bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 28 பிப்ரவரி, 2018

சிரிய கலகம் .

சிரியாவில் அரச படைகள் பொதுமக்களை கொன்று குவிப்பதாக அந்த நாட்டின் அழிவுக்கு காரணமான அமெரிக்கா பிரசாரத்தை செய்து வருகிறது. 
ஆனால் இந்த பிரச்சனையின் பின்னணி பற்றி தெரியாத தமிழ் ஊடகங்கள் அமெரிக்க பிரசாரத்தை அப்படியே மீள் பதிப்பு செய்துவருகின்றன. 

பத்தாயிரத்து எழுநூறு கி.மீ தூரத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சிரியாவில் என்ன வேலை என்று இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை.
ரஷ்யாவுக்கு வெளிநாட்டில் உள்ள ஒரேயொரு கடல்படைத்தளம் சிரியாவில்தான் உள்ளது. 
நீண்ட காலமாக சிரியாவானது ரஷ்ய ஆதரவு நாடாக இருந்துவருகிறது. 

இதனால் சிரியாவில் கலவரத்தை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது. மேலும் சிரியா ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஆதரவளிப்பதால் அந்த நாட்டை அழிப்பதில் இஸ்ரேல் முனைப்புடன் உள்ளது.
2011ல் அரபு வசந்த குழப்பங்களை ஏற்படுத்திய அமெரிக்கா சிரியாவிலும் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா சிரிய அதிபர் பதவி விலகவேண்டும் என்று கோரியிருந்தார்.

2012ல் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்த நிலையில் 2013ல் சிரியாவில் இரசாயன தாக்குதல் நடந்தது. இதனை சிரிய அரசபடை செய்ததாக உடனடியாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இவ்வாறு தொடர்ந்தும் அமெரிக்கா நேரடியாக சிரியாவில் குழப்பங்களை தூண்டி வந்துள்ளது. 

இதற்காக ஆயுத குழுக்களை உருவாக்கி சிரிய அரசாங்கத்துக்கு எதிராக உள்நாட்டு போரை நடத்தி வருகிறது. இந்த குழுக்கள் மக்களை கேடயமாக வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 
ரஷ்யா இதை முறியடிக்க சிரிய அரசாங்கத்துக்கு உதவி வருகிறது. துருக்கி போன்ற நாடுகளும் தமது நலன்களுக்காக கிளர்ச்சி குழுக்களை உருவாக்கி அழிவினை ஏற்படுத்தி வருகின்றன.
சிரியா முதல்கொண்டு பல உலக நாடுகளில் இடம்பெற்று வருகின்ற போர்கள், உள்நாட்டு போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணமாக இருந்து வருகிறது என்பதை தமிழ் ஊடகர்கள் புரிந்துகொள்ளாமல் உள்ளனர்.
தென்னமெரிக்காவில் எண்ணெய்வளம் கொண்ட செழிப்பான வெனிசுவேலா நாட்டில் அமெரிக்க நிறுவனங்களே ஆக்கிரமித்திருந்தன. 2000 ம் ஆண்டில் இந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து அமெரிக்கா செயல்பட்டது. 
குறிப்பாக முன்னாள் அதிபர் சாவேஸ் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயல்பட்டார். மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
அமெரிக்கா அங்கு ஆட்சி கவிழ்ப்புக்காக கலவரங்களை ஏற்படுத்தியது. புற்று நோயால் சாவேஸ் இறந்த பின்னர் அமெரிக்கா தனது எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்த உள்நாட்டு கலவரங்களை ஏற்படுத்தி வருகிறது. 
இவ்வாறு தென்னமெரிக்காவில் பல நாடுகளில் அமெரிக்கா காலம் காலமாக கலவரங்களை ஏற்படுத்தி வருகிறது. 
தனது நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தராத தலைவர்களை கொன்றது.
 பதவி கவிழ்த்தது.
ஏலவே வட ஆபிரிக்காவில் லிபியா முதல்கொண்டு பல நாடுகளில் அரபு வசந்தம் என்ற பெயரில் அமெரிக்கா கலவரங்களை ஏற்படுத்தி உள்நாட்டு போரை உருவாக்கியது. 
-   ஜீவேந்திரன் நடராஜா

போரால் சீரழிந்த அந்த நாடுகளில் தனது படைகளை வைத்ததுடன் எண்ணெய் வளத்தையும் கைப்பற்றிக்கொண்டது.
ரஷ்யாவுக்கு அண்டை நாடான உக்ரெய்னில் அமெரிக்கா உள்நாட்டு கலவரத்தை உருவாக்கியது. 
அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக சதி திட்டங்களை செய்து வருகிறது.

இவ்வாறு உலகம் முழுவதும் அமெரிக்கா தனது முதலாளித்துவ நலன்களுக்காக போர்களையும் கலவரங்களையும் உருவாக்கி 
அமைதியை கெடுத்து வருகிறது.
                                                                                                                            
 ================================================================================================

ஒரு அரசே தன் மக்களைக் கொன்று குவிப்பது மிகப்பெரிய கொடுமை.அதிலும் மழலை மாறா குழந்தைகள் 2000க்கும் மேல் தெரிந்தே குண்டு வீசியும்,துப்பாக்கியால் சுட்டும் கொள்வதென்பது ஹிட்லர்,இடி அமீன் கொடுமை.

இதில் ஹிட்லர் கொன்றது யூதர்,பிற இனத்தவரை தான்.சொந்த நட்டு மக்களை அல்ல.ஹிட்லரையும் மிஞ்சி நடந்த இந்த கொடுமை நடக்க  காரணம் உள்நாட்டு போர்.
போர் வரட்டும் எனக்காத்திராமல் சிறுவர் பெரியவர்,பெண்கள் எனப்பார்க்காமல் அரசே செய்த பயங்கரவாதம் இது.

இதன் கொடும் வரலாறை பார்ப்போம்.

 ஏழு ஆண்டுகளாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சிரியாவின் சுருக்கமான வரலாறு, புவியியல் அமைப்பு, மக்களின் சமூகப் பிரிவினைகள் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம். 


சிரியா, ஈரானைப் போல மதச் சுதந்திரம் கொண்ட ஒரு நாடு. 
65 விழுக்காடு சன்னி பிரிவினர், 15% ஷியாக்கள் மற்றும் மீதமுள்ள மக்கள் கிறித்தவர்கள், குர்து, பாலஸ்தீனத்தினர். துருக்கி, ஈராக், லெபனான், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு நாடாக சிரியா இருக்கிறது. 
சிரியாவின் இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு தான் அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் சிரியா ஆக்கிரமிப்பு பேராசையை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. எண்ணெய் வளங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
சிறுபான்மையினராக இருக்கும் ஷியா பிரிவினரின் பாத் கட்சி,இராணுவப் புரட்சி மூலம் 1963 ஆட்சிக்கு வருகிறது. 
பெரும்பான்மை சன்னி முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு சிறுபான்மை குழு தனது ஆட்சி இருப்பை தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் பாத் கட்சியின் சர்வாதிகார அரசு செய்து கொண்டிருக்கிறது. 
1971 ஆம் ஆண்டு முதல் பாத் கட்சியின் தலைவரான ஹபேஸ் அல் அசாத் அதிபராக 2000 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். 2000 முதல் தற்போது வரை ஹபேசின் மகன், பஷர் அல் அசாத்தும் ஆட்சி செய்து வருகிறார். 
1963 ஆண்டிலிருந்து 2011 வரை “அவசர சட்டம்” அமலில் இருந்து வருகிறது. இவர்களிருவரின் ஆட்சியின் கீழ் நிர்வாகச் சீர்கேடுகள், மனித உரிமை மீறல்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.
2010ம் ஆண்டு துனிஷியாவில் துவங்கிய மக்கள் புரட்சி எகிப்து பஹ்ரைன் உள்ளிட்ட இராணுவ/மன்னராட்சி அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்தது. பல்லாண்டு காலம் மக்களின் வறுமை, வேலை வாய்ப்பின்மை, நிர்வாகச் சீர்கேடுகள், மனித உரிமை மீறல்கள், எதேச்சதிகாரம் இவைகளின் மீதான இயல்பான மக்களின் கோவமாக , ஜனநாயகக் கனவை முன்னிறுத்திய போராட்டங்களாக அவை இருந்தன. 
துனிஷியாவில் பென் அலி பதவியை விட்டு சவுதிக்கு அடைக்கலம் தேடி ஓடினார். எகிப்தின் ஹோஸ்னி முபாரக் பதவியிறக்கம் செய்யப்பட்டார். 
இயல்பான இந்த மக்கள் கிளர்ச்சி சிரியாவிலும் பற்றி எரிந்தது. 
வழக்கம் போல இந்த போராட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது மட்டுமில்லாமல், ஐ.எஸ், அல்காயிதா உள்ளிட்ட பல பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்கி பயிற்சியும் அளித்தது. 

