bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 21 நவம்பர், 2011

வாய்தா ராணி..?



“                                             
”அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது.  அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது.  அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது.”  இவையெல்லாம் பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்விகள் கேட்பதற்காகச் செய்யப்பட்டிருந்த தடபுடல் ஏற்பாடுகள்.  ஜெயா தமிழகத்தின் முதல்வர், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்றெல்லாம் கூறி, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை நியாயப்படுத்தினாலும், தார்மீகரீதியில் பார்த்தால், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொண்ட குற்றவாளிக்கு இத்துணை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதைக் கேட்கும்பொழுது குமட்டல்தான் வருகிறது.
இச்சொத்துக் குவிப்பு வழக்கு கிட்டதட்ட 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  இப்பதினைந்து ஆண்டுகளில் இவ்வழக்கை நடத்திய / நடத்திவரும் நீதிமன்றங்களை மயிருக்குச் சமமாகக்கூட ஜெயா மதித்து நடந்ததில்லை.  இந்தியக் குடிமகனைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டதிட்டத்துக்கும் தான் கட்டுப்பட்டு நடக்க மாட்டேன் என்ற அகங்காரத்தோடும், திமிரோடும் நடந்துவரும் ஜெயாவிற்கு, சட்டப்படியான அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் எனக் கூறுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

1991ஆம் ஆண்டு ஜெயா முதன்முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றபொழுது, அவருக்கிருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடியே ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.2,01,83,000) என அறிவிக்கப்பட்டது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு அறுபத்து ஆறு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாய்  (ரூ.66,44,73,000) என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.  ஜெயாவின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 33 மடங்கு அதிகரித்திருப்பதை அசாதாரணமானது என்ற வார்த்தைக்குள்கூட அடக்கிவிட முடியாது.  இத்துணைக்கும் அந்த ஐந்து ஆண்டுகளில் “”தான் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழக முதல்வர் என்ற கடமையை ஆற்றியதாக”ப் பீற்றிக் கொண்டவர், ஜெயா.  எனவே, அவர் முதல்வராக இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்காமல், கிம்பளம் வாங்காமல் அவரது சொத்து மதிப்பு 33 மடங்கு அதிகரித்திருக்க முடியாது.  இதுதான் இச்சொத்துக் குவிப்பு வழக்கின் சாரம்.
இதன் அடிப்படையில் 1996, டிசம்பரில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர் மீது வழக்குத் தொடுத்த அன்றைய தி.மு.க. அரசு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு இவ்வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றத்தையும் அமைத்தது.  தமிழகத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஜெயா மீண்டும் தமிழக முதல்வர் ஆனார்.  அச்சமயத்தில் தனி நீதிமன்றம் சாட்சிகள் அனைத்தையும் விசாரித்து முடித்துவிட்டு, ஜெயாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.  “”தனக்குத் தொண்டை கட்டிக் கொண்டுவிட்ட காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது” என்ற நகைக்கத்தக்க, அலட்சியமான காரணத்தை முன்வைத்துக் கூண்டில் ஏறிநிற்க மறுத்துவிட்ட ஜெயா, “”நீதிமன்றம் தன்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளைத் தனது வீட்டிற்கு அனுப்பி வைத்தால் பதில் எழுதித் தருவதாக”க் கூறினார்.  ஜெயாவின் கூற்றுக்குப் பொருள் என்னவென்று அறிந்திருந்த நீதிபதி, தனது பெஞ்ச் கிளார்க்கை கேள்விகளோடு போயஸ் தோட்டத்து பங்களாவிற்கு அனுப்பி வைத்தார்.  இல்லையென்றால், அ.தி.மு.க. மகளிர் அணியின் ஆபாச ஆர்ப்பாட்டமோ, உருட்டுக்கட்டையோ, கஞ்சா வழக்கோ அவரைத் தேடி வந்திருக்கும்.
                          
