bloggiri.com - Indian Blogs Aggregator
மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜூன், 2013

"மோடி"-"மந்திரம் "?

"குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது."
ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.
"இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?"
மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
 அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?
மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும்.
 15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.
டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.
அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.
உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன.
வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.
எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த "ஆப்கோ வேர்ல்ட்வைட்" என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம்.
 துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது.
 ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.
கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது.
அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது.
அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.
அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.
அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.
துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான். 
மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.
ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.
மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.
இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.
அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.
ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது.
ஆனால் "மோடியின் சமீபத்திய இமாலய ஜாலம் "அப்பட்டமான  கலப்படமற்ற பொய்.

நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 17 ஜூன், 2013

நரேந்திரமோடி[குஜராத்] உண்மை நிலை:


இந்தியாவின்  பெரு ஊடகங்களால், உச்சி முகர்ந்து கொஞ்சப்படும் நரேந்திர மோடியை, பாஜக தனது ஒரே நம்பிக்கையாக கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது. 

நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா எங்கேயோ போய்விடும் என்று கூ று கின்றனர் .அவரின் நிர்வாகத் திறமை எப்படி உள்ளது?
குஜராத் அவரின் ஆட்சியில் என்ன நிலமையில் உள்ளது.?
கொஞ்சம் பார்ப்போம்!
அவரால் இந்தியாவுக்கு இழப்புத்தான் ஏற்படும் என்கிறார்கள் அறிவு ஜீவிகள். அவர் ஒரு மத வெறி, பாசிசவாதியாக இருப்பது தவிர வேறென்ன காரணங்கள் உள்ளன?
.
- க.ஆனந்தன்

பொதுவாக வலதுசாரி சார்புடைய இந்திய ஊடகங்கள் சமீப காலமாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரம் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒளிர்கிறது என்றும் குஜராத் வளர்ச்சி மாதிரியை இந்தியாவெங்கும் நீட்டிக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மோடியும் அதனை செய்கிறார். இந்தியாவின் திட்டமிட்ட வளர்ச்சியை அவர் பிக்கி கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து தனது வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தும் அவர் அதன் பெயரில் உள்ள மகாத்மா என்பதை நீக்க வேண்டும் என்ற கோரி தனது இந்துத்வா வெறித் தன்மையை வெளிப்படுத்துகிறார். உண்மையில் குஜராத் ஒளிர்கிறதா? புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்ப்போம்.

