bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இனி இல்லை அந்தரங்கம் என்று ஒன்று.

இந்தியாவின் அனைத்து கணினியிலுள்ள தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அரசு முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
"இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, குற்றங்கள் தடுப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவை பேணுதல்" போன்ற பல்வேறு காரணங்களுக்காக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாட்டிலுள்ள கணினிகளில் பதியப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன், 69(1) பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்பு முகமை, மத்திய நேரடி வரித்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, நாட்கோடிக்ஸ் பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லியின் காவல் ஆணையருக்கும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் பகுதிகளுக்கான சிக்னல் இண்டெலிஜென்ஸ் பிரிவு ஆகியவை மேற்கண்ட அதிகாரத்தை பெற்றுள்ளன.

"தேசப்பாதுகாப்பு"
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் மேற்கண்ட அமைப்புகள், இனி இந்தியாவிலுள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள், உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட விவரங்களை கண்காணிக்க, இடைமறிக்க, மறைவிலக்கம் (decryption) செய்யவியலும்.
அரசின் இந்த உத்தரவின்படி, கணினிகளை நிர்வகிப்பவர்கள் அதை மத்திய அரசின் முகமைகள் கண்காணிப்பதற்கு ஒத்துழைப்பதற்கு மறுத்தால் அதிகபட்சம் ஏழாண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்கட்சிகளால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிக்கை, கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் உத்தரவை அடிப்படையாக கொண்டது என்றும், பாஜக அரசு எந்தெந்த அரசு முகமைகள் இதை பயன்படுத்த முடியும் என்பதை மட்டுமே நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தற்போது அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனிநபரின் அந்தரங்க தகவல் என்று ஒன்று இனி கிடையவே கிடையாது என்று ஒரு தரப்பினரும், நாட்டின் பாதுகாப்புக்காக இதை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று மற்றொரு தரப்பினரும் வாதாடி கொண்டிருக்கும் வேளையில், கைபேசி, கணினி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துபவர்கள் தங்களை அறியாமலேயே எவ்வளவு தகவல்களை இழந்துகொண்டிருக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

கைபேசி செயலிகள் 

வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.

குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும். 

 உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு  செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. 
ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான்.

 ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதியை உங்களுக்குத்தெரியாமலேயே கேட்கப்படுகிறது.


இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.
இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.

மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணையதளங்கள்

உங்களுக்கு தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. இதுகுறித்த சர்ச்சையின் காரணமாகவே சமீபத்தில் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் கேள்விக்கு நேரில் விளக்கமளித்திருந்தார் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை.

அதாவது, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளே இவ்வளவு தகவல்களை நம்மிடமிருந்து பெறுகின்றன என்றால் அந்த இயங்குதளத்தையே உருவாக்கிய கூகுள் எவ்வளவு தகவல்களை பெறும் என்று நினைத்து பாருங்கள்.

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கூகுளின் 'ஆட் சென்ஸ்' என்ற சேவையை பயன்படுத்தியே விளம்பரங்களை ஏற்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களை அடைகின்றன.

உதாரணத்துக்கு, சென்னை பெசன்ட் நகரில் பள்ளியொன்று புதியதாக திறக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 

பள்ளி நிர்வாகம் பெசன்ட் நகரை சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும், திருமணமான, குழந்தைகளை கொண்ட பெற்றோரின் கைபேசிக்கு தங்களது பள்ளி குறித்த விளம்பரம் செல்ல வேண்டும் என்று கேட்டால் அதை கூகுளால் நிச்சயமாக நிறைவேற்ற முடியுமளவுக்கு நம்மை பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் சேமிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒருபடி மேலே, உங்களது உரையாடலை கேட்டு அதற்குரிய விளம்பரங்களை கூகுள் நிறுவனம் அளித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சிலர் தங்களது இணையதள செயல்பாடு யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் இன்காக்னிட்டோ என்ற அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். 
ஆனால், நீங்கள் இன்காக்னிட்டோ உள்ளிட்ட எந்த வழியை பயன்படுத்தினாலும் கூகுளால் உங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடியுமென்று அமெரிக்காவை சேர்ந்த வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிகளின்படி, தனது பயன்பாட்டாளர்கள் குறித்து சேகரிக்கும் தகவல்களை கட்டுப்படுத்தும்/ நீக்கும் உரிமையை கூகுள் வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி இதுவரை கூகுள் உங்களை பற்றி தெரிந்து வைத்துள்ள தகவல்கள், பதிவுகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்

இந்த காலத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்களை கண்டறியமுடியாத அளவுக்கு அவற்றின் பயன்பாடு மிகப் பெரியளவில் விரிவடைந்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், அதில் ஒரு பதிவை பகிரும்போது அதை யார் யாரெல்லாம் பார்க்க முடியும் என்று தேர்ந்தெடுக்கலாம். 

அதன்படி, ஃபேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையின் காரணமாக சுமார் 14 மில்லியன் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பொதுவாக தெரிவு செய்யும் "ஒன்லி மீ" என்பதற்கு பதிலாக "பப்ளிக்கில்" பதிவுகளை போட்டிருக்கக் கூடும் என்று சமீபத்தில் அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. 
இதன் மூலம், தங்களது அந்தரங்க தகவல்களை தங்களுக்கு தெரியாமலேயே பயனாளர்கள் பொதுவெளியில் பகிர்ந்திருக்கக் கூடும்.


கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள். 

இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் லட்சக்கணக்கான ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இன்றி வணிக நோக்கில் பயன்படுத்தியதாக கடந்த மார்ச் மாதம் சர்ச்சை எழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்த புகார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடி ஆதாரத்தையே அசைத்ததுடன் தனது வணிக நடைமுறைகளையே மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா ஆகியற்றின் அரசுகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தங்களது பயனீட்டாளர்கள் குறித்து சேமித்து வைத்துக்கொள்ளும் தகவல்களின் வரம்பை நிர்ணயிக்கும் சட்டங்களை வலுப்படுத்தி வருகின்றன.

ஹேக் செய்யப்படும் இணையதளங்கள்

இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச கூப்பன், பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை உள்ளீடு செய்தோ அல்லது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்ற கணக்குகளை முதலாக கொண்டு நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உள்நுழைகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்டது போன்ற விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளித்த பயனீட்டாளர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும்போதோதான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.


உதாரணமாக, கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும்,
 LinkedInன் 164,611,595 கணக்குகளும், 
யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என 
334 இணையதளங்களின் 5,688,097,942 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது என்று haveibeenpwned என்னும் ஆய்வு இணையதளத்தின் தரவுகள் கூறுகின்றன.

 இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் ஹேக்கிங் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் அவாஸ்ட் ஆன்டிவைரஸ் (Avast Antivirus) நிறுவனத்தின் 422,959 கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளிப்பதன் தீவிரத்தை மேற்கண்ட பிரபல இணையதளங்களின் ஹேக்கிங் செயல்பாடுகளின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

தனிநபர் விழிப்புணர்வின் அவசியம்

ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் 'அக்சஃப்ட்' கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.


தற்போதைக்கு அந்தரங்கங்களை பாதுகாக்கும் மிகவும் திறன்மிக்க, நம்பத்தகுந்த ஒன்றாக உள்ள மனிதனின் மூளையில் இருக்கும் நினைவுகளை கூட கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் கனடாவிலுள்ள டொரொண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.

எனவே, ஒரு அரசாங்கம் தனிநபர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை அவர்களது ஒப்புதலின்றி பெறுவது எவ்வளவு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறதோ, அதே வேளையில் தனது தனிப்பட்ட தகவல்களை மேற்கண்ட வழிகளில் பறிகொடுப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பெறவேண்டியது காலத்தின் கட்டாயம்.

                                                                                                                                                                                                                                                  உதவி:தமிழோசை.

சனி, 29 டிசம்பர், 2018

2018இல் இணையச் செய்திகள்


11,943 செயற்கைக்கோள்கள் .

உலகம் முழுவதும் எவ்வித வேறுபாடுமின்றி அதிவேக இணையதளத்தை வழங்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் என்னும் திட்டத்தின்படி மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி, தொலைத்தொடர்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் சீரான அதிவேக இணையதள சேவையை வழங்கும் 'ஸ்டார்லிங்க்' என்னும் மிகப் பெரிய திட்டத்தை அந்நிறுவனம் செயற்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்படி, சுமார் 11,943 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும்.
 ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள்கள் பூமியின் அனைத்து பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும்.

இதற்கான முதற்கட்டமாக 4,425 செயற்கைக்கோள்களை விண்ணில் செல்வதற்குரிய அனுமதியை அமெரிக்காவின் தொலைத்தொடர்பு அமைப்பான எஃப்.சி.சியிடம் ஸ்பேஸ்எக்ஸ் பெற்றிருந்த நிலையில் மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அனுமதி கேட்டு அந்நிறுவனம் எஃப்.சி.சியிடம் முன்வைத்த கோரிக்கை கடந்த நவம்பர் மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு தேவையான 11,943 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான மொத்த அனுமதியும் ஸ்பேஸ்எக்ஸிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஸ்டார்லிங்க்' திட்டத்தில் பாரம்பரிய ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் அலைகள் பயன்படுத்தப்படுவதால், ஒரு நொடிக்கு பல ஜிபி வேகத்தில் இணையதள சேவை பெற முடியுமென்று கருதப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வீழ்ச்சியில் பிட்காயின்.
கிரிப்டோகரன்சி எனப்படும் மின்னணு பண வகைகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை 2018ஆம் ஆண்டு சந்தித்தது.


ஒவ்வொரு நாட்டுக்கும் டாலர், பவுண்ட், ரூபாய் என தனித்தனியே நாணயங்கள் இருப்பது போல,
முற்றிலும் இணையத்தையே இருப்பிடமாக கொண்ட மின்னணு பணங்கள் உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிகப்பட்சமாக 17,100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயின் பிறகு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் பிட்காயினின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் இல்லாத வகையில் 3,200 டாலர்கள் என்ற அளவை அடைந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இ-சிம்.

உங்களது கைபேசிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள குண்டூசி போன்ற பொருளை பயன்படுத்தி சிம் கார்டு வைக்கும் டிரேவை கவனமாக திறந்து, மிகச் சிறிய பகுதியில் சிம் கார்டு கீழே விழாமல் உள்ளே வைப்பதற்கு சிரமப்படுபவரா நீங்கள்?
அதற்கு மாற்று ஏதாவது உள்ளதா என்று நீங்கள் நினைத்ததுண்டா?
இதுவரை நினைத்ததில்லை என்றால் இனியும் நினைக்காதீர்கள்!
ஏனெனில் அப்படி ஒரு மாற்று பயன்பாட்டுக்கே வந்துவிட்டது.

சாதாரண சிம் கார்டு பயன்பாட்டு முறைக்கு முடிவுக்கட்டும் இ-சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இ-சிம்களை கொண்டு ஆப்பிளின் புதிய ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடிப்படையில் இ-சிம் என்பதும் ஒருவகை சிம் கார்டுதான்.
 ஆனால், ஏற்கனவே திறன்பேசியின் மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த சிம் கார்டை நீங்கள் வெளியே எடுக்கவோ, மாற்றவோ முடியாது.
 அதாவது, நீங்கள் அந்த திறன்பேசியை வாங்குவதற்கு முன்னரே அதனுள் சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும்.

வருங்காலத்தில் உற்பத்தி செய்யப்படும் திறன்பேசிகளில் சிம் கார்டே இல்லாமல் பயன்படுத்தும் நிலை உருவாகலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கூகுளுக்கு  அபராதம்.
கூகுள் நிறுவனம் தனது அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டின் மூலம் தேடுபொறி சேவையில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு,
விதிகளை மீறி செயல்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அந்நிறுவனத்துக்கு வரலாறு காணாத வகையில் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதத்தை கடந்த ஜூலை 18ஆம் தேதி விதித்தது.


கூகுளின் வணிக செயல்பாடு போட்டி நிறுவனங்களை மட்டுப்படுத்தும் வகையில் விதிகளுக்கு புறம்பாக உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி கட்டுப்பாட்டு அமைப்பில் தொடங்கப்பட்ட இதுகுறித்த வழக்கில் 39 மாதங்களுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையின்போது அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் கூகுள் தேடுபொறி செயலியையும், குரோம் உலாவியையும் நிறுவாவிட்டால் அதில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கூகுள் பிளே உள்ளிட்ட சேவைகளை பெற முடியாது என்று அந்நிறுவனம் மறைமுகமாக தனது ஆதிக்கத்தை திணிப்பதற்கு முற்பட்டது.

இந்த  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளை முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 'இணைய சமநிலை'

இணையதள சேவை நிறுவனமும், அரசாங்கமும் சட்டப்பூர்வமாக நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து இணையதளங்களையும் எவ்வித பாகுபாடுமின்றி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்வதே இணைய சமநிலை அல்லது நெட் நியூட்ராலிட்டி எனப்படும்.


 உலகம் முழுவதும் இணைய சமநிலை குறித்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில்,
சுமார் 500 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட "இணைய சமநிலை" குறித்த பரிந்துரைகள்,
 உலகளவில் வலுவானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி இணையதள சேவையை வழங்கும் "இணைய சமநிலை" குறித்த டிராயின் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்) பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இணைய சமநிலை பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள:-இணைய சமநிலை 

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பப்ஜி
"நீங்க ஃபேஸ்புக்குல இருக்கீங்களா" என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், அதையே மிஞ்சும் அளவுக்கு உலகம் முழுவதையும் கட்டிப்போட்டிருக்கிறது பப்ஜி என்றழைக்கப்படும் 'பிலேயர் அன்னோன்ஸ் பாட்டில்கிரவுண்ட்' என்னும் விளையாட்டு.

2017ஆம் ஆண்டு விண்டோஸுக்கும், எக்ஸ்பாக்ஸ் ஒண்ணுக்கும் முதன்முதலாக வெளியிடப்பட்ட பிறகு கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பப்ஜி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் 100 பேரை இணையம் மூலமாக இணைக்கும், சண்டையை அடிப்படையாக கொண்ட இந்த விளையாட்டில் 99 எதிர்ப்போட்டியாளர்களை கொன்று கடைசிவரை இருக்கும் ஒருவரே வெற்றிபெற்றவராக கருதப்படுகிறார்.

இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள விளையாட்டை, ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்.

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'பப்ஜி கார்பொரேஷன்' என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த விளையாட்டை 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, 'பப்ஜி கார்பொரேஷன்', 'டென்சென்ட் கேம்ஸ்' ஆகியவை இணைந்து ஆறு பிராந்தியங்களை சேர்ந்த 20 அணிகள் தேர்ந்தெடுத்து, 600,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை கொண்ட தனது முதலாவது சர்வதேச போட்டியை கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்-பாக்ஸ், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் போன்ற கேம்களுக்கான பிரத்யேக சாதனங்களில் மட்டுமே சாத்தியமானதாக இருந்த பப்ஜி போன்ற விளையாட்டுகள், தற்போது கேம் பிரியர்களின் கைகளில் தவழும் அலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே இதன் சாதனைக்கு காரணமாக கருதப்படுகிறது.
===================================================


திங்கள், 24 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் கதை !

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை!!

அது ஒரு காலம். 
அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. 

கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள்.
ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள்.
 அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள். 


டிசம்பர் மாதத்தில் உற்சாகமாக குழுவாக இணைந்து மது அருந்துவார்கள், வணிக கடைகள் விரைவிலேயே சாத்தப்படும். நெருங்கிய நண்பர்கள், குடும்பங்கள் இணைந்து சிறப்பு உணவுகளை அருந்துவார்கள்.
 வீடுகள் பசுமையான தாவரங்களால் அலங்கரிக்கப்படும். தெருக்களில் உணர்ச்சிகரமாக பாடுவார்கள். 

1964-ம் ஆண்டு ஆங்கிலேய கிறித்துவ தூய்மைவாதிகள் கிறிஸ்துமஸை ஒழிக்க முடிவு செய்தார்கள். 

ப்ரொட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் கடுமையான மத விதிகளின் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். 

கிறித்துவ தூய்மைவாத அரசு கிறிஸ்துமஸை ஒரு 'பாகன்'பண்டிகையாக கருதியது. ஏனெனில் டிசம்பர் 25-ம் தேதிதான் இயேசு பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் விளக்கம் இல்லை என்றார்கள். 
 960 வரை அனைத்து கிறிஸ்துமஸ் நடவடிக்கைகளும் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது. 

டிசம்பர் 25 அன்று அனைத்து கடைகள் திறக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. தேவாலயங்கள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கிறிஸ்துமஸ் சேவையை வழங்குவது சட்டத்து புறம்பான ஒன்றாக பார்க்கப்பட்டது.
அந்தத்தடை எளிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 
மீண்டும் குடிக்கவும், பாட்டு பாடவும், களிப்படைவதற்கான சுதந்திரம் வேண்டும் எனக்கூறி போராட்டங்கள் நடந்தன. 

ஆனால் இரண்டாம் சார்லஸ் அரசராக பதவியேற்றபிறகுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டது.
கொண்டாட்டமும் விருந்தும் அமெரிக்க தூய்மைவாதிகளாலும் தடை செய்யப்பட்ட காலமுண்டு.
ஆம். அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் தடை செய்யப்பட்டது. 

மஸாசுஷெட்சில் இங்கிலாந்தில் சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காக 1659 - 1681 வரை கிறிஸ்துமஸ் பண்டிகையே இல்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தடைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதிலும், பல தூய்மைவாதிகளும் டிசம்பர் திருவிழாவை பாகன் மீதான வெறுப்பாகவே கருதினார்கள்.

உண்மையில் கிறிஸ்து பிறந்த தினம் குறித்த துல்லியமான சரியான ஒருமித்த தகவல்கள் இல்லை.
சில இறையியலார்கள் கிறிஸ்து பிறந்தது வசந்தகாலமாக இருக்கக்கூடும் என எண்ணுகிறார்கள்.
 ஏனெனில் மேய்ப்பர்கள் வயல்களில் தங்களது மந்தைகளை கவனித்துக்கொண்டிருந்த குறிப்புகள் உள்ளன. அல்லது, அது இலையுதிர் காலமாகவும் இருந்திருக்கலாம் என்றும் எண்ணுகிறார்கள்.
ஆனால் விவிலியத்தில் தேதிகள் கொடுக்கப்படவில்லை.
கிறித்துவ தூய்மைவாதிகள் 


ரோமன் காலத்திலிருந்தே பாகன் சடங்குககளில் ஒரு பகுதியாக டிசம்பரின் இறுதிப் பகுதிகளில் வலுவான விருந்துகளை கொண்ட விழா காலம் இருந்தது நமக்குத் தெரியும்.
அறுவடை கால திருவிழாவின் சாராம்சமாக மற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன, வீடுகள் அலங்கரிக்கப்பட்டன. 
பெரும் உணவுகளும் அதிகப்படியான மதுவும் விருந்தின் மைய அம்சங்களாக இருந்தன.
வரலாற்று ஆசிரியரான சைமன் செபாக்              மான்டிஃபோர் கருத்துப்படி ''ஆரம்பகால கிறிஸ்துவர்கள் சமூக அளவில் பாகன் மரபு வழக்கங்களில் இருந்த கேளிக்கைகளுடன் போட்டியிட வேண்டியிருந்தது''
குறிப்பிட்ட காலம் வரை, ரோமானியர்கள் இரண்டு மரபுகளையும் கொண்டாடினார்கள். 

நான்காவது நூற்றாண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தின் 14 நாள்களில் பாகன் சடங்குகளும் கிறித்துவமும் இணைந்து கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் மோதல்களில்லாமல் இல்லை. 

இறுதியில், கிறித்தவம் வென்றது.
பாகன் மரபு வழக்கங்களின் சுவடுகளாக தூய்மைவாதிகள் கிறிஸ்துமசை கருதியதால் 17-ம் நூற்றாண்டில் கிருஸ்துமஸ் விழாவை ஒழிக்க முயற்சி நடந்தது. 

ஆனால் இன்று உங்களைச் சுற்றி நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கவனித்தீர்களே ஆயின், தூய்மைவாதிகள் தோற்றது தெளிவு. 

ஆகவே, உலகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மரத்தின் அருகே
கிறிஸ்தவர்கள் வான்கோழியை கடிப்பதும், கோப்பைகளில் மது ஊற்றி அருந்துவதும், அவர்ளின் பண்டிகையும் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. 
அன்றைய கிருஸ்துமஸ் விருந்து பற்றிய கேலிப்படம்
மிழோசையில் இருந்து ....,

நாரயணன்சாமி ஆன இயேசு சாமி?

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணம் போர்ட்ஸ்மவுத் என்ற பகுதியில் 30 ஆண்டு பழமையான தேவலாயம், சுவாமிநாரயணன் சாமி இந்து கோயிலாக மாறுகிறது.

 இந்த தேவலாயம் அமைந்துள்ள வெர்ஜினியா பகுதிகளில் குஜராத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு பாபர் மசூதியில் இருந்து  எல்லாவற்றையம் இந்துக்கோவிலாக மாற்றுவதில் தனி ஆர்வம்தான்.

அந்த  தேவலாயம்  முழுமையாக கோயிலாக மாற்றிய பிறகு அங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


இதுவரை அமெரிக்காவில் மொத்தம் ஆறு தேவலாயங்களையும், உலக அளவில் ஒன்பது களைதேவலாயங்களையும், இந்தியாவிலுள்ள அகமதாபாத், மணி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுவாமி நாராயணன் சன்ஸ்தான் அமைப்பு நாராயணசுவாமி கோயில்களாக மாற்றியுள்ளது. 

போர்ட்ஸ்மவுத் சர்ச்சை 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் வாங்கியுள்ளது.

 ஏற்கெனவே கலிஃபோர்னியா, பென்ன்சில்வேனியா, ஓஹீயோஆகிய பகுதிகளில் இருந்த சர்ச்சுகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல் 125 ஆண்டுகள் பழமையான  கனடாவில் டோரோண்டாவில் இருந்த சர்ச்சும் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.

 இந்திய மதிப்பில் 10 கோடியே 40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள போர்ட்ஸ்மவுத் சர்ச் கட்டடம் 18 ஆயிரம் சதுர அடி அபரப்பளவு கொண்டது.

ஐந்து ஏக்கர் நிலத்துடன் வாங்கப்பட்டுள்ளது.

எப்படிங்க இவ்வளவு பணம் வருகிறது.?
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------வாட்ஸ் அப் பிக்சர் - இன் - பிக்சர் மோட்...

 அப்டேட் செய்வது எப்படி ?

ஏற்கனவே ஆப்பிள் போன்களில் செயல்பட்டு வரும் இந்த வசதிகள் தற்போது கணினி வெர்சனிலும், ஆண்ட்ராய்ட் போன்களிலும் செயல்பட உள்ளது.

உங்களுடைய கணினியில் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் வெப் எந்த வெர்சன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஏன் என்றால், இந்த புதிய அப்டேட் 0.3.1846 இந்த வெர்சனில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அப்டேட் செய்ய, வாட்ஸ்ஆப் வெப் சென்று, செட்டிங்க்ஸ்ஸை க்ளிக் செய்யவும், பின்னர் அங்கு ஹெல்ப் என்ற செக்சனை க்ளிக் செய்யவும்.


அங்கு வாட்ஸ்ஆப் வெப்பின் வெர்சன் தரப்பட்டிருக்கும்.
 டெஸ்க்டாப் வெர்சனை செக் செய்த பின்பு, பயனாளிகள் இந்த அப்டேட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

தங்களுக்கு வரும் வீடியோ லிங்குகளை, மூன்றாவது இணையதளத்திற்கு சென்று (எ.கா யூடியூப், ஃபேஸ்புக்) பார்க்காமல் வாட்ஸ்ஆப் பக்கத்திலேயே நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்.

பகிரப்பட்ட லிங்குக்குகளை, கணினி திரையின் வலது பக்கம் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த வீடியோவினை ஃபார்வேர்ட், பேக்வர்ட் மற்றும் மியூட் செய்து கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன. இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோடின் மூலம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்டீரிமபிள் தளங்களில் இருக்கும் வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் இந்த அப்டேட்டினை v2.18.830-ல் பெற்றுக் கொள்ளலாம்.
  ஆப்பிள் போன்களில் இந்த அப்டேட் மார்ச் மாதமே வெளியானது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெரியார்...!

 



இன்று பெரியாரின் 45வது நினைவு தினம்.
 சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ்  ஆகியோரது கொள்கைகள், கோட்பாடுகளுக்கு நிகரானது,உள்வாங்கியது  பெரியாரின் புரட்சிகர  சிந்தனைகள். 

  • இந்து வர்ணாசிரம தர்மத்தையும், கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். 
  •  
  • பிராமணர் அல்லாதவர்கள் தம்மையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை அவரது சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.
  •  
  • குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ்ந்தது இவரை பாதித்தது. அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்து புரட்சியை ஏற்படுத்தினார்.
  •  
  • காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார். உற்ற நண்பர் ராஜாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறூபாட்டாலும் காங்கிரஸின் செயல்பாடுகள் பிடிக்காமலும் அதிலிருந்து வெளியேறினார். கொள்கை அடிப்படையில் வேறுபட்டாலும் ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நட்பைத் தொடர்ந்தார். 
  •  
  • காங்கிரஸ் கட்சியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர். கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என்று, தமது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்தார் பெரியார்.
  •  
  •  
  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் நடமாட தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து போராடி உரிமையை மீட்டெடுத்ததால் வைக்கம் வீரர் எனப்பட்டார்.
  •  
  • சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர். இது தென் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
  •  
  • இந்தியா முழுவதும் ஒரே நாடாக ஆவதை எதிர்த்த அவர் தென்னிந்தியப் பகுதிகள் இணைந்து திராவிட நாடாக ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தார். 
  •  
  • பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் அவரது கொள்கையாக இருந்தபோதும் அதை தனிப்பட்ட நபர்களை வெறுப்பதற்கான வழிகளாக அவர் மாற்றிக்கொண்டதில்லை. 
  •  
  • தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டார் அவர். 

சனி, 22 டிசம்பர், 2018

கஜாக்கு பெப்பே...சோம்நாத் தங்கக் கூரை .

“சோம்நாத் கோவிலை 17 முறை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக பழி வாங்கும் உணர்ச்சி மக்களுக்கு இருக்கக்கூடாது” என்று கூறிய அமித்ஷா கோவிலை தங்கத்தால் வேய்ந்து அதன் பழம்பெருமையையும் புகழையும் முழுமையாக மீட்க முடியும் என்று கடந்த டிசம்பர் 6, 2018 அன்று கூறியிருக்கிறார்.

“இப்போது ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடி மக்கள் சோம்நாத் கோவிலுக்கு வருகிறார்கள்.
சிறப்பான வசதிகள் பல இங்கே இருக்கின்றன.
ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை சுற்றுலா வசதிகளை செய்து தர எல்லா முயற்சிகளையும் செய்கிறது.
ஆனால் என்னைப் போன்ற சிறு வயதிலிருந்து இந்த கோயில் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு தங்கத்தால் இந்த கோவிலை வேயாத வரை இது முழுமையடையாது.

சோமநாதர் ஆலயத்தின் உள்ளே தங்கம் பதிக்கப்பட்ட பிரகாரம்
எண்ணிலடங்கா மக்களின் உறுதிப்பாடும் இதுதான்..
 இந்த இடத்தின் பெருமையையும் புகழையும் அழிக்க முயற்சித்தவர்களை பழிவாங்க முடியாது.
தே போல பழிவாங்கும் உணர்ச்சியையும் நாம் கொண்டிருக்க முடியாது.
 இதன் பெருமையையும் புகழையும் மீட்கும் ஒரு உறுதியான தீர்மானம் மட்டுமே இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும்” என்று கோவில் நடைபாதைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

கஜினி முகமது இப்போதில்லை என்றாலும் முசுலீம்கள் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக நினைவுபடுத்தி மிரட்டுகிறார் அமித்ஷா. அடுத்த வரியிலேயே தங்கக் கூரை வேய அறைகூவல்! முன்னது மறைமுகமா நடக்கும், பின்னது வெளிப்படையாக நடக்கும்.

சோம்நாத் கோவிலில் தொடங்கி கபிலா, சரஸ்வதி மற்றும் ஹிரன் ஆகிய ஆறுகள் சந்திக்கும் முக்கூடல் (Triveni Sangam) வரை 1.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட நடைபாதை முடிகிறது. இந்நடைப்பாதையானது சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிலும் வேலைப்பாடுமிக்க இருக்கை அமர்வு வசதியுடன் அமைக்கப்படுகிறது. 

அங்கு உட்கார்ந்து கடலைக் காண்பதுடன் பல்வேறு கோவில்களையும் மக்கள் தரிசிக்கலாம். சமய சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆன்மிக பயண புத்துணர்ச்சியாக்கம் மற்றும் ஆன்மிக ஊக்குவிப்பு இயக்கம் (PRASAD) என்ற திட்டத்தின் பெயரில் சுற்றுலாத்துறை அமைச்சகம் இதற்கு நிதி வழங்கி வருகிறது.

இந்த கோவில் 11-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை எப்படி முஸ்லிம் அந்நியர்களால் அடித்து நொறுக்கப்பட்டது என்பதை பற்றிக் கூறிய அமித்ஷா அப்படி தாக்கப்பட்ட போதிலும் அதை மீண்டும் மீண்டும் மக்கள் கட்டியமைத்ததாக கூறினார்.
 “ஆனால் ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல கோவில் எழுந்தது. இன்று பெருமைமிக்க இந்த கோவில், உலகம் பார்க்க நிற்பதை நாம் காண முடியும்” என்றும் கூறினார்.

ஆனால் இதே காலக்கட்டத்தில் இந்து மன்னர்களும் பல்வேறு இந்து கோயில்களையும், சமண பவுத்த விகாரங்களையும் அடித்து நொறுக்கி கொள்ளையடித்ததை இங்கே ஒப்பு நோக்கி அன்று நிலவிய காலக்கட்டத்தை புரிந்து கொள்வது அவசியமானது.
 அக்காலத்தில் மன்னர்களின் பொக்கிஷக் கருவறையாக கோவில்கள் இருந்தன. படையெடுத்து வரும் மன்னர்கள் கோவில்களை கொள்ளையடித்தால்தான் பொக்கிஷங்களை கைப்பற்ற முடியும். இதில் இந்து, முஸ்லீம் மன்னர்களிடத்தில் மத பேதம் இல்லை.

“மக்களின் பெருமைக்குரிய சின்னமாக இந்த கோயில் இருந்ததால் விடுதலைக்கு பின்னர் தலைவர்கள் அதை புதுப்பிக்கும் வேலையை எடுத்தனர். 1947 விடுதலைக்கு பிறகு தொலைநோக்கு பார்வை கொண்ட ஜாம்சாஹிப் (நவாநகரை ஆட்சி செய்தவர்), சர்தார் வல்லபாய் படேல், கே.எம் முன்ஷி ஆகிய தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் வெறுமனே விடுதலை அடைவதின் போதாமையை அறிந்திருந்தனர்.
மக்கள் தங்களது சொந்த பெருமையை மீட்டெடுப்பதுவும் இன்றியமையாதது என சிந்தித்தனர்” என்று அவர் கூறினார்.
ஆனால் ஷா கூறும் இந்த தலைவர்களின் யோக்கியதை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சான்றாக, நேரு அமைச்சரவையில் உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருந்த முன்ஷி, குஜராத்தின் பெருமை (Gujarati Asmita) குறித்த கட்டுக்கதைகளை எழுதி குஜராத் மக்கள் மனதில் முஸ்லீம் மக்களை பற்றிய விரோத போக்கை வளர்த்தவர்களில் முதன்மையானவர்.
 “ஆயிரம் ஆண்டுகளாக முகமதியர்கள் அழித்த சோம்நாத் கோயிலின் நினைவுகள் மறக்க முடியா ஒரு பேரிடராக இந்து இனத்தின் கூட்டு மனசாட்சிக்குள் எரிந்து புதைந்துள்ளது” என்று சோம்நாத் கோவில் பற்றி முன்ஷி கூறியது இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.
வழிபாட்டு இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும், அவற்றை எளிதில் அணுகவும் மற்றும் அவற்றின் மத இன்றியமையாமையை மீட்டெடுக்கவும், சமய சுற்றுலாவை ஊக்குவிக்கவும் பிரசாத் (PRASAD) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடங்கியிருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா தனது தங்கத்திட்டத்தை நியாயப்படுத்துகிறார்.

ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் குழு உறுப்பினராக அமித்ஷா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூத்த பா.ஜ.க தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் படேல் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
 பா.ஜ.க தலைவரது கருத்து இராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பாக வெளிவந்தது.
கோவிலுக்கு நன்கொடை நிறைய வருவதாகவும் அதைக்கொண்டு கருவறை மற்றும் சில தூண்கள் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது என்றும் முன்னாள் குஜராத் தலைமை செயலாளரும் கோவில் செயலாளருமான பிரவின் லஹரி கூறினார்.

பட்டேல் சிலைக்கு 3000 கோடி ரூபாயில் சிலை, 
அயோத்தியில் ராமர் சிலைக்கு எத்தனையோ ஆயிரம் கோடியில் சிலை 
என்ற வரிசையில் சோமநாத் கோவிலின் தங்கக் கூரை சேர்கிறது.

 கஜா புயலுக்கு இதுவரை நிவாரணம் தராமல் நீதிமன்றத்தில் தெனாவெட்டாக பதிலளிக்கும் மத்திய அரசு குஜராத் சோமநாத் கோவிலுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்க நினைக்கிறது. 

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக் கடன் என மோடி அரசின் தாக்குதல்களில் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களை இதை விட கொச்சைப்படுத்த முடியுமா என்ன?
நன்றி 
சுகுமார்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன்

பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான பிரபஞ்சன் இன்று காலை காலமானார்.
பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945-ல் புதுச்சேரியில் பிறந்தவர்.

தமிழில் சிறந்த எழுத்தாளராகவும், விமர்சகராகவும் விளங்கியவர்.
 பிரபஞ்சன் 1961ம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 
 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர்.
 ”வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக கடந்த 1995ம் ஆண்டு அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 

 2017ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55ம் ஆண்டை கடந்து உள்ளது. 

பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இதில் வானம் வசப்படும்,மாந்தம் வெல்லும் ஆகியவைகள் புகழ்பெற்ற அனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்கள் .
இரண்டுமே தினமணி கதிர் இதழில் தொடராகவந்து புகழ்பெற்றவை.

வானம் வசப்படும் நூலுக்காக 1995-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

மேலும், பாரதிய பாஷா பரிஷத் விருது,
கஸ்தூரி ரங்கம்மாள் விருது,
இலக்கியச் சிந்தனை விருது,
சி.பா.ஆதித்தனார் விருது,
 தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு,
 தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும்-பரிசுகளையும் பெற்றுள்ளார்.

 பிரபஞ்சன் 1961ம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர். ”வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக கடந்த 1995ம் ஆண்டு அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 2017ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55ம் ஆண்டை கடந்து உள்ளது. பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன் தனது 73ம் வயதில் இன்று காலமானார்.

வியாழன், 20 டிசம்பர், 2018

கடவுள் மனிதனுக்கு எதற்காக தேவை?

உலகில் மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும் கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது?
 ஏன் செய்ய வேண்டியதாகிறது?

இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும்.
முதலாவதாக மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? 
தானாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? 
கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? 
அல்லது மனிதனுக்குக் குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத் தவிர அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிகளும் கோடிக்கணக்கான மனித ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லை. 
 மனிதரிலும் உலகில் பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுள் நம்பிக்கை புகுத்தப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். 
ஏனெனில் கடவுள் நம்பிக்கை உள்ள எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்-கள் அல்ல.
 எப்படியெனில் கடவுள் நம்பிக்கைக்-காரர்-கள் ஒரே மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரு மாதிரியான எண்ணிக்கைக் கொண்ட ஒரே மாதிரி உருவம் கொண்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல; ஒரே மாதிரியான கடவுள் தன்மை, ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல.

இதற்குக் காரணம் என்ன? 
கடவுள் நம்பிக்கை-யும் அதன் மேல் சொல்லப்பட்ட பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய் தானாகத் தோன்றாமல் மற்றவர்கள் கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும், தான் அனுசரிக்கும், தான் கட்டுப்பட்ட மதத்தாலும் மத ஆதாரங்-களாலும், மதக் கற்பனை, மதக் கட்டுப்பாடு என்பவையாலுமே ஏற்படுவதால் இவை விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை.

மேற்கண்ட கருத்துகள் சாதாரணமாக கிருஸ்தவ மதக்காரனுக்கு ஒருவிதம்.
 
இஸ்லாம் மதக்காரனுக்கு ஒருவிதம், இந்து மதத்திலேயே சைவனுக்கு ஒருவிதம், வைஷ்ணவனுக்கு ஒருவிதம், சைவ, வைணவத்திற்குள்ளாகவே பல பிரிவுகள்; அப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதம். மற்றும் பல காரணங்களால் பலருக்கு பல மாதிரி நம்பிக்கை ஏற்படுகிறது.
 இவற்றிலும் ``கீழ்நிலை'' அறிவில் இருப்பவர்-களுக்கு ஒருவிதமாகவும், ``மேல்நிலை'' அறிவில் இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், தோன்றப்-படுகிறது.
 
 இவற்றிற்கெல்லாம் காரணம் வாய்ப்பு, கற்பிப்பு, சூழ்நிலை, தேவை (சுயநலம்) என்பதல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும்?

கடவுளைப்பற்றி, கற்பித்தவர்கள் யாரானாலும், தாய் தந்தையார், குரு, சமயங்கள், நூல்கள் எதுவானாலும் கடவுளை வணங்கினால் நலம்பெறலாம் என்கின்ற ஒரு இலட்சியத்தை அடிப்படையாக வைத்தே புகுத்தி இருக்கிறார்கள் என்பதோடு, தாங்களும், மற்றவர்களுக்கு புகுத்தியோரும் கடவுளை நம்பினால், வழிபட்டால், பிரார்த்தித்தால் தங்களுக்கு வேண்டிய நலன்கள் கிடைக்கும். 
கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடனே இருக்கிறவர்களாவார்கள். மற்றும் தங்கள் தவறு மன்னிக்கப்படும். தங்கள் தகுதிக்குமேல் பலன் அடையலாம் என்பவையான எண்ணங்களே, ஆசைகளே, பேராசைகளே நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன.
 
 உண்மையான பொது உடைமை மதக்கார (கொள்கைக்காரன்)னுக்கும் சமதர்மக் கொள்கைக்காரனுக்கும் பவுத்தனுக்கும் பகுத்தறிவுவாதி (நாத்திகர்)களுக்கும் இந்த எண்ணங்கள் அதாவது சுயநலத்திற்காக கடவுளை நம்புதல், கடவுளை வணங்குதல், பிரார்த்தித்தல் முதலிய குணங்கள் தோன்றுவ-தில்லை என்பதோடு, தோன்றப் பட்டவர்-களையும் முட்டாள்கள் என்றும் பேராசைக்-காரர்கள், மற்ற மக்களை ஏய்ப்பவர்கள் என்றுமே கருதுகிறார்கள்!

கடவுள் என்ற சொல்லும் கருத்தும் உண்மை அற்றதும், பொருளற்றதுமாய் இருப்பதால் அவற்றைப்பற்றி ஒரு பொருள் ஒரு தன்மை இல்லாமல் பல ஆயிரக்கணக்கான கருத்துகள் ஏற்பட்டுவிட்டன!
 

எந்த ஜீவனுக்கும் அதுவும் அறிவற்ற சிந்தனையற்ற எந்த ஜீவனுக்கும் தேவையில்லாத கடவுள், பகுத்தறிவுள்ள _ - சிந்தனையுள்ள _- சுதந்திரமுள்ள தனக்கு வேண்டியதையும், தன்னையும் தேடி காப்பாற்றிக் கொள்ள தனது நல்வாழ்வை _- வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்-கொள்ள _- தனக்கு வரும் கேடுகளைத் தவிர்த்துக்-கொள்ள சக்தி உள்ள மனிதனுக்கு கடவுள், கடவுள் செயல், கடவுள் அருள் எதற்காகத் தேவை என்று கேட்கிறேன்.

கடவுளே அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினார் என்றால் கடவுள் மேற்கண்ட வசதி அற்ற மற்ற ஜீவராசிகளுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்பதற்கு கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுள் அருள் தேடுகிறவர்-கள் என்ன பதில் சமாதானம் சொல்ல முடியும்.

மேற்கண்ட கடவுள் தன்மைகள் எல்லாம் மனிதனுக்கு பாஷைகளைப்போல், நாடுகளைப்-போல், மதங்களைப்போல் பிறந்த, வளர்ந்த, பழகின இடங்களுக்கு ஏற்ப ஏற்படும் தன்மையே தவிர இயற்கையானது, ஜீவ உரிமையானது என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல முடியாதே!
தேசப்பற்று என்றும், மொழிப்பற்று என்றும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் முட்டாள்களும் கற்பித்துக் கொண்டு பலனடையப் பார்ப்பது எப்படியோ, அப்படியே சுயநலக்காரர்களும் முட்டாள்களும் கடவுள் அருள், கடவுள் பக்தி, கடவுள் பற்று, கடவுள் தன்மை, கடவுள்கள் எண்ணிக்கை, கடவுள்கள் உருவம் என்பன-வற்றை-யெல்லாம் கற்பித்துக்கொண்டு மக்களை ஏய்க்கவும், மடையர்களாக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு மனித சமுதாய வளர்ச்சியைப் பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் இவற்றில் எந்தவித உண்மையும், நாணயமும் இல்லை.
கடவுள் பணிக்காக பாதிரிகள், முல்லாக்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், பண்டார சன்னதிகள், குருக்கள், பூசாரிகள் முதலிய இந்தக் கூட்டங்கள் மனிதனுக்கு எதற்காக தேவை?

இவற்றால் இந்தக் கூட்டங்கள்தான் கவலையற்று, உழைப்பற்று சுகபோக வாழ்வு வாழ்கிறார்களே ஒழிய, இவர்களால் யாருக்கு, எந்த ஜீவனுக்கு என்ன பயன்?

மற்றும் கடவுளை ஏற்படுத்தி, மதத்தை ஏற்படுத்தி, கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி மக்களை இயற்கைக்கும் நேர்மைக்கும் சுதந்திரத்திற்கும் கேடாக நடக்கும்படி நடக்க வேண்டியதாய் பல கருத்துகளை கற்பனை செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள்.

உலகிலாகட்டும், நம் நாட்டிலாகட்டும் கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் என்பவை கற்பிக்கப்பட்டிராவிட்டால் உலகில் ஏழை ஏது?
 பணக்காரன் ஏது? 
பாட்டாளி மகன் ஏது? (பிராமணன்) ஏது?
 பட்டினி கிடப்பவன் ஏது? 
வயிறு புடைக்க உண்டு புரளுபவன் ஏது?

இவ்வளவு கொடுமைகளை - பேதங்களை சமுதாயத்தில் வைத்துக்கொண்டு பரிதாபம் பச்சாதாபம் இல்லாமல் முட்டாள்தனமாக _- பித்தலாட்டத்தனமாக _- மோசமாக ``கடவுளை நம்பு, கடவுளை வணங்கு, கடவுள் சொன்னபடி நட, உனக்கு தரித்திரம் நீங்கும்'' என்றால், இப்படிப்பட்ட இவர்கள் அறிவும் பரிதாபமும்-கொண்ட மனித ஜீவன் ஆவார்களா?
ஆகவே, கடவுள் என்பதும், பிரார்த்தனை என்பதும், கடவுள் அருள