bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

திராட்சை


பச்சை, சிவப்பு, நீலம், ஊதா மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் காணப்படும் திராட்சை பழமானது மது தயாரிப்பு மற்றும் உலர் பழங்களாக உட்கொள்ளப் படுகிறது.

திராட்சையில் விட்டமின்கள் A, B6, B12, C, D, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திராட்சைப் பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நல்ல பலன்களை பெறலாம்.
திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அதிக அளவு சாப்பிடக் கூடாது. எனவே வாரத்திற்கு 3-4 நாட்கள் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.
தனியாக திராட்சை பழத்தை மட்டும் சாப்பிட்டால், ஒரு நாளுக்கு 15- 20 திராட்சைகள் கொண்ட 2- 3 கப் சாப்பிடலாம்.
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • திராட்சை உள்ள ஊட்டச்சத்துகள் புற்றுநோய் செல்களுடன் எதிர்த்து போராடி புற்றுநோயின் உருவாக்கத்தை தடுப்பதுடன், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கிறது. அதற்கு திராட்சை பழத்தை விதைகள் மற்றும் தோலுடன் சாப்பிட வேண்டும்.
  • திராட்சையில் உள்ள ரெஸ்வெரடால் என்ற பாலிபினோல், வயது முதிர்வை தடுத்து, பல்வேறு தோல் பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ள திராட்சை பழத்தை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
  • கண்களின் செல்லுலார் அளவில் ஏற்படும் சிக்னல் மாற்றங்களினால் கண்களுக்கு அழுத்தம் ஏற்படாதவாறு தடுத்து கண் பார்வையினை அதிகப்படுத்துகிறது.
  • அல்சைமர் போன்ற மூளை தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.
  • திராட்சையை தினசரி உட்கொண்டு வந்தால், முழங்கால் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதுடன், கீல்வாதத்தை குறைக்கிறது.
  • வீக்கத்தை குறைக்கும் என்சைம்கள் திராட்சை பழத்தில் உள்ளதால், இது தமணிகள் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.






========================================================================================

நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் அடையாத போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் வயிற்றில் வாயு உண்டாகுகிறது
.
அதே நேரத்தில் அதிக அளவிலான ஃபைபர் உணவுகள் மற்றும் தாமதமாக ஜீரணமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது,வாயுக்களால் அடைக்கப்பட்ட மென்பானங்கள்  அடிக்கடி குடிப்பது இது போன்ற பழக்கத்தினால் வயிற்றில் வாயு  அதிகமாக சேரும்.
  • வயிற்றில் வாயு  அதிகம் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால், தலையை உயர்த்தி உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுக்க வேண்டும்.
  • கட்டில், சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய சூப், கஞ்சி, பழச்சாறுகள்  போன்ற நீராகாரத்தை அதிகமாக குடிக்க வேண்டும்.
  • கேஸ்ட்ரிக் பிரச்சனைகளை தடுக்க கடுகு சூப், சூடான பானங்களான டீ, காபி, க்ரீன் டீ மற்றும் இஞ்சி சாறு போன்றவற்றை குடிக்கலாம்.
வாயு  பிரச்சனைகளை தடுக்க..
  • தண்ணீரை சூடாக்கி அதில் ஒரு சிட்டிகை பெருஞ்சீரகம் மற்றும் புதினா இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம்.
  • 2 அல்லது 3 பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம்.
  • ஒரு நாளில் 2 அல்லது 3 முறைகள் ஒரு டம்ளர் நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஆனால் அதிகமாக குடிக்கக் கூடாது.
  • இலவங்கப் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து, அதை பாலில் கலந்து குடிக்கலாம்.


சனி, 26 ஆகஸ்ட், 2017

விவசாயிகளை ஒழிக்க ஒரு சந்தை !

