bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 16 ஆகஸ்ட், 2017

கடவுள் இருந்தால் நல்லாயிருக்குமோ?

ஒரு முறை பெரியாரிடம், 

"நீங்கள் கடவுள் இல்லை என சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் முன் கடவுள் தோன்றி விட்டால் என்ன செய்வீர்கள்? "
                                                                                                                                -என்று கேட்டார்கள். 
சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார் பெரியார், இருக்கிறார் என்று பிரசாரம் செய்து விட்டுப் போகிறேன். இது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கான பதில் இல்லை.

கடவுள் இல்லை என்பதில் பெரியாருக்கு இருந்த உறுதியை எடுத்துக் காட்டும் பதில். 
மட்டுமல்லாது, உண்மையை ஏற்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை, அது இதுவரை நான் பரப்புரை செய்து கொண்டிருப்பதற்கு எதிராக இருந்தாலும் கூட எனும் உறுதியையும் அந்த பதில் வெளிக் காட்டுகிறது. இந்த உறுதி கடவுளை நம்பிக் கொண்டிருக்கும் எவருக்கும் கைகூடாத ஒன்று. 
இந்த உறுதியைத் தான் மதம் குறித்து, கடவுள் குறித்து பேசுவோர் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறோம். உங்களிடம் இருக்கும் எனும் அடிப்படையிலேயே தொடங்குகிறேன்.
உங்கள் கேள்வியை அப்படியே திருப்பிப் போட்டால்; நீங்கள் வாழ்நாள் முழுவதும் எதை நம்பிக் கொண்டிருந்தீர்களோ, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்களோ அந்த கடவுள் இல்லை என்றாகும் போது என்ன செய்வீர்கள்? 
இதற்கு நீங்கள் என்ன பதிலை சொல்வீர்களோ அந்த பதிலை நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ல வேண்டும்.  
இதற்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்? 
கடவுள் இல்லையென்றால் தான் இறந்த பிறகு எனக்கு வாழ்வு கிடையாதே. 
மரணத்துடன் முடிந்து விடும். என்பது தானே. 

அப்படியென்றால் இதை சரியாக உள்வாங்குதல் என்பது என்ன? 
இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது பொது உண்மை அல்ல, அது யதார்த்தமும் அல்ல. கடவுள் இருக்கிறது என்று நம்புவோரின் ஒரு கிளை நம்பிக்கை அவ்வளவு தான். இதற்கு மேல் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. 
ஆக ஒருவரின் வெற்று நம்பிக்கையை அந்த நம்பிக்கையை ஏற்காத பிரிதொருவரிடம், அவரால் ஏற்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி எழுப்ப முடியுமா?
இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். நெருப்பு சுடும் என்பது பொது உண்மை. (மரணித்த பின் வாழ்வு இல்லை என்பதும் ஒரு பொது உண்மை) இல்லை, நெருப்பு குளிரும். 
எனவே விரலை வைத்துப் பாருங்கள் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? 
நெப்பில் விரலை வைத்து விட்டு எடுத்து விட முடியும், எனவே, யாரும் நெருப்பு குளிரும் என்று ஏமாற்ற முடியாது. மரணத்தின் பிறகு திரும்பி வர முடியாது என்பதால் அப்படி ஒன்று இருக்கிறது என ஏமாற்ற முடிகிறது.
இந்த இடத்தில் தான் ஒரு குழப்பம் வருகிறது. மரணத்தின் பின் வாழ்வு இருக்கிறதா இல்லையா என்பதற்கு எந்த உறுதியான சான்றும் இல்லை எனும் போது இரண்டுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது தானே என்பது தான் அந்தக் குழப்பம். அதனால் தான் நீங்கள், “எல்லாவற்றுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும் தானே” என்று கேட்டிருக்கிறீர்கள். 
இந்தக் குழப்பம் மனித உடல் குறித்தும், கடவுள் குறித்தும் அறியாமையில் இருப்பதனால் மட்டுமே ஏற்படுகிறது. மனித உடல் குறித்தும் கடவுள் குறித்தும் தெளிவான அறிதல் இருந்தால் இந்தக் குழப்பம் ஏற்படாது. மாறாக, இது ஏமாற்று வேலை என புரிந்து போகும்.
மனிதன் என்பது என்ன? 

