bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 30 மார்ச், 2018

காவிரி நாடகம் ...,

கடைசி நாளின் கடைசி நிமிடங்களில் கூட, காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்புவெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த தமிழக விவசாயிகளின் முதுகில் குத்தி யிருக்கிறது மோடி அரசு.

தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் கொள்வதற்கான ‘திட்டம்’ ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு, வியாழக் கிழமை மாலை 5 மணியுடன் முடி வடைந்தது. 

ஆனால், கடைசிவரை காவிரி தொடர்பான எந்த உத்தர வையும் பிறப்பிக்காமல் மோடி அரசுதமிழக மக்களை ஏமாற்றி விட்டது.


இது தமிழக விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரும்கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.காவிரி நீர் பங்கீடு தொடர்பாக- ஏற்கெனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தன. 

இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில், “காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை 177.25டிஎம்சி என்றும், கர்நாடகத்திற்கு உரிய தண்ணீரை 284.75 டிஎம்சி என்றும் பங்கீடு செய்த உச்ச நீதிமன்றம், இதனடிப்படையில் மாநி லங்கள் நீரைப் பங்கிட்டுக்கொள்ள நடுவர் மன்றம் பரிந்துரை செய்தபடி ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசுஉருவாக்க வேண்டும்” உத்தரவிட்டது.

காவிரி நடுவர் மன்றமானது, தனது இறுதித்தீர்ப்பில் “நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம்” ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்ததால், உச்ச நீதி மன்றம் கூறியிருக்கும் ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று ஆணை யம்தான் என்று தெளிவானது. 

அதனடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும், தமிழக அரசும், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு கோரிக்கை விடுத்தன. 

தமிழக விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 
அணை யின் கட்டுப்பாட்டை கர்நாடக அரசிடமிருந்து பறிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை ஏற்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

மத்திய அரசின் நீர்வளத்துறை யானது, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்குப் பதிலாக, நான்கு மாநில அரசுகளின் அதிகாரிகளைக் கூட்டி, பிரச்சனையை மீண்டும் முதலில் இருந்து துவங்குவது போல ஆலோசனை நடத்தியது. 
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள்
அனைவரும் தற்கொலை
செய்து கொள்வோம்


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக அறிக்கை அளிக்கு மாறும் உத்தரவிட்டது. அதன்படியே நான்கு மாநிலங்களும் தங்கள் தரப்பு கருத்தை நீர்வளத்துறையிடம் தெரிவித்தன.
அதனைத் தனது கையில் வைத்துக்கொண்டு, உச்சநீதிமன்றம்‘ஸ்கீம்’ என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, மேலாண்மை வாரியம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை என்று புதிய வியாக்யானம் கொடுக்கஆரம்பித்தது. 

நடுவர் மன்றம் பரிந்துரைத்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையை யோ, நடுவர் பரிந்துரைத்தது மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று ஆணையத்தையும் தான் என்பதையோ வசதியாக மறைத்தது. அத்துடன் கர்நாடக அரசு கூறியிருந்தபடி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ‘காவிரி மேற்பார்வைக்குழு’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தவும் தீர்மானித்தது. 

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், திடீரென உச்ச நீதிமன்றம் கூறிய ‘ஸ்கீம்’ என்னவென்று உச்ச நீதிமன்றத்திடமே விளக்கம் கேட்கப் போவதாக- பிரச்சனையைக் காலம் கடத்தும் முயற்சியில் இறங்கியது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

6 வாரங்களாக வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு, கெடு முடிவதற்கு ஒருநாள் முன்னதாக மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுவது, தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகம் என்று கண்டனக் கணைகள் பாய்ந்தன.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பதற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மத்திய அரசு அதை மீறும் பட்சத்தில் உடனடியாக நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 
உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு, மார்ச் 29-ஆம் தேதிதான் முடிகிறது என்பதால், அதற்குப் பின்னால், நீதிமன்ற அவதூறு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சமாளித்தது. 
கடைசி நிமிடத்தில் கூட மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் என்று தமிழக பாஜக தலைவர்கள் கூறினர். 

