு ‘ஸ்மார்ட் சிட்டி’யாக உருவாகும் போது, அதன் வரலாறு புதைந்து போகாமல் பாதுகாக்க உதவும்.`

தி இந்து’ மதுரைப் பதிப்பு (ஜூலை 13)
 தமிழில் : ஆர்.நித்யா
==========================================================================================================================
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) பிறந்த தினம் இன்று (மார்ச் 14). 
# ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் (1879) பிறந்தார். 
தந்தை ரசாயனத் தொழிற்சாலை உரிமை யாளர். படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. அப்பா தந்த காம்பஸ் கருவியை ஓயாமல் ஆராய்ந்துவந்தார். இளம் வயதில் வயலின் கற்றார்.
# உறவினர் ஒருவர் இவருக்கு கணிதம், அறிவியல் கற்பித்த தோடு, பல நூல்களை படிக்கச் சொன்னார். இதனால் கணிதம், அறிவியலில் இவருக்கு அளவில்லா ஆர்வம் பிறந்தது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஃபெடரல் பாலிடெக்னிக்கில் பயின்றார். காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.

# இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதி களை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது. அதுவரை ஏற்கப்பட்டுவந்த பிரபஞ்சம் குறித்த அடிப்படைக் கொள்கைகளை இவரது கோட்பாடு மாற்றியமைத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

# குவான்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

# பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

# இவரை யூத இயற்பியலாளர் என்று முத்திரை குத்திய ஹிட்லர் நிர்வாகம் இவரை கொலை செய்ய திட்டமிட்டது. இதனால், 1933-ல் அமெரிக்கா சென்றார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இணைந்தார். வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றார். ஒருங்கிணைந்த புலக்கோட்பாடு விதியை 1950-ல் வெளியிட்டார்.

# ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார்.
# எளிமையானவர். ரயிலில் 3-வது வகுப்பில்தான் செல்வார். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்!

# மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி, மரியாதை கொண்டவர். ‘‘நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி’’ என்று புகழ்ந்துள்ளார். தன் அறையில் காந்திஜியின் படத்தை மாட்டிவைத்திருந்தார். ‘குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல’ என்பார்.

# இவரது உடல்நிலை 1955 ஏப்ரலில் மோசமானது. ‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். மருத்துவமனையில் அடுத்த நாள் காலை அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 76.
==================================================================================================================================


சனி, 12 மார்ச், 2016

அமேசான்



*அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும்.
*வருடமெல்லாம் கொட்டும் மழை.

சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. 

இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. 
அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். 
இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். 
ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த அமேசான்.

*அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். *கப்பல் போக்குவரத்தின் பொழுது எழும் அலைகளால் பக்கவாட்டு கரைப்பகுதி பாதிக்கப்படுவதால், வருடத்திற்கு வருடம் இந்த நதியின் அகலம் சுமார் 6 அடி கூடிக் கொண்டே போகிறதாம். 1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1500 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் நீளத்தில் ‘நைல்’ நதிக்குதான் முதலிடம் .

*ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது. இந்த நதிக்கரையில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நதியின் ஊடாகப் பரவி நின்று, அந்த வழியாகச் செல்லும் படகுகளைக் கவிழ்க்கும் வல்லமை பெற்றவை.

* எண்ணற்ற செடிகொடிகளையும் , மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.

*அமேசான் நதியில் டால்பின் வகைகள் உட்பட சுமார் 3 ஆயிரம் மீன் வகைகள் உள்ளன.
*தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.

*ஈல் வகை மீன்கள் இது ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.

*காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.

*அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர்.

*உலகில் உள்ள காடுகளிலேயே மிகப் பெரியது அமேசான் காடுகள்தான் . 
அடர்த்தியானதும் இவைதான் .
அமேசான் என்ற வார்த்தைக்கு, ' திடகாத்திரமான, உயரமான பெண் ' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை ' நதிகளின் ராணி ' ( 4,000 மைல்கள் நீளம் ) என்று அழைக்கிறார்கள் .

*எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு.

*பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது .

*பரப்பு 55,00,000 கிமீ² (21,23,562 ச.மைல்).

*வாலியா ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது . சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது .
.
*பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.

*இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக ்கும் 10,000- க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும ், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டிகளுக்கு ம் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று
இம்மழைக்காடுகளில வசிக்கிறது.

*உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் ( தாவரம், விலங்கு, பூச்சி ) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு . 2,500 வகை மீன்கள், 1,800 வகை வண்ணத்துப்பூச்ச ிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன ( அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான் ).

*அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு , பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது . 
இங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கு ம் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் தாவரவியல் வல்லுனர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உங்களுக்கு  உணர்த்தும்..
========================================================================

வெள்ளி, 11 மார்ச், 2016

வாக்கு வங்கி?



 10 ஆண்டுகளுக்கு முன், கேப்டனின் ரசிகராக இருந்த லட்சக்கணக்கான உறுப்பினர்களை நம்பித்தான், தே.மு.தி.க.,வை ஆரம்பித்தார் விஜயகாந்த். 
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக கட்சி இருக்கும் என சொன்னதோடு மட்டுமல்ல; தனித்துத் தான் போட்டியிடுவோம் என அறிவித்தார். 
 பல தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டவர், கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி என அறிவித்து, அ.தி.மு.க.,வுடன் சென்றார். '
 ஆனால், அ.தி.மு.க.,வை, மூன்றே மாதத்தில் பகைத்து வெளியேறினார். 
அதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து களம் கண்டவர், மீண்டும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், தோல்வி மட்டுமல்ல; இருந்த ஓட்டு வங்கியிலும் கடும் சரிவு.
2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 84 சட்டசபை தொகுதிகள். இதில், ஒரு சட்டசபை தொகுதியிலும், அக்கட்சி முதலிடம் பெறவில்லை.ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டாம் இடமும்; 78ல், மூன்றாவது இடமும் பிடித்தது. 
பா.ம.க., எட்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வெற்றி பெற்றது. எட்டு லோக்சபா தொகுதிகளில் அடங்கிய, 48 சட்டசபை தொகுதிகளில், 4ல் முதலிடம் பிடித்தது. 11ல், இரண்டாம் இடம்; 28ல், மூன்றாம் இடம்; 5ல், நான்காம் இடம் பெற்றது. கூட்டணிக்கு தலைமை ஏற்ற, தமிழக பா.ஜ., ஒன்பது லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் அடங்கிய, 54 சட்டசபை தொகுதிகளில், 7ல், முதலிடம்; 16ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.
ம.தி.மு.க., ஏழு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 42 சட்டசபை தொகுதிகள். அதில், 11ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.
அந்த தேர்தலில், பா.ஜ., அணியில் போட்டியிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தை பிடிப்பதில், பா.ஜ., - பா.ம.க.,வை விட, தே.மு.தி.க., பின்தங்கி இருந்ததையே, இம்முடிவுகள் காட்டுகின்றன.
2014 மக்களவை ஓட்டு சதவீதம்
பா.ஜ.,  5.48
தே.மு.தி.க.,  5.13
பா.ம.க.,      -       4.45
ம.தி.மு.க.,  3.50
இனி விஜயகாந்த் கட்சியில் வேட்பாளராக நிற்க பணம் கட்டிய ஒருவரின் புலம்பல்.
"2016 சட்டசபை தேர்தலில் 'கேப்டன் இப்படி காலை வாருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 'தனித்து போட்டி' என ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், நாங்கள் விருப்ப மனு கொடுத்திருக்கவே மாட்டோம்; அதைத் தொடர்ந்து கட்சித் தலைமை கேட்ட பணத்தையும் கொடுத்திருக்க மாட்டோம்' என, தே.மு.தி.க., சார்பில், நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் புலம்புகின்றனர்.
எப்படியும், தி.மு.க., கூட்டணியில் தான் இணைவார் என எதிர்பார்த்ததோடு, அவரிடம் நேர்காணலுக்கு சென்ற கட்சியினர் அனைவரும், 'தி.மு.க., கூட்டணி தான் வேண்டும்' என, தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டோம். 
'நல்ல முடிவாக எடுப்பேன்' என்று சொன்னார். அதை நம்பினோம்; உடனே, தேர்தல் செலவுக்கென்று, கட்சியில் விருப்ப மனு போட்டவர்களிடம், 25 முதல், 50 லட்சங்களை கட்ட சொல்லி,தலைமை வற்புறுத்தியது. 
'தி.மு.க., கூட்டணி வந்து விடும்; சீட் கிடைத்தால் வெற்றி கிட்டிவிடும்' என, பணம் கட்டினோம். இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய், தலைமைக்கு கிடைத்து விட்டது. 