ஜெயாவின் விளையாட்டுப் பொம்மை போலத் தனி நீதிமன்றமும், சாட்சிகளும் உருட்டப்பட்டதையடுத்து, தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அன்பழகன் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இவ்வழக்கு 2004ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கை விசாரிக்க பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.
இதன் பின் இந்த வழக்கில் தாம் நேரடியாக ஆஜராகாமல் தப்பித்துக் கொள்வதற்கும், வாய்தா கேட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைப்பதற்கும், வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கும், வழக்கையே அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கும் எனக் கடந்த ஏழாண்டுகளில் 130க்கும் மேற்பட்ட மனுக்களையும், வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி தொடுத்தது, ஜெயா கும்பல்.  அக்கும்பல் இதற்காக முன்வைத்த வாதங்கள் விசித்திரமானவையாகவும், வினோதமானவையாகவும் இருந்ததோடு மட்டுமின்றி, சட்டம், நீதித்துறையைக் கேலிக்குரியதாக்கி ஆட்டுவித்தன.  இந்நீதிமன்றங்கள் பல நேரங்களில் ஜெயா கும்பல் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தலையாட்டித் தம்மைத்தாமே கோமாளிகளாகவும் காட்டிக் கொண்டன.
ஜெயாவின் காண்வென்ட் ஆங்கிலத் திமிர் ஊர் அறிந்த ஒன்று.  அப்படிபட்ட ஜெயா வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு குற்றப்பத்திரிகையைத் தமிழில் மொழி பெயர்த்துத் தர வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  சிறப்பு நீதிமன்றம் இம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
                              