தமிழக விவசாயிகளும் காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்புக்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்க முடிவு செய்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார ‘கெடு’ வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடையும் வரை, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல், மோடி அரசு தமிழக மக்களின் முதுகில் குத்தியுள்ளது.
மோடிக்கும்,பாஜகவுக்கும் முதுகில் குத்துவது ஒன்றும் புதிதல்ல.
அவர்களால் முதுகில் குத்தப்பட்டவர்கள் எண்ணி மாளாது.சமீபகால உதாரணம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு. 


புதன், 28 மார்ச், 2018

மாக்சிம் கார்க்கி

மாக்சிம் கார்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்.
 28 மார்ச் [யூ.நா. 16 March] 1868 – 18 சூன் 1936) ரஷ்யா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் மார்க்சிஸ்ட் . இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.


மாக்சிம் கார்கி இரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்ஸி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். இரஷ்யா, பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளைக் கற்றார்.


எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.
1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன
இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது.
கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன
இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.
பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.


இவரது எழுத்துகளின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது.
சோஷலிஸ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும் பல அமர இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.
RED SALUTE! !

செவ்வாய், 27 மார்ச், 2018

பொய் செய்தியா?பணம் தந்தால் போதும்.

மக்கள் விரோத பாதையில் இந்திய ஊடகங்கள்.
செய்தி இணையதளமான 'கோப்ராபோஸ்ட்' (Cobrapost) நடத்திய ரகசியப் புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக 'இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவான மெல்லிய செய்திகளை ' வெளியிட 17 இந்திய ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது.
'ஆப்பரேஷன் 136' (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த 2017ஆம் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index 2017), இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததை தொடர்ந்து இந்த புலனாய்வுக்கு 'ஆப்பரேஷன் 136 என்று பெயரிடப்பட்டது.
இந்தப் புலனாய்வின்போது, கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் செய்தியாளர் ஒருவர், 'ஸ்ரீமத் பகவத் கீதா பிரசார் சமிதி' எனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, 17 நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக பிரிவினையை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டால், பெரும் தொகை வழங்கப்படும் என்றும் மூன்று மாத காலம் தொடர்ச்சியாக விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்றும் அந்த நிருபர் ஊடக நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார்.
ஏழு செய்தித் தொலைக்காட்சிகள், ஆறு செய்தித்தாள்கள், மூன்று செய்தி இணையதளங்கள் மற்றும் ஒரு செய்தி முகமை உள்ளிட்ட அந்த 17 ஊடகங்களிலும் மூத்த பொறுப்புகளில் உள்ளவர்கள் பணத்துக்காக இந்துத்துவத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட ஒப்புக்கொள்வது கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.
வரும் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிராக மட்டுமல்லாது, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் சர்ச்சைக்கு ஆளாகும் தலைவர்களான அருண் ஜேட்லி, மனோஜ் சின்ஹா, ஜெயந்த் சின்ஹா, வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோருக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தொலைக்காட்சிகளில் ஒன்றான இந்தியா டி.வியின் விற்பனைப் பிரிவுத் தலைவர் சுதிப்தோ சௌத்ரி, "ஆச்சார்ய சத்திரபால் அடல் எனும் அந்த நபர் செய்திகளுக்கு பணமளிப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அத்தகைய செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எங்கள் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு விளம்பரத்தை வெளியிட ஒப்புக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறுவதே அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவே கோப்ராபோஸ்ட் தேர்ந்துடுக்கப்பட்ட காணொளிகளை மட்டும் வெளியிட்டுள்ளது. 
இந்தியா டிவி சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பிபிசி அனுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள இந்தி நாளிதழான தைனிக் ஜக்ரானின் முதன்மை ஆசிரியர் சஞ்சய் குப்தா, "ஜார்கண்ட், பிகார் மற்றும் ஒடிஷா மாநில விற்பனை மேலாளர் சஞ்சய் பிரதாப் சிங் செய்தி வெளியிடுவது குறித்து உத்தரவாதம் அளிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. 
அந்தக் காணொளி உண்மை என்று கண்டறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார்.
விளம்பரம்,பணத்துக்காக ஊடகங்கள் பாஜக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாகவும், சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும் செய்திகளை வெளியிடுவதாகவும் மக்களுக்கான உண்மை செய்திகளை வெளியிடுவதில் இருந்து இந்திய ஊடகங்கள் வெகுதூரம் விலகி விட்டன ,
அவைகள் பணத்துக்காக என்ன பொய் செய்திகள்,கட்டுரைகளை வேண்டுமானாலும் வெளியிட தயக்கம் காட்டுவதில்லை.இப்போதைய தேவை பணம் மட்டும்தான் என்பது  சமீப காலங்களில் இந்திய ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.
ஆனால் அதை மக்கள் விலை கொடுத்து வாங்குவதுதான் அந்த ஊடகம் வளர்ந்ததற்கு கரணம்,அடிப்படை என்பதை வை மறந்து விட்டன.