விவசாயிகளுக்கு எதிரானவர்:
தனது அரசின் சாதனையாக கடந்த மிகக் குறைந்த காலத்தில் விவசாயக் கால்வாய் வெட்டியதாக மாரதட்டுகிறார் மோடி. உண்மையில் ஊடகங்கள் மறைத்த மிகப் பெரிய கொடூரம் அங்கு 2003- முதல் 2007 வரை சவுராஷ்ட்ரா பகுதியில் 489 விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டனர் என்ற விவரத்தை மறைத்ததுதான். இந்த புள்ளி விவரங்களை அரசு மறைத்த வைத்திருந்தது. ஊடகங்களும் அமைதி காத்தன. இந்நிலையில் மிகவும் சிரமப்பட்டு தகவலறியும் சட்டத்தின் துணை கொண்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அது அசாதாரண இறப்பாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. 
2007-லிருந்து இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்தது இந்த இறப்புகளுக்கு காரணமாகும். மிகவும் ஔ மயமான குஜராத்தில் பல விவசாயிகள் தாங்கள் வாங்கிய 50,000-70,000 கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது. இங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசு அதிகாரிகளோ அல்லது ஆளும் அரசியல் பிரமுகரகளோ எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. இந்தப் போக்கை எதிரத்து பா.ஜ.க.வின் கன்னுபாய் கன்சாரியா கண்டனக் குரலெழுப்ப அவரை மோடி கட்சியை விட்டே துரத்தி அடித்தார். கிராமப்புறத்தில் மொத்தம் 10 மணி நேரம் கூட மின்சாரம் கிடையாது. அதிலும் 6 மணி நேரம் இரவு நேரத்தில்தான் வழங்கப்படும். 26.25 லட்சம் ஹெக்டேர் நிலம் பருத்தி விவசாயத்தில் உள்ளது. அரசின் கவனமின்மை காரணமாக உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வருகிறது.
பருத்தி உற்பத்தி
ஆண்டு
உற்பத்தி (ஹெக்டேருக்கு)
2007-08
775 கி.கி
2008-09
650 கி.கி
2009-10
635 கி.கி
2011-12
611 கி.கி
ஆதாராம்: காட்டன் அட்வைசரி போரடு
குஜராத் அரசு மோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தின் வருவாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதன் விளைவாக விவசாயம் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆண்டு தோறும் 12 மில்லியன் பேல் பஞ்சு உற்பத்தி செய்யும் குஜராத் இந்த ஆண்டு வெறும் 7 மில்லியன் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. விவசாய நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி. அன்னிய மூலதனம்:
தொடர்ந்து ஊடகங்கள் ஊதிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சாரம் நமது நாட்டிலேயே அன்னிய முதலீடும் மூலதனமும் குவியும் முதல் மாநிலம் குஜராத் என்பதாகும். ஆனால் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை உள்ள கிட்டதட்ட 12 வருட காலத்திற்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது. குஜராத் முதல் இடத்திலும் இல்லை முதல் மூன்று இடத்திலும் இல்லை என்பதை கீழே கண்ட அட்டவணை அம்பலப்படுத்தும். மகாராஷ்ட்ராதான் இந்தியாவில்  முதல் மாநிலமாகும். தமிழ்நாடு கூட குஜராத்தை விட முன்னனியில் உள்ளது.

அன்னிய நேரடி மூலதனம் ஏப் 2000- ஜூன் 2012 வரை (ரூ கோடியில்)
மகராஷ்ட்ரா
254624
டெல்லி
155722
கர்னாடகா
45021
தமிழ்நாடு
40297
குஜராத்
36913
                       