குற்றப்பத்திரிகைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்ட பின், “”அதனைப் படிக்கத் தமக்கு கால அவகாசம் தர வேண்டும்; அதுவரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்” என ஜெயா கும்பல் அடுத்த மனுவைத் தாக்கல் செய்ய, அதன்படி அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது.  இக்கால அவகாசம் முடிந்த பின், “”குற்றப்பத்திரிகையில் பிழைகள் உள்ளன; அதைத் திருத்தம் செய்துதர வேண்டும்” என மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இம்மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, அத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, ஜெயா கும்பல்.   “”வழக்கு விசாரணை நடக்கும்பொழுது தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்” எனத் தீர்ப்பளித்து விசாரணையைத் தொடங்குமாறு உத்தரவிட்டது, கர்நாடகா உயர் நீதிமன்றம்.
இச்சமயத்தில் இவ்வழக்கை காலவரையறையின்றி இழுத்தடிக்கும் நோக்கத்தோடு ஜெயா கும்பல் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும், இலண்டன் அருகேயுள்ள தீவு ஒன்றில் உல்லாச விடுதி வாங்கிப் போட்ட வழக்கையும் ஒன்றாக இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய, அதனைச் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, இரண்டு வழக்குகளையும் இணைத்து உத்தரவிட்டது.  தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த இணைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  உச்ச நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு விதித்த இந்தத் தடையை நான்கு ஆண்டுகள் வரை சவ்வாக இழுத்து, அதன் மூலம் ஜெயா கும்பலுக்கு மனு போடும் வேலையைக் கணிசமாகக் குறைத்து வைத்தது.  எனினும், 2009இல் சொத்துக் குவிப்பு வழக்கும் இலண்டன் உல்லாச விடுதி வழக்கும் இணைக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.
இடைக்கால தடை நீக்கப்பட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியவுடனேயே, “”சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர உரிய அனுமதி பெறவில்லை” எனக் கூறி, வழக்கை அதன் தொடக்கப் புள்ளிக்கே இழுத்துச் செல்ல முயன்றது, ஜெயா கும்பல்.  இம்மனு தள்ளபடி செய்யப்பட்ட பின், “”தமக்கு அளிக்கப்பட்ட சம்மன் உத்தரவை மாற்ற வேண்டும்; சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; குற்றப்பத்திரிகை நகலின் 3 பிரதிகளைத் தர வேண்டும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலைத் தர வேண்டும்; மொழி பெயர்ப்பாளரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்” என உப்புசப்பில்லாத பல காரணங்களை முன்வைத்து 2010ஆம் ஆண்டில் மட்டும் 30 மனுக்களைச் சிறப்பு நீதிமன்றத்திலும், அதன் பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் மாற்றிமாற்றி, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் ஒருவர் பின் ஒருவராகத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது, ஜெயா கும்பல்.
2011ஆம் ஆண்டில் முதல் ஏழு மாதங்களுக்குள்ளாகவே, சாட்சியங்களிடம் நடத்தும் விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு 23 மனுக்கள் ஜெயா கும்பலால் தாக்கல் செய்யப்பட்டன.  குறிப்பாக, குற்றவாளிகளுள் ஒருவரான சுதாகரன், “”தனது வழக்குரைஞரின் தந்தை காலமாகிவிட்டதால் வழக்கு விசாரணையை மூன்று வாரத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும்” என விசித்திரமான கோரிக்கையோடு மனு தாக்கல் செய்தார்.  வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா, “”குற்றப்பத்திரிக்கையில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணையை ஆறு மாத காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்தார்.  இம்மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின், தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரினார், ஜெயா.
ஆடிக்காற்றில் குப்பை பறந்துபோய் கோபுரத்தில் ஒட்டிக் கொள்வதைப் போல, தமிழக மக்களால் மீண்டும் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட ஜெயா, இந்த வாய்ப்பை சொத்துக் குவிப்பு வழக்கை ஒழித்துக் கட்டும் முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.  குறிப்பாக, தமிழக அரசின் சார்பாக வழக்கை நடத்தி வந்த இலஞ்ச ஒழிப்புத் துறை, “”இவ்வழக்கின் சாட்சியங்கள் அனைத்தையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” எனக் கோரி, இவ்வழக்கின் அரசு வழக்குரைஞரான பி.வி.ஆச்சார்யாவுக்குத் தெரியாமலேயே சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  சிறப்பு நீதிமன்றத்தில் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசே வழக்குத் தொடுத்தது.  “”கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யாவைத் தவிர்த்து வேறுயாரும் இவ்வழக்கில் ஆஜராகக் கூடாது; தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை சாட்சியங்களிடம் மறு விசாரணை நடத்தக் கூடாது” என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இத்துணை தடைகளையும் தாண்டி சாட்சியங்களிடம் விசாரணை முடிந்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிப் பதில் அளிக்கும்படி சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை ஜெயா கும்பல் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  முதல் குற்றவாளியான ஜெயா, தான் தமிழக முதல்வராக இருப்பதையும் பாதுகாப்புக் காரணங்களையும்  காட்டித் தப்பித்துக் கொள்ள முயன்றார்.  “”கோயில் குளத்திற்கெல்லாம் போக முடிந்தவருக்கு நீதிமன்றத்துக்கு வர முடியாதோ?” என அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கேள்வி எழுப்பி, ஜெயாவின் தகிடுதத்தத்தை அம்பலப்படுத்தினார்.  சசிகலாவும், இளவரசியும், “”தாம் பெண் என்ற காரணத்தை” முன்வைத்துத் தப்பித்துக் கொள்ள முயன்றனர்.  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி பெண் என்ற காரணத்தைக் கூறி பிணை கோரியபொழுது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாதத்தை முன்வைத்து கனிமொழியைக் கடுமையாகக் கண்டித்த தமிழகப் பார்ப்பனக் கும்பல், இப்பொழுதோ வாய் மூடிக் கிடந்தது.
இந்தச் சொத்தை வாதங்களைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தவுடன், உச்ச நீதிமன்றத்தை அணுகினார், ஜெயா.  “”எனது கட்சிக்காரருக்குப் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன.  பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.  அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எழுத்துபூர்வமாகவோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ பதில் அளிக்கிறேன் எனச் சொல்வதில் என்ன தவறு?” எனத் தனது வழக்குரைஞர் மூலம் திமிராக வாதம் புரிந்தார், ஜெயா.  இதற்கு, “”குற்றவாளிகள் சொல்லும் கதைகளையெல்லாம் கேட்க வேண்டுமென்ற அவசியம் இல்லை” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளித்தாலும், “”அவருக்கு வசதியான தேதியில் ஆஜராகும்படி” ஜெயாவிற்கு சலுகை அளித்தனர்.  டான்சி நில மோசடி வழக்கில் ஜெயாவைத் தண்டிக்காமல், அவர் தனது மனசாட்சிபடி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றத்திடம் இதற்கு மேல் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.
இந்த அடிப்படையில்தான் ஜெயாவிற்கு வசதியான அக்டோபர் 20 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு நீதிபதியிடம் பதில் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.  இதனையும் முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தனக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைக் காட்டி, சிறப்பு நீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராவதைத் தள்ளிப் போடக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார், ஜெயா.  உச்ச நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்த பிறகு, வேறு வழியின்றி, அக்.20 மற்றும் 21 தேதிகளில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, பெரும்பாலான கேள்விகளுக்கு, “”தெரியாது”, “”நினைவில் இல்லை” என்றே பதில் அளித்திருக்கிறார், ஜெயா.  நவம்பர் 8 அன்று விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென ஜெயா விற்குச் சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டவுடன், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
இந்த வழக்கில் ஜெயா தண்டிக்கப்படுவாரா, மாட்டாரா என்பதைவிடக் கவனிக்கத்தக்க முக்கிய விசயம் வேறொன்று உள்ளது.  ஜெயா பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்பதை இவ்வழக்கு நெடுகிலும் காண முடியும்.  இப்படிபட்ட நபரை, தமிழகத்தின் சட்டம்  ஒழுங்கைக் காக்க வந்த அவதாரமாக தமிழக மக்களின் முன் தமிழகப் பார்ப்பனக் கும்பல் நிறுத்தியிருப்பது எத்துணை பெரிய மோசடி!
                  