2011 மார்ச் மாதம் அசாத்தின் ஆட்சிக்கெதிராக சில வாசகங்களை சுவற்றில் எழுதிய 14 சிறுவர்கள் அரசப் படைகளால் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து டமாஸ்கஸ்  நகரின் வீதிகளில் போராடத் திரண்ட மக்களில் ஆறு பேரை அரசு சுட்டுக் கொல்கிறது. 
போராட்டம் பல்வேறு நகரங்களுக்கும் பரவவே, அரசு 14 சிறுவர்களையும் விடுதலை செய்கிறது. போராட்டம் அதோடு நில்லாமல் அசாத்தின் ஆட்சியை வெளியேற்றும் கிளர்ச்சியாக மாறுகிறது. நிர்வாகச் சீர்திருத்தம், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, அவசரச் சட்டத்தை திரும்பப் பெற என மக்களின் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின.
2011 ஏப்ரலில் 47 வருட அவசர நிலை விலக்கப்பட்டு, அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டம் மேலும் பல நகரங்களுக்கு பரவ, நிலைமையைச் சமாளிக்க இராணுவம் வரவழைக்கப்பட்டு மக்கள் மீது அடக்குமுறையை அசாதின் அரசு கட்டவிழ்த்து விட்டது. கிளர்ச்சியாளர்கள் ஆயுதச்சண்டைக்கு தயாராகினர். அதே மாத இறுதியில் சிரிய அகதிகளின் முதல் குழு எல்லை தாண்டி துருக்கியில் தஞ்சமடைந்தன. 
சிலர் லெபனான் சென்றனர். அஸாத்தை எதிர்க்க கிளர்ச்சியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்த “சிரிய விடுதலை இராணுவம்”(FSA- Free Syrian Army) என்ற அமைப்பை அங்கீகரித்து அமெரிக்காவின் பங்காளிகளான – மேற்கத்திய மற்றும் சவூதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகள் பயிற்சியளித்தன. 
நகரங்களுக்குள் இராணுவ டாங்கிகள் புகுந்த நிலையில், மேற்குலக நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்கனவே சிரியா மீது விதித்திருந்த பொருளாதாரத்தடைகளை மேலும் தீவிரமாக்கின. நவம்பரில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இருந்து சிரியா நீக்கப்பட்டது. அசாத் பதவி விலகக் கோரி, பன்னாட்டு நெருக்குதல் அதிகமானது.
இந்தப் போரில் அதிபர் அல் அசாத் தாக்குப் பிடிப்பதற்கு காரணம் ஈரானின் ஷியா ஆதரவும், ரஷ்யாவின் இடைவிடாத ஆயுத வழங்கலும் தான். 
அதிபர் அல் அசாத்தை பதவியிலிருந்து கீழிறக்க, உருவான சிரிய விடுதலை ராணுவத்திற்கு வந்து கொண்டிருந்த நிதியும், ஆயுதங்களும் ஐ.எஸ் அமைப்பிற்கும், அல் நுஸ்ரா ( அல்காயிதாவின் சிரிய கிளை) வுக்கும் மடை மாற்றப்பட்டு, ஐ.எஸ் அமைப்பு வலுப்பெற்றது என்கிற கருத்தும் உண்டு.
 ஐ.எஸ், அல் நுஸ்ரா அமைப்பின் வளர்ச்சியில் அமெரிக்க சவுதி அரசுகளுக்கு பெரும்பங்கு உண்டு. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மெக்கெயின் நேரடியாக இவர்களை சந்தித்த படங்கள் இணையத்திலேயே காணக் கிடைக்கிறது. பின்னாளில் ஐ.எஸ் அமைப்பை அழிக்க இதே அமெரிக்க அரசு, களத்தில் குதித்தது தனிக்கதை.
ரஷ்யாவின் இடைவிடாத ஆயுதங்கள் வழங்கல், அசாத்தை காப்பாற்ற இரான் தன் பங்குக்கு ஷியா கூலிப்படையினரையும், லேபனானின் ஹிஸ்புல்லா(ஷியா) போன்ற தீவிரவாதக்குழுக்களையும், ரகசியமாக இராக் வழியாக தன் படைகளையும்  களத்தில் இறக்கி விட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு உள்ள இரு முக்கிய நோக்கங்கள், முடிந்தவரை அஸாத்தைக் காப்பாற்றுவது மற்றும் இராணுவ பலத்தை பறைசாற்றி இந்தத் தாக்குதலில் பயன்படுத்தும் போர் விமானம் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்களுக்கான உலகளாவிய சந்தைவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுமே.
அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் அரபு தேசத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிரியாவைக் கைப்பற்றி, இஸ்ரேலைப் போல தனக்கான ஒரு இயங்குதளத்தை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கிய நோக்கமாக இருக்கிறது. 
அமெரிக்காவின் சவூதி, கத்தார்,அமீரக கூட்டணி ஒரு புறம், சிரிய அதிபர் அசாதின் அரசு, ஈரான், ரஷ்யாவின் கூட்டணி ஒரு புறம் என வல்லாதிக்க அரசுகளின் இருமுனை தாக்குதல்களில் கொல்லப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். 
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாகவும், 92 லட்சம் மக்கள் ஏதிலிகளாக இடம் பெயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தான் தாக்குகிறது, ரஷ்யா தான் தாக்குகிறது என்றில்லை. சிரிய இனக்கொலையில் இவர்களனைரும் சமமே. சிரியா, இரான் உள்ளிட்ட அனைத்து அரசுகளும் சிரிய மக்களைக் கொன்று குவித்து கொண்டிருப்பவர்கள் தான்.
இவ்வளவு நடந்தும் பன்னாட்டு சமூகம் எந்த கேள்வியும் கேட்கவில்லையா? 
2011 அக்டோபரில் ஐநா பாதுகாப்பு சபை (6 members security council) சிரிய அதிபருக்கு எதிராக கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை, விட்டோ  என்கிற மறுப்பாணை அதிகாரத்தைப்பயன்படுத்தி ரஷ்யாவும், சீனாவும் நிறைவேற்ற விடவில்லை. 
2012 பிப்ரவரியில் ஐநா பாதுகாப்பு சபை அசாத் பதவி விலக கோரி கொண்டு வந்த தீர்மானத்தை,மீண்டும் விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவும், சீனாவும் தடுக்கின்றன.  இது மாதிரியான 4 பாதுகாப்புச்சபை தீர்மானங்களை ரஷ்யாவும், சீனாவும் நிறைவேற்ற விட வில்லை. இதனால் பொது சபையில் (All Members General Assembly) ஆஸாத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தாண்டியும் 2014 ஆம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என கொடுங்கோலன் அசாத் அறிவிக்கிறான். 
பேச்சுவார்த்தைகள் தோல்வி என தனக்கு கொடுக்கப்பட்ட ஐ.நா. மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதி கோஃபி அனான் பொறுப்புகளைத் துறந்ததும் நடந்தேறியது.
சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கெதிராக நின்ற சிரிய விடுதலை இராணுவத்தை வளர்த்தெடுத்ததும் அமெரிக்காவே. 
சவுதி, கத்தார், அமீரக நாடுகள் மூலம் FSA வுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. எதிர்முனையில் ஈரான் லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தை, FSA வுக்கு எதிராக ஊக்குவித்தது. அமெரிக்க கூட்டுக் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அடக்கி வாசித்த‌ அமெரிக்க மேற்குலக ஊடகங்கள், ரஷ்யா ஈரான் கூட்டுத் தாக்குதல்கள் செய்திகளை மட்டும் வரலாற்று அவலமாக காட்டுகின்றன‌. 
அப்படித்தான் கடந்த மாதம் சவுதி அமெரிக்க படைகளால் கட்டவிழ்க்கப்பட்ட அப்ரின் தாக்குதல்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். அது பெரும் செய்தியாகவில்லை. தற்போது சிரிய அரச படைகள் டமாஸ்கஸைக் கைப்பற்றி முன்
னேறும் நேரம், போரில் தோற்றாலும் ஊடகப்பரப்புரையில் வெல்ல, சிரிய மக்கள் மீது நீலிக்கண்ணீர் வடிக்கத் துவங்கி சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. 

ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் நிறுத்தத்தைக் கோரியும், ரஷ்யாவும் சிரிய அரசும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. 

நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே போர் நிறுத்தம் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்திருக்கிறார். 
கொல்லப்பட்ட 5000 பொது மக்களில் 1900 பேர் குழந்தைகள் என்கிற தகவல்கள் கிளர்ச்சியாளர்களின் பிரச்சார மையத்திலிருந்து வெளிவரும் ( உறுதிப்படுத்தப் படாத) தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகளோடு பதுங்கு சுரங்கங்களில் உணவின்றி தவித்து வருகின்றனர். 
ஆனால் அரசோ 500பேர்கள் மட்டுமே பலியானதாகவும் அதில் குழந்தைகள் 100 அல்லது 190 வரை இருக்கலாம் என்றும் சொல்கிறது.
இதனிடையே குளோரோஃபார்ம் ரசாயன தாக்குதல்களும் நடக்கின்றன என்கிற தகவலும் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.


மத்திய கிழக்குப் பகுதிகளில் குருதி ஆறு தொடர்ந்து ஓடுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்படுவதற்கும் ஒரே காரணம் – அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். அமெரிக்க, சவுதி ஆளும் குடும்பங்களையும் ஆயுதங்களையும் மத்திய கிழக்கிலிருந்து அகற்றி விட்டால் 90% சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்து விடும்.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

பொருளாதார கொள்(கை)ளை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,360 கோடி ரூபாய் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்திய அரசு, இந்திய வங்கிகளில் 2012க்குப் பிந்தைய  காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி அதிர்ச்சி தரும் தரவுகள் அதிகம்.
2012-2016 இடையிலான காலக்கட்டத்தில் மட்டும் நடந்த மொத்த  முறைகேடுகள் 22,743 கோடி ரூபாய்கள் 