வைப்பரண்ட் குஜராத்:
ரஜினி பாணியில் சொன்னால் குஜராத் என்றாலே சும்மா அதிருதில்ல என்ற பெயரில் ஆண்டு தோறும் மிகவும் படோடோபமாக விளம்பரப்படுத்தப்படும் விழா குஜராத்தில் அந்த விழாவின் மூலமாக அன்னிய மூலதனம் திரட்டப்படுவதாக தம்பட்டம் அடிக்கிறது. இதிலும் எவ்வுளவு பொய் புரட்டு என்பது புள்ளி விவரத்தை பார்த்தலே தெரியும். குஜராத் அரசின் சமூக பொருளாதார அறிக்கை 2011 வெளியிடும் புள்ளி விவரமே மிகவும் சுவாரசியத் தகவல்களை தருகிறது. 2011-ல் முதலீடு செய்யப்படும் தொகை என்று அறிவிக்கப்பட்டது 20 லட்சம் கோடி ருபாய். ஆனால் உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகை வெறும் ரூ.29,813 கோடி மட்டுமே. அந்த ஆண்டிலேயே கையெழுத்தான மொத்த 8,300 புரிதல் ஒப்பந்தங்களில் வெறும் 250 மட்டுமே அமலாகியது. குஜராத் வளரச்சி மாடல்  தொழிற்சாலை விரிவாக்கத்தின் மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி என்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இந்த அணுகுமுறை வெற்றிபெற வேண்டுமானால் அரசு தனியார் மூலதனத்தை பெறுவது அவசியமாகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வைப்பரண்ட் குஜராத் மாநாடுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட முதலீடும் உண்மையில் செய்யப்பட்ட முதலீட்டையும் பார்த்தாலே முதலீட்டாளர்கள் தங்களால் நிறைவேற்ற முடியும் முதலீடுகளை விட அதிகமாக வாக்குறுதி அளிப்பது தெரியும். முதலீடுகளை அதிகமாக சொல்ல வைத்து, அதற்காக எக்கச்சக்க சலுகைகளைக் கொடுக்கிறது அந்த அரசு. மொத்தத்தில் நமக்கும் பெப்பே, நம் பணத்துக்கும் பெப்பே காட்டுகின்றன அந்த கம்பெனிகள்.
வைப்பரண்ட் குஜராத் சம்மேளன் மூலம் திரட்டப்பட்ட நிதி (ரூ கோடியில்)
ஆண்டு
வாக்குறுதி
நிறைவேற்றப்பட்டது
2003
66068
37746
2005
106160
37939
2007
465309
107897
2009
1239562
104590
2011
2083049
29813
தனிநபர் வருமானம்:
குஜராத்தில் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அங்கு ஜி.டி.பி. வளர்ச்சி என்பது மிகவும் அதிகம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆகவே பொது மக்கள் அங்கு தனிநபர் வருமானம் மிகவும் என்று நினைக்கத் தூண்டப்படுகின்றனர். ஆனால் உண்மை இதற்கு மாறாக உள்ளது. தனிநபர் வருமானத்தில் குஜராத் முதல் 5 இடங்களில் கூட கிடையாது. டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. இது மக்களின் உண்மையான வருமானத்தை கணக்கிட சரியான அளவில்லை என இடதுசாரிகளின் கருத்து முற்றிலும் உண்மை என்றாலும் முதலாளித்துவக் கணக்குப்படியே கூட குஜராத் கதை வேறாகத்தான் உள்ளது.  
தனிநபர் வருமானம் 2010-11   (ரூபாயில் வருடத்திற்கு)
டெல்லி
108876
மகாராஷ்ட்ரா
62729
கோவா
102844
ஹரியானா
59221
சண்டிகர்
99487
அந்தமான்
54765
பாண்டி
79333
குஜராத்
52708
ஆதாரம்: திட்ட கமிஷன்

தொழிலாளர் ஊதியத்தில் நிலைமை:
தனிநபர் வருமானம் ஒரு புறம் இருந்தாலும் உண்மையில் அங்கு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை ஒரு அளவு கோளாக எடுத்துப் பார்த்தாலும் மிகவும் மோசமாக உள்ளது. குஜராத் முழுவதும் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் நிரந்தரமற்ற தினக் கூலிகளை வைத்தே தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கு தொழிலாளர்கள் ஊதியம் பணி நிலைமைகள் போன்றவற்றிற்கு சங்கம் அமைத்து கோரிக்கை வைப்பது கிட்டதட்ட முடியாது என்பதே நிலைமை. அதற்கு முக்கிய காரணம் பணிகளில் பயன்படுத்தப்படும் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் அங்கு ஆண்டுக் கணக்காக பதலிகளாக தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். இந்நிலையில் மிக அதிகமான ஜி.டி.பி. உள்ள மாநிலத்தில் தொழிலாளர்கள் கூலி மிகக் குறைவாகும். அது நகர்ப்புற தொழிலாளர்கள் கூலி நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகம். 
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசீய மாதிரி சர்வேயின் புள்ளி விவரப்படி அங்கு நாளொன்றுக்கு கூலி ரூ.218/- குஜராத்திலோ நகரப்புறத்தில் ஒரு நாள் கூலி வெறும் ரூ.106/- தான். கிராமப்புறத்திலும் ஒரு நாள் கூலி இந்தியாவிலேயே அதிகம் பஞ்சாப்பில் தான். இங்கு ஒரு நாள் கூலி ரூ.152/- குஜராத் நாட்டில் 12 வது இடத்தில் உள்ளது அங்கு ஒரு நாள் கூலி (கிராமப்புறத்தில்) வெறும் ரூ.83/- ஆகும். மிக அதிக ஜி.டி.பி. மிகக் குறைந்த ஒரு நாள் ஊதியம் என்பது சுரண்டலின் அளவைக் காட்டுகிறது.
வேலைவாய்ப்பு விகிதம்
தொழில்துறையில் மிகவும் அதிகமான வளர்ச்சி அடைந்தால் அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் பெருக வேண்டுமே. ஆனால் வேலை வாய்ப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த வளர்ச்சியும் இன்றி குஜராத் இருந்து வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள வளர்ச்சி நிலங்களை விவசாயம் செய்யாமல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் தற்போது நிதி இருந்தாலும் மேலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இது இட்டு செல்கிறது. வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடங்களை தங்கள் வீட்டுப் பெண்களின் பெயரில் பதிவு செய்தால் பத்திரப் பதிவு கட்டணமும் கிடையாது. மோடியின் வர்க்க அரசியல் செயல்படும் விதம் இதுதான். 