ந்திய விவசாயத்தைப் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தகச் சூதாட்டக் களமாக  மாற்றுவதையே தனது வேளாண்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது மோடி அரசு! இதற்கேற்ப வேளாண்மைத் துறையின் விதை, நீராதாரங்கள், நிலம், இயற்கைவளம்  என அனைத்துக் கட்டமைப்புகளும் கார்ப்பரேட் நலனுக்கேற்ப மறு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போதுள்ள  வேளாண் சந்தைகளையும் கார்ப்பரேட் நலனுக்கானதாக மறுசீரமைக்கும் வகையில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகிய இரு திட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (FPO)
விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் என்பது கூட்டுறவு அமைப்பின் உருத்திரிந்த வடிவம். உலக முதலாளித்துவத்துக்கு சோசலிச அரசும் சமூக அமைப்பும் சவாலாக விளங்கிய சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், சோசலிசத்தின்பால் ஈர்க்கப்படும் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடனும் எல்லாத் துறைகளிலும் கூட்டுறவுகள் திட்டமிட்டே ஊக்குவிக்கப்பட்டன.
முதலாளித்துவ சந்தையின் சுரண்டலிலிருந்து ஒப்பீட்டளவிலான ஆறுதலை இந்தக் கூட்டுறவு அமைப்புகள் வழங்கியதால், தொழிலாளர் கூட்டுறவுகள் முதல் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவு வரையிலான பல்வேறு சிறு உடைமையாளர்களின் கூட்டுறவு அமைப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மக்களின்  ஆதரவைப் பெற்றன. கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றிய இந்திய அரசும் அன்று கூட்டுறவை ஊக்குவித்தது.
விவசாயி விளைபொருள் சந்தையை இணையதளம் வழியாக தேசியமயமாக்குவது தொடர்பாக இந்திய அரசும் கர்நாடக மாநில அரசும் இணைந்து, கர்நாடக மாதிரியை நாடெங்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக 26 மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அதிகாரிகளைக் கூட்டி வைத்து நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் (கோப்புப் படம்)
சோசலிசம் தனக்குச் சவாலாக இருந்தவரை இந்தக் கூட்டுறவு அமைப்புகளைச் சகித்துக் கொண்ட உலக முதலாளித்துவம், சோசலிசம் வீழ்ந்த மறுகணமே கூட்டுறவு அமைப்புகளை வீழ்த்தும் நடவடிக்கையை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தொடங்கியது. புதிய தலைமுறை கூட்டுறவு அமைப்புகள் (New Generation Co-operatives) என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்புகள், கூட்டுறவு என்ற பெயரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அந்த அமைப்புகளை முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்களாக மாற்றின.
சிறு உடைமையாளர்களை அடித்து அழிப்பது, அணைத்து அழிப்பது  என்ற இரு வழிமுறைகளில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தது. சிறு, குறு விவசாயிகள் தனித் தனியே சிதறி இருப்பதால், சந்தையில் அவர்களால் போட்டியிட இயலவில்லை என்றும் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக மாற்றுவதன் மூலம் போட்டியிடும் திறனை அவர்களுக்கு உருவாக்குவதாகவும் இந்த அமைப்புகளுக்கு வடிவம் கொடுத்திருக்கும் உலக முதலாளித்துவ நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த வகையில் 2003 -ல் வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம். 1956 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கம்பெனிகள் சட்டத்தின் பிரிவு 581-இல் ஒரு திருத்தம் செய்ததன் மூலம் இந்த சங்கங்கள் கம்பெனிகளாக அங்கீகரிக்கப்பட்டன. உற்பத்தி, கொள்முதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் தொடங்கி, பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்துகொள்வது வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தக் கம்பெனிகள் ஈடுபடலாம் என்று இச்சட்டம் அங்கீகரித்தது.
நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் அமலாகிவரும் இத்திட்டத்தின்படி, முதலில் கிராம அளவில் 15, 20 சிறு  குறு விவசாயிகளை இணைத்து விவசாயிகள் விருப்பக் குழுக்களை (INTREST GROUPS) உருவாக்குவது, இதில் முறையாக இயங்கும் குழுக்களை இணைத்து 1,000 விவசாயிகளைக் கொண்ட ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கமாக (FPO) அமைக்கப்படும் என்கிறார்கள்.
ஏற்கெனவே இது போல கரும்பு, தென்னை, மஞ்சள், வாழை விவசாயிகள் தனித்தனிச் சங்கங்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் தனித்து செயல்படுமளவுக்குத் தகுதி, திறமையைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளும் சங்கம், எதிர்காலத்தில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியாக (Farmer producer company – FPC) செயல்படுத்தப்படும் என்றும் கூறுகிறது, நபார்டு வங்கி.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பின்னணி
கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து அமலாகிவரும் இத்திட்டத்தை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பது சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பு (SMALL FARMERS AGRI & BUSINESS CONSORTIUM) என்ற நிறுவனம்.
விவசாயிகள் பெயரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் விவசாயிகள் யாரும் எந்தப் பொறுப்பிலும் கிடையாது. முழுக்க ஓய்வு பெற்ற மத்திய வேளாண்துறை மற்றும் நபார்டு வங்கியின் பல்வேறு உயர் அதிகாரிகள்தான் இதன் தலைமை நிர்வாகிகளாக உள்ளனர். மத்திய வேளாண்மைத் துறையில் பதிவுபெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனமாக இது செயல்படுகிறது. மேலும், வங்கியல்லாத நிதி நிறுவனமாகவும் ரிசர்வ் வங்கியால் இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
SFAC  நேரடியாக FPO -வை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை. மாறாக, இந்தியாவில் செயல்பட்டுவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடியாட்களான 21 சமூகக் குழுக்கள் மற்றும் ஆதார நிறுவனங்கள் (resource institute) என்ற பெயரிலான நூற்றுக் கணக்கான தன்னார்வக் குழுக்களை இப்பணியில் இறக்கிவிட்டு, இவற்றைக் கண்காணித்து இயக்கும் வேலையை மட்டுமே செய்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருசில ஆதார நிறுவனங்களை SFAC நியமித்துள்ளது. இந்த ஆதார நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைப்பதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் விவசாய வளம், பயிராகும் முக்கிய விளைபொருள்கள், அதன் சந்தை நிலவரம், பொதுவான மக்களின் கலாச்சாரம் மற்றும் மனநிலை, அரசியல் கட்சிகளின் செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வுசெய்து அறிக்கை தயாரிக்கும். இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்படும்.
ஆய்வில் பரிந்துரைக்கப்படும் பயிர்களுக்குத்தான் உற்பத்தியாளர் சங்கத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்கான நவீன தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு, சந்தைப்படுத்துவது ஆகியவை குறித்தும், சங்கத்தை சுயமாக நிர்வகிப்பது குறித்தும் இந்த ஆதார நிறுவனங்களே விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கின்றன.
எதற்கு இந்த திடீர் கரிசனம்?
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் தொடங்கிய காலத்திலிருந்து விவசாயத்தைப் புறக்கணித்து வரும் அரசுக்கு ஏன் இந்த திடீர் கரிசனம்?
”வேளாண்மைத்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது, இதற்கான விவசாயிகளின் அங்கீகாரத்தை உறுதி செய்வது ஆகியவற்றின் மூலம் இந்திய வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவது”, ”தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் இணைந்து செயல்படுவதற்கான தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்துவது” என்று தங்களின் நோக்கத்தைக் கூறுகிறது SFAC –  என்ற சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பின் இணையத்தளம்.
விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு விவசாயிகளும் கூடத் தனியார்தான். இந்தத் தனியார்களின் முதலீட்டை அதிகரிப்பதற்கு உதவ மறுக்கும் அரசு, கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிப்பதையும், அதற்கு விவசாயிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதையும் தான் இவ்வாறு குறிப்பிடுகிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது ஒரு கம்பெனியாக பதிவு செய்யப்படுவதால், இயல்பாகவே இதில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தான் தலைமை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர். பிற சிறு விவசாயிகள் அனைவரும் கம்பெனியின் பங்குதாரர்களாக மட்டுமே இருப்பர்.  என்ன பயிரிடுவது, என்ன விலைக்கு விற்பது ஆகியவற்றை FPO -வின் தலைமை நிர்வாகிகளும், இவர்களுக்கு நிர்வாக ஆலோசகராக உள்ள ஆதார நிறுவனத்தின் பிரதிநிதிகளும்தான் முடிவு செய்வார்கள். இது சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட்டுகளின் நோக்கத்துக்கு ஏற்பவே இருக்கும்.
விளைபொருளின் விலையையும் ஒப்பந்தம் செய்திருக்கும் கார்பரேட்டுகள் தான் தீர்மானிப்பார்கள். இந்த வர்த்தகச் சந்தையில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, ”குறைந்தபட்ச விலை”, ”விலை நிர்ணயம்” என்று விவசாயிகள் அரசிடம் கேட்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்த சொற்களை உச்சரிப்பதே அங்கு சாத்தியமில்லை.
மேலும், உரம், மருந்து மற்றும் வேளாண் கருவி வியாபாரம், இந்திய உணவுக் கழகத்திற்கு இணையாக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வது, அதைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பது, சங்க உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து வசூலிப்பது ஆகிய நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும் என்று மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள FPO-க்கான வழிகாட்டு நெறிமுறை அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, வேளாண் சந்தையின் மீது இதுவரை இருந்துவந்த பெயரளவிலான கட்டுப்பாடு மற்றும் விவசாயிகள்பால் அரசுக்கு இருந்த கடப்பாடு ஆகியவற்றை முழுமையாகக் கைவிடுவதற்கும், விவசாயிகளை கார்ப்பரேட் முதலைகளின் வாய்க்கு தின்னக் கொடுப்பதற்கும் அரசு செய்து வரும் பல ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று.