புதன், 21 மார்ச், 2018

முகநூல் மூலம் தகவல் திருட்டு.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடந்தது. அந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா முகநூல் (பேஸ்புக்) பயனாளிகள் ஐந்து கோடி பேரின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


ஆனால் அந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இப்போது, இந்த நிறுவனம் இந்திய தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தி இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரடெஜிக் நிறுவனம் (Strategic Communications Laboratories - SCL) மற்றும் ஒவ்லினொ பிஸ்னஸ் இன்டலிஜென்ஸ் (Ovleno Business Intelligence - OBI) நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்தியாவின் பத்து மாநிலங்களில், அந்த நிறுவனத்தில் 300 நிரந்திர பணியாளர்களும், 1,400 -க்கும் மேற்பட்ட ஆலோசனை ஊழியர்களும் பணிபுரிவதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது. (http://www.ovleno.in)
இந்த நிறுவனத்தின் தலைவராக அம்ரீஷ் தியாகி இருக்கிறார். இவர் செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியான கே.சி. தியாகியின் மகனாவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் பிரசாரத்தில் தனது பங்கு குறித்து முன்பே இவர் விவரித்து இருக்கிறார்.
எஸ்.சி.எல் - ஒ.பி.ஐ நிறுவனம் வழங்கும் சேவைகளில், 'அரசியல் பிரசார மேலாண்மை` யும் ஒன்று. அதில், சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்துவது, நிர்வகிப்பது, தேர்தல் பிரசார மேலாண்மை மற்றும் கைபேசி ஊடக மேலாண்மை ஆகியவை அடக்கம்.
சமூக ஊடக மேலாண்மையின் கீழ் , 'சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பது`, `இணையத்தில் நற்பெயர் ஏற்படுத்துவது` ஆகியவை வருகின்றன.
இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளும், அதாவது பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் எங்கள் வாடிக்கையாளர்கள் என்கிறது இந்நிறுவனம்.


இந்நிறுவனம் இதுவரை பா.ஜ.கவின் நான்கு தேர்தல் பிரசாரங்களை வெற்றிகரமாக செய்துள்ளது என்று இந்த நிறுவனத்தின் துணை தலைவர் ஹிமான்ஷு ஷர்மாவின் லின்கிடுஇன் (LinkedIn) கணக்கு சொல்கிறது . அதில் ஒன்று 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்.
ஆனால், காங்கிரஸ் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த நிறுவனத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றன. இந்த நிறுவனத்துடனான தொடர்பை மறுக்கின்றன.

"கட்சி எஸ்.சி.எல் நிறுவனத்தையோ அல்லது அம்ரிஷ் தியாகியையோ கேள்விபட்டது இல்லை. அவர்களுடன் இணைந்து பணியாற்றினோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை." என்று மறுக்கிறார் பா.ஜ.கவின் சமூக ஊடக பிரிவின் தலைவர் அமித் மால்வியா.


