bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

சிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக?


சிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள்.
சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபட்டிருக்கின்றன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த டூமா நகரில் ரசாயன தாக்குதல்கள் நடந்ததாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டபின், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எதிர்த் தாக்குதல் தொடுத்தன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சும் பிரிட்டனும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மூன்று நாடுகள் மட்டுமே சிரியா மீது அண்மை ஆண்டுகளில் தாக்குதல் நடத்தியது என்று கூறிவிடமுடியாது.
சிரியா மீது தாக்குதல் தொடுத்த நாடுகளின் நீண்ட பட்டியலை பார்க்கலாம்.
ரஷ்யா
சோவியத் ஒன்றிய சகாப்தத்தில் இருந்தே, ரஷ்யா சிரியாவுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.
சிரியாவின் மீதான ரஷ்யாவின் செல்வாக்கை தற்போதும் காணமுடிகிறது என்பதோடு, ஆயுதங்கள் மற்றும் பிற தளாவடங்களின் உதவியுடன் சிரியாவின் பஷர் அல்-ஆசாத் ஆட்சியை காப்பாற்றுவதாக விளாடிமிர் புதினின் அரசு வாக்குறுதி வழங்கியிருக்கிறது.

சிரியாவின் நிலத்தில் 2015 செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா காலை ஊன்றிய பிறகு, நிலைமைகள் அதிபர் பஷர் அல்-ஆசாதுக்கு சாதகமாக மாறின.
சிரியாவின் எதிரிகளை அடக்குவதோடு, ஐ.எஸ் தீவிரவாதக் குழுக்களின் புகலிடங்களிலும் குண்டுவீசி அவர்களுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வதாக கூறுகிறது ரஷ்யா.
ஆனால் ரஷ்யாவின் கூற்றுக்களை கண்டனம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வு ஆணையம், ரஷ்யாவின் தாக்குதல்களில் பலியானவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே என்று விமர்சிக்கிறது.
அமெரிக்கா
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியதில் இருந்து, அங்குள்ள கிளர்ச்சி அமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது.
சிரிய அரசு 2013ஆம் ஆண்டில் ரசாயனத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா, சிரியாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
2014ல், வளைகுடா பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பல நிலைகளில் 11,000க்கும் அதிகமான தாக்குதல்களைத் நடத்தின.
சிரியா நாட்டு பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்களுக்கு பிறகு, 2017இல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
2018 ஏப்ரல் மாதத்தில், டூமா நகரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதான சந்தேகங்கள் எழுப்பப்பட்ட பிறகு, தக்க பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் சிரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தாக்குதலும் தொடங்கிவிட்டது.

பிரிட்டன்
2015 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் மறைவிடங்கள் மீது பிரிட்டிஷ் விமானப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
2013ஆம் ஆண்டில், டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதான சந்தேகங்கள் வலுத்தபோது, ஆசாத்தின் ராணுவ நிலைகளை தாக்குவது பற்றி பிரிட்டன் சிந்தித்தது.
ஆனால் தாக்குதல் நடத்துவது பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெப்டுப்பில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
அண்மையில் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடைபெற்றதான சந்தேகம் எழுந்தபோது, இந்த தவறுக்கான தண்டனையில் இருந்து சிரியா அரசு தப்பமுடியாது என்று பிரதமர் தெரீசா மே அறிவித்தார்.
பிரான்ஸ்
2013ஆம் ஆண்டு முதல் சிரியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்புக்களுக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்கிவருகிறது என்பதோடு, 2015ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் மறைவிடங்களில் விமான தாக்குதல்களிலும் பங்கேற்றுள்ளது.
சிரியாவுடன் வரலாற்று ரீதியான தொடர்புகளைக் கொண்டுள்ள பிரான்ஸ், சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து அதன் முடிவு பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.
சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் அரசை பிரான்ஸ் ஆதரிக்கவில்லை