இதுவரை 25 மாநிலங்களில் மொத்தம்  975 FPO -க்கள் அமைக்கப்பட்டுள்ளன. (இதில் SFAC – நேரடியாக இயக்குவது மட்டும் 636, பிற நிறுவனங்கள் மூலம் இயங்குவது 339) சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 51 FPO -க்கள் இயங்குகிறது. பசுமைப் புரட்சியின் பிதாமகன் சி.சுப்ரமணியம் உருவாக்கிய நேசனல் அக்ரோ பவுண்டேசன் உட்பட 11 நிறுவனங்கள் தமிழகத்தில் FPO அமைப்பதற்கான ஆதார நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகின்றன.
ஈஷா யோகா மையத்தில் நடைபெரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (கோப்புப் படம்)
2012 -ஆம் ஆண்டில் கோவை அருகில் உள்ள தொண்டாமுத்தூரில் ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேசன் அமைப்பு தான், தென்னை விவசாயிகள் மத்தியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கியிருக்கிறது.
2017 – 18 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்தும் பொருட்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக  தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 81.18 லட்சம் விவசாயிகளில் சுமார் 92% பேர் சிறு, குறு விவசாயிகள் என்றும்,  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 40 லட்சம் விவசாயிகளை இந்த அமைப்பில் இணைக்கவிருப்பதாகவும் அரசு அறிவிப்பு கூறுகிறது.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பல்வேறு வழிகளில் கள்ள உறவு வைத்துள்ள ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், சமூகக் குழுக்களால் இயக்கப்படும் SFAC – நிறுவனம், மத்திய வேளாண்துறையின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் துணை நிறுவனமாகவே செயல்படுகிறது. FPO -வைப் போலவே e-NAM – எனும் தேசிய வேளாண் மின்னணுச் சந்தைத் திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பையும் SFAC -க்கே கொடுத்துள்ளது மத்திய அரசு.
தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை (e-NAM)
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்பதைப் போல, தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தையை ஏற்படுத்துவது என்பதும் மோடியின் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை
”மதுரை, ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய வேளாண் சந்தைகளின் தினசரி விலை நிலவரம், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள சரக்குகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை மின்னணு விவரங்களாகத் திரட்டுவது, இதன் மூலம் எந்த மாநிலத்திலிருக்கும் ஒரு வர்த்தகரும், விவசாயியும் நாடு முழுவதுமுள்ள விலை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட்ட 25 விளை பொருட்களுக்கு இலாபகரமான விலையைப் பெற பேரம் பேச முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கலாம்” என்று மத்திய வேளாண்துறை கூறுகிறது.
வணிகர்கள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற, தாராள லைசென்சு வழங்குவது, வேளாண் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தர நிர்ணயம் மற்றும் ஏல விதிமுறைகளை உருவாக்குவது, அரசின் வேளாண் விற்பனைக் கமிட்டி(APMC) -யின் செயல்பாட்டு வரம்பைக் கட்டுப்படுத்துவது, கொள்முதல் செய்யும் இடத்தில் மட்டுமே வரி விதிப்பது (single point levy), நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே லைசென்ஸ் வழங்குவது ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கித் தான் இந்த வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மற்றும் கார்ப்பரேட் வேளாண் நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ளூரளவில் செயல்படும் சந்தைகளும், இடைத்தரகர்களும் பெரும் தடையாக உள்ளனர். தங்களுக்கு நெருக்கமாகவும், ஏற்கெனவே அறிமுகமாகமானவர்களாகவும் இருப்பதால் உள்ளூர் தரகர் மற்றும் வியாபாரிகளையே விவசாயிகள் நம்பிக்கையான நபர்களாக பார்க்கின்றனர். இந்த சந்தை முறைக்கு அப்பாற்பட்ட அந்நிய நிறுவனங்களால், விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.
எனவே, உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் விடுபடவேண்டுமானால், நேரடியாக தேசிய சந்தையை அணுக வேண்டும் என்றும், அங்கே ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது மோடி அரசு. ஒரு தேசம்  ஒரு வரி, ஒரு தேசம்  ஒரு கல்வி, ஒரு தேசம்  ஒரு பண்பாடு என்ற வரிசையில் வருகிறது ஒரு தேசம் ஒரு சந்தை என்ற இந்த ஏற்பாடு. உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலை ஒழிப்பது என்ற பெயரில் உள்ளூர் அளவிலும், மாநில அளவிலும் நிலவுகின்ற பொருளாதாரத்தை முற்றிலுமாக வேரறுப்பதும், இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக் கொள்ளைக்கு வேளாண் சந்தைகளைத் திறந்து விடுவதுமே மின்னணு வர்த்தகச் சந்தை முறையின் நோக்கம்.
விவசாய விளைபொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு e-NAM அவசியம் என்று இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி கூறியிருப்பதும்,FICCI மற்றும் CII போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்கள், வேளாண் விற்பனைக் கமிட்டிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் e-NAM -ஐ கொண்டு வர வேண்டும் என்று கோரி வருவதும் இதற்கான நிரூபணங்கள்.
அதனால் தான் கார்ப்பரேட் காவலனான மோடி, 250-ஆக உள்ள மின்னணு வேளாண் சந்தையை நடப்பாண்டில் (2017 – 18)  585-ஆக உயர்த்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்மாதிரி ! விவசாயிகளுக்குச் சவக்குழி !
இதுவெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது கர்நாடக மாநிலத்தின் நிலை. அங்கே ராஷ்ட்ரிய இ-மார்க்கெட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (ReMS) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன், கர்நாடகா வேளாண்துறை இணைந்து 2015 -ல் ஒருங்கிணைந்த சந்தை (unified market platform) முறையை கொண்டுவந்துள்ளது.
11,000 கிராமங்கள்,   22 லட்சம் விவசாயிகள், 17,000 கமிசன் ஏஜெண்டுகள்,  32,000 வர்த்தகப் பங்குதாரர்கள்,  157 சந்தைகள் ஆகிய பலத்துடன் ஆண்டுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது, ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனம். இந்த வர்த்தகச் சூதாட்ட நிறுவனம்தான் இன்று, கர்நாடகா மாநிலம் முழுக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற தனியார் சங்கிலித்தொடர் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது. இந்த கர்நாடகா மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்கும் நோக்கத்தில் சமீபத்தில் 26 மாநில வேளாண் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்.
ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் போலவே, NeML, ECO e MARKET, FRESH e MARKET, NCDFL E MARKET என்று  பல பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தனித்தனியே FPO -க்களை உருவாக்கிக் கொண்டு கார்ப்பரேட் சேவையில் வரிசை கட்டி நிற்கின்றன. இவர்களுக்கான புரவலனாகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ”ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தால் வழக்கத்தைவிட கர்நாடக விவசாயிகள் 38% சதவீதம் அதிக லாபம் பெற்றிருப்பதாக” ஒரு பிரச்சாரத்தை கிளப்பி விட்டது நிதி ஆயோக். பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு பரிசீலித்தால், அது வெறும் 13% மட்டுமே என்பது பின்னர் அம்பலமானது.
இ.சாப்பல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம். கமிசன் மண்டிக் காரர்களைவிட கார்ப்பரேட்டுகள் அதிக விலை தருகிறார்கள் என்ற புருடா அங்கே ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. அது மட்டுமல்ல, ம.பி.யில் 21 சந்தைகள் e-NAM உடன் இணைக்கப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மாண்ட்சோர் சந்தையும் அவற்றில் ஒன்று.
விளைபொருட்களுக்கு நியாயமான விலை, அரசு கொள்முதல் என்பதுதான் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை. 25 பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை என்று ஒன்றை அரசு நிர்ணயம் செய்தாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இது நாடுமுழுவதும் நடக்கும் விவசாய கொள்முதலில் வெறும் 6% மட்டுமே. மீதமுள்ள பொருட்களை படுபாதாள விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தாலும், அதனைத் தடுக்கவோ தண்டிக்கவோ மத்திய மாநில அரசுகள் சட்டம் எதுவும் இயற்றவில்லை.
தேசிய மின்னணு சந்தையில் குறைந்தபட்ச விலைக்கு கீழே யாரும் விலை கேட்கக் கூடாது என்ற விதியெதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சுதந்திர சந்தைக்கு எதிரானது என்பதால் குறைந்தபட்ச விலை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.
அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் நவீன வேளாண் முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலமைகளால் பெரும்பான்மையான சிறு விவசாயிகளின் சிறுவீத உற்பத்தி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதை FPO என்ற பெயரில் ஒன்றாகத் திரட்டி, சுதந்திரச் சந்தை முறைக்குள் கொண்டுவருவதன் மூலம், சிறு குறு விவசாயிகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவது என்பதற்காக தந்திர வலை விரிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளைக் கவ்விப்பிடிக்கும் கிடுக்கியின் இரண்டு முனைகள். வாழ வழிகேட்டு மன்றாடும் விவசாயிகளை இந்தக் கிடுக்கியால் பிடித்து, கார்ப்பரேட் முதலைகளுக்கு தின்னக் கொடுக்கிறது மோடி அரசு.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மார்க்ஸ் எனும் அரக்கன்

பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.
பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.
கையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். ’அகதி’ என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883-இலேயே இறந்து விட்டவர்.
ஆம்! ‘மார்க்ஸ் எனும் அரக்கன்’ என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறிகொண்ட எதிர்வினைக்குக் காரணம்.
“ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?” இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.
இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத் தக்கதே. 15 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், “மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது” என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. “அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை” என்பதே அந்தப் பொதுக் கருத்து.
பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா கூறினார், “நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல, நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இதுதான். இத்துடன் முடிந்தது” இது அவரது பிரகடனம்.
வரலாறோ திரும்பியது; ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரசியாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலகச் சந்தை முழுதும் பீதி பரவத் தொடங்கியது.
“உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?” என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் “ஃபைனான்சியல் டைம்ஸ்” பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? “டாஸ் காபிடலை (மார்க்சின் “மூலதனம்” நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!”
முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட “நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?” என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.
“தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்” என்று எச்சரிக்கை செய்கிறார், மிகப் பெரும் கோடீசுவரனும் ஊகச்சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.
“முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சமநிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.”
“அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை சந்தை கடுங்கோட்பாட்டுவாதம்தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்.”
இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச்சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.
’நியூயார்க்கர்’ பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997-இல் எழுதினார். “வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.
பிரிட்டீஷ் பத்திரிகையாளர் – எழுத்தாளர் ஃபிரான்சிஸ் வீன்
பிரிட்டீஷ் பத்திரிகையாளர் – எழுத்தாளர் ஃபிரான்சிஸ் வீன்
மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன்முறையாக மார்க்சைப் படித்தாராம். “உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்” – இவை மார்க்சைப் படித்தபின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.
முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்சும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம். ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை – அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.
கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: “ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எலலா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.”
சமீப காலம் வரையிலும் இங்கிலாந்தில் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்; அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல, “திடப்பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன” அல்லவா?
உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும், அந்தச் சரக்கானது, பேராற்றலையும் உயிர்த்துடிப்பையும் பெற்று, தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.
நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும், அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்தரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம்தான் இருக்கிறது; அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.
பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்துவரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21-ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார் கார்ல் மார்க்ஸ்.
                                                                                                                       – ஃபிரான்சிஸ் வீன்
(’கார்ல் மார்க்ஸ்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்.)
இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் Why Marx is man of the moment வெளியான கட்டுரை.
’இந்து’ நாளேட்டிலிருந்து (22.7.05) தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
– புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2005.
நன்றி : வினவு

