bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 14 மார்ச், 2018

ரத்தசோகையை வெல்லம் வெல்லும்!

இன்றைய தினம் குழந்தைகள், குமரிகள், பெண்கள், பெரியவர்கள் என வயதுவித்தியாசமின்றி ஏற்படும் நோய் ரத்தசோகை. ரத்தத்தில் சிவப்புஅணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிடக் குறையும்போது ஏற்படும் நிலைமையை ரத்தசோகை என்கிறோம். உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வது சிவப்பணுக்கள். இவற்றில் உள்ள ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்துப் பொருள்தான் இந்தப் பணியைச் செய்கிறது. 

எனவே, ரத்தத்தில் சிவப்புஅணுக்கள் குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும்.ஆரோக்கியமாக உள்ள ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/டெசி லிட்டர் வரையிலும், பெண்களுக்கு 12 முதல் 14 கிராம்/டெசி லிட்டர் வரையிலும் ஹீமோகுளோபின் இருக்கவேண்டும். இது ஆண்களுக்கு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ரத்தசோகை என்கிறோம்.
சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்- பி12, வைட்டமின்- சி, போலிக் அமிலம் ஆகிய சத்துகள் அவசியம். நாம்சாப்பிடும் உணவில் இந்தச்சத்துகள் தேவையான அளவுக்கு இல்லாதபோது ரத்தசோகை ஏற்படுகிறது.


இரைப்பைப்புண், மூல நோய், புற்றுநோய், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளின் பக்கவிளைவு காரணமாக ரத்தம் இழப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. சிலபெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு இருக்கும். இதனால் ரத்தசோகை வருவதுஉண்டு.

குடலில் கொக்கிப்புழுஉள்ளவர்களுக்கு வெளியில் தெரியாதவகையில் ரத்தமிழப்பு ஏற்பட்டு ரத்தசோகை வரலாம். ஒரு கொக்கிப்புழு தினமும் 0.3 மி.லி., ரத்தத்தை உறிஞ்சுகிறது. சாதாரணமாக ஒருவருக்கு 300 கொக்கிப்புழுக்கள் வரை இருக்கலாம். அப்படியென்றால், குடல் புழுக்களால் ஏற்படும் ரத்தமிழப்பின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

இவை தவிர, பரம்பரை காரணமாக ஏற்படும் சிவப்பணுக் கோளாறு, ரத்தப் புற்றுநோய், தைராய்டு பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, மலேரியா, மஞ்சள் காமாலை போன்றவற்றாலும் ரத்தசோகை ஏற்படுவதுண்டு.
பசி குறையும். உணவு ஜீரணம்ஆகாது. எப்போதும் உடல்சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி, உடல்வலி, கைகால் குடைச்சல், துாக்கமின்மை போன்றவை தொடக்கத்தில் தொல்லை தரும். முகம், நகம், நாக்கு வெளிறிப்போகும். முகம், கைகால் வீங்கும். நகங்களில் 'ஸ்பூன்' மாதிரி குழி விழும். தலைமுடி உதிரும். தொண்டை, வாய், நாக்கு ஆகியவற்றில் அடிக்கடி புண் உண்டாகும். அடுத்ததாக மாடிப்படிகளில் ஏறினால் மூச்சு வாங்கும். 

படபடப்பாக வரும். நெஞ்சு வலிக்கும். பெருமூச்சு வரும். தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும்.திடீரென்று ஒருவர் சாம்பல், மண், செங்கல்பொடி, விபூதி போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுகிறார் என்றால், அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். முக்கியமாக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்தான் இந்தப் பழக்கம்ஏற்படுகிறது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் 30 முதல் 50 மி.லி., வரை ரத்த இழப்பு ஏற்படலாம். 80 மில்லிக்குமேல் ரத்தப்போக்கு இருந்தால் ரத்தசோகை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணிகளுக்கு 5-வது மாதத்தில் ரத்தசோகை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

காரணம், அப்போதுதான் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். அந்த நேரத்தில் கர்ப்பிணிகள் அனைத்துவகை ஊட்டச் சத்துகள் அடங்கிய சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம். இல்லையென்றால் ரத்தசோகை ஏற்பட்டு, பிரசவத்துக்கு முன்பாகவே கரு கலைந்து விடலாம். குழந்தையின் வளர்ச்சி குறையலாம். குறைப்பிரசவம் ஆகலாம். குழந்தை இறந்து பிறக்கலாம்.


ஹீமோகுளோபின் அளவு 9 முதல் 12 கிராம் சதவீதம் வரை இருந்தால், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் புரதம் நிறைந்தபருப்பு உணவுகளையும் தொடர்ந்து உண்பதன் மூலம் ரத்தசோகையைக் குணப்படுத்திவிடலாம்; 7 முதல் 9 சதவீதம் வரை இருந்தால், இரும்புச் சத்து மாத்திரைகள், ஊசிகள், டானிக்குகள்மற்றும் போலிக் அமிலம் மாத்திரைகள் மூலம் சரி செய்துவிடலாம். 7 கிராமுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரத்தம் செலுத்த வேண்டும். 

இவை தவிர கொக்கிப் புழுவுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மாத்திரை சாப்பிட வேண்டும்.ரத்தம் பெருக்கும் உணவுகள் நமக்கு தினமும் 15லிருந்து 18 மில்லி கிராம் வரை இரும்புச்சத்து தேவை. பச்சையிலைக் காய்கறிகளிலும் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. 100 கிராம் அரைக்கீரையில் 39 மில்லி கிராம், 100 கிராம் சிறுகீரையில் 27 மில்லி கிராம், 100 கிராம் சுண்டைக்காய் வற்றலில் 60 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. பேரீச்சம்பழம் அதிக அளவில் இரும்புச் சத்தைக் கொண்டு உள்ளது. 

பால், பருப்பு, பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை, உளுந்து, துவரை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, எள் போன்றவற்றில் புரதச்சத்தும் இரும்புச் சத்தும் நம் தேவைக்கு உள்ளன.ஈரலும் சிவப்பு இறைச்சியும் இரும்புச் சத்துள்ள முக்கிய உணவுகளாகும். 

முட்டையின் மஞ்சள்கரு, கோழி இறைச்சி, மீன், நண்டு, அன்னாசிப்பழம், பிளம்ஸ், தக்காளி, அவரை, சோயாபீன்ஸ், காலிபிளவர், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பாகற்காய், புரோக்கோலி, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய், டர்னிப் இலைகள், கடுகு இலைகள் போன்றவற்றிலும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

வெல்லம் ரத்தசோகையைப் போக்கும் எளிய உணவுப்பொருள். வெல்லத்தை வைத்து பாயாசம், புட்டு, இனிப்புப்பொங்கல், தேன்குழல், அதிரசம், கொழுக்கட்டை, அடை, சீடை, பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை, வெல்லமிட்டாய், ஜாங்கிரி போன்ற பண்டங்களை செய்து சாப்பிட்டால், ரத்தசோகை சீக்கிரத்தில் விடைபெற்றுக் கொள்ளும்.
                                                                                                                                                                                                                  டாக்டர். கு. கணேசன்
gganesan95@gmail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...