ஜெயாவின் இந்தக் கல்யாண குணங்கள் தெரிந்திருந்தும், உச்ச நீதிமன்றம்கூட, “”உங்கள் கட்சிக்காரர் வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்” என்பதற்கு மேல் இந்த வழக்கு விசாரணையின்பொழுது அவரை வேறுவிதமாகக் கடிந்து கொண்டதில்லை.  ஜெயா திருந்திவிட்டார், மாறிவிட்டாரென்று கூப்பாடு போட்ட பத்திரிக்கைகள் அனைத்தும், அவரது இந்த இழுத்தடிப்புப் பற்றி மட்டுமல்ல, அவர் சொத்து குவித்த விதம் குறித்தும் வாய்மூடியே கிடந்தன.  குறிப்பாக, ஜெயாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட சுப்பிரமணிய சுவாமியோ சட்டமன்றத் தேர்தலில் ஜெயாவோடு கூட்டணி கட்டிக் கொள்ள போயசு பங்களா வாசலில் தவம் கிடந்தார்.  மற்ற செல்வாக்குகளைவிட, ஜெயாவின் சாதி அரசியல் செல்வாக்குதான் அவருக்குக் கேடயமாக இருந்து வருகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசாவிற்கும், கனிமொழிக்கும் கிடைக்க வாய்ப்பேயில்லாத செல்வாக்கல்லவா, இது.
                                                                                                                   நன்றி:புதிய ஜனநாயகம்.

செவ்வாய், 8 நவம்பர், 2011

தீரும் காகிதங்களும்,தீரா பிரச்னையும்,

 

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும். பாக்.நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கும் இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 இவர் எதிர்கட்சித்தலைவராக இருக்கும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மீனவர்கள் பிரச்னையில் கடிதமாக எழுதுகிறார்.செயல் பட வில்லை என குற்றம் சாட்டினார்.இப்போது காகிதத்தையும்,எழுது கோலையும் இவர் எடுத்துக்கொண்டு கடிதம் மேல்,கடிதம் எழுதுகிறாரே?
இவரும் கருணாநிதி பாதையிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டாரோ?இவர் கடிதத்தை மன்மோகன் படித்தவுடன்
மீனவர்கள் பிரச்னை தீர்ந்து விடுமா?
நல்லதே நடக்கட்டும்.ஆனால் மறு தேர்தலில் கருணாநிதி வந்து அதன் பின் இவர் வந்தாலும் மீனவர் பிரச்னை இருக்கத்தான் செய்யும்.அதற்கு பல காரணங்கள் உள்ளன.
மீனவர்கள் பிரச்னை ஒரு தீரா பிரச்னை.நம் மீனவர்களிடையும் சில குறைபாடுகள் உள்ளன.எல்லை தாண்டி போவது.இலங்கை மீனவர் பகுதிகளில் மீன் பிடிப்பது.அவைகளை நிறுத்தும் வரை இப்பிரச்னைக்கு கடிதம் எழுதி காகிதங்கள்தான் தீரப்போகிறது.மீனவர் பிரச்னை தீரப்போவதாகத்தெரிய வில்லை.

 

_________________________________________________________________________________________

- கமல் ஏன் உலக நாயகன்? 