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

ஊழல் புரியவே இல்லையா?

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல் தொடுத்திருக்கும் மரணத் தாக்குதல்கள், விவசாயத்தில் அழிவு, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள், அதிகரித்து வரும் பசு பயங்கரவாத தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சுகாதாரத்துறையின் சீர்கேடுகள், குழந்தைகள் மரணம், இந்தியாவின் கழுத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் சீனக் கத்தி, எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள், நட்பு நாடுகளாக இருந்த அண்டை நாடுகளின் விரோதம்..


கடந்த மூன்றாண்டுகளில் மோடி சந்தித்திருக்கும் தோல்விகளின் சிறிய பட்டியல் இவை. இன்னொருபுறம் தொடர்ந்து மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று வருகின்றது. 
இந்த வெற்றிகளுக்கு குறிப்பிட்ட மாநிலங்களில் நிலவும் உள்ளூர் அரசியலின் நிலை, சாதி வாக்கு வங்கிகளின் பலாபலன்களைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்வது, மத ரீதியில் சமூகத்தைப் பிளந்து வைத்திருப்பது, வலுவான எதிர்கட்சிகள் இல்லாத நிலை என பல்வேறு காரணிகள் உள்ளன. எனினும், அவையனைத்தையும் கடந்து “மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் பராமரிக்கப்படுகிறது.

தமிழகத் தொலைக்காட்சி விவாதங்களில் கூட ஊழல் என்றாலே அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு ஆகிய கட்சிகளோடு தொடர்புடைய விசயம் போலவும், பாரதிய ஜனதா ஊழலின் கறைபடாத புனிதப் பிறவி போலவும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுபுத்தியை அனைவரும் ஏற்றுக் கொண்டே விவாதிக்கின்றனர்.

ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?

இதோ மோடியே நேரடியாக பங்கேற்ற ஊழல்களின் ஒரு சிறிய தொகுப்பு:

2005 -ம் ஆண்டு தனது வழக்கமான பாணியில்; “கிருஷ்ணா கோதாவரி படுகையில் சுமார் 2.2 லட்சம் கோடி மதிப்பிலான எரிவாயு கண்டறியப்பட்டிருப்பதாக” அறிவித்தார் மோடி.

அதைத் துரப்பணம் செய்ய சுமார் 20,000 கோடி நிதியை ஒதுக்குகிறார். குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பரேஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடைந்தால், 2007 -ம் ஆண்டுக்குப் பின் இந்தியா பெட்ரோலை இறக்குமதி செய்யவே தேவையிருக்காது என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

இறுதியில் மக்களின் வரிப்பணம் இருபதாயிரம் கோடியைக் கடலில் கொட்டிய பின்னும் எதிர்பார்த்த அளவில் எரிவாயு துரப்பணம் செய்யப்படவில்லை. கடைசியில் நட்டத்தில் மூழ்கிய குஜராத் மாநில பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி கையகப்படுத்த பிரதமரான பிறகு உத்தரவிடுகிறார் மோடி.

மோடி முதல்வராக இருந்த போது, சுமார் நானூறு கோடி மதிப்பிலான மீன் பிடி ஒப்பந்தம் முறையான டெண்டர் இல்லாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.


சுமார் 6,237.33 கோடி மதிப்பில் 2003 -ம் ஆண்டு குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட சுஜலாம் சுபலாம் யோஜனா என்கிற திட்டத்தில் சுமார் 500 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதை குஜராத் சட்டமன்றப் பொதுக் குழுவே அம்பலப்படுத்தியது.