காங்கிரசுக்கு சமூக ஊடக திட்டங்களை வகுத்துதரும் திவ்யா":காங்கிரஸ் என்றுமே எஸ்.சி.எல் நிறுவனத்தின் சேவையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனத்தின் சேவையையோ பயன்படுத்தியது இல்லை" என்கிறார்.
தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்ததிற்காக பணியாற்றி வரும் அரசுசாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் தலைவர் ஜக்தீப் சோக்கர்" தேர்தல் செலவு குறித்து அரசியல் கட்சிகள் அளிக்கும் பிரமாண பத்திரத்தில், சமூக ஊடகங்களுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். ஆனால், எத்தனை பேர் அதுபோல செய்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றார்.


தேர்தல் பிரசாரத்திற்காக இப்படி தகவல்களை திரட்டுவது அமெரிக்காவில் முறைகேடாக பார்க்கப்படுகிறது. எஸ்.சி.எல் நிறுவனம் ஒரு வேளை அது போன்ற பிரசாரங்களில் இங்கு ஈடுப்பட்டு இருந்தால், அது எந்த அளவுக்கு குற்றச்சாட்டாக பார்க்கப்படும் என்று தெரியவில்லை.
தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான நிறுவனத்தில் தொழிற்நுட்ப கொள்கை  சட்டப்படி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது .
ஆனால், இப்போது உள்ள சட்டத்தில், வங்கி பயனர்களின் தகவல்கள் ஆகியவைதான் முக்கிய தரவுகளாக கருதப்படுகிறது. 
ஒருவரின் பெயர், விலாசம், விருப்பங்கள் முதல் நண்பர்கள் பட்டியல் வரை உள்ள தனிநபர் சார் பிரத்யேக தகவல்களை இச்சட்டவரையறைக்குள் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களாக சுட்டவில்லை.



முகநூலில் அவ்வபோது சில புதிர் போட்டிகள் பகிரப்படுகிறதுதானே.... அதாவது உங்களுடைய 
எதிர்காலத்தை சொல்லுகிறோம், நீங்கள் முற்பிறவியில் என்னவாக இருந்தீர்கள் என்பது போல போட்டிகள். அது போல ஒரு புதிர் போட்டி 2014 ஆம் ஆண்டு முகநூலில் உலாவியது. அந்த போட்டியை உருவாக்கியது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்ஸாண்டட் கொகன்.

அந்த புதிர் போட்டி அதில் பங்குபெறுபவர்களின் தகவல்களை மட்டும் கோருவதுபோல வடிவமைக்கப்படவில்லை. அவர்களது நண்பர்கள் குறித்த தகவல்களையும் கோருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பின்னர்  முகநூல் இதுபோல தகவல்கள் வெளியே போவதை தடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.
ஆனால், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தில் முன்னர் பணி புரிந்த கிறிஸ்டோபர், அந்த புதிர் போட்டியில் 270,000 பேர் பங்கேற்றதாகவும், ஏறத்தாழ 5 கோடி பேரின் தகவல்கள், குறிப்பாக அமெரிக்காவில் மட்டும், திரட்டப்பட்டதாக கூறி இருந்தார்.
இந்த தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் விற்கப்பட்டதாகவும், அதன் மூலம் உலவியல் ரீதியாக மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு டிரம்ப்புக்கு சாதகாமான தகவல்கள் வழங்கப்பட்டதகாவும் கூறுகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டை கேம்பிரித் நிறுவனம் மறுக்கிறது.
முகநூல் இது போன்ற புதிர் மற்றும் அப்ளிகேஷன்ஸ் மூலம் எங்களது விதிமுறைகளை மீறுகிறார்கள் என்பதை அறிந்தவுடன், அவற்றை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கிவிட்டோம் என்கிறது.
அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்கள்,  முகநூல் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க் முகநூல்  பயனர்களின் தகவல்களை எவ்வாறு காக்கிறது என்பது தொடர்பாக காங்கிரஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றமும் முகநூல் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியது.
பிரிட்டன் பிரதமர் இது கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.
இது விரிவான விஷயம் என்றாலும், அடிப்படையாக உங்களது முகநூல் பயனர் முகவரி மற்றும் கடவுசொல்லை கோரும் எந்த செயலிகளையும் முகநூலில்  பயன்படுத்தாதீர்கள்.