2013ஆம் ஆண்டு சிரியாவின் ராணுவ தளங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்துவது பற்றி பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டபோது, பிரான்ஸ் அரசு அதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது.
தற்போதைய பிரான்சு அதிபர் இமானுவேல் மக்ரோங்கும் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கிறார்.
கனடா
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினைத் தாக்கும் அமெரிக்கக் கூட்டணியில் கனடாவும் இடம் பெற்றுள்ளது.
2016இல் கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு அமைந்தபோது, அமெரிக்க கூட்டணியின் நடவடிக்கைகளில் இருந்து கனடா வெளியேறியது.
சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்களில் கனடா பங்கெடுக்காது என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
ஆஸ்திரேலியா
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் நிலைகளின்மீது நடந்த தாக்குதலில் ஆஸ்திரேலியா பங்கெடுத்தது.
ஆஸ்திரேலியா பங்கெடுத்த தாக்குதல் ஒன்றில், 90 சிரியா வீரர்கள் தவறுதலாக கொல்லப்பட்டார்கள்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று தவறாக கருதி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தவறுக்கு பிரதமர் மால்கம் டர்ன்புல் மன்னிப்பு கோரினார்.

நெதர்லாந்து
2014 செப்டம்பர் மாதத்தில், ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என நெதர்லாந்து முடிவெடுத்தது.
2015 ஆம் ஆண்டு வரை அந்நாடு ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நூற்றுக்கணக்கான விமான தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் F-16 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
சிரியாவில் தனது ராணுவம் இருப்பதற்கு நெதர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.
2016ஆம் ஆண்டு, சிரியாவிற்கும் இராக்கிற்கும் இடையில் ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்திவரும் போக்குவரத்து வழித்தடத்தின் மீதான தாக்குதலை துரிதப்படுத்த முடிவு செய்தது நெதர்லாந்து.
இரான், ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் விருப்பங்களும் மாறுபட்டவைகளாக இருந்தபோதிலும், அதன் அதிபர்கள் ருஹானி, புதின், எர்துவான் ஆகியோர் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவளிக்கின்றனர்
இரான்
இரான் ஒரு ஷியா முஸ்லிம் நாடு என்பதால் சிரியாவின் மீது அதற்கு அதிக ஆர்வம் உள்ளது. சுன்னி முஸ்லிம்களின் ஆதிக்கம் கொண்ட செளதி அரேபியாவின் செல்வாக்கு சிரியாவில் இல்லை.
பஷாரின் சிரியா ராணுவத்திற்கு உதவி செய்வதுடன் அதற்கு தேவையான உபகரணங்களையும், பொருளாதார உதவியையும் வழங்குகிறது இரான்.
அது மட்டுமல்ல, தனது நாட்டில் இருந்தே, சிரியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்புகளின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருக்கிறது இரான்.

துருக்கி
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி அரசு தனது இருப்பை அதிகரித்துள்ளது.
சிரியா அதிபர் ஆசாத்தின் ஆட்சியை துருக்கி எதிர்த்த நிலையிலும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராகவும் துருக்கி செயல்படுகிறது.
ஆனால் சிரியாவில் உள்ள குர்து இனத்தினரை வலுப்படுத்த துருக்கி விரும்பவில்லை.
சிரியாவின் அஃப்ரீன் நகரில், YPG என்ற குர்து இன அமைப்புக்கு எதிராக தீவிரமான தாக்குதலை மேற்கொண்டுள்ள துருக்கி, சிரியாவின் வட பகுதியிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
செளதி அரேபியா
சிரியாவில் இரானின் செல்வாக்கை எதிர்க்கும் நாடுகளில் செளதி அரேபியா முதன்மையானது.
அதிபர் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக போராடும் பல கிளர்ச்சி அமைப்புக்களுக்கு செளதி அரேபியா பெரிய அளவிலான ராணுவ உதவிகளை வழங்குகிறது.
சிரியாவில் உள்ள கிளர்ச்சி அமைப்புக்களுக்கு மூலோபாய நுண்ணறிவு தகவல்களை வழங்கும் செளதி அரேபியா, கிளர்ச்சியாளர்களுக்கு தேவையான பிற உதவிகளையும் வழங்குகிறது.
2014 ஆம் ஆண்டில், அமெரிக்காவுடன் இணைந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ் தளங்களின்மீது எட்டு வான் தாக்குதல்களையும் செளதி அரேபியா மேற்கொண்டது.
சிரியாவில் நடைபெறும் ரசாயன தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தாக்குதலுக்கு செளதி அரசு ஆதரவு அளிக்கிறது.
இஸ்ரேல்
சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் தலையிடும் விதமாக, இஸ்ரேலிய போர் விமானம் சிரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்தது.
சிரியா விவகாரத்தில் இஸ்ரேல் நீண்டகாலமாக நடுநிலை வகித்த போதிலும், இரானின் செல்வாக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
சிரியாவில் இரான் தலையிடுவது, லெபனானில் தனது பரம விரோதியான ஹெஜ்புல்லாவை வலுப்படுத்தும் என்று இஸ்ரேல் நம்புகிறது.
இரான் மற்றும் ஹெஜ்புல்லாவுடன் தொடர்புடைய வாகன அணிகள் செல்லும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சிரியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஒரு இஸ்ரேலிய போர் விமானத்தை சுட்டுத் தள்ளியது.
சிரியாவின் 12 நிலைகளின் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.
பஹ்ரைன் மற்றும் ஜோர்டன்
இந்த இரு மத்திய கிழக்கு நாடுகளும் சிரியா மீது தக்குதல் நடத்தியுள்ளன.
ஜோர்டன் அரசர் அப்துல்லாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதாக ஐ.எஸ் அமைப்பு வெளிப்படையாக எச்சரித்தபோது, சிரியாவில் விமானத் தாக்குதல்களில் இணைய முடிவு செய்தது ஜோர்டன்.
ஜோர்டானின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
2014இல், ஜோர்டான் நாட்டு விமானத்தை ஐ.எஸ் சுட்டு வீழ்த்தி, விமானியை கைது செய்தது. பிறகு அவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் 2015ஆம் ஆண்டு பஹ்ரைன் இணைந்தது.
சிரியாவில் தலையிடும் பிற நாடுகள்