நான் எனும் சிந்தனையா? அல்லது உடலா? இரண்டும் இணைந்தது தான். உடல் இல்லை என்றால் சிந்தனையும் இருக்க முடியாது. மூளை என்ற பொருள் இல்லை என்றால் எது குறித்த சிந்தனையும் இருக்க முடியாது. 
இன்னும் தெளிவாகச் சொன்னால் சமூகம் இல்லாமல், இந்த உலகம் இல்லாமல் அறிவு, சிந்தனை என எதுவும் இருக்க முடியாது. மரணம் என்பது என்ன? 
உடல் மீள முடியாதபடி செயலிழந்து விட்டதால் அவனது மூளையில் பதியப்பட்டிருக்கும் தகவல்களும் அறிவும் அதனூடான சிந்தனையும் செயலற்று விட்டது என்பது தான். 
மீள முடியாத படி இயக்கமற்று விட்ட மனிதன், பின்னொரு காலத்தில் மீண்டெழுவான் என்பது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.
உலகில் பொருள் கருத்து என்று இரண்டு உண்டு. மனிதனும் ஒரு பொருள் தான். பொருள் கருத்து இரண்டுக்கும் இலக்கணங்கள் உண்டு. பொருள் என்றால் நான்கு பரிமாணம் இருக்க வேண்டும். நீளம், அகலம், உயரம், காலம் எனும் நான்கு பரிமாணங்கள் எல்லாப் பொருளுக்கும் உண்டு. இந்த நான்கு பரிமாணங்கள் இல்லாமல் எந்தப் பொருளும் இருக்க முடியாது. 
அதேபோல் கருத்து என்றால் அது பொருளைச் சார்ந்து தான் இருக்க முடியுமே அன்றி பொருள் இல்லாத தனித்த கருத்து என்று எதுவுமே இருக்க முடியாது. பிற கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொருள் இல்லாத கருத்து கற்பனை அல்லது சிந்தனை எனப்படும். 
ஒரு மனிதன் மரணிக்கிறான் என்றால், மனிதன் எனும் அந்தப் பொருளின் நான்கு பரிமாணங்களும் முடிவுக்கு வந்து விட்டன என பொருள்படும். பொருள் முடிந்து விட்டது என்பதால் அந்தப் பொருளைச் சார்ந்து உருவான கருத்தும் அழிந்து விடுகிறது. அழிந்து விட்ட ஒரு பொருளும் அதனைச் சார்ந்த கருத்தும் மீண்டும் உருவாகும் என்பது கற்பனை தான். 
ஏனென்றால் நான்கு பரிமாணங்களும் அழிந்து விட்ட பொருள் மீண்டும் அதே பரிமாணங்களை பெற முடியாது. அதேபோல் இருக்கலாமே தவிர அதுவாக இருக்காது. எனவே, தனிப்பட்ட மனிதன் எனும் பொருள் அழிந்து விட்ட பிறகு மீண்டும் ஒருபோதும் அந்தப் பொருள் ஏற்படாது, அவ்வாறு ஏற்படும் என எண்ணுவது வெற்றுக் கற்பனை.
இந்த இடத்தில், மீண்டெழுதல் கற்பனை எனும் உண்மையை ஏற்க முடியாத மதவாதிகள், அதற்கு எதிராக எந்தவித சான்றையும் முன் வைக்க முடியாத மதவாதிகள், இந்த அறிவியலுக்கு பதிலாக அந்த இடத்தில் மீண்டும் ஒரு கற்பனையை முன் வைக்கிறார்கள். அது தான் கடவுள் எனும் கற்பனை. கடவுளால் எல்லாம் முடியும்.
கடவுளால் எதெல்லாம் முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 
கடவுள் என்பது என்ன? 
பொருளா? 
கருத்தா? 
கடவுள் வியாபாரிகள் கோடீஸ்வரர்கள்,கும்பிடுபவர்கள்?