ஆனால், வழக்கம் போல குழப்பமாக முடிவெடுத்து விட்டார். பழையபடியே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 
தி.மு.க., தரப்பையும், பா.ஜ., தரப்பையும் ரகசியமாக சந்தித்த விஜயகாந்த் குடும்பத்தினர், அவர்களோடு தனித்து போட்டியிடுவது குறித்து தான் பேசினரா?
தனித்து தான் போட்டி என, முடிவெடுப்பதாக இருந்தால், அதைகட்சியினரிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டாமா?
அப்படி சொல்லாததால் தானே, கட்சியினர் பலரும் விருப்ப மனு போட்டனர். விருப்ப மனுவுக்கு ஒரு தொகை என கிட்டத்தட்ட, 4,000 பேரிடம் வசூல் நடத்திய, தே.மு.தி.க., தலைமை, பின், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும், தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியது ஏன்?
இப்பவும் ஒன்றும் பிரச்னையில்லை.
விஜயகாந்த் நேர்மையாளராக இருந்தால், அவர் யாரிடம் இருந்தும் சல்லிக்காசு கூட வாங்குவது இல்லை என, அவரது மனைவி பிரேமலதா, ராயப்பேட்டை மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'முழங்கியது' போல, எங்களைப் போன்ற அப்பாவிகளிடம் இருந்து பெற்ற பணத்தை அவர், நியாயமாக திருப்பித் தர வேண்டும். 
ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் தலைவராக இருந்து கட்சி நடத்துவதற்கு, எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான கட்சியினர், சொத்தை இழந்து, வீட்டை இழந்து, மனைவியின் தாலி செயினை விற்று கட்சிப் பணியாற்றி இருக்கிறோம்.

கடைசியாகக் கேட்கப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பலரும், வீட்டை விற்றும் சொத்தை 
வழக்கம்போல, தன் பேச்சின் மூலம் மட்டுமல்ல; 
எதிர்கால திட்டத்திலும் விஜயகாந்த் குழப்பினால், விளையும் பலன், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும்.
எனவே, லட்சக்கணக்கான பணத்தை கொடுத்ததோடு, எதிர்காலத்தையே அடமானம் வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களை, விஜயகாந்த் காப்பாற்றப் போகிறாரா அல்லது ஒட்டுமொத்த கட்சியின் எதிர்காலத்தையும், குழி தோண்டிப் புதைக்கப் போகிறாரா என்பது, அவரது தீர்க்கமான முடிவில் தான் உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர் அல்லது புலம்பினர்.
ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் [அவர்தாமே கேப்டனை வழிநடத்துபவர்]சில குறுக்கு வழிகள் இருப்பதாக் கூறப்படுகிறது.
அதாவது தனித்துப் போட்டி என்று முறுக்கிக்கொண்டால் கூட்டணி பேச வரும் பாஜக,ம.ந.கூ க்களிடம் முதல்வர் பதவியையும்,அதிக இடங்களையும்,போதுமான கோடிகளையும் பெறலாம் என்பதுதான் அது.இதன் மூலம் த.மா .கா ,பச்ச முத்து கட்சிகளையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டணி யாக திமுக திட்டமிட்ட கூட்டனியை தனது தலைமையில் அமைத்து வெல்லலாம் என்பதுதான் அந்த வழி.
பிரேமலதா எதிர்பார்க்கும் கோடிகள் ம.ந.கூட்டணியில் கிடைக்காது .பாஜகவில் அது வசப்படும்.
எனவே விஜய் காந்த் கட்சியின் பந்தா இனி பாஜகவை நோக்கியே இருக்கும்.ஆனால் ம.ந.கூ வுடன் கள்ளத் தொடர்பும் இருக்கும் .
சரியான குழப்பமில்ல முடிவான முடிவை வேட்பு மனுத்தாக்கல் துவக்கத்தை ஒட்டித்தான் விஜயகாந்த் வாயால் பிரேமலதா சொல்லுவார்.
ஆனால் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் முன்னர் முன்னே குறிப்பிட்ட தேமுதிக வாக்கு வங்கி குறைந்துள்ளதை பாஜக சுட்டிக்காட்டவேண்டும்.
மேலே உள்ள வாக்கு வங்கிக் குறைவு 2014 நிலை அதன் பின்னரும் விஜயகாந்த் குழப்பங்களால் வாக்கு வங்கி மேலும் சரிந்துள்ளது.
அதைத்தான் தற்போது வரும் கருத்துக்கணிப்புகள் காட்டி வருகின்றன.
கீழே உள்ள படத்தையும் தேமுதிக கட்சித் தொண்டர்கள் நிலையையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
இது ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவர் தலையை சீவ ஆரம்பிக்கும் போது எடுத்த படம்.இடம் இல்லாததால் இங்கு வெளியாகியுள்ளது.
======================================================================================

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...