ஆனால் 2017 ,2018 முறைகேடுகள் அதைவிட அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது.
பொது மக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்துக்கு வட்டி கொடுத்த நிலை மாறி ,பொதுமக்கள் சேமித்துள்ள பணத்தை ஏதாவது கரணம் சொல்லி வங்கிகள் எடுத்துக்கொள்வதும்,அபணத்தையே பெரும் நிறுவனங்கள் ,தொழிலதிபர்களுக்கு வராக்கடனாக கொட்டிக்கொடுப்பதும்,அவர்கள் ஏப்பம் விடுவதும் அவர்கள் பிரதமர் மோடிக்கு,பாஜகவுக்கு வேண்டியவர்களாக இருப்பதும் தற்போதைய பாஜக பொருளாதார கொள்கைளையாக  உள்ளது. 
 2017 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில், 455 முறைகேடான பரிவர்த்தனைகள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதுபோல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-வில் 429 பரிவர்த்தனைகளும், ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் 244 பரிமாற்றங்களும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் 237 பரிவர்த்தனைகளும் முறைகேடாக நடந்துள்ளது.
இந்த முறைகேடான பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை வங்கி ஊழியர்களின் துணையுடனே நடந்துள்ளது.
இந்தியாவின் 5 மிகப்பெரிய வங்கி முறைகேடுகள்:
2011 
பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், மற்றும் ஐ.டி.பி.ஐ அகிய வங்கிகளின் நிர்வாகிகள் 10 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி 1,500 கோடி ரூபாய் அளவிற்கு அந்த போலி கணக்குகளுக்கு கடன் வழங்கி உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டு, சி.பி.ஐ ஒரு விசாரணை நடத்தி இந்த முறைகேட்டினை வெளிக் கொண்டுவந்தது.
2014 
வைப்புத் தொகையில் 700 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என பல பொதுத் துறை வங்கிகளுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு 9 வழக்குகளை பதிவு செய்தது மும்பை போலீஸ். அதே ஆண்டு, கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பிபின் வோஹ்ரா, போலியான ஆவணங்கள் கொடுத்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,400 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது.
இதற்கு மத்தியில், அதே ஆண்டில், சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்கே ஜெயின் லஞ்சம் பெற்று ரூபாய் 8,000 கோடி கடன் கொடுத்தார் என்ற தகவல் வெளியே வந்தது.
விஜய் மல்லையாவை கடனை திரும்ப செலுத்தாதவர் என பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் அறிவித்தன.
2015 
2015 ஆம் ஆண்டு வெளிநாட்டு பரிவர்த்தனை ஊழலுக்கான ஆண்டு. வெவ்வேறு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் ஹாங்காங்க் கார்ப்பரேஷன் உட்பட வெளிநாட்டில் உள்ள பல போலியான நிறுவனங்களுடன் பரிவர்த்தனை மேற்கொண்டு இருக்கிறார்கள் என தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய தொகை 6000 கோடி ரூபாய்.
2016 
சிண்டிகேட் வங்கியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்து செல்வதற்கு நான்கு மோசடிப் பேர்வழிகள் ஒன்றாக இணைந்தனர். 380 போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, போலி காசோலைகள், புரிந்துணர்வுக் கடிதங்கள், எல்.ஐ.சி. பாலிசிகள் மூலம் இந்த போலி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டன.

2017 
2017ஆம் ஆண்டின் சிறப்பு, விஜய் மல்லையா மீதான வழக்குதான். 9,500 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, விஜய் மல்லையா மீது வழக்கு பதிந்தது சிபிஐ. அவர் 2016ஆம் ஆண்டே நாட்டைவிட்டு தப்பிச் சென்று இருந்தார். இப்போது, இங்கிலாந்தில் வசித்து வரும் அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
இதே ஆண்டு, அடுத்த சில மாதங்களில், வின்சம் டைமண்ட்ஸ்க்கு எதிராக 7,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சிபிஐ இந்த நிறுவனத்திற்கு எதிராக ஆறு வழக்குகள் பதிவு செய்தது.
கொல்கத்தா தொழிலதிபர் நிலேஷ் பரேக், குறைந்தது 20 வங்கிகளை ஏமாற்றி அவர்களுக்கு இழப்பு உண்டாக்கியதாக 2017 ஆம் ஆண்டு சி.பி.ஐ-யினால் கைது செய்யப்பட்டார். வங்கிகளை ஏமாற்றிப் பெற்ற கடன் தொகையை ஹாங்காங்க், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு மடைமாற்றினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ராவின் முன்னாள் மண்டலத் தலைவர் மீதும், சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், 836 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
2018
நீரவ் மோடியின் 11,360 கோடிகளுடன் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள்  பாஜக கட்சியின் மோடி ஆட்சியில்தான் அதிகம் என்பதும்.பெருந்தொழில் அதிபர்கள்,கார்பரேட்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை களில் 86% பாஜவுக்குத்தான் என்பதும் தற்செயல்கள்தான்.
==========================================================================================
பிடல் காஸ்ட்ரோ 
அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரியான படிஸ்டாவின் பிடியிலிருந்து கியூபாவை விடுவித்து அமெரிக்காவின் எதிர்ப்பையும் சதிகளையும் தாண்டி பொதுவுடைமைப் பாதையில் கியூபாவை பல்வேறு துறைகளிலும் முன்னேற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, 2016 நவம்பர் 25, அன்று தனது 90-ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள கியூபாவில் அமெரிக்க ஆதரவுடன் கொடுங்கோலாட்சி புரிந்து வந்த சர்வாதிகாரியான படிஸ்டாவை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஆருயிர் தோழர் சேகுவேரா ஆகியோரின் துணையுடன் கொரில்லா போர் புரிந்து1959-இல் வீழ்த்திய ஃபிடல், கியூபாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். 

துவக்கத்தில் அமெரிக்காவைத் தனது எதிரியாக கருதாத ஃபிடல், நாளடைவில் அமெரிக்காவும் அந்நாட்டு நிறுவனங்களும் கியூபாவை சுரண்டி வருகின்றன என்பதையறிந்து அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தார்.
குறிப்பாக ஏழைகளைச் சுரண்டிய அமெரிக்கத் தொழில் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். 
இதனால் இரு நாடுகளிடையே பிணக்கு ஏற்பட்டு
1961-இல் இருநாடுகளும் தங்களின் தூதரக உறவினை முறித்துக் கொள்ளுமளவுக்கு பகையாக வளரத் துவங்கியது. அப்போது முதல் கியூபாவைச் சீர்குலைக்க அமெரிக்கா பல்வேறு நாசவேலைகளைப் புரியத் துவங்கியது.
ஆனால் திறன்மிக்கத் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ அவற்றினைத் தவிடுபொடியாக்கி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றார்
. இவருக்கு சோவியத் யூனியனின் பரிபூரண ஆதரவு இருந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின்படி நிலச்சீர்திருத்தத்தினை மேற்கொண்டு நிலங்களை அனைவருக்கும் சமமாகப்  பங்கிட்டளித்த இவரின் அரசு, கல்வி, மருத்துவ சேவைகள், வீடு என மக்களின் அடிப்படைத் தேவைகளை விலை குறைவாகவோ அல்லது இலவசமாகவோ வழங்கி மனிதவளக் குறியீட்டெண்ணில் கியூபாவை பல்வேறு வளர்ந்த நாடுகளைவிட முன்னணியில் இடம்பெறச் செய்தது.
அமெரிக்காவின் ஏகாதிபத்திய சித்தாந்தத்திற்கு நேரெதிர் சித்தாந்தத்தைக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்த ஃபிடலைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த அமெரிக்கா ஏற்கனவே கியூபாவின் மீது கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.
அவற்றையும் மீறி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற
ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்காவின் உளவுப்படைகள் 638 முறை முயற்சி செய்தன. இந்த அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி சிறந்த பொதுவுடைமைவாத நாடாக கியூபாவை மாற்றிய இவர், பனிப்போர்க் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய அணிசேரா நாடுகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளுக்கு கியூபாவை ஒரு முன்னுதாரண நாடாக்கிய இவர் மூன்றாம் உலக நாடுகளுக்குத் தேர்ந்த வழிகாட்டியாகவும் விளங்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கெதிராக தீரமுடன் போராடி வந்த இவர் உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் எங்கெல்லாம் ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டனரோ அங்கெல்லாம் தனது ஆதரவுக் கரத்தினை நீட்டி அவர்களின் துயரைத் துடைத்தார்.
1992-இல் சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அமெரிக்காவின் நெருக்கடியால் தீவிர

இன்னலுக்குள்ளாகிய கியூபாவை பல்வேறு வழிகளிலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றினார். 1959 முதல் 2006 வரை கியூபாவை  மிக நீண்ட காலம் வழி நடத்திய அவர், அதன் பிறகு அதிகாரங்களை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு
2008-ஆம் ஆண்டில் பதவி விலகினார்.
அதன் பிறகு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவிற்குள்ளான ஃபிடல் 2016 நவம்பர் 25-இல் மறைந்தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதித் திட்டங்களையும் பொருளாதாரத் தடைகளையும் முறியடித்து கியூபாவில் சோஷலிசத்தினை நிர்மாணிப்பதில் வெற்றி கண்ட காஸ்ட்ரோ, உலக அளவில் பொதுவுடைமைவாதிகளுக்கு உற்சாகமளிக்கக் கூடியவராக விளங்கினார்.
விடிவெள்ளியான அவரின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கும், சோஷலிசத்திற்கும், அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

புதன், 7 பிப்ரவரி, 2018

விஸ்வரூபம்'

விஸ்வரூபம்' 5 ஆண்டு சிறப்பு கட்டுரை

'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பில் பல தரமான பொழுதுபோக்கு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், கமல் அவர்களது எழுத்திலும் இயக்கத்திலும் வெளியான திரைப்படங்கள் இன்னும் ஸ்பெஷல்! அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படம் வெளியாகி, இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகிறது! விஸ்வரூபம் என்கிற சம்ஸ்கிருத டைட்டிலை மாற்ற வேண்டும் என 'இந்து மக்கள் கட்சி' வெளியிட்ட அறிக்கை, DTH முறையில் வெளியிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களின் மறுப்பு, சில இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம், தமிழக அரசின் தடை, 'இதுவே தொடர்ந்தால், நான் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்' என சொன்ன கமல் அவர்களின் சோகம் என ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் 'விஸ்வரூபம்' திரைப்படம் வெளியானதை யாராலும் எளிதில் மறக்க முடியாது.

'James Bond 0007', 'The Bourne Series', 'Mission Impossible' என Spy த்ரில்லர் ஜானரில் ஹாலிவுட்டில் வருடத்துக்கு 5 படமாவது வெளியாகும். ஆனால், அந்த ஜானர் அதிகம் பிரபலமாக இல்லாத இந்திய சினிமாவில் இதற்கு முன் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் எல்லாம் 'Agent Vinod' போல சுவாரஸ்யமற்றதாகவோ அல்லது 'Ek Tha Tiger' போல மிக அதிகமான மசாலா நெடியுடனே இருந்துள்ளன. இதற்கு முன், 1980களிலும் 1990களிலும் தமிழ் சினிமாவில் வெளியான 'விக்ரம்' 'குருதிப் புனல்' (இந்தி திரைப்பட ரீமேக்) போன்ற சில Spy த்ரில்லர் பெரிய வெற்றி பெறவில்லை. அந்த வகையில், 'விஸ்வரூபம்' தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமானதொரு ஆக்ஷன் த்ரில்லர்!

ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், "மகாபாரதத்தில் வரும் 'விராட பருவம்' தான், 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் கதைக்கான இன்ஸ்பிரேஷன்" என சொல்லியிருந்தார் கமலஹாசன். 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, பாண்டவர்கள், மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில் வாழ்ந்தனர். அங்கே அர்ஜுனன் விராட இளவரசி உத்தரைக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராக பிருகன்னளை எனும் பெயரில் வாழ்ந்தான். ஆம், அந்த அர்ஜுனன் கதாபாத்திரமே விஸ்வநாத்துடையது (கொஞ்ச காலம் தலைமறைவாக வாழும் ஒரு நடன ஆசிரியர் வேடம்). அர்ஜுனன் கிருஷ்ணர் சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல, கமல் அவர்கள் கட்டுப்பட்டது தனது மாமா மற்றும் பாஸ் ஆன சேகர் கபூருக்கு - படத்தில் அவரது பெயர் ஜெகன்நாத் (கிருஷ்ணர்)!
சர்வதேச நாடுகளை எல்லாம் அச்சுறுத்தும் பயங்கரவாதியான ஒமர் குரேஷி மற்றும் அவனது கூட்டத்தை பிடிக்க செல்லும் இந்திய உளவாளியான (RAW) விஸாம் அஹ்மத் காஷ்மீரி, ஆப்கானிஸ்தானில் தலிபன்களை உளவு பார்த்து அவர்கள் இருப்பிடத்தையும், ஒசாமா பின் லேடனின் மறைவிடத்தையும் NATOவிற்கு தெரிவிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். ஒமர் குரேஷியின் வேறு சில திட்டங்களையும் தெரிந்து வைத்திருக்கும் விஸாம், அமெரிக்காவில் வெடிக்கவிருக்கும் ஒரு கதிரியக்க வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்காக விஸ்வநாத் என்கிற பெயரில் நடித்து வருகிறார். அவர் மேற்கொள்ளும் அந்த அபாயகரமான பணியும், யாருக்கும் தெரியாத அவரது உண்மையான சுயரூபத்தின் வெளிப்பாடுமே 'விஸ்வரூபம்' திரைப்படம்.

வெவ்வேறு புனைப்பெயர்கள், பெண்களுக்கே உரிய நளினத்தோடு நடன ஆசிரியராக ஒரு கெட்-அப், உளவாளியாக ஒரு கெட்-அப், தலிபான் பயங்கரவாதியாக ஒரு கெட்-அப், ஒமரையும் ஒசாமாவையும் பிடிக்க முயற்சிக்கும் விறுவிறுப்பான பயணம் என ஒரு சர்வதேச உளவு திரைப்படத்திற்கு தேவையான பக்காவான செட்டப்போடு, ஆங்கிலப் படங்களுக்கு நிகரான மேக்கிங்கில் உருவாகியிருந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'விஸ்வரூபம்'.
 

kamal haasan vishwaroopam

தனது விவாகரத்து குறித்து, ஒரு மனோதத்துவ நிருபரிடம் விஸ்வநாத்தின் மனைவி நிருபமா பேசுவதில் தொடங்குகிறது திரைப்படம். அமெரிக்காவில் குடியேற உதவியாய் இருக்குமே என விஸ்வநாத்தை திருமணம் செய்து கொண்டதை 'A convenient marriage' என அழைக்கும் நிருபமா, சற்றே அசாதாரணமாக இருக்கும் தனது கணவர் மேல் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கிறாள். தனது முதலாளியை பிடித்திருப்பதால், தன் கணவனை விவாகரத்து செய்ய வாய்ப்பிருக்குமா என பார்க்கிறாள். தனது முதலாளி மூலம் ஒரு டிடெக்டிவ்வை நியமித்து விஸ்வநாத்துக்கு வேறு யாரோடும் தொடர்பிருக்கிறதா என பார்க்க செய்கிறாள். அப்பொழுது கூட 'அவர் வாழ்க்கையில வேற யாராவது இருந்தா, அது பொம்பளையா இருக்காது' என சொல்லி விஸ்வநாத்தை ஆண்மையில்லாதவர் போல சித்தரிக்கிறாள். 'உனை காணாத' பாடலின் நடனத்தோடு, விஸ்வநாத்தாக கமல் நமக்கு அறிமுகமாகிறார். கமல்ஹாசன் அவர்களது 60 ஆண்டு கால திரையுலக பயணத்தில், இப்படியொரு வேடத்தில் கமல் இப்படி நடிப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். சின்ன சின்ன வசனங்களிலும் உடல்மொழியிலும், மனிதர் பிரமாதப்படுத்தியிருப்பார் - உடல்மொழி மட்டுமின்றி நடந்துகொள்ளும் விதத்திலும், பெண்களுக்கே உரிய நளினத்தோடு அந்த பாத்திரத்தை குறைகளின்றி திரையில் காட்டிட, வசனங்கள் எழுதப்பட்ட விதத்திலும் நடிப்பிலும் நிறையவே மெனக்கெட்டிருப்பார். 'மணவாட்டியே, மணாளனின் பாக்கியம்' என மாற்றி சொல்வது, ஃபோனை எடுத்தவுடன் 'ஹலோ Mrs. & Mr.விஸ்வநாத்’s residence' என சொல்வது, சமையல் உட்பட அனைத்து வீட்டு வேலைகளையும் தானே பார்ப்பது என அந்த பாத்திரத்திற்கு நிறைவான வடிவம் கொடுத்திருப்பார்.

அதற்கடுத்த காட்சிகளில், விஸ்வநாத் ஒரு முஸ்லிம் என தெரிகிறது. படத்தின் முதல் 20 நிமிடங்கள் மெதுவாக சற்றே அசுவராஸ்யமாக நகர்வதைப் போல இருந்தாலும், வில்லன் ஒமர் தானே விஸ்வநாத்தை பார்க்க வருகிறேன் என சொல்லும் கணத்திலிருந்து, திரைக்கதையில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதற்கடுத்த காட்சியில், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஸ்டண்ட் காட்சிகளில் ஒன்றான அந்த warehouse சண்டைக்காட்சி வருகிறது.

'விஸாம் அஹ்மத் காஷ்மீரி, அல்-கொய்தாவால் பயிற்சியளிக்கப்பட்டவன்' என்கிற பில்டப்போடு தொடங்கும் ஆப்கானிஸ்தான் ஃபிளாஷ்பேக் காட்சிகள் முழுக்கவே பரபரவென நகர்கிறது. 'நாயகன்' படத்தின் தாராவி செட், 'அன்பே சிவம்' திரைப்படத்தின் ரயில் விபத்து செட் மற்றும் ஒரிஸா வெள்ளம் செட், 'விருமாண்டி' திரைப்படத்தின் கிராம செட் மற்றும் ஜெயில் செட் என கமல் அவர்களது திரைப்படங்களில் எப்பொழுதுமே ஆர்ட் டைரக்ஷன் மிக நேர்த்தியாக இருக்கும். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், ‘விஸ்வரூபம்’ படத்திற்காக சென்னை OMR சாலையில் உள்ள ஜேப்பியார் கல்லூரி மைதானத்தில், 1000 லோடு மண்ணைக் கொட்டி ஆப்கானிஸ்தானையே உருவாக்கி மலைக்க வைத்திருந்தார் 'கலைஞானி' கமல்ஹாசன். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்கா சம்பந்தப்பட்ட பல காட்சிகளும் கூட செட் மற்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது; படத்தில் வரும் 80% காட்சிகள் செட்களிலும் கிரீன் மேட்டிலுமே படமாக்கப்பட்டது என்பது நம்புவதற்கு சற்றே கடினமான உண்மை. 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு பின், முழுக்க முழுக்க செட்டிலும் கிரீன் மேட்டிலுமே படம் எடுக்கும் டிரெண்ட் மிக பிரபலமானது. 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் கலை இயக்குனர் 'லால்குடி' இளையராஜா அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால், warehouse சண்டைக்காட்சி (transformation சீன்) உட்பட பல காட்சிகளில் வரும் ஸ்டண்ட்களில் கமல் அவர்களது முகம் VFXஇல் மாற்றப்பட்டிருப்பது தெரியாத அளவிற்கு சிறப்பாக இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லா தொழில்நுட்ப துறையிலுமே அசத்தியிருந்தார்கள். ‘விஸ்வரூபம்’ திரைப்படம் என்றதும், முதலில் நம் நினைவுக்கு வருவது ‘எவன் என்று நினைத்தாய்?’ பாடலும் அந்த தீம் இசையும் தான்; ‘ஆளவந்தான்’ திரைப்படத்திற்கு பின், இரண்டாம் முறையாக இணைந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் மற்றும் கமல்ஹாசனின் இசைக் கூட்டணி ‘விஸ்வரூபம்’ படத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