செவ்வாய், 20 மார்ச், 2018

சமூக முதலீடு தரும் மகிழ்வு.

உலகின் மகிழ்ச்சிகரமான பத்து நாடுகள்  .

  1. பின்லாந்து
  2. நார்வே
  3. டென்மார்க்
  4. ஐஸ்லாந்து
  5. ஸ்விட்சர்லாந்து
  6. நெதர்லாந்து
  7. கனடா
  8. நியூஸ்லாந்து
  9. சுவீடன்
10.ஆஸ்திரேலியா
இதுதான் அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள்.இந்த பட்டியலில் முதலாவது இடம் பின்லாந்துக்கு. 
சென்ற  ஆண்டு இந்தப் பட்டியலில் பின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.நார்வே முதல் இடத்தில் இருந்தது. 
பட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது. 
துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் மக்கள் மகிழ்ச்சியில்  காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையில்தான்  இருக்கிறது இந்தியா.
 இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பின்லாந்து. எப்படி முதலிடம்? பின்லாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களும்  சொந்த நாட்டில் இருந்ததைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது  ஐ.நா அறிக்கை.

பின்லாந்து காரர் ஒருவர்  மகிழ்ச்சியில் தன நாடு முதலிடம் பெற்ற மகிழ்ச்சியில் "என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும் நாங்கள்  இதே மகிழ்ச்சி மனநிலையில்தான் இருப்போம் ."என்றார்.
எல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு பின்லாந்தில் கொட்டிக்கிடக்கிறது. அதுதான் மக்கள்  அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். 
மேலும் இரண்டாவது உலக போரில் சிறிது அரசியல் நெருக்கடி உண்டானது அதன்  பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. பின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எந்த நாட்டுடனும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக உள்ளது.






பின்லாந்தில் வேலையின்மை சிறிது கூட கிடையாது. வாழ்க்கைக்கு தேவையான ஊதியம் மக்கள் அனைவருக்கும் நிச்சயம்.ஓய்வு நேரங்களை இங்குள்ள மக்கள்  இசை, குடும்பம், விளையாட்டு என  விருப்பமானவற்றில் செலவிடுகிறார்கள். இவையெல்லாம் கூட மக்கள்  மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவைப் போல் கல்வி கார்பரேட்கள் வசம் ஒப்படைக்கப்படவில்லை. இலவச கல்வியையும், இலவச தரமான மருத்துவ வசதியையும் அரசே வழங்கும் பின்லாந்து  மக்கள் நல வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும்  மக்கள் நலம் நாடும் ஆட்சி அங்கு . 
பின்லாந்து மக்கள்  யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் சம  வாய்ப்பு வழங்கப் படுகிறது. இவையெல்லாம் மக்களை  மகிழ்சியாக வைத்துள்ளது.

மேலும் இந்த மகிழ்ச்சி ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து வந்து பின்லாந்தில்  குடியேறியவர்களும் அங்கு  மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பின்லாந்து அதிகாரி ஒருவர் " எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு பின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ.
 அது அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்கள் மகிழ்வாக இருக்கிறார்கள். ஒருசெயல் சம்பந்தப்பட்ட ஒருவரை மகிழ்ச்சியில் வைக்கிறது  என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (பின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு  மூலக்காரணம் அரசு வழங்கும் இலவசமாக வழங்கும் தரமான  கல்வியும், நிறைவான  சுகாதார வசதியும்தான் காரணம்.
மகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை உணர்வு . ஆனால் அதுதான் மனிதனை நலமுடனும்,வளமுடனும் வாழவைக்கிறது. என்று குறிப்பிட்டார்.
நார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில்  நானோ தொழிற்நுட்ப ஆய்வை செய்து  வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர்  பின்லாந்தைப்பற்றி குறிப்பிடுகையில் 
"நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில்,மகிழ்ச்சியில்  வைத்திருக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான் ஐ.நாவின்  மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடங்களில் , நார்டிக் நாடுகள் இருக்கின்றன.
மக்களை நிறைவாக மகிழ்சியாக  வைத்திருப்பதற்காக அரசு  செலவிடும் தொகையை செலவாக இந்திய அரசு போல் சுமையாக  நார்டிக் நாடுகளின் அரசுகள் கருதுவதில்லை. 
அவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகள் உருவாகும்.அதன் மூலம் நாடு நலமாக,வலமாக அமைதியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. செயல்படுகின்றன.வெற்றியடைகின்றன.