அல்லது இந்த இரண்டும் அல்லாத வேறொன்றா? 
வேறொன்று என்றால் அது என்ன? 
கடவுளை நம்பும் எவராலும் இந்தக் கேள்விக்கு பதில் கூற முடியாது. கடவுள் குறித்து கூறப்படுவன எல்லாம் – அது எந்த மதக் கடவுளாக இருந்தாலும் – கடவுளின் தன்மைகள் தானே தவிர கடவுள் என்றால் என்ன என்பது அல்ல. 
ஆக உங்கள் கேள்வியை நெருக்கிப் பார்த்தால் அது கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் கடவுளால் இதெல்லாம் முடியும் என நம்பு என்பதாகத் தான் இருக்கிறது. அதாவது, கடவுளை எந்த அடிப்படையும் இல்லாமல் வெறுமனே நம்புகிறவர்கள், அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான, சமூக ரீதியான புரிதல்களோடு கடவுள் இல்லை என்பவர்களிடம்; மரணத்தின் பிறகு கடவுள் வந்து விட்டால் உன்னால் மீண்டும் வாழ முடியாது எனவே மரணத்துக்கு முன்பு கடவுளை நம்பு என்கிறார்கள். 
இந்த அபத்தம் புரிகிறதா உங்களுக்கு?

கடவுள் உண்டு என்பவர்கள், அதற்கு எந்தவித சான்றையும் காட்டியதில்லை, காட்டவும் முடியாது. 
ஆனால் கடவுள் இல்லை என்பவர்களோ அதற்கான சான்றுகளை தெளிவாகவே முன் வைக்கிறார்கள்.
அறிவியல் ரீதியான காரணங்கள்:
  1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
  2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
  3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.
வரலாற்று ரீதியான காரணங்கள்:
  1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
  2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.
சமூக ரீதியான காரணங்கள்:
  1. கடவுளின் தகுதிகள் என கூறப்படுபவை உள்ளுக்குள் சுய முரண்பாடுகலோடு இருக்கின்றன. அதாவது, ஒரு தகுதி இன்னொரு தகுதிக்கு முரண்படுகிறது.
  2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.
எனவே, கடவுள் இருக்க முடியுமா எனும் கேள்விக்கு இருக்க முடியாது என்பது ஆதாரபூர்வமான பதிலாக இருக்கிறது. மனிதன் மீண்டும் உயிர்த்தெழ முடியுமா எனும் கேள்விக்கு உயிர்த்தெழ முடியாது என்பது தெளிவான பதிலாக இருக்கிறது. 
ஆகவே, மரணத்துக்குப் பின் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது எனும் கேள்வி மக்களை ஏமாற்றுவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களை குழப்புவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பயங்காட்டுவதற்காக  முன் வைக்கப்படும் கேள்வி.
அந்தக் கேள்வியை புறந்தள்ளி விட்டு இந்த உலகைப் பாருங்கள். சொர்க்கம் என்றால் அது இந்த உலகில் ஏகாதிபத்தியவாதிகள் வாழும் வாழ்வு. 
நரகம் என்றால் அது இந்த உலகில் உழைக்கும் மக்கள் வாழும் வாழ்வு என்பதாக புரிந்து கொள்ளுங்கள். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் படும் வேதனைக்கும் துன்ப துயரங்களுக்கும், மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. 
அந்த சுரண்டலை அகற்றுவதற்கு கரம் சேருங்கள். அது தான் இப்போதைய இன்றியமையாத தேவையாக இருக்கிறது.
மாறாக, மரணித்த பிறகு வாழும் வாழ்க்கை குறித்து யாராவது உங்களிடம் பேச வந்தால் கடவுள் என்றால் என்ன என்பதை நிரூபித்து விட்டு மேலே பேசுங்கள் என்று சவால் விட்டுச் சொல்லுங்கள்.
                                                                                                      -  செங்கொடி தளத்தில் இருந்து,நன்றியுடன் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...