ஜிஹாதிகளைப் பற்றிய ஆக்ஷன் த்ரில்லர் என்றபோதிலும், அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் பேசியது ‘விஸ்வரூபம்’. ‘நீ ஜிஹாதி ஆகணுமா?’ என ஒமரின் மகன் நாசரைப் பார்த்து விஸாம் கேட்கையில், ‘இல்ல.. நான் டாக்டர் ஆகணும்’ என அவன் சொல்கிறான். பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கே அவர்கள் செய்வது எதிலுமே விருப்பம் இல்லை என சொல்கிறது அக்காட்சி. ‘டாக்டரெல்லாம் ஆக வேணாம்’ என ஒமர் திட்டியதும், நாசரை சமாதானப்படுத்துவதைப் போல வெளியே வந்து அவனை ஊஞ்சலில் உட்காரவைத்து விஸாம் ஆட்ட, முதிர்ந்தவனைப் போல் ‘நான் ஒண்ணும் குழந்தை இல்ல’ என இறங்கி செல்கிறான். ஆனால், ஜிஹாதியான மம்மு ஊஞ்சலில் அமர்ந்து குழந்தையை போல் ஆட்டிவிட சொல்கிறான். அப்படி இருப்பதால் தானோ என்னவோ, சரி எது தவறு எது என தெரியாமல் எளிதில் மூளைச் சலவை செய்யப்பட்டு மனித வெடிகுண்டாகி சாகிறான். ஆங்கிலம் கற்க கூடாது பேசக்கூடாது என சொல்வது, சிறுவர்கள் கையிலும் கூட துப்பாக்கி இருப்பது, அங்காடியில் தோட்டாக்கள் விற்கப்படுவது, கண்ணைக்கட்டிக்கொண்டிருக்கும் தன் மகனுக்கு எது எந்த துப்பாக்கி, எந்த குண்டு என கண்டுபிடிக்க சொல்லி பயிற்சியளிப்பது என அங்கே நிலவும் சூழலையும் காட்டுகிறார்கள். ‘ஜலாலை அவன் ஆசைப்பட்ட மாதிரியே, இஞ்சீனியரிங் படிக்க லண்டன் அனுப்பி இருந்தா, நாசரை அவன் விருப்பப்படியே டாக்டர் ஆக்கியிருந்தா... இந்த மாதிரி சாம்பல் ஆகியிருக்க மாட்டாங்க’ என ஒமர் கண்ணீர் சிந்துகிறான். “முதல்ல, பிரிட்டிஷ் வந்தான்... அப்புறம் ரஷ்யன், தலிபான், அமெரிக்கா காரன்... இப்போ, நீங்கள்லாம்” என ஒரு பாட்டி திட்டும் வசனத்தின் மூலம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை ஒரே வரியில் சொல்லி முடிக்கிறார் எழுத்தாளர் கமல்ஹாசன்.
 

“துப்பாக்கி எங்கள் தோளிலே, துர்பாக்கியம் தான் வாழ்விலே” என தொடங்கும் பாடலில்,
“போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை,
போர்தான் எம்மை தேர்ந்தெடுத்து கொண்டது...

எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை,
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது...

ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்,
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்...

ஒட்டக முதுகின் மேல், ஒரு சமவெளி கிடையாது,
டாலர் உலகத்தில், சமதர்மம் கிடையாது”
என ஒவ்வொரு வரியிலும் தங்களை போராளிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர்களின் எண்ண ஓட்டத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருப்பார் ‘கவிப்பேரரசு வைரமுத்து.

அதே போல, ‘அணு விதைத்த பூமியிலே’ பாடலில்
“போர் செல்லும் வீரன், ஒரு தாயின் மகன் தான்...
நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள்...”
என்கிற வரிகளில் போரின் ரணங்களை சொல்லியிருப்பார்.

படத்தில் கமல்ஹாசன் முதல் எல்லா கதாபாத்திரங்களுமே மிகத் தெளிவாக படைக்கப்பட்டிருக்கும். ‘செத்துட்டா எல்லா பாவத்தையும் மன்னிச்சிரணுமா? அப்போ, ஹிட்லரையும் மன்னிச்சிடலாமா?’ என கேட்கும் அதே விஸாம் தான், ‘ஒரு மனுஷாளோட சாவை இப்படியா தீபாவளி மாதிரி கொண்டாடுறது?’ என ஒசாமா பின் லேடனின் மரணம் குறித்து மனிதாபிமான அடிப்படையில் கேட்பார். அதே போல அஸ்மிதா, Colonel ஜெகன்நாத், விஸாம் என எல்லோருமே ஒரே குழுவில் இருந்தாலும் கூட, மூன்று பேருக்குமே அந்த மரணம் குறித்த புரிதலும் கருத்தும் வெவ்வேறாக இருக்கும். ‘அசுரனைக் கொன்னா, கொண்டாடதானே செய்வா?’ என அஸ்மிதா கேட்க, ‘அதை அசுரனோட அண்ணன், தம்பி, பொண்டாட்டி, பொண்ணுகிட்ட சொல்லு பார்ப்போம்’ என்பார் ஜெகன்நாத்.

‘தேவர் மகன்’, ‘அன்பே சிவம்’, ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’ என கமல் அவர்களது எழுத்தில் உருவான எல்லா படங்களிலுமே வன்முறை வேண்டாம் என்கிற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ மேலோங்கி இருக்கும். இந்த எல்லா படங்களிலுமே ஹீரோ ஏதோவொரு குற்ற உணர்வால் புழுங்கித் தவிப்பான் அல்லது தனிப்பட்ட இழப்பால் சோர்ந்து கிடப்பான். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இசக்கியின் கை வெட்டப்படுதல் மற்றும் ஊருக்குள் கலவரம், ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் பஸ் விபத்து, ‘ஹே ராம்’ திரைப்படத்தில் மத கலவரத்தில் அபர்ணா கற்பழித்து கொல்லப்படுதல் மற்றும் காந்திஜியை கொல்ல வேண்டும் என்கிற வெறி, ‘விருமாண்டி’ திரைப்படத்தில் ஊர் கலவரத்தில் இறக்கும் மக்கள் மற்றும் அன்னலட்சுமியின் மரணம் என சில உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில், ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் தவ்ஃபீக்கின் மரணத்தாலும் வேறு சில மரணத்தாலும் கலங்கியிருப்பார் ஹீரோ விஸாம். ‘நீங்கள் நல்லவரா, கெட்டவரா?’ என்கிற கேள்விக்கு வேலு நாயக்கரிடம் பதில் இல்லாததைப் போல, தான் இது நாள் வரை வாழ்ந்த ‘வில்லன்’ வாழ்க்கையில் இருந்து விலகி எஞ்சியிருக்கும் நாட்களில் ‘உத்தமன்’ பாதையில் செல்லும் மனோரஞ்சன் போல, விஸாம் அஹ்மத் காஷ்மீரியும் தான் ஹீரோ மட்டும் அல்ல வில்லனும் கூடத்தான் என தன் மனைவியிடம் ஒப்புக்கொள்கிறான்!
 

kamal haasan vishwaroopam

கமல் அவர்களது திரைப்படங்களில் என்றுமே spoon-feeding இருக்காது. தனது ஆடியன்ஸை புத்திசாலிகளாக அணுகி, படத்தில் உள்ள சில விஷயங்களை அவர்களே புரிந்துகொள்ளட்டும் என விட்டுவிடுவார். ஆனால், அதுவே அவர் நடித்த சில நல்ல திரைப்படங்கள் தோல்வியடைவும் காரணமாய் இருந்திருக்கிறது. அப்படி, ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் நீங்கள் தவறவிட்டிருக்கக்கூடிய ஒரு சில நுட்பமான விஷயங்களும் சில குறியீடுகளும் இதோ இங்கே:

- “எல்லோரும் விஸ்வநாத்தை ‘விஸ்’ன்னு கூப்பிடுவாங்க, அதான் நானும் கூப்பிடுறேன்” என முதல் காட்சியில் நிருபமா சொல்வார். ஆனால், விஸாம் என்கிற பெயரை சுருக்கித்தான் எல்லோரும் ‘விஸ்’ என கூப்பிடுகிறார்கள் என நிருபமாவிற்கோ ஆடியன்ஸிற்கோ அந்த காட்சியில் தெரியாது. ‘விஸ்வநாத்’ என்கிற பெயரை விஸாம் தேர்ந்தெடுத்ததன் காரணமும் அதுவே; யாரேனும் தவறுதலாக மாற்றிக் கூப்பிட்டாலும் கூட, மாட்டிக்கொள்ளாமல் இருக்க!

- ‘இன்னைக்கு டின்னருக்கு நிருபமா வரமாட்டா’ என விஸாம் சொன்னதும், ‘ஆகாஷவாணி சொல்லுச்சா?’ என அஸ்மிதா நக்கலாக கேட்பார். நிருபமாவின் boss தீபக்கின் அலுவலகம் முழுக்க bug செய்யப்பட்டிருப்பதைத்தான் அப்படி குறிப்பிடுகிறார்கள்.

- Warehouse சண்டைக்காட்சியில் விஸாம் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஃபரூக் இரண்டு மூன்று முறை விஸாமை நோக்கி சுட்டும் கூட ஒரு குண்டு கூட அவர் மீது படாது, கவனித்தீர்களா? அதற்கு காரணம், அதற்கு சில நிமிடங்களுக்கு முன் விஸாமை முகத்தில் அடிக்க கையை நீட்டுகையில் விஸாமின் பற்களில் பலமாக இடித்துக் கொண்டிருப்பான் ஃபரூக். இடித்தவுடன் வலி தாங்காமல், தனது அலைபேசியை கூட தீபக்கிடம் கொடுத்துவிடுவான். வலியால் அலைபேசியையே தூக்கமுடியாத ஃபரூக்கால், எப்படி சரியாக குறி வைக்க முடியும்.

- அதே சண்டைக்காட்சியில், எல்லோரையும் கொல்லும் விஸாம், ஃபரூக்கை மட்டும் கையை வெட்டிவிட்டு பின் கொல்வான். ஏன் தெரியுமா? அதற்கு முந்தைய காட்சியில், தன் மனைவி நிருபமாவை தன் கண் முன்னாலேயே அறைந்திருப்பான் ஃபரூக்.

- தவ்ஃபீக்கை பார்வையாளர்களுக்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தும் காட்சியில் ‘முதல்ல 2 ஏக்கர்ல ஆரம்பிச்சாரு, இப்போ இரண்டாயிரம் ஏக்கர் இருக்கு..’ என சலீம் சொல்வான். தவ்ஃபீக்கின் வீட்டை சுற்றி பெரிய தோட்டம் போல காட்டுவார்கள். அதை ரோஜா செடியென பலர் நினைத்திருக்க வாய்ப்புண்டு, ஆனால் அது ஓபீயம் (Opium). ‘A humble gift, from a humble farmer’ என விஸாமிடம் தவ்ஃபீக் சொல்வது ஞாபகம் இருக்கிறதா? போதை மருந்து வியாபாரம் தான் அவர்களது பயங்கரவாத தாக்குதல்களுக்கு தேவைப்படும் பணத்திற்கான முக்கிய ஆதாரம் என சொல்லும் காட்சி அது. (உலகத் தேவைக்கான அளவில் 80% ஓபீயம், ஆஃப்கனில் இருந்துதான் கிடைக்கிறது).