இந்த 13 நாடுகளைத் தவிர, ஜெர்மனி, நார்வே, லிபியா மற்றும் இராக் போன்ற நாடுகள் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
உலகின் பிற எந்தவொரு நாட்டிலும் நிறுத்தியிருப்பதை விட சிரியாவில் மிக அதிக அளவிலான துருப்புகளை ஜெர்மனி நிறுத்தியுள்ளது. சிரியாவில் 1200 ஜெர்மனி துருப்புக்கள் உள்ளன.
சிரியா விவகாரத்தில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் மற்றொரு நாடு நார்வே. சிரியா கிளர்ச்சிப் பிரிவினருக்கு பயிற்சிகளையும் பிற உதவிகளையும் நார்வே வழங்குகிறது.
லிபியாவில் கர்னல் கடாஃபி வீழ்ந்த பிறகு, சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக 2011ஆம் ஆண்டு லிபியா, சிரியாவிற்கு தனது துருப்புக்களை அனுப்பியது.
இராக் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை எதிர்க்கிறது. அதோடு, சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கும் இரானின் விமானங்கள் தனது வான் வழியை பயன்படுத்த அனுமதித்தது. இது அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிரான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.


வியாழன், 5 ஏப்ரல், 2018

ஏமாந்த திரிபுரா?

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியைத் தழுவியது.  


பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியான திரிபுரா மக்கள் முன்னணி, பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்ததே காரணம் என திரிபுரா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் ஹிமந்த் பிஸ்வா தெரிவித்திருந்தார். 

ஆனால், திரிபுரா மக்கள் முன்னணி எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்தது என்பது புரியாத புதிராக இருந்தநிலையில், தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மக்கள் முன்னணியின் தலைவர் என்.சி.டெபர்பாமாவை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். 
அந்த சந்திப்பின்போது, திரிபுரா மாநிலத்தில் பழங்குடி மக்கள் வாழும் 8 மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் பகுதியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்கக் குழு ஒன்றை அமைப்போம். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6ல் மாற்றம் ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததாக தகவல் தெரிவிக்கிறது. 