குழந்தைகள் ஊட்டச்சத்து  மிக மோசமான மாநிலங்களில் ஒன்று
தொழிலாளர்களின் குறைவான ஊதியம் மற்றும் மிக மோசமான வாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக மால்நியுட்ரிஷன் என அழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு தொழிலாளர்களிடமும் அவர்தம் குழந்தைகளிடமும் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைகள் 2012 புள்ளவிவர மதிப்பீடு என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.  
  1.            இந்த அறிக்கையின் படி குஜராத்தில் 40 முதல் 50 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது. இது ஒன்றே குஜராத் வளரச்சி என்ற மாயையை வெடித்து சிதற வைக்க போதுமானது. இவ்வாறான மிகக் குறைவான எடையுள்ள குழந்தைகள் மிக அதிகமாக உள்ள இதர மாநிலங்கள் மேகாலாயா, சட்டீஸ்கர், உ.பி. மற்றும் ஒடிசா. ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கை 2011 குஜராத்தில் கிட்டதட்ட பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கிறது. எடை குறைவான குழந்தைகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவான குழந்தைகள் மிகமிகக் குறைவாக உள்ள மாநிலம் மேகாலயா.

2.            இங்கு 19.9 சதவீதம் குழந்தைகள் எடைகுறைவாக உள்ளது. 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடைகுறைவாக உள்ள மாநிலங்கள்: ம.பி.(60), ஜார்க்கண்ட்(56) மற்றும் பீகார் (55.9)

3.            40 சதவீதத்திற்கு மேல் 50 சதவீதத்திற்குள் உள்ள மாநிலங்கள்: குஜராத் மேகாலயா சட்டீஸ்கர உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா. (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் -மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)

குழந்தை இறப்பு விகிதம்:
குழந்தை இறப்பு விகிதம் குஜராத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் விகிதத்தின் அடிப்படையிலான பட்டியலில் குஜராத் 11-வது இடத்தில் தான் உள்ளது. அதாவது 1,000 குழந்தைகள் பிறப்பிற்கு 44 குழந்தைகள் இறக்கின்றன. கிராமப்புறத்தில் மிகக் குறைவான மருத்துவ வசதிகள் உள்ள நிலையில் பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்டிருப்பதனால் இவர்களின் குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு யுனிசெஃப் நிறுவனம் மாநில வாரியாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதல் குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இரண்டில் ஒன்று (ஐம்பது சதவீதம்) ஊட்ட சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கில் மூன்று குழந்தைகள் இரத்த சோகையால் பீடிக்கப்பட்டள்ளன.  குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதம் கடந்த பத்தாண்டில் மிகவும் குறைவாகவே குறைந்துள்ளது... குஜராத்தில் மூன்றிலொரு தாய்மார்கள் மிக மிக குறைவான ஊட்டசத்துடன் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறது.    
குழந்தை இறப்பு விகிதம் (ஆயிரம் குழந்தைப் பிறப்பிற்கு) 2010
மத்திய பிரதேசம்
62
மேகலயா
55
உத்திரபிரதேசம்
61
சட்டீஸ்கர்
51
அஸ்ஸாம்
58
பீகார்
48
ராஜஸ்தான்
55
ஆந்திரா
46
மகராஷ்ட்ரா
55
ஹரியானா
48
குஜராத்
44
ஆதாரம்: (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் - மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)
 