- NATO தாக்குதல் நடத்தி சென்ற ஆஃப்கன் கிராமத்தில், பலர் இறந்து கிடப்பார்கள் (டாக்டர் மற்றும் சிறுவர்கள் உட்பட). கொஞ்சம் உற்று கவனித்து பார்த்தீர்கள் என்றால், அந்த டாக்டரை சுட்டுக் கொன்றது கையில் துப்பாக்கியுடன் இறந்து கிடக்கும் அந்த சிறுவன்தான் என தெரியும் (அந்த டாக்டர் இறந்து கிடக்கும் விதம், சிறுவன் இருக்கும் திசையை பாருங்கள்). NATO தாக்குதல் தொடங்கிய நொடியில், ஏதோவொரு பதட்டத்தில் ‘இதற்கெல்லாம் காரணம் வெள்ளைக்காரர்கள் தான்’ என அந்த சிறுவன் டாக்டரை கொன்றிருக்க வாய்ப்புண்டு.

பயங்கரவாதம் பற்றி பேசும் இப்படியொரு திரைப்படத்தில் நடுநிலைத்தன்மையோடு காட்சிகளை அமைப்பது மிக முக்கியம்; அதை செய்ய கமல் முயற்சித்திருக்கிறார். அதனால் தான், கதாநாயகனது வேடத்தையும் இஸ்லாமியனாய் படைத்து நல்லவனாக காட்டியிருப்பார். கிளைமாக்ஸில் பாம் வெடிப்பதற்கு முன் பயங்கரவாதிகள் தொழுவதைப் போல, பாம் வெடிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு முன் விஸாமும் தொழும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். விஸாம் ஒரு முஸ்லிம் என்பதாலேயே, அவர் மீது நம்பிக்கை இல்லாமல், அவருக்கு இந்தியா மீது தேசப்பற்று இல்லையென நினைத்து, அவர் கட்டளைகளுக்கு கீழ்படியாத அதிகாரி கதாபாத்திரத்தின் மூலம் பல விஷயங்களை சொல்லாமல் சொல்லியிருப்பார் கமல்!

 
kamal haasan vishwaroopam

‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ஆஃப்கன்-அமெரிக்க அரசியலை பேசிய விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டது. ‘அமெரிக்கா காரன் எண்ணெய்க்காக சண்டை போடுறான். நாம எண்ணெய் எடுக்க pipe போட்டுக்கோன்னு சொன்னா, அவனும் நம்ம கூட சேர்ந்து ‘அல்லாஹு அக்பர்’ சொல்வான்’ என ஜோக் அடித்த ஒரு காட்சியைத் தவிர, மற்ற எல்லா காட்சிகளிலும் அமெரிக்கர்களை ரொம்ப நல்லவர்கள் போலவே காட்டியிருந்தது விமர்சிக்கப்பட்டது. “அமெரிக்கன்ஸ் குழந்தைங்களை, பொம்பளைங்களை கொல்லமாட்டாங்க” போன்ற வசனங்கள் எல்லாம் அதன் உச்சம்! அமெரிக்கா ஆஃப்கனை கைப்பற்றியதே போதை மருந்து உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத்தான் எனவும், ஆஃப்கனில் நுழைந்ததுமே ஓப்பியம் பயிரிட்ட விவசாயிகளை அழைத்து ‘உங்கள் ஓபியம் பயிர்களை நாங்கள் எதுவும் செய்யமாட்டோம், இன்னும் நிறைய பயிரிடுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என சொல்லியதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை சொல்கிறது. அமெரிக்க NATO படைகள் பெருமளவு ஆஃப்கனை கைப்பற்றிய பின்னரும் எப்படி இவ்வளவு ஓபியம் உற்பத்தியாக முடியும்? தலிபான்கள் கையில் இருந்த ஓபியம் வியாபாரம் இப்பொழுது அமெரிக்க ஆதரவுடன் நடக்கிறதாம், இதனால் 2001இல் இருந்ததை விட 5 மடங்கு அதிக ஓபியம் ஆப்கானில் உற்பத்தியாகின்றதாம். இதைப் பற்றியெல்லாம், ஏதாவதொரு காட்சியோ அல்லது சின்ன வசனமாவது ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் இருந்திருக்க வேண்டும். மாறாக, ஏதோ அமெரிக்க திரைப்படம் போல அமெரிக்க ராணுவத்தை ஹீரோக்களாக மட்டுமே காட்டிவிட்டார்கள்.

இந்த குறைகளைத் தாண்டி, ‘விஸ்வரூபம்’ ஒரு சிறப்பான பொழுதுபோக்கு திரைப்படம். 2013ஆம் ஆண்டின் இறுதியிலேயே ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகியிருக்க வேண்டும்; ஆனால் தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் அவர்களின் முந்தைய படங்களின் நஷ்டத்தால் 5 வருடங்களாக இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில், ஏப்ரல் 2018இல் ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விஸ்வரூபம்’ கிளைமாக்ஸில் பாம் வெடித்துவிடும் என்கிற நம்பிக்கையில் விமானத்தில் கிளம்புகிறான் ஒமர். பாம் வெடிக்கவில்லை, விஸாம் தடுத்துவிட்டான் என தெரியும்பொழுது அமெரிக்காவை விட்டு ஏற்கனவே ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகிவிட்டது. அமெரிக்காவை ஏதும் செய்யமுடியவில்லையே என்கிற கோபம் ஒமருக்கு, ஒமரை பிடிக்க முடியாத வருத்தம் விசாமுக்கு. இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் ‘என்னதான் இருந்தாலும், விஸாம் நம்மள்ல ஒருத்தன் இல்லையா’ என சலீம் கேட்கையில், ‘உனக்கு முழுக்கதை தெரியாது, அதான் அவனை நம்புற...’ என ஒமர் சொல்கிறான். அந்த முழுக்கதையும் இரண்டாம் பாகத்தில் சொல்லப்படும் என எதிர்பார்க்கலாம்.

முதல் பாகத்தின் முடிவில், இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளைக் காட்டி எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தார்கள். ஆஃப்கனில் இருக்கையில் ஒமர் விஸாமை சுட, விஸாம் அமெரிக்க ராணுவத்தால் காப்பாற்றப்பட்டு ஹெலிகாப்டரில் மேலே இழுக்கப்படுவதைப் போல ஒரு காட்சியும், அதற்கு முன் தான் இருக்கும் இடத்தைக் காட்டுவதைப் போல விஸாம் ஹெலிகாப்டருக்கு வெளிச்சம் காட்டுவதைப் போல ஒரு காட்சியும் காட்டப்பட்டது. அதே போல, விஸாமை ஒமர் கட்டிப்போட்டு வைத்திருப்பதைப் போல் ஒரு காட்சியும் காட்டப்பட்டது. மொத்தத்தில், முதல் பாகம் நம் முன் வைத்த பல கேள்விகளுக்கான பதில்களையும், ஒமர் மற்றும் விஸாம் இடையிலான ஒரு பலமான மோதலையும் ‘விஸ்வரூபம் – 2’ திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது!

 

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

முற்றிலும் கடைசி பட்ஜெட் ..