தற்போது, திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் ஆகியும், தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வழியில்லை என்றும் கூறி கைவிரித்துள்ளது மத்திய அரசு. 
இதனால், ஆத்திரமடைந்த திரிபுரா மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பு கடந்த மார்ச் 30ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக தான் வெற்றி பெற எந்த அளவுக்கும் செல்லும் என்பதை அறியாத திரிபுரா மக்கள் முன்னணி தலைவர்கள் தற்போது கட்சியினரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சாதி,மத கலவரங்களைத்தூண்டுவது.கோடிகளில் குளிப்பாட்டி கட்சி தாவ வைப்பது ஒட்டு மொத்தமாக குதிரைப்பேரம் பேசுவதுதான் பாஜக பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க உதவியது.
இந்த விவகாரத்தில் அமித் ஷா முனைவர் பட்டமே பெறத்  தகுதியானவர். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலி வாட்ஸ் அப் 
பல கோடிக்கணக்கான செல்போன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் பெயரிலும் போலி செயலி ஒன்று உலாவருவதாக மால்வேர்பைட் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. 

அது வெளியிட்டுள்ள தகவலின்படி, பொதுவாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் தொடர்பான செயலிகளை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே தரவிரக்கம் செய்து பயன்படுத்துகிறோம். 
ஆனால், இந்த போலி வாட்ஸ்அப் அதற்கான லிங்க்குடன் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. 

இதனைத் தரவிரக்கம் செய்ய முற்படுவோரின் செல்போன் திரையில், தங்க நிறத்திலான வாட்ஸ்அப் முத்திரையுடன் கூடிய பக்கம் தோன்றும். 

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளை (Terms & Conditions) ஏற்றுக்கொள்வதாக அழுத்தினால், அது டவுன்லோடு செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்கும். 

அதை அழுத்திய பின்னர், கூகுள் ப்ளே ஸ்டோருக்கு செல்லாமல், நேரடியாக ப்ரவுசரின் வழியாக ஒரு இணையதளம் திறக்கும். 
முழுக்க முழுக்க அரபு மொழியில் இருக்கும் அந்த இணையதளத்தில், ‘வாட்ஸ் ப்ளஸ் ப்ளஸ் வாட்ஸ்அப்’ என்ற செயலியை டவுன்லோடு செய்ய பயன்பாட்டாளர் பணிக்கப்படுவார். 

இந்த செயலி அசல் வாட்ஸ் அப்பைவிட கூடுதல் வசதிகளைத் தந்தாலும், கூடிய விரைவில் பயன்பாட்டாளரின் செல்போனில் இருக்கும் விவரங்கள் திருடப்பட்டிருக்கும்.

 எனவே, கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக மட்டுமே வாட்ஸ் அப் உள்ளிட்ட எந்த செயலியையும் தரவிரக்கம் செய்யுமாறு, மால்வேர்பைட்ஸ் எச்சரித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவேரி செய்யவேண்டியது ?
"காவிரி நீர் பங்கீடு சம்மந்தமாக, காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக்  குழுவும் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். குறிப்பிட்ட நாளில் அது வராமல் போனதால் தற்போது கொதித்து இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது  எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை போராடிப் பெறவேண்டும். அதே நேரத்தில் தங்களை தயார்படுத்திக்  கொள்ளவும்  வேண்டும். மழை என்பது கர்நாடகா மற்றும் ஆந்திராவை ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழகத்தில் சுமார் 979 மிமீ மழை பெய்கிறது. இது மற்ற மாநிலங்களை விட அதிகமானது. எல்லோர் கண்ணோட்டத்திலும் தமிழ்நாடு என்ற மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக பார்க்கப்படுகிறது. 

இந்த காவிரி நீரில் வரும் பல டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அப்படி கலக்கவிடாமல் ஏரி, குளங்களிலும், அணைகளிலும் தடுப்பு அணைகளையும் கட்டி அந்த நீரை சேமிக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் தண்ணீர் சூழ் தமிழகமாக மாறும் என்று நான் நம்புகிறேன். கல்லணை கால்வாய்களில் நிறைய வாய்க்கால்கள் பெரிது பெரிதாக இருக்கின்றன. அந்த வாய்க்கால்களை கான்க்ரீட் கொண்டு அமைத்தால் ஓட்டம் வேகமடைந்து இரண்டு நாட்களில் நாகப்பட்டினம் சென்று தடுப்பு அணையில் சேர்ந்துவிடும். வயல்களில் இருக்கும் லட்சக்கணக்கான வாய்க்கால்களுக்கு பதிலாக பிவிசி பைப்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் அல்லது தெளிப்புநீர் பாசனம் செய்தால். ஐம்பது முதல் இருபத்தி ஐந்து சதவீதம் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கலாம். 
வீரப்பன்(பொதுப்பணித்துறை -ஒய்வு)


ஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த 2003 ஆண்டில் இருந்து 2013 வரை 'ஜலஎங்னம்' என்று ஒரு திட்டத்தை ஒரு லட்சத்தி எண்பத்தைந்தாயிரம் கோடி செலவு செய்து  பாசன மேம்பாட்டு திட்டத்திற்காக கொண்டுவந்தனர். அதேபோல கர்நாடக அரசு 1980ஆம்  ஆண்டிலிருந்து தற்போது வரை பாசனத்திற்காக ஐம்பதினாயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இருபத்திஐந்து வருடங்களில் பாசனத்திற்காகவும், பாசன மேம்பாட்டிற்காகவும் இவர்கள் செய்த செலவு வெறும் 6000 கோடி மட்டுமே. தமிழ்நாட்டின் சாபக்கேடு காவிரி நீர் என்பது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் விவசாயிகளுக்கு மட்டும் உள்ள பிரச்சனை போல பார்க்கப்படுவதுதான். உண்மையில் காவிரி என்பது தமிழகத்தின் உயிர்நாடி. மொத்தத்தில், காவிரி பிரச்சனை தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனை" என்று காவிரி பிரச்சனையில் 
பொதுப்பணித்துறையில் பணி புரிந்து ஓய்வில் இருக்கும் வீரப்பன் என்ற பொறியாளர் தீர்வை  சொன்னார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன் , "என்ன வயலும் வாழ்வும் போன்று போய் கொண்டிருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் மிக முக்கியமான விஷயம். காவிரி பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று இவர்கள்  பேசியதைப்  பார்த்தால் தமிழக அரசாங்கம்  இதுவரை காவிரிக்கு, விவசாய பாசனத்துக்கு செலவே செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. காவிரி நம் உரிமை, அதை வாங்கியே தீர வேண்டும். அதே போன்று பிற மாநிலங்களுடனான நீர் பிரச்சனையையும் சட்டரீதியாக வாங்க வேண்டும். அது நம் கடமை" என்றார்.    

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நாசகார ஆலை

 ஸ்டெர்லைட் தாமிர ஆலை  நிறுவனம் தான் வெளியேற்றும் கழிவுகள், அதிலுள்ள வேதிப் பொருட்கள், அதன் பின் விளைவுகள் ஆகியன பற்றி உண்மைக்கு புறம்பாக அல்லது பாதி உண்மைகள் அல்லது வேண்டுமென்றே திரித்து கூறுவது போன்ற நடவடிக்கைகளில் ஸ்டெர்லைட்டும்,அதனிடம் வாங்கிய காசுக்காக தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஈடுபட்டு வருகிறது. 

ஆகவே ஸ்டெர்லைட் ஆலை உபயோகிக்கும் வேதிப்பொருட்கள்,தாது மணல் குறித்த உண்மைகளை போராடுபவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும்  கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஸ்டெர்லைட் எவ்வளவு பெரிய நாசகார ஆலை என்பதும் அதற்கு ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு பொதுமக்கள் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பதும் விளங்கும்.


தாதுப் பொருள்

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு தாதுப்பொருள், கடல் மார்க்கமாக வெளிநாடுகளிலிருந்து ஆண்டிற்கு 12 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. 
இதன் பெயர் காப்பர் கான்சண்ட்ரேட். 
கரித்துகள் போன்றிருக்கும். 
சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தை வறுத்து மிகவும் சிறிய துகள்களாக அரைக்கப்பட்டு வருகிறது. இந்தத் துகள்கள் 100 மைக்ரோ மீட்டர் அளவுக்கும் குறைவாக அரைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் 100 என்றால் 10 மைக்ரோ மீட்டர் துகளும் இருக்கும். 

அதற்கு குறைவான துகள்களும் இருக்கும். துகள் அளவு குறையக் குறைய சரக்கு கொண்டு வருவது லாபகரமாக இருக்கும். 
2.5 மைக்ரோ மீட்டர் முதல் 10 மைக்ரோ மீட்டர் வரையிலான துகள்கள் சுவாசத்தின் மூலமாக நுரையீரலில் சென்று தங்கிவிடும். அதன் பின் வெளியில் வராது. 