நார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை.

வெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதையும் இலவசமாக.எல்லா மொழிகளையும் சமமாகக் கருதுகிறார்கள்.யார் மீதும் தங்கள் மொழியை திணிப்பதில்லை.
அனைத்தையும், அனைவரையும் அதாவது எல்லா இனம்,மொழி,மதம் உள்ளடக்கிய சமூகமாக ஒற்றுமையாக  இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். 
இப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான். 
 அதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நார்டிக் நாடுகள் இருப்பது எந்த வியப்பும் இல்லை."
என்கிறார் மகிழ்சியாக விஜய்சங்கர்.
இப்போது தெரிகிறதா ஒரு நாட்டின்  மக்களுக்கு அவர்கள் அரசு வழங்கும் தரமான கல்வி,சுகாதாரம்தான் அந்நாட்டின் மக்களை மகிழ்சியாக வாழ வைக்கும். அந்நாடு தனது என்ற உணர்வை உண்டாக்கும்.அதன் மூலம் நாடே வளமாக இருக்கும் என்பது. 
கல்வி,சுகாதாரம்,விவசாயம் போன்றவற்றை கர்ப்பரேட்கள் கையில் கொடுப்பதாலும் ,வங்கியில் சிறுக சேர்த்த மக்கள் பணத்தையும் சேவைக்கட்டணம் என்று சுரண்டினால் மக்கள் எங்கே மகிழ்வாக உணர்வார்கள்.?
இந்தியாவில் மகிழ்சியாக உணர்வது போலி சாமியார்களும்,கார்பரேட்களும்தான்.

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.

திங்கள், 19 மார்ச், 2018

பாட்டில் தண்ணீரில் எமன்.?

மீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ப் மீடியா என்ற ஒரு பத்திரிக்கை நிறுவனம், நடத்திய ஆய்வில் நாம் அருந்தும் பாட்டில் தண்ணீரில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சுத்தமான நீர் வேண்டும் என்று தான் பாட்டில் தண்ணீருக்கும், கேன் தண்ணீருக்கும் தண்டம் கட்டி பருகுகிறார்கள், மக்கள். 
இதிலுமா பிரச்சினை? என நீங்கள் எண்ணலாம்.
உலக அளவிலான பாட்டில்-கேன் என கொள்கலனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் சந்தையின் மதிப்பு ஓராண்டுக்கு சுமார் 147 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 9 இலட்சத்து 56,000 கோடி ரூபாய்கள்.
ஆர்ப் மீடியா நிறுவனம், பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்யும் 11 நிறுவனங்களின் 250 பாட்டிலை வாங்கி சோதனைக்கு உட்படுத்தியது. மொத்தம் 5 கண்டங்களில், 9 நாடுகளில் இருந்து 19 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கிருந்து குடிநீர் பாட்டில் மாதிரிகள் வாங்கப்பட்டன. 
இந்நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் பாலி எத்திலின் தெரெப்தலேட் (PET) என அழைக்கப்படும் பிளாஸ்டிக் வகை கலந்திருக்கிறது.
உலக அளவில் விற்பனை செய்யப்படும் பாட்டில் குடிநீரில் 100 மைக்ரான் அளவிற்கு அதிக அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 10.4 எண்ணிக்கையில் இருக்கின்றன. 
சில நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் லிட்டருக்கு 10,000 துகள்கள் வரை இருந்திருக்கின்றன. அதேபோல் 100 மைக்ரானுக்குக் குறைவான அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 314.6 எண்ணிக்கையில் இருக்கின்றன.
எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93% பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன.  இவை குடிநீர் அடைக்கும் பிளாஸ்டிக் குடுவைகள் தயாரிக்கப்படுகையில் உள்ளே தங்கிவிடும் துகள்கள்.இவைகளை அதை லட்சக்கணக்கில் தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் இவை நாம் வாங்கும் குடிநீரில் கலந்து வந்து நம் உடலில் சேர்க்கிறது.
இதே நிறுவனம் கடந்த ஆண்டு குழாய் நீரில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டது. 
அதன்படி உலக அளவில் குழாய் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக்கின் அளவு சராசரியாக லிட்டருக்கு 4.45 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இது பாதுகாப்பான குடிநீர் எனக் கூறி விற்கப்படும் பாட்டில் குடிநீரை விட மிகவும் குறைவு.
உடம்பில் உட்கொள்ளப்படும் பிளாஸ்டிக் துகள்களில் சுமார் 90% நமது உடல் வெளியேற்றிவிடுகிறது . 
மீதமுள்ள 10% துகள்கள் நமது உடலின் திசுக்கள் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களில் தங்கிவிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். 
மேலும் இந்த பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் உடலில் எவ்வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது குறித்த முழுமையான ஆய்வு எதுவும் இதுவரை இல்லை.
ஏகாதிபத்தியங்களால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளில் தண்ணீர் வழங்கல், சேவை என்ற நிலையில் இருந்து சந்தைக்கானதாக மாற்றப்பட்டு வருகின்றது. 
கடந்த 30 ஆண்டுகளில் பல நாடுகளில் தண்ணீரை தனியார்மயமாக்கி விட்டார்கள்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்  தனியார் வசம் சென்று கொண்டிருக்கிறது. உலகவங்கியின் உத்தரவிற்கு இணங்க தேசிய நீர் பாதுகாப்பு மசோதாவை நம் மீது திணிக்கத் தயாராகியிருக்கிறது மோடி அரசு. 
இதற்கான வரைவை கடந்த காங்கிரசு ஆட்சியிலேயே கொண்டு வந்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து   அம்மசோதா கிடப்பில் போடப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், சுத்தமான நீரைப் பெற தனியாரை நாடும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். 
சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தரக்கட்டுப்பாடு வைத்து அதனைக் கறாராக அமல்படுத்தும் மேற்குலகிலேயே பாட்டில் தண்ணீரில் அதிக அளவில் பிளாஸ்டிக் இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இந்தியாவிலோ இதற்கென எந்த கட்டுப்பாடும் இல்லை. 
இருக்கும் பாதுகாப்பு முறைகளெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஊழல்களால் பலனில்லாமல் தூங்குகின்றன.
இதை விட முக்கியமானது, தண்ணீர் என்றால் அது பாட்டில், பாக்கெட், கேன் என மாற்றி விட்டார்கள். மக்கள் வருமானத்தில் கணிசமான அளவு குடிநீருக்குச் செல்கிறது. பொது சேவையில் பெறப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது என்பதாக தற்காலத்தில் மக்கள் மனங்களில் மாற்றப்பட்டு விட்டன. 
உணவகங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் தனியார் நிறுவனங்களின் குடிநீரே ஆதாரங்களாக இருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பான நீர் குறித்த இத்தகைய விழிப்புணர்வு யாருக்கு ஆதாயம்?
இனி பாட்டிலில் பிளாஸ்டிக் துகள் இல்லாத உயர்தர குடிநீர் என அடுத்த சரக்கு சந்தையில் புதிதாக விற்கப்படும். இப்போது செலவழிப்பதை விட இனி குடிநீருக்கான பட்ஜெட் அதிகரிக்கும். தண்ணீரில் கலந்திருக்கும் தனியார் மயம் எனும் விஷத்தை முறியடிக்காமல் பாதுகாப்பான பாட்டில்களால் என்ன பாதுகாப்பு வந்து விடப் போகிறது?

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...