                     

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது. • இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார். • இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. • கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார். • கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது. • கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது. • உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். • கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். • 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன். • இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன். • 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன். • கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது. •
                     
The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட) • சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. • டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ). • மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது. • கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. •
                      
ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்) • கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது. • அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார். • இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27. • டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது. •
             
உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார். • இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான். • தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான். • ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்" • கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான். • ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது. • சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன். • கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. • கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல். • தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.

அழிவுகளை ஏற்படுத்திய தன்னார்வ நிறுவனங்களின் பணம் : நோர்வே ஒப்புதல் வாக்குமூலம் - Tamil News Articles::இனியொரு:: Website

நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட இலங்கையில் நோர்வே அரசின் பங்கு குறித்த  ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான  அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் விடுதலைப் போராட்டஙகளைச் சீர்குலைப்பதில் நோர்வே பிரதான பங்கு வகித்திருக்கிறது. தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெருந்தொகைப் பணம் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்கும் அழிவுகளை ஏற்படுத்துவதிலும் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. அண்மையில் லிபியாவை ஆக்கிரமிப்பதிலும் இத் தன்னார்வ நிறுவனங்களின் பங்கு பிரதானமானதாக அமைந்திருந்தது. நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னார்வ நிறுவனனங்கள் சீரழிவிற்கு எவ்வாறு பயன்பட்டன என்பது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது. 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நோர்வே 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சமாதான முனைப்புக்கள் குறித்து நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், நோர்வே மற்றும் இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி வழங்கப்பட்ட பெரும்பான்மையான இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 60 மில்லியன் நோர்வே நோக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மிலிந்த மொரகொட, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நோர்வே சமாதான முனைப்புக்களில் முக்கிய வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மொரகொட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளி வளத் திணைக்களத்திற்கு 300000 மில்லியன் நோக்குகளும், இலங்கை அரசாங்கத்திற்கு 70000 மில்லியன் நோக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 6 நவம்பர், 2011

இன்று கமல் ஹாசன் பிறந்த நாள்.

 உலகநாயகன் ”கமல்ஹாசன்” பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவரின் சாதனை விளக்கக் காணொளி காணுங்கள்.

    Kamal Haasan 07-11-2011

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் முதல் எண்ணைக்கிணறு[ஈரான்]1908 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

__________________________________________________________________________________________

கூகுள் அடுத்ததாக கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இறங்கப்போகிறதாம்.இதற்காக ஏடி&டி நிறுவனத்தை இணைத்துக்கொண்டுள்ளது.

                           .

இக்கேபிள் டி.வி.இய்க்கத்திறகு டைம் வார்னர்,வால்ட் டிஸ்னி நிறுவனங்களை கூட்டாளியாக்கியுள்ளது.இதற்காக ”டிரிபிள் பிளே” எனப்படும் பாக்கேஜ்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இது தொலைக்காட்சி,தொலை பேசி,காணொளி ஆகிய மூன்றும் அடங்கியது.

_________________________________________________________________________________________

அமெரிக்காவில் பரவும் கைப்பற்றுவோம் போராட்டம் இப்போது அட்லாண்டாவில் நடக்கிறது.அங்கு கைது செய்யப்படும் பெண்கள்.


வேண்டப்படாதவர்கள்.



                                   
”இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கவில்லை’ பாகிஸ்தானின் வர்த்தகத் துறை அமைச்சகம் மட்டுமே இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக இந்த நிலை எடுக்குமாறு கருத்தினை முன்வைத்தது . இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடந்து வரும் நிலையில் புதுதில்லியுடனான வர்த்தக நோக்கில் பாகிஸ்தானின் வர்த்தகத் துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது” என்றார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி.
                                  

பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் பிர்தெüஸ் அவான் தெரிவித்து மூன்று நாள்களுக்குப் பிறகு கிலானி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்..
1996-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா அளித்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாகபாகிஸ்தான் இத்தகைய அறிவி வெளியிடாமல் இருந்தது. இதற்கு அரசியல் ரீதியாகவும், அரசிலும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. காஷ்மீர் விவகாரத்தை வைத்து பாகிஸ்தான் அரசியல் நடைபெறுவதால் இதற்குஎதிர்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுமே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்பிரதமர் கிலானி”,இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை வழங்கவில்லை.  இப்போதைக்கு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிப்பது குறித்த பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கை தொடர்பாக சுயமாக முடிவெடுத்துக்  கொள்ள வர்த்தக அமைச்சகத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அது நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. பிற நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம். இது தொடர்பாக உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும்” என்று கிலானி குறிப்பிட்டார்.
முன்னதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அவான் வெளியிட்டவேண்டப்பட்ட இந்தியா அறிவிப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன்  வரவேற்பு தெரிவித்தார்.” இதுபோன்று பல ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தான் அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இப்போதைக்கு “வேண்டப்பட்ட நாடு” அறிவிப்பு பாகிஸ்தான் வெளியிடாததால் இந்தியாவில் விலை வாசிகள் பயங்கரமாக ஏறும் நிலை உள்ளது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு அதுதான் காரணம்.?பாகிஸ்தான் இந்தியாவை வேண்டப்பட்ட நாடு” என்று அறிவிப்பை விட்டுவிட்டு எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்யாமல் விட்டு விடுமா?
வேண்டப்பட்ட நாடு என்ற உரிமையை தருவதால் என்ன பயன்? வர்த்தகம் நடத்த சில சலுகைகள் கிடைக்கும்.அதனால் நாடுக்கு என்ன நன்மை.இங்குள்ள அம்பானிகள் தங்கள் வியாபரத்தையும்,பணக்குவியலையும் பெருக்கிக்கொள்வாரகள். மக்களுக்கு-இந்திய வளர்ச்சிக்கு ஒரு பயனும் இல்லை.
ஏற்கனவே இந்தியா வேண்டப்பட்ட நாடு என்பதால்தான் இங்கு ஆங்காங்கு தனது குண்டை தீவிர வாதிகளைத்தூண்டிவிட்டு வைக்கிறதே.அந்த உரிமை நமக்கு போதாதா?
____________________________________________________________________________________________________________வெடிக்கக்_கூடா[ங்]குளம்
                         
கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்த மாதம் மின் உற்பத்தியை துவங்க தயாராகி விட்டது. ஆனால் இப்போதுஅணுமின் நிலையத்தை மூடக்கோரி, ஒரு தரப்பினர் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இதில், பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். அணு எதிர்ப்பாளர்கள் கூறுமணுசக்தி தொடர்பானசெய்திகளை கேட்டு, பெண்களும், கிராம மக்களும் பயமடைந்துள்ளனர்.இதில், பெரும்பாலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிலர், திட்டமிட்டு போராடுவதாக கூறப்படுகிறது.
உதயக்குமார் என்பவர் தலைமையில் போராட்டம் நடக்கிறது. இதில், ஜெயக்குமார், சுசிலன் ஆகிய இரண்டு பாதிரியார்களும், அவர்களை சார்ந்தவர்களும் மும்முரமாக உள்ளனர்.இரண்டு மாதங்களுக்கு மேலாக, மிகுந்த பொருட்செலவுடன் போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்ட பகுதிக்கு வருவோர், வாகனங்களில் வரவும், அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளுக்கும் அதிக பணம் செலவாகிறது. போராட்டக்காரர்களின் அச்சம் போக்க, மத்திய அரசு 15 பேர் குழுவையும், மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., மற்றும் போராட்டக்காரர்கள் அடங்கிய ஆறு பேர் கமிட்டியை மாநில அரசும் அமைத்துள்ளது. அணு உலையை திறக்க கோரி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில், அனைத்து சமுதாய தலைவர்கள் அடங்கிய 15 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உண்ணாவிரதம், விழிப்புணர்வு பிரசாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
                              
:ஆனால்அணு எதிர்ப்பு போராட்ட பின்னணியில், வெளிநாட்டு, மேற்கத்திய நாட்டு சக்திகள் உள்ளதாகவே, இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் பானர்ஜிகூறியுள்ளார்.
அணு எதிர்ப்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஏன் போராட்டம் நடக்கிறது என்பதை அறியும் முயற்சி நடக்கிறது. ஒரு தேசிய கட்சியால் கூட ஒரு போராட்டத்தை, ஒரு வாரம் வரை மட்டுமே நடத்த முடியும். ஆனால், ஒரு சிறு குழு, இரண்டு மாதங்களுக்கு மேல், மக்களை திரட்டி வந்து, தொடர் போராட்டம் நடத்துவது, எளிதல்ல. இடிந்தகரையில் முகாமிட்டுள்ள குழு, இதை செய்து வருகிறது.தற்போது, சில அரசியல் தலைவர்கள், அவ்வப்போது ஏதாவது பிரச்னையை கிளப்பும் தலைவர்கள் சிலர், அணு எதிர்ப்பு குழுக்களுடன் கலந்துள்ளனர். இது மட்டுமின்றி, சில கடல் வாணிப குழுக்களும், போராட்ட பின்னணியில் உதவி செய்வதாக அணுசக்திக்கழகமும்,மத்திய அரசும் எண்ணுகிறது.
                                               