இவை எஸ்.பி.எம். எனப்படும் தூசு - மாசு ஆக (பார்ட்டிகுலேட்) வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பாவில், ஒன்பது நாடுகளில் 2013 ஆம் ஆண்டு 3,12,944 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த வகை மாசுகளில் (பார்ட்டிகுலேட்) பாதுகாப்பான அளவு என்ற ஒன்று கிடையாது எனத் தெரிவித்துள்ளனர். அதன் படி 10 மைக்ரோ மீட்டர் அளவுள்ள தூசின் அளவு காற்றில் ஒரு கனமீட்டரில் 10 மைக்ரோகிராம் (1மைக்ரோ கிராம் என்பது ஒரு மில்லி கிராமில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அதிகரித்தால் 23 சதவீதம் புற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறது.

இந்த துகள்களில் 2.5 மைக்ரோ மீட்டர் அளவுள்ளவை அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். இவை நுரையீரலில் தங்கி வினையாற்றும். 

ஆகவே, இந்த வகை துகள்கள் ஒரு கனமீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்ற அளவில் அதிகரித்தால் அவை 36 சதவீதம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டிற்கு 12 லட்சம் டன் தாது சுமார் 1 லட்சம் லாரிகளில் சாலை வழியாக சுமார் 25 கி.மீ.தூரம் எடுத்துச் செல்லப்படுகிறது. 
அப்பொழுது காற்றில் பரவும் மாசுகளை சுவாசிப்பவர் நிலைமை என்ன என்பது குறித்து மத்திய - மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியங்கள் எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 

தற்போது இரண்டு மடங்கு உற்பத்தி அதிகரிப்பு என்றால் இந்த மாசுபடுதல் இரட்டிப்பாகலாம். அல்லது நான்கு மடங்குக்கூட ஆகலாம்.
கந்தக-டை-ஆக்ஸைடு: தாதுப் பொருளில் அதிகபட்சமாக 36 சதவீதம் தாமிரம் உள்ளது. சுமார் 33 சதவீதம் கந்தகம் உள்ளது. சிலிக்கேட் ஆக்ஸைடுகள் மற்றும் இரும்பு மீதம் உள்ளது. 
ஆகவே, முதலில் தாமிர ஆலையில் இந்த தாது உருக்கப்படும் போது தாமிரம் மாட்டி எனப்படும் அசுத்தமான தாமிரமாக பிரிகிறது. ஸ்லாக் எனப்படும் கழிவுகள் அடியில் பிரிந்து விடும். கந்தகம் காற்றில் உள்ள ஆக்சிஜனோடு சேர்ந்து கந்தக-டை-ஆக்ஸைடாக மாறும். 

இது கண் எரிச்சலை உருவாக்கும். மனிதத் தோலை துளைத்து புண்ணாக்கும். சுவாசித்தால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கும். 
மிக அதிகமாக சுவாசிக்க நேர்ந்தால் மரணம் சம்பவிக்கும். 
இதனை மேலும் ஒரு ஆக்ஸிஜன் ஏற்றி, சல்பர் ட்ரை ஆக்ஸைடாக மாற்றி, அதனை கந்தக அமிலமாக மாற்றுவார்கள். இவற்றில் ஒவ்வொரு வேதிப் பொருளுமே மிகவும் அதிகமாக அரிப்புத் தன்மை கொண்ட பொருளாகும். 

இந்த வாயு செல்லும் வழிகள் எல்லாம், பெரும்பாலும் குறிப்பிட்ட எஃகு(மைல்டு ஸ்டீல்) பயன்படுத்தப்பட்டிருக்கும். இதர இரும்பை பயன்படுத்தினால், அவை மிக விரைவில் அரிக்கப்பட்டுவிடும்.
 அந்தளவிற்கு அரிக்கும் தன்மை கொண்டவை. 
காப்பர் உருக்காலையின் உப பொருளான கந்தக-டை-ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டு கந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது. நளொன்றிற்கு 3600 டன் கந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது என்றால், நாளொன்றிற்கு கிட்டத்தட்ட 2340 டன் அளவிற்கு கந்தக-டை-ஆக்ஸைடு உற்பத்தியாகும். கந்தக அமிலம் உற்பத்தி ஆகும் தொழிற்சாலை மிக மோசமான அரிப்புத் தன்மை கொண்ட அமிலத்தால் பல சமயம் நின்று விடும் தன்மை கொண்டது. 