"மத்திய பட்ஜெட்டை 2018-2019ஆம் ஆண்டுக்கான பாஜக மோடி  அரசின் கடைசி பட்ஜெட் என்பதை தவிர வேறு ஆறுதலான அம்சங்கள் ஏதும் இல்லை. "
மாறாக பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று ஆறு மாதத்திற்கொரு முறையான அதிர்ச்சி என்ற வரிசையில் இந்த மத்திய பட்ஜெட்டும் மூன்றாவது பொருளாதார அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது.
ஒரு பட்ஜெட்டை அது பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தும் உடனடியாக நாம் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை அது எப்படி அனுகுகின்றது என்பதை வைத்தும் மதிப்பிடலாம்.
"2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த உறுதிபூண்டுள்ளதாக கூறுகிறார்கள். 
ஆனால், அரசு அமைப்பான நிதி ஆயோக் அதற்கு வாய்ப்பு இல்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டது. ஆக, அது குறித்தான அறிவிப்பு வெறும் வார்த்தை ஜாலம் மட்டும்தான்"
அதாவது ஒரு பட்ஜெட்டை அதன் மேக்ரோ பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் மதிப்பிடலாம். பொருளாதார வளர்ச்சி பகிர்வு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்ற மூன்று மேக்ரோ பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு இந்த பட்ஜெட் எந்த அளவு உறுதுணையாக இருக்கும் என்று பார்ப்போம்.
பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. இந்த வருடமும் விதிவிலக்கல்ல. 
அதற்குமேல் இந்த பட்ஜெட் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்த முயற்ச்சிக்காமல் அந்த சரிவின் வேகத்தை அதிகரித்து விட்டதோ என்று அஞ்சத் தோன்றுகின்றது.
அதாவது 2017-2018 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் என்று மத்திய புள்ளியல் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 
இது இந்த அரசின் மூன்றாண்டு ஆட்சியின் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
சரி, சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி ஆண்டின் வளர்ச்சி விகிதத்தோடு இதை ஒப்பிட வேண்டுமானால், அதற்கான புள்ளிவிவரம் இல்லை. இருந்த போதும் புதிய முறையில் கணக்கிடப்பட்ட இந்த 6.5% வளர்ச்சி விகிதத்திலிருந்து 2.2 % கழித்தால் பழைய கணக்கீட்டு முறையிலான வளர்ச்சி விகிதம் கிடைக்கும். 
அதாவது பழைய கணக்கீட்டு முறையில் 2017-2018-ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 4.3 சதவிகிதம் ஆகும்.
2007-08ஆம் ஆண்டு உலகப் பெருமந்தத்திற்கு பின் தொடர்ந்து சரியும் இந்திய பொருளாதார வளர்ச்சியினை சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தடுத்து நிறுத்தி, வளர்ச்சி விகிதத்ததை உயர்த்த தவற விட்டது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த பொருளாதார சரிவை சரிசெய்து வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றத் தவறியதோடு நில்லாமல் UPA அரசின் கடைசி காலாண்டின் வளர்ச்சி விகிதமான 4.9 சதவிகிதத்திற்கும் கீழே சென்றுள்ள பொருளாதாரத்தை மாற்றியமைத்து வளர்ச்சிக்கு வழிகாட்ட இந்த பட்ஜெட்டில் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக 2017-2018 க்கான பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட GDP யில் 1.8 % என்ற முதலீட்டுச் செலவு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 1.6 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக வருவாய் செலவு மிகவும் அதிகமாகியுள்ளது. ஒட்டுமொத்த மத்திய அரசின் வருவாய் செலவு 2017-2018 க்கான பட்ஜெட் மதிப்பீட்டீல் 85.6 சதவீகிதமாக கணக்கிடப்பட்டிருந்தது. 
அது 2017-2018 க்கான திருத்திய மதிப்பீட்டில் 87.7 சதவீகிதமாக உயர்ந்துள்ளது. வருவாய் செலவில் வட்டியின் சுமையும் 5.30 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒட்டு மொத்த வருவாய் செலவில் வட்டியின் பங்கு மட்டும் 27.30 சதவிகிதமாகும்.
பட்ஜெட்டில் பற்றாக்குறை அளவைப் பொருத்தே பொருளாதார ஸ்திரத்தன்மை தீர்மானிக்கப்படுகிறது. பற்றாக்குறையில் மூன்று வகையுள்ளன. அவையனைத்தும் இந்த பட்ஜெட்டில் உயர்ந்துள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
2017-2018 க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 3.2 % என்று இலக்கிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அரசு நடப்பு நிதியாண்டில் தனது ஒட்டுமொத்த செலவுகளுக்காக 5.95 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்குகின்றார்கள். அந்த 5.95 லட்சம் கோடியில் 5.31 லட்சம் கோடி, அதாவது மொத்த கடனில் 90 சதவிகிதம் வட்டிக்கே பயன்படுத்தப்படுகிறது.
அடுத்து வருவாய் பற்றாக்குறை 2.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 
இது சென்ற ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
அதாவது, அரசு தனது அன்றாட செலவுகளை சந்திக்க 4.39 லட்சம் கோடி அளவிற்கு கடனை உயர்த்தியுள்ளது. 
இதன் விளைவாக GDP யில் 44.7 சதவிகிதம் என்று சென்ற பட்ஜெட்டில் மதிப்பீட்டு செய்யப்பட்ட ஒட்டு மொத்த கடன்களின் சுமை இந்த திருத்திய மதிப்பீட்டில் 50.1 சதவிகிதமாக உயர்ந்தள்ளது. இது அரசின் பொறுப்பற்ற நிதி மேலாண்மையினையே காட்டுகிறது.
இப்படி உயர்த்தப்பட்டுள்ள கடன் சுமை வட்டிச் சுமையை மேலும் தீவிரமாக உயர்த்துவதோடு ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை பல நிலைகளில் பாதித்துக் கொண்டிருக்கிறது. இதனால் விலைவாசி உயரும் மற்றும் வட்டி விகிதம் உயரும். 
இவை ஏற்கனவே தனியார் முதலீட்டை மேலும் வீழ்ச்சியடையச் செய்து, இனிவரும் ஆண்டுகளில் இந்த பட்ஜெட் பொருளாதார மீட்புக்கு எந்த வாய்ப்புகளும் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

அரசியல்வாதிகளின் இது போன்ற நிதிப் பொறுப்பற்றத் தன்மையை கட்டுப்படுத்தவே 2003 ஆம் ஆண்டில் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டு நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறைக்கும் இலக்குகள் வகுக்கப்பட்டது.
இந்த அரசு அந்த இலக்குகளை தூக்கி எரிந்ததோடு அல்லாமல் வருவாய் நிதி பற்றாக்குறைக்கு இனி எந்த இலக்கும் தேவையில்லை என்றும் நிதி பற்றாக்குறைக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு அவசியமில்லை என்றும் கூறி இந்த நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.
இது இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதோடு அல்லாமல் நமது பொருளாதாரத்தின் மீது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்த்து பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கும் காரணமாகியுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது ஒரு முக்கியமான கருவாக நமது அரசியல் பொருளாதார விவாதத்தில் அமைந்து வந்திருந்தது. 

இந்த நிலை மாறி பொருளாதார வளர்ச்சி மட்டுமே தலையாய நோக்கமாக கடந்த மூன்று ஆண்டுகளில் கருதப்பட்டு வந்து அதற்கும் வாய்ப்பில்லாத ஒரு சூழலை இந்த பட்ஜட் உறுதிபடுத்தியுள்ளது.
கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட 12-ஆவது ஐந்தாண்டு திட்ட செலவீடு கடுமையாக குறைக்கப்பட்டதோடு அல்லாமல் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவே குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மனிதவளர்ச்சிக்கான துறைகளுக்கு வெறும் அறிவிப்புகள் மட்டுமே மிஞ்சியுள்ளது. உதாரணமாக விவசாயத்துறைக்கு 2017-2018 ல் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு ரூபாய் 56,992 கோடி திருத்திய மதிப்பீட்டில் ரூபாய் 56,589 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
 உண்மை நிலை வேறாக  இருக்க
ஒட்டு மொத்த பட்ஜெட்டின் அளவே 22.18 லட்சம் கோடி ரூபாய் என்பதை மறந்து பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பாஜக மோடி அரசுக்கு ஆதரவாக நடுநிலை(?)ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் ஏமாற்றுகின்றன .
 இது போன்றே மற்றும் பல அறிவிப்புகள் நகைப்புக்கு இடம் அளிக்கின்றன. 
வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதையே இந்த அரசு நிறுத்திவிட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஆசைக்கு முடிவேது?

வெயில்கால மதிய நேரம்.
'முன்னனுமதி பெறாவிட்டால் தயவு செய்து அழைப்புமணியை அழுத்தவேண்டாம்' என்று அவரது கதவில் எழுதியிருந்தது. நான்கு மணிக்கு சந்திக்க நேரம் கொடுத்திருந்த்தால், 3.50 மணிக்கு சென்ற நான், பத்து நிமிடங்கள் காத்திருந்த பிறகே அழைப்புமணியை அழுத்திதேன்.
கதவைத் திறந்த குஷ்வந்த் சிங், "உங்களுக்கு 50 நிமிடங்கள் இருக்கிறது. கேள்வியை தொடங்கலாம்..." என்று சொன்னார்.
அவரது இருமுகங்களை உலகம் அறியும். குஷ்வந்த் சிங் என்றாலே மதுவும் மங்கையும் என்ற எண்ணமே மனதில் தோன்றும். அவரது மறுபுறமோ சிறந்த எழுத்தாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், வார்த்தை பிரயோகத்தில் வல்லவர், கண்ணியமானவர், எப்போதும் மகிழ்வுடன் இருப்பவர், ஆழமான சிந்தனையாளர் என்பதை காட்டும்.

இதே பண்புகளுடன் வேறுபல எழுத்தாளர்கள் இருந்தாலும், மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுவது அவரது 'தற்பகடிகளே'. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியபோது கசங்கிய உடைகளுடன், வெற்றிலையால் சிவந்த வாயுடன் ஓட்டை அம்பாசிடர் காரை தானே ஓட்டிக் கொண்டு வருவார்.
ஒருமுறை அவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல காரில் அமர்ந்தார். அப்போது அமெரிக்க பெண்கள் இருவர் டாக்ஸி, டாக்ஸி என்றுகுரல் கொடுத்தவாறே காரின் கதவைத் திறந்துவிட்டு தாஜ் ஹோட்டலுக்கு போ என்று உத்தரவிட்டார்கள்.
பேசாமல் காரோட்டியாக செயல்பட்ட குஷ்வந்த் சிங் அதற்காக கவலை கொள்ளவில்லை. டாக்ஸிக்கான கட்டணத்தை வாங்கினாரா என்பதுதான் கேள்வி. இந்த சம்பவத்தை அவரே சொல்லக் கேட்டபோது சிரித்து சிரித்து வயிறே வலித்தது.
1998ஆம் ஆண்டிற்கான 'நேர்மையான மனிதர்' விருது குஷ்வந்த் சிங்கிற்கு வழங்கப்பட்டபோது, "நேர்மையானவன் என்று என்னை நானே சொல்லிக் கொள்ளமாட்டேன். மற்றவரின் பொருளை திருடக்கூடாது, பொய் பேசக்கூடாது என்ற நேர்மைக்கு அடிப்படையான இரண்டு பண்புகளும் என்னிடம் இல்லை. பேனா திருடும் குணம் எனக்கு உண்டு. அதிலுள்ள சுகமே தனி. என்னிடம் நிறைய பேனாக்கள் வைத்திருக்கிறேன்.''