கூடங்குளம் அணு உலை இருக்கும் பகுதி, கடலை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், 24 மணி நேரமும் ராணுவம் சுற்றிக் கொண்டிருக்கும். இனிமேல் அங்கு சட்டவிரோத கடத்தல்களுக்கு, இடம் கிடைக்காது. இலங்கையை மையமாக வைத்து, வாணிபம் செய்யும் குழுக்களும், அந்தமான், லட்சத்தீவுகள், மொரீஷியஸ் தீவுகளை மையமாக கொண்ட சட்ட விரோத குழுக்களும், கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பாதுகாப்பால்,பாதிக்கப்படுவார்கள்.இந்த போராட்டம், நாங்கள் எதிர்பாராத மக்கள் போராட்டமாக இருந்தாலும், பின்னணியில் பல வகை சக்திகள் பயன்பெறுகின்றன. மக்கள் பாதுகாப்பு மட்டும் தான், போராட்டத்தின் லட்சியம். ஆனால், அதன் பின்னணியில் பல லட்சியங்கள், ப"ல கரங்கள்', பல சக்திகள் பயனாளியாகின்றன.
இவை எல்லாம் மத்திய அரசுக்கு இதுவரை கிடைத்த தகவல்களாகத்தெரிகிறது.  
 அணு எதிர்ப்பு போராட்டம் இந்திய மக்களின் பாதுகாப்புக்கான பிரச்னை என்பதை விட அரச்சியல், சில மேற்கத்திய நாடுகள் தூண்டிவிடும் பிரச்னையாக மாறியுள்ளது.அதன் பாதுகாப்பை உறுதி செய்வது என்பதை விட அணுமின் நிலையத்தையே மூடிவிட வைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் உள்ளதாகத் தெளிவாக தெரிகிறது.மத்திய அரசு அமைக்கும் குழுவை புறக்கணிக்கும் இவர்கள் தாங்களாகவே குழு அமைப்பதாகக் கூறுவது அக்குழுவின் முடிவு எப்படிபட்ட அறிக்கையை தரும் ,அது மூடிவிட வேண்டும் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இருக்காதுஎன்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
இப்போதே சில மீனவர்கள் அல்லாத சாதியினர் இதை சாதிய-சமுக பிரச்சினையாக்குவதைக் காணும் போது கவலையாக இருக்கிறது.
                    
கூடங்குளத்தை சுற்றியுள்ள 27 கிராமத்தில் 2கிராமத்தினர்[கத்தோலிக்க மதத்தினர்}மட்டும் போராடுவதுடன் அவர்களுக்கு துணையாக குமரி,கேரளாவில் இருந்து ஆட்கள் வாகனங்களில் அழைத்து வந்து போராட்டத்தில் கலந்து கொள்வதும்,கவனிக்கப்பட வேண்டிய விடயம்.அவர்களுக்கு பாதுகாப்பதரும் தமிழகக் காவல் துறையினர் அணுமின் நிலையத்தில் பனிக்கு செல்பவர்களை பாதுகாப்பில்லை பணிக்கு செல்லாதீர்கள் என மிரட்டி திருப்பி அனுப்புவதும் அங்கு நடக்கிறது.
இந்தஅணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்து பக்கத்துக் கிராமத்தைசேர்ந்த நாடார் ,தேவர் சமுகத்தினர் உண்ணாவிரதம்,ஆர்பாட்டம்,துண்டறிக்கைகள் என அணுமின் நிலையத்திஅற்கு ஆதரவாக இறங்கியுள்ளது கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.தமிழக அரசும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசுவதை நிறுத்தி விட்டு நடுநிலையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.ஒரு சாதிய மோதலை தமிழகத்தில் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
   ஸ்பெய்ன் கடலுக்கடியில் எரிமலை[05-11-11] வெடித்ததினால் ஏற்பட்ட கடல்அலைகள் . 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...