அது எங்குமே தொடர்ந்து ஓடும் தன்மை கொண்டது கிடையாது. அப்படி காப்பர் உருக்காலைக்கு அடுத்து உள்ள கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலை படுத்துவிட்டால் அப்பொழுது காப்பர் உருக்காலையிலிருந்து வரும் கந்தக-டை-ஆக்ஸைடு நிலை என்னவாகும்? 
கந்தக-டை-ஆக்ஸைடு வாயு என்பதால் சேமித்து வைக்க முடியாது. 

மேலும்,காப்பர் உருக்காலையை நினைத்த போது நிறுத்த முடியாது. அதன் வெப்பநிலை போன்ற பல காரணிகளால் அதனை துவக்குவதும் நிறுத்துவதும் அமிலத் தொழிற்சாலை போன்று செய்ய முடியாது. இங்குதான் வருகிறது பிரச்சனை. 

கந்தக அமிலம் பிளாண்ட் மீண்டும் துவக்கப்படும் வரையில் இந்த கந்தக-டை-ஆக்ஸைடு காற்றில்தான் திறந்து விடப்படும். அதுவே பல சமயங்களில் கண் எரிச்சல் தொண்டைக் கமறல் போன்றவற்றிற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

கந்தக-டை-ஆக்ஸைடு பாதிப்புகள்:

கந்தக-டை-ஆக்ஸைடு தோலில் அரிப்பு ஏற்படுத்தும், கண், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் போன்றவற்றை பாதிக்கும். அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு நுரையீரல் குழாய்களில் வீக்கம் ஏற்படுத்தும், மூச்சுவிட சிரமம் ஏற்படுத்தும், குறிப்பாக உழவு வேலை போன்ற கடினமான உடலுழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு.

இதன் காரணமாக மூச்சை இழுத்து விடும் போது வலி ஏற்படுத்தி இருமல் உண்டாக்கும். தொடர்ந்து ஆஸ்துமா பாதிக்கும். 
குழந்தைகள் கந்தக-டை-ஆக்ஸைடு சுவாசிக்க நேர்ந்தால் அவர்களுக்கு இளம் வயதிலேயே ஆஸ்துமா தாக்கும்.

புளோரின்ஃபுளோரைடு

பாஸ்பாரிக் அமில தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் இந்த வாயு எரிச்சலுட்டும் தன்மை கொண்டது. மூச்சுத் திணறல் ஏற்படும். 
இது கடலில் உள்ள பவளப் பாறைகளை அழிக்கும் தன்மை கொண்டது.

ஆர்சனிக்

கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து சிகிச்சை முறையில் ஆர்சனிக் விஷம் பற்றி குறிப்பு உள்ளது. 
வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்கு விஷம் வைத்து கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் ஆர்சனிக். 
நெப்போலியனை சிறை வைத்த போது, அந்த சிறையின் சுவர்களில் ஆர்சனிக் பூச்சு இருந்தது. 

நெப்போலியன் இறப்பிற்கு அதுவும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 

மிகக் குறைந்த அளவில் இருந்தாலே இந்த வேதிப் பொருள் பல நோய்களை உருவாக்க வல்லது. நமது உடல் செல்லில் உள்ள மைட்டோகாண்ட்ரியா என்ற பகுதிதான் சக்தி மையம் (எனர்ஜி சென்டர்). ஆர்சனிக் அந்த மையத்தை தாக்கி அழித்து விடும். 
ஆகவே, செல் உணவு கிடைக்காமல் அழிந்து போகும். 

இந்த வகையில் உயிரையே மெல்லக் குடிக்கும் விஷமாகும் இது.
 இது ஒரு புற்று நோய் தூண்டும் பொருள் (கார்சினோஜினிக்). தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தால் இது உடலில் புற்று நோய் வருவதற்கான காரணியாக அமையும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

தண்ணீரில் 10 கோடியில் 5 பங்கு (0.05பிபிஎம்) என்பதே உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள ஆர்சனிக் அளவு (டி.எல்.வி). 

