bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

இறந்தும் வாழ்வோம்...!


விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகர்கோவில் சிறுவன் அவினாஷ் இதயம் அகற்றப்பட்டு தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

நாகர்கோவில், கோட்டாறை சேர்ந்தவர் சுவாமிநாதன்; ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி லதா, தனியார் மருத்துவமனை நர்ஸ். 

இவர்களது மகன்தான்  அவினாஷ்.வயது - 12.

 கோட்டாறு அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தான். கடந்த, 18ம் தேதி மாலை, அவினாஷ், டியூஷனுக்கு சைக்கிளில் சென்றபோது, பைக் மோதி படுகாயமடைந்தான். 

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிசை பலனின்றி  மூளைச்சாவு அடைந்தான்.
 அவரது உடல் உறுப்புகளை  மற்றவர்களுக்கு  தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். 

25.08.16 அன்று  காலை, 10:30 மணிக்கு அவினாஷ் தானம் செய்யப்பட்ட உடல்  உறுப்புகள் அகற்றும் பணி  துவங்கியது.  பெற்றோர் ,மற்றோர்  இதயம் துடிக்க அழ அவினாஷ் இதயம் மதியம், 1:50 மணிக்கு, தனி ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு  தயாராக இருந்த தனி விமானம் மூலம் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு இதயத்தை பொறுத்த அனுப்பி வைத்தனர். 

அவினாஷின் கண்கள், நெல்லை அரவிந்தர் கண் மருத்துவமனைக்கும், இரு சிறுநீரகங்கள், நெல்லை மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இதுவரை தமிழகத்தில் எட்டு ஆண்டுகளில், அவினாஷ் போன்று மூளைச்சாவு அடைந்தவர்கள் 837 பேரின் உடல் உறுப்புகள் தானம் மூலம்  4,677 பேர் பயன் அடைந்துள்ளனர். 
இதனால், 4,000க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
 2008 அக்டோபரில் மூளைச்சாவு அடைந்த, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர், இதயேந்திரனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர். இது தமிழக  மக்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
தமிழக அரசு, உடல் உறுப்பு தான திட்டத்தை துவக்கியது. 

இதுவரை மூளைச்சாவு அடைந்த, 837 பேருடைய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 4,677 பேர் பயனடைந்துள்ளனர். 

இதுவரை, 837 பேரிடமிருந்து இதயம் - 236, நுரையீரல் - 125, கல்லீரல் - 787, சிறுநீரகம் - 1,529, கணையம் - 11, கண்கள் - 1,265, இதய வால்வு - 678 உட்பட மொத்தம், 4,677 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. 
2015 - 16ல் மட்டும், அதிகபட்சமாக, 156 பேரிடம் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து, உடல் உறுப்பு தான ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'வெளி மாநிலங்களில் இருந்தும் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்படுகின்றன. உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.

உண்மையிலேயே சிறந்தது உடல் உறுப்பு தானம்.  மண் தின்னும் உடல் உறுப்புகளை  தானம் செய்ய வேண்டும்.நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகரா மன்றங்கள் மூலம் ரத்த தானம் செய்வது பற்றி விழிப்புணர்வை உண்டாக்கினார்.தமிழ் நாட்டில் இன்று அதிக ரத்ததானம் செய்தவர்கள் கமல்ஹாசன் ரசிகர்கள்தான்.அவர்களைப்பார்த்து மற்ற நடிகர்களின்ரசிகர்களும் ரத்ததானம் செய்வதை இப்போது வழக்கமாக்கியுள்ளனர்.அடுத்த கட்டமாக கமல்ஹாசன் கண்தானம் மட்டுமின்றி தனது உடலையே இறந்த பின்னர் தானமாக மருத்துவக் கல்லுரிக்குவழங்கியுள்ளார்.அதையும் பலர் பின்பற்றி கண்தானம்,உடல் தானம் செய்கின்றனர்.

அது நல்ல காரியமாக இருந்தாலும் மூளை சாவு அடைந்தவர்களின் இயங்கக்  கூடிய இதயம்,கண்,சிறுநீரகங்கள்,கல்லிரல் போன்றவற்றை தானமாக கொடுப்பது அந்த உறுப்புகள் பழுதடைந்ததால் இறப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு மறு  வாழ்வு கொடுப்பதாக அமையும்.
ஆனால் அப்படி மூளை சாவு அடைந்தவர்களின் பெற்றோர்கள்,உறவினர்களுக்கு தங்கள் சொந்தம் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு கோர சடலமாக காட்சியளிப்பதை காண சகிக்க முடியாதநிலைதான்.அதையும் மீறி அவர்கள் தானம் வழங்குவது உண்மையிலேயே பலருக்கு வாழ்வளித்தவர்களாக ,வணக்கத்துக்குரியவர்களாக மாறி விடுகிறார்கள்.

அப்படி வழங்கப்படும் உறுப்பு தானம் மூலமாய் தங்கள் மகன் பல உருவங்களில் உயிர் வாழ்வதை எண்ணி கிடைக்கும் ஆறுதலும்,மகிழ்சசியும் கர்ப்பிணிக்கு எட்டாதது.

சரி .அப்படி உறுப்புகள்,உடல் தானம் செய்யாத நிலையில் புதைக்கப்படும் சடலங்கள் நிலை என்னவாகும்.
அதை பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டாள் நல்லதுதான்.


நீங்களோ அல்லது நானோ ஒருவர் இறந்த மறுநொடியே மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும். அதேபோல், உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய  ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு  செல்கிறது.
மேலும் ஆக்ஸிஜன் உடலுக்கு செல்லாததால், மெல்ல, மெல்ல உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும்.  

பிறகு அச் செல்கள் உடைய ஆரம்பித்து, சிதைய  ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக  ஆரம்பிக்கிறது. உடல் நாற்றமும் அடைகிறது.


அத்துடன் தசைகளில் கால்சியம் சேரத்  துவங்குவதால், தசை இறுக்கமாக, கடினமாக மாறும்.
சில சமயங்களில், தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும். 

அத்துடன், தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். 

இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும். 
இந்நிலையில் புவி ஈர்ப்பு விசை காரணமாக   இறந்தவர்களின் இரத்தம் உடல் மேல் பாகத்தில் இருந்து  கீழ் நோக்கி  சேர துவங்கும்.


 இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற அதாவது சவக்களை ஆரம்பிக்கும்.
உடல் உறுப்புகளில் இருக்கும் பாக்டிரியாக்கள்  என்ஸைம்களை  செரிக்க  ஆரம்பிக்கும். இறந்தவர்களின் உடலில் ஆங்காங்கே பச்சை நிற தடிப்புகள் தோன்றும். 


உடல் அழுகும் போது, காலரா போன்ற நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள்  வெளியேறும். இதன் காரணமாக   உடலில்  துர்நாற்றம் அதிகமாக  வீசுகிறது.

மேலும், இறந்தவரின் உடலை  புழுக்கள், வண்டுகள் உண்ண ஆரம்பிக்கும். 
புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும். 


அத்துடன் மெல்ல, மெல்ல இறந்தவரின் உடல், ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும்.  இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.
ஓரிரு வாரத்தில், இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும். 


நான்கு மாதங்களில்  இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி  வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும்.
நீங்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் மீண்டும் வாழுவீர்கள்.அல்லது உங்கள் உடல் இந்நிலையை அடைந்து மண்ணோடு,மண்ணாகும்.
                                     ஓருடலாய் அவதரித்து  நான்கு உடலில் உயிர் வாழும் அவினாஷ்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...