குழந்தைகள் கல்வி:
ஆர்.எஸ்.எஸ். தனது நாசகார மதவெறிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் கேந்திரமான துறை கல்வித் துறையாகும். இருப்பினும் இங்கும் பாசிச மோடியின் கார்ப்பரேட் கலாச்சாரமே மேலோங்கி உள்ளது. உயர் கல்வியில் அன்னியப் பல்கலைக் கழகங்களோடு பங்குதாரர்களாக செயல்பட வேண்டும் என்று மோடி தனது அரசின் கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளார். பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும்  நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (8-வது இடம்) கேரளா முதலிடம் 11.33 ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதா யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அரசு தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தில் பயணிப்பதுதான்.
பள்ளிக் கல்வியில் தொடரும் ஆண்டுகள்
1
கேரளா
11.33
10
ஆந்திரா
9.66
2
ஹிமாச்சல் பிரதேசம்
11.05
11
பீகார்
9.58
3
தமிழ்நாடு
10.57
12
அஸ்ஸாம்
9.54
4
உத்தரகாண்ட்
10.23
13
சட்டீஸ்கர்
9.31
5
மகராஷ்ட்ரா
9.86
14
ராஜஸ்தான்
9.19
6
பஞ்சாப்
9.80
15
உத்திரபிரதேசம்
9.19
7
ஜார்கண்ட்
9.68
16
மத்திய பிரதேசம்
8.95
8
ஹரியானா
9.68
17
மே.வங்கம்
8.87
9
கர்னாடகா
9.75
18
குஜராத்
8.79
ஆதாரம் : யு.என்.டி.பி.

வறுமை ஒழிப்பில் ஒடிசாவைவிட பின்தங்கிய மாநிலம்
தேசீய மாதிரி கணக்கெடுப்பு 2004 முதல் 2010 ஆண்டு வரைக்கான காலக் கட்டத்தில் ஒடிசா மாநிலமே 20.2 சதவீதத்துடன் வறுமைக் குறைப்பு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தோ 8.6 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான ஜி.டி.பி வளரச்சியைக் கொண்டுள்ள மாநிலமாகும். கரிப் கல்யாண் மேளா என்பன போன்று மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில்தான் மிகவும் அதிகமாக நடைபெற்றன என்றாலும் உண்மையில் வறுமை ஒழிப்பிற்கான கறாரான திட்டமிடல் ஏதுமில்லை. 
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையில் 2004-க்கும் 2010-க்கும் இடையே வீழ்ச்சி (சதவீதத்தில்)
மாநிலம்
சதவீதம்
மாகாராஷ்ட்ரா
13.7
தமிழ்நாடு
12.3
கர்னாடகா
9.7
ராஜஸ்தான்  
9.6
குஜராத்         
8.6
ஆந்திரா
8.5
ஆதாரம்: தேசீய மாதிரி கணக்கெடுப்பு இருப்பிடம்