ஆனால், 2005 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சுற்று வட்டார கிணறுகளில் ஆர்சனிக் அளவு கூடியுள்ளதா என்பதை ‘நீரி’ அமைப்பு மாதிரி எடுத்து பரிசோதித்த போது, 10 கோடியில் 8 பங்கு - அதாவது அனுமதிக்கப்பட்டதை விட அரை மடங்கு அதிகமாக இருந்தது.

மேலும், இந்த ஆலையின் மண்ணை பரிசோதித்த போது அது ஒரு கோடியிலேயே 1320 பங்கு இருந்ததாக (132 பிபிஎம்) ‘நீரி’ அறிக்கை தெரிவிக்கிறது. மழை நேரங்களில் தண்ணீர் இந்த தொழிற்சாலை வழியாக ஓடி வெளியில் வரும் போது, இந்த விஷப் பொருட்களையும் ஏற்றி வரும். 
அது பல இடங்களில் பரவுகிறது. 

ஆக, கழிவுகளை அவர்கள் ஆலை வளாகத்திலேயே கொட்டி வைத்திருப்பது என்பது, மழை வரும்வரை காத்திருக்கிறோம் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.
காரீயம்
தற்போது குழாய்கள்கூட காரீயம் இல்லாமல் இருக்க வேண்டும் என பிளாஸ்டிக் குழாய்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். காரீயம் புற்று நோயைத் தூண்டுகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாலேயே காரீயம், மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து விலக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் நீரி தீர்ப்பு பற்றி குறிப்பிடும் போது, காரீயம் அளவு அதிகமாக உள்ளதாக ‘நீரி’ அறிக்கையை சுட்டி காட்டியுள்ளது.

காட்மியம்

சிறுநீரகங்களை தாக்கி செயலிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்த தனிமம். இது பத்து லட்சத்தில் 0.5 பங்கு வரையிலும் அனுமதிக்கப்பட்ட அளவு. 

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ‘நீரி’ சோதனையில் காட்மியம் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருந்ததாக தெரிவிக்கிறது.
                                                                                                                               -க.ஆனந்தன்    (தீக்கதிர்)
#ஸ்டெர்லைட்டை மூடு #

திங்கள், 2 ஏப்ரல், 2018

சாமியே காணாமல் போனால்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் சிரமங்களை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம்  தங்கள் தீர்ப்பில் உள்ள "ஸ்கீம் " கும் பொருள் கூறியுள்ளது .
அவர்கள் கூறிய பொருள் மேலும் மத்திய அரசை கால அவகாசம் கேட்க வைக்கும் அளவில் குழப்பம் கொண்டதாகத்தான் உள்ளது.





பாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .

எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.


ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..?

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை, முறையே 404.25 டி.எம்.சி., 284.75 டி.எம்.சி., 30 டி.எம்.சி., மற்றும் 7 டி.எம்.சி., என பிரித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிலிகுண்டுலு அணையிலிருந்து 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு, ஆறு வாரத்திற்குள் 'ஸ்கீம்' உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஆறு வாரங்கள் முடிந்த பின்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்.பிடிலுக்குப் பதில் ?


 காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் இடம்பெற்றிருந்த, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் அல்ல.  பல கோணங்களில் தீர்க்கும் வகையில் பொருள் கொள்ளலாம் என்று  ஆக்ஸ்போர்ட் அகராதியில் உள்ள 'ஸ்கீம்' க்கான அணைத்து  விளக்கத்தையும் கூறி (?) மேலும் குட்டையை குழப்பி விட்டுள்ளது.

"காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிரமங்களை நீதிமன்றம் புரிந்து வைத்துள்ளது. இந்த பிரச்னைக்கு தக்க தீர்வு காணப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வோம். " என்று கூறி வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இதை சொல்லியே மோடி,எடப்பாடி ஆகியோரின் தமிழக விரோத அரசுகள் இன்னும் சில காலம் இளைப்பாறி விடும்.

பள்ளிக்குழந்தைகள் 


பாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.

ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..?

காணாமல் போன அமைதியைத்தேடி கோவிலுக்கு செல்கிறோம் அங்கு உள்ள சாமி சிலையே அமெரிக்காவுக்கு விற்பனையானால் நமக்கு மட்டுமல்ல அந்த சாமிக்கும் குறைகளைக்  களைவது யார்?

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...