குஜராத் மாநில பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு (GSPC) சொந்தமான பிபாவாவ் மின் உற்பத்தி நிலையத்தை ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கு எந்த டெண்டரும் கோராமல் 381 கோடி ரூபாய் அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கைப்படி மோடி முதல்வராக இருந்த காலத்தில் போர்டு, எல்&டி, அதானி, எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு 580 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்தி பென் பட்டேலின் மகளுக்கு குஜராத் கிர் காடுகளுக்கு அருகில் உள்ள சுமார் 145 கோடி மதிப்பிலான 245 ஏக்கர் நிலம் வெறும் 1.5 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 16,000 ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் 32 ரூபாய் விலைக்கு அதானி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு, ஒரு சதுர மீட்டருக்கு 6000 ரூபாய்!. இதனால் குஜராத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 6,546 கோடி.

“ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்” மூலம் குஜராத்துக்கு அழைத்து வரப்பட்ட ரத்தன் டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு வழங்கிய மொத்த சலுகைகளின் மதிப்பு 33,000 கோடி. இதில் 1100 ஏக்கர் நிலம், சதுர மீட்டர் 900 ரூபாய் மதிப்புக்கு சல்லி விலைக்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது. 

மேலும் இண்டி கோல்ட் ரிபைனரிஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 40 கோடி இழப்பு.
இவ்வாறு சலுகைகள் வழங்குவதால் தொழில்கள் வளர்ந்து அதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது முதலாளிய அறிஞர்களின் அருள்வாக்கு. 


ஆனால், குஜராத்தில் அவ்வாறு நிகழவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகளால் மக்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதானி என்கிற ஒரே ஒரு முதலாளியின் நிறுவனத்தின் வருமானம் 2002 -ம் ஆண்டு 3,741 கோடியாக இருந்து 2014 -ல் 75,659 கோடியாக உயர்ந்துள்ளது.

அதானியின் வளர்ச்சிக்காக வளைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் மீறப்பட்ட மரபுகளின் பட்டியல் மிக நீண்டது. நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் குஜராத்திகளுக்கு பட்டை நாமம் போட்ட விவகாரத்தை மாத்திரம் வருவாய் புலணாய்வுத்துறை முறையாக விசாரித்தால் சுமார் 15,000 கோடி அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என்கிறார் அத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

இதோனேஷியாவில் உள்ள தனது நிலக்கரி நிறுவனத்திடமிருந்து 50 டாலர் மதிப்பு கொண்ட ஒரு டன் நிலக்கரியை 82 டாலருக்கு இறக்குமதி செய்துள்ளார். இவ்வாறு மிகை மதிப்பு கூட்டிய (Over invoiced) நிலக்கரியின் சுமையை மக்கள் சுமந்தனர் – ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும் 1.5 ரூபாய் அதிகம் கட்டினர். 

இறக்குமதி விதிகளை மீறி மிகை மதிப்புக்கான ஆவணங்களை உருவாக்கவும், அரசை ஏமாற்றவும் மொரீஷியஸ் மற்றும் துபாய் வழியில் கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனையில் (Money laundring) ஈடுபட்டிருந்தார் அதானி.

கௌதம் அதானி பிரதமர் மோடியின் உற்ற நண்பர் என்பதையும், தேர்தல் பிரச்சார காலத்தில் அவரது விமானத்தைத் தான் மோடி டாக்சியாக பயன்படுத்தினார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

ஊழல் மட்டுமா, ஹிண்டால்கோ நிலக்கரித் தொகுதி ஒதுக்கீட்டில் குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடிக்கு நேரடியாக சுமார் 40 கோடி ரூபாய் லஞ்சம் ரொக்கமாக வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் சி.பி.ஐ கைப்பற்றியது. எனினும், அது தொடர்பான விசாரணை சூடுபிடிப்பதற்கு முன் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மோடி பிரதமராகி விட்டார். 

“சந்தர்ப்ப சாட்சியங்களின்’ அடிப்படையில் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம், கையும் களவுமாக பிடிபட்ட மோடியின் வழக்கை ஊத்தி மூடியது என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை; என்றாலும் அப்படித்தான் நடந்தது.

அனைத்து முனைகளிலும் தோல்வியுற்று விட்ட மோடியை “யோக்கியன்” என்கிற அந்தக் கிழிந்த முகமூடி தான் பாதுகாத்து வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பாரதிய ஜனதா இறக்கி விட்டுள்ள கூலிப்படையினரும், ஊடகங்களுமாக சேர்ந்து மோடியின் முகமூடியையும் அவரது பிம்பத்தையும் காப்பாற்றி வருகின்றனர். 

மேலே பட்டியலிடப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பல்வேறு சந்தர்பங்களில் வெளியான தகவல்கள் தான் எனினும், தொடர்ந்து நினைவூட்டுவதும் மக்களின் நினைவுகளைத் தூண்டிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.

செய்தி ஆதாரம் :

THE MYTH OF AN INCORRUPTIBLE MR MODI                                                                                                      நன்றி:வினவு.


நடுநிலைக்கு இவர்களே  இலக்கணம்.




வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மகாநதி

முகநூலில் அபி அப்பா இடுகையை படித்தபோது மகாநதி பற்றிய இந்த விமர்சனம் மனதை சோகமாக்கியது.
அபி அப்பாவிற்கு உண்டான இதே மனநிலைதான் எனக்கும்.படம் பார்த்தப்பின்னர் கனத்த இதயம் அல்லது மனம்.சரியான ,இயல்பான நிலைக்கு வர உண்மையிலேயே சில நாட்களானது. அதுவும் சின்னவயது பெண் குழந்தைகள் உள்ளவர்கள் மனநிலை.....?
நாம் வாழும் உலகின் கொடூரமுகம் நமக்கு அறிமுகமாகியது.சோனாகாஞ்ச் இப்படி பட்ட  அபலைகளின் கூட்டம் என்பதை முகத்தில் அடித்து சொன்னது.
நாம் சுகம் தேடி போகும் இடத்தின் பதுமைகளுக்கு பின் இப்படி பட்ட பல கண்ணீர் கதைகள்தான் உள்ளன.
அதை நாம்  அனுப்பப் பூர்வமாக உணர கமல் உதவியுள்ளார்.
அபி அப்பா போன்றேதான் நானும்.எங்கள் உணர்வில்தான் பலரும் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.அது "இந்த கொடுமையை இனி பார்க்க கூடாது என்று எண்ணிக்கொண்டே முழுவதுமாக மீண்டும்,மீண்டும் மகாநதியை  பார்ப்பதுதான்."