குடிநீர் மற்றும் சுகாதாரம்:
குஜராத்தில் இருப்பிடம் உணவு துணி ஆகியவற்றின் விலை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மிகவும் அதிகமாக உள்ளது. அத்தியாவசியப் தேவைகளுக்காக செலவுகள் நாட்டிலேயே குஜராத் 8 வது இடத்தில் உள்ளது. குஜராத்தின் கிராமப்புறத்தில் 16.7 வீடுகள் பொது குழாய்களையே பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வசதி இல்லாத கிராமம் மிக அதிகமாக உள்ளது. அதே போன்று கிராமப்புறத்தில் 67 சதவீதம் பேர்களும் நகர்ப்புறத்தில் 69 சதவீதம் பேர்களும் பொது இடங்களையே கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீர் ஆதாரங்கள் மிகவும் மோசமான பாதிப்பிற்குள்ளாகின்றன. 
மாசுக்கட்டுப்பாடு:
குஜராத்தில் ஒரு தொழில் செய்பவருக்கு அளிக்கப்படும் முழு சுதந்திரமே அவர் நிலம் நீர் காற்று என எதை வேண்டுமானாலும் தான் விரும்புகிறவரை மாசுபடுத்தலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது (புத்தகத்தில் இருந்தாலும் மோடியின் மாநிலத்தில் அவை எள்ளவும் பயன்படுத்தப்பட மாட்டாது). சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் ஆலங் துறைமுகத்தில் பிரான்சு தேசத்தின் விமானந்தாங்கி கப்பல் கிளமன்சு உடைப்பதற்காக வந்ததே ஞாபகம் உள்ளதா? அதனை தடுத்த நிறுத்த சமூக ஆர்வலர்கள்தான் முயன்றார்களே தவிர, கடைசி வரை குஜராத் அரசு அந்தக் கப்பலை உடைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. பொதுவாக நிலம், நீர், காற்று ஆகியவை எந்தளவுக்கு மாசுபட்டுள்ளது என்பதை அளக்க சி.இ.பி.ஐ (Comprehensive Environmental Pollution Index) பயன்படுத்தப்படுகிறது. இதில் 70 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அந்தப் பகுதி மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாகும். இதன் அர்த்தம் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுவை அந்த நிலம் தானாக சரிசெய்யும் அளவைத் தாண்டிவிட்டது என்பதாகும். மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் புள்ளி விவரத்தின் படி குஜராத்தின் அங்கிலேஷ்வர் மற்றும் வேப்பி பகுதிகள் நாட்டின் மிக அதிகமான மாசுபட்ட 88 நகரங்களில் முதலிடங்களில் உள்ளன. அங்கிலேஷ்வர் பெற்றுள்ள குறியீட்டெண் 88.50. வெப்பி 88.09 புள்ளிகள் பெற்றுள்ளன. முதல் 88 நகரங்களில் 8 நகரங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதி நீண்ட காலமாக நிலக்கரி சுரங்கங்களால் மிகவும் மாசுபட்ட பகுதியாக அறியப்படும் பகுதியாகும். அந்தப் பகுதி 13 வது இடத்தில்தான் உள்ளது.
 
suran
முடிவுரை:
மோடி முதல்வாரன பிறகு குஜராத்தில் நடைபெறும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார பரிசோதனைகள் இந்தியாவை ஒரு மதவாத பாசிச அரசிற்கான முன்னோட்டமாகும். இங்கு ஜெர்மனியின் ஹிட்லரைப் போன்று தொழில் வளர்ச்சி இருக்கும். ஜி.டி.பி. வளர்ச்சி இருக்கும் ஆனால் மனித வளர்ச்சி குறியீடு மிக மோசமாக இருக்கும். குஜராத்தின் மோசமான மனித வளர்ச்சிக் குறியீடுகளுக்கு அதன் சமூகப் பார்வையான மிக ஏழ்மையில் உள்ள தலித் பழங்குடியினர் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆகியோர்களை உதாசீனப்படுத்தும் போக்கின் நேரடி விளைவாகும். அவர்கள் பயன்படுத்தும் பொது கல்வி, சுகாதாரம் மருத்துவம், வேலைவாய்ப்பு உரிமை, குறைந்தபட்ச ஊதியம் போன்றவற்றில் அரசு விலகிவருவதனால் ஏற்படும் ஏற்ற தாழ்வு நிலையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

எனவே நாம் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், அவர்கள் கொள்கைகளை கவனமுடன் பார்ப்போம். ஏனென்றால், இது நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல் நமது எதிர்காலத்திற்கான முதலீடு.
suran

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...