''எந்தவொரு மாநாட்டிற்கு சென்றாலும் அனைவருக்கும் முன்பே சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஃபோல்டர்களில் இருக்கும் பேனாக்களை எல்லாம் சுட்டுவிடுவேன். அடிக்கடி பொய் பேசுவேன், ஆனால் அது மற்றவர்களின் மனதை மகிழ வைக்கும் சிறுசிறு பொய்கள்தான். அதாவது நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்பதுபோல" என்று சொல்லி என்னை பகடி செய்தார் குறும்புக்கார குஷ்வந்த் சிங்.
குஷ்வந்தின் நண்பரும், அவருடன் இணைந்து பல புத்தகங்களை எழுதியிருக்கும் ஹும்ரா குரைஷி இவ்வாறு சொல்வார், "மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் குஷ்வந்த். உணவில் பருப்பு அல்லது காய் என்று எதாவது ஒன்று தான் இருக்கும். மதிய உணவு வெறும் சூப் மட்டும்தான். மொபைல் போனையோ, கணினியையோ அவர் பயன்படுத்தியதே இல்லை.''
லோதி கார்டனில் குஷ்வந்த் சிங்குடன் நடைபயிற்சி மேற்கொள்வது பற்றி சொல்கிறார் குரைஷி, ''சிறிது தூரம் நடந்தபிறகு, நீ நடந்துவிட்டு வா என்று சொல்லி அங்கிருக்கும் படிகளில் அமர்ந்துவிடுவார் குஷ்வந்த். திரும்பி வரும்போது அவரை சுற்றி சுமார் 40-50 பேர் அமர்ந்திருப்பார்கள், தனது பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்."
குஷ்வந்த் சிங்-கன்வல் மலிக் திருமணம்.
குஷ்வந்த் சிங்கின் வெளிப்படையான, புத்திசாலித்தனமான பேச்சுக்களில் பாலியல் மற்றும் ஸ்காட்ச் இடம் பெற்றிருக்கும். இயல்பாகவே மகிழ்ச்சியான அவர் தன்னை சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்வார். எந்தவொரு சங்கடமான நிலைமையையும் நகைச்சுவையால் இயல்பாக்கிவிடுவார் குஷ்வந்த்.
குஷ்வந்த் சிங்கின் மகனும், பிரபல எழுத்தாளருமான ராஹுல் சிங் தந்தையின் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். "காலை நான்கு மணிக்கே எழுந்து, தேநீரை தானே தயாரித்துக் கொள்வார். தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குருத்வாரா பக்தி பாடல்களை கேட்பார். பிறகு தினசரி வேலைகளை தொடங்குவார். சரியாக 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒன்று-ஒன்றரை மணி நேரம் உறங்குவார்.''
குஷ்வந்தின் மாலைப்பொழுதுகளில் மது விருந்து பற்றி சொல்கிறார் நண்பர் ஸ்வராஜ் பால், ''அவருடன் மது அருந்த விரும்புபவர்கள் ஏழு மணிக்கு வந்துவிடவேண்டும். அதுவும் முன்னனுமதி பெறாமல் வருபவர்களை பார்க்கவே மாட்டார். அதேபோல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சென்றுவிட்டால் வாசலிலேயே காத்திருப்பார்கள். யாராயிருந்தாலும் சரி எட்டு மணிக்கு கிளம்பச் சொல்லிவிடுவார். இரவு உணவுக்கு பிறகு சரியாக ஒன்பது மணிக்கு படுக்கைக்கு சென்றுவிடுவார்."
குஷ்வந்த் சிங்கின் மற்றொரு நண்பர் காம்னா பிரசாத் இவ்வாறு சொல்கிறார், "என் வீட்டுக்கு விருந்துக்கு வர ஒத்துக்கொண்டபோது பருப்பு, ஒரேயொரு காய்கறி, சப்பாத்தி தவிர வேறு எதுவும் சமைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். எட்டு மணிக்கு இரவு உணவு உண்ணும் அவரது பழக்கம், `பஞ்சாப் கேசரி` பத்திரிகை ஆசிரியருடனான விருந்தின்போது ஒரேயொரு முறைதான் மாறியிருக்கிறது.
காம்னா மற்றொரு சுவராசியமான சம்பவத்தை பகிர்ந்துக் கொள்கிறார். "அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், குஷ்வந்த் சிங்கின் வீட்டிற்கு இரவு விருந்திற்கு வந்திருந்தார். இரவு எட்டு மணியானதும், குஷ்வந்த் சிங்கின் மனைவி கன்வல் ஜெயில் சிங்கிடம் 'உங்களுக்கான நேரம் முடிந்துவிட்ட்து கியானி ஜி' என்று சொன்னார்."

இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எம்.ஜே அக்பருக்கு இடமளித்தவர் குஷ்வந்த் சிங். அவர் குஷ்வந்த் பற்றி இவ்வாறு சொல்கிறார், "உடலில் டீஷர்டும், முகத்தில் புன்னகையும்தான் குஷ்வந்த் சிங்கின் அடையாளம். அதிர்ச்சியான தகவல்களையும் அவருடைய நகைச்சுவை சொல்லாடலால், சொல்லும் விதத்தால் இயல்பானதாக்கிவிடும் திறமை கொண்டவர் குஷ்வந்த் ஜி.''
''அந்த காலத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பயிற்சி மாணவர்களுக்கு குழுமத்தின் பல்வேறு பத்திரிகைகளுக்கும் அனுப்புவார்கள். எனக்கு இல்லஸ்ட்ரேட் வீக்லி ஒதுக்கப்படவில்லை. ஆனால் விதிகளை மாற்றி, என்னையும் ரமேஷையும் மாற்றி இல்லஸ்ட்ரேட் வீக்லிக்கு அழைத்துக்கொண்டார் குஷ்வந்த் சிங். அங்கிருந்துதான் என்னுடைய பத்திரிகைப்பயணம் தொடங்கியது" என்று நினைவுகூர்கிறார் எம்.ஜே அக்பர்.
குஷ்வந்தின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் எம்.ஜே. அக்பர், "லண்டன் அல்லது கேம்பிரிட்ஜில் படிக்காதவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நுழையவே முடியாத காலகட்டம் அது. அந்த சமயத்தில் டீ-ஷர்ட் அணிந்துக் கொண்டு கொலாபாவில் இருந்து நடந்து வருவார் குஷ்வந்த் சிங். அவர் ஆசிரியராக இருந்தபோதுகூட சட்டை அணிந்ததே இல்லை என்று நினைக்கிறேன்".
குஷ்வந்தின் மற்றொரு நண்பர் ஜிக்ஸ் கால்ரா சொல்கிறார், "சுருங்க எழுதி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கலைஞர் குஷ்வந்த் சிங். 'ஒரு சொல்லில் எட்டு எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்து, எட்டு வார்த்தைகளுக்கும் அதிகமான பெரிய வாக்கியத்தை எழுதாதே, ஒரு பத்தியில் எட்டு வாக்கியங்களுக்கு மேல் பயன்படுத்தாதே' என்பதே எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் குறிப்பு."
ஹும்ரா குரைஷி சொல்கிறார், "நான் குஷ்வந்த் சிங்குக்கு எந்தவிதத்திலும் சமமானவள் இல்லை. நான் மது அருந்தாதவள், அவரைப் போல அனைவருடனும் இயல்பாக பழகத் தெரியாது, ஆனால் அவருக்கு என்மீது தனி அக்கறை உண்டு".
"டெல்லியில் இருந்து குருகிராமத்திற்கு வீடு மாறிய பிறகு அவரை பார்க்க வாரம் ஒருமுறையாவது செல்லாவிட்டால், உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்று கேட்டு தொலைபேசி அழைப்பு வந்துவிடும்" என்று சொல்கிறார் குரைஷி.
"என் வீட்டில் வேலையாளோ, சமையல் செய்யவோ யாரும் இல்லை என்பதால் அவர் வீட்டுக்கு செல்லும்போது எனக்கு அடுத்த வேளைக்கான உணவை கட்டிக் கொடுக்கச் சொல்வார். அவரிடம் தயக்கமில்லாமல் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்" என்று குஷ்வந்தின் அக்கறையைப் பற்றி பகர்கிறார் குரைஷி.
குஷ்வந்த் சிங் தன்னை எவ்வளவுதான் நவீனமானவராக காட்டிக் கொள்ள முயற்சித்தாலும் அவர் அடிப்படையில் பழமைவாதியே என்று சொல்கிறார் அவரது மகன் ராஹுல் சிங்.
"எங்கள் வீட்டு மாடியில் ஒரு அழகான பெண் வசித்தார். ஆஃப்கன் தூதர் ஒருவரின் பெண்ணான அவருக்கும் எனக்கும் இடையில் ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தால் எனக்கு போன் செய்வார், நான் அவர் வீட்டிற்கு செல்வேன். என் வீட்டுக்கும் அவ்வப்போது வருவார் அந்த பெண். அவள் அப்பாவுக்கு தெரிந்தால் உன் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார் என்று என்னை திட்டுவார் அப்பா" என்கிறார் ராஹுல்.
"கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் என்றாலும்கூட சீக்கியர் என்பதில் பெருமை கொள்வார். நான் முடியை வெட்டிக் கொண்டதும் சீறினார் என்றாலும் எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங்களிலும் அப்பாவுக்கு நம்பிக்கை கிடையாது" என்கிறார் ராஹுல் சிங்.
மகிழ்ச்சியான ஆளுமையைக் கொண்ட குஷ்வந்த் சிங் பல பரிமாணங்களை கொண்டவர். உருது கவிஞர், வரலாறு மற்றும் இயற்கையில் ஆர்வம் கொண்டவர், தனது இருப்பால் மற்றவர்களை மகிழ வைப்பவர். பெருங்கூட்டத்தின் மத்தியில் இருந்தாலும் அவரது அசாதரணமான ஆளுமை, தனியாக பிரித்து காட்டும்.
தனது வாழ்வின் இறுதிவரை இளமையான இதயத்துடன் வாழ்ந்தவர் குஷ்வந்த் சிங். அவருக்கு 90 வயதானபோது, அவரிடம் கண்ட நேர்காணலின் போது, நிறைவேறாத விருப்பம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்.
குஷ்வந்த் சிங்கின் பதில் இதுதான், "ஆசைக்கு முடிவேது? இதயத்தில் இளமை ஊஞ்சலாடினாலும், மனதில் விருப்பங்கள் ஊடாடினாலும் உடலோ ஊன்றுகோல் தேடுகிறது. இறுதி மூச்சு வரையில் இறக்காது ஆசைகள். 
மனதின் ஆசைகள் நிராசைகளாகும் என்பதை அறிவேன்."
தமிழோசை 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...