சென்னை செண்ட்ரல் ஜெயில் உள்ளே செல்லில் அடைக்கப்பட்ட இரு கைதிகள்.... இரவு நேரம்... பூர்ணம் விஸ்வநாதனும், கமல் அவர்களும். 

அந்த சின்ன செல்லில் பூர்ணம் அவர்களுக்கு தானே சமைத்து சாப்பிட சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

அதே சின்ன அறையில் ஒரு ஓரத்தில் “டாய்லெட்”, ஒரு பூஜை இடம்... அதில் சில கடவுள் படங்கள். அதை பூர்ணம் பூக்களால் பூஜித்த சுவடுகள்... இருவரும் பேசிக்கொள்கின்றனர்.....
பூர்ணம் விஸ்வநாதன் : நீ நாத்திகனா?

கமல்: உங்களுக்கு எது சௌகர்யப்படுமோ அப்படி வச்சுகுங்க.
பூக்கள் கொண்டு பூஜித்துக்கொண்டே பூர்ணம் : ஓ... ரெண்டுங்கட்டானா? ஸிரத்தையா ஸ்வாமிய பூஜிச்சி இருந்தா நீ இந்த இடத்துக்கு வந்திருக்கவே தேவையில்லை.
கமல்: ............... (மௌனம்... ஒரு தீர்க்கமான பார்வை)
பூர்ணம்: அப்ப நான்..ஙாங்..ங்...ஆங்... ஹும்... போடா... (முனுமுனுப்பாக) நாத்திகம் பேச வந்துட்டானுங்க...
வாவ்.... கே டி வியில் மகாநதி பிரவாகமாக ஓடிக்கொண்டுள்ளது. 
மகாநதி விஷயத்தில் நான் ஒரு மாஸோகிஸ்ட்... பார்க்கக்கூடாது... பார்க்கக்கூடாது என மனதில் கங்கனம் கட்டிக்கொண்டே பார்த்து தொலைவேன். 
இந்த படத்தை நான் தியேட்டரில் பார்த்த வருடம் 1993. “அபுதாபி சினிமா” என்னும் தியேட்டர் ஹம்தான் ஸ்ட்ரீட்ல் இருந்தது. (சிட்டி செண்டர் பில்டிங் எதிராக) பொதுவாக அதில் தமிழ் படங்கள் அதிகமாக வராது. அதிசயமாக வந்தது. அங்கே தான் பார்த்தேன். 
கமல் படம் என்னும் ஆசையில் பார்க்க சென்று விட்டு இரவு 8 மணிக்கு படம் முடிந்த பின்னர் நயா முஸாஃபா என்னும் என் இடத்துக்கு திரும்ப மனம் இல்லாமல் அங்கே எதிர்பக்கம் கோல்ட் ஸூக் அருகே அப்படியே அமர்ந்து இருந்தேன்.
 சுமார் மூன்று மணி நேரம் மனம் ஒரு தியான நிலையில் ஸ்தம்பித்து விட்டது. என்னை யார் கடந்து போகின்றார்கள் வருகின்றார்கள் என்கிற சொரனை ஏதுமின்றி அமர்ந்து இருந்தேன். பசி இல்லை, தாகம் இல்லை. இப்படியெல்லாம் படம் எடுக்க இயலுமா, இப்படியும் உலகத்தில் கேரக்டர்கள் இருப்பார்களா?
சோகப்படம் என்பது ஒரு ஊரில் ஒரு கதாநாயகன், அவனுக்கு 3 அக்கா, ஏழு தங்கச்சி, அதிலே நால்வர் நான்கு விதமான மாற்றுத்திறனாளிகள், சாப்பிட சோறு இல்லை, தினமும் தண்ணீர் குடித்து தான் வாழ்க்கை வாழ வேண்டும், ரொம்ப சோகமாக இருந்தால் ஒரு விதவை அம்மாவையும், ஏழு சகோதரிகளையும் மடியில் கிடத்தி சோகப்பாட்டு பாட வேண்டும். 
அந்த நேரம் மழை வேறு கொட்டும். அந்த ஓட்டை குடிசையில் அத்தனை மழையும் கதாநாயகன் தலையில் மட்டும் கொட்டும். மற்றவர்கள் மீது மழை விழாதபடி கதாநாயகன் தன் இரு உள்ளங்கைகளை வைத்து மழை நீரை ஏந்தி ஸ்ருதி பிசகாமல் ஒரு பேத்தாஸ் சாங் ஜேசுதாஸ் குரலில் இழைத்து இழைத்து, கண்ணதாசனை விட்டு வரிகளை தத்துவம், ஞானம் எல்லாம் போட்டு குழைத்து ஒரு பாடல்... பார்ப்பவர்கள் தேம்பி தேம்பி அழ வேண்டும்... இது தானே சோகப்படம் எனில் உலக நியதி?

ஆனால் மகாநதி இந்த நியதிகளை எல்லாம் உடைத்து எறிந்தது. 
கதாநாயகன் அன்பேவா எம் ஜி ஆர் மாதிரி பணக்காரனும் கிடையாது, துலாபாரம் ஏ வி எம் ராஜன் போல எழையும் கிடையாது. 

நடுத்தரமும் இல்லை... பின்ன என்ன தான் என கேட்டால்... “எனக்கு இது போதும். 
ரயில் தண்டவாளம் அருகே திருநாகேஸ்வரம் ஊரில் ஒரு அழகிய வீடு, சுற்றியும் பச்சை வயல், பாய்ந்து ஓடும் காவிரி, கொட்டைப்பாக்கு விவசாயம், அதில் சீவல் தயாரிப்பு தொழில், அழகாய் ஒரு மகள், அன்பாய் ஒரு மகன், மனைவி மரித்து போனாலும் கூட அந்த சுவடு தெரியாமல் குழந்தைகளை வளர்க்க தன் மாமியார். 
விளையாட காவிரி, கபடி, போய்வர பட்டீஸ்வரம் கோவில் இது போதும் என பொன் செய்யும் விருந்து படைப்பவன்...

காலச்சூழல் அவனை இதோ பூர்ணம் விஸ்வநாதனுக்கு ரூம்மெட் ஆக செண்ட்ரல் வரை கொண்டு வந்து விட்டது.... அங்கே தான் மேற்படி வசனங்கள்.
இந்த காட்சியில் பூர்ணம் விஸ்வநாதனுக்கு தான் அதிக வசனங்கள். கமல் அவர்களுக்கு வசனம் குறைவு. 
ஆனால் அதிகம்... என்ன குழப்பமாக இருக்கின்றதா? 
வசனம் என்பது ஒரு வசனகர்த்தா எழுதி அதை நடிகர் மனப்பாடம் செய்து... வாய் வழியே பேசுவது மட்டுமா??? 
இல்லை.... செல்வந்தர்கள் பணம் கொண்டு கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள். 
சித்தர்கள் மனம் கொண்டு கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள். அதாவது மனதிலேயே இடம் வாங்குவார்கள். மனதிலேயே அஸ்திவாரம், மனதிலேயே சுவர் எழுப்பி, மனதிலேயே விக்ரகம் செய்து.... இப்படி மனதாலேயே.... அத்தனை ஏன் சில சமயம் பணப்பற்றாக்குறையால் கோவில் கட்டுவது சில காலம் தடைபடுமே அது போல மனக்கோவிலும் தடைபடம்... பின்னர் எழும்பும்... பின்னர் குடமுழுக்கு.... அதற்கு கச்சேரிகள், சிவாச்சாரியார்கள், இன்ன பிற இன்ன பிற ... கடைசியில் கும்பத்தில் புனித நீர் ஊற்றும் வரை மனக்கோவில் கட்டி அதிலே தினம் பூஜை வேறு செய்வார்களாம். 
நிஜக்கோவிலை விட அந்த மனக்கோவிலுக்கு தான் கடவுள் அதிக பவர் கொடுப்பதாக எங்கோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கின்றேன்.
ஆக எங்கே விட்டேன் .... ஆங்... கமல் வசனம் பேச மாட்டார். ஆனால் அவர் கண்கள் பேசும். அந்த பார்வை பேசும் வசனங்களை தியேட்டரில் சாமானியன் புரிந்து கொண்டு பேசுவான்...

இதோ இப்படி
பூக்கள் கொண்டு பூஜித்துக்கொண்டே பூர்ணம்: ஓ... ரெண்டுங்கட்டானா? சிரத்தையா ஸ்வாமிய பூஜிச்சி இருந்தா நீ இந்த இடத்துக்கு வந்திருக்கவே தேவையில்லை.
கமல்: ............... (மௌனம்) தியேட்டரில் ரசிகன் : பின்ன என்ன மயிறுக்குடா நீ இங்க வந்த?
பூர்ணம்: அப்ப நான்..ஙாங்..ங்...ஆங்... ஹும்... போடா... (முனுமுனுப்பாக) நாத்திகம் பேச வந்துட்டானுங்க...
ஆக கமல் கண்கள் பேசுவதை சாமானிய ரசிகனை தன் வாயால் பேச வைக்கும் யுக்தி அழகோ அழகு... அது எப்போதும் கமலுக்கு கை வந்த கலை. 
அந்த படம் வந்து கால் நூற்றாண்டுகள் ஆகின்றன. இப்போது கமல் போத்தீஸ் விளம்பரம் ஒன்றில் நடிக்கின்றார். 
அவர் பேசும் போது “ஆடி என்றாலே....” என சொல்லிவிட்டு வாயை குவிக்கும் போது வீட்டில் இருக்கும் நண்டு சுண்டுகள் “போத்தீஸ்” என சொல்கின்றன. 
இது தான் கமல்... ஒரு முட்டாள் விளம்பர டைரக்டராகவோ அல்லது போத்தீஸ் ஓனர் முட்டாளாகவோ இருந்தால் என்ன ஆகியிருக்கும். “கமல் சார்... உங்க வாயால போத்தீஸ் போத்தீஸ்ன்னு சகஸ்ரநாம அர்ச்சனை மாதிரி சொல்லுங்க சார்.
 உங்க வாயாலே சொன்னா தான் மக்கள் மனசுல பதியும் சார்” என சொதப்பி இருப்பார்கள். 
ஆனால் நல்ல வேளை அப்படி எந்த விபரீதமும் நடக்கவில்லை அந்த விளம்பரப்படத்தில்...
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்.... இது மகாநதி பட விமர்சனம் இல்லை... போத்தீஸ் விளம்பரமும் இல்லை... 
சும்மா மனம் போன போக்கில் அந்த படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டாமே என நினைத்து எழுத ஆரம்பித்த பதிவு இதுன்னு வச்சுகுங்க.
பூர்ணம் விஸ்வநாதன், கள்ளபார்ட் நடராஜன், எஸ்.வி ரங்காராவ், காக்கா ராதாகிருஷ்ணன்...அத்தனை ஏன்... இதோ இப்போது இறந்து போனாரே சண்முகசுந்தரம் எல்லோருமே மிகப்பிரமாதமான நடிகர்கள் தான்... 
ஆனாலும் கமல் அவர்களை உலகநாயகன் என ஏன் சொல்கின்றோம் என நினைத்துப்பார்த்தால் .... நான் என்ன சொல்வது நீங்களே நினைத்துப்பாருங்கள்...
                                                                           

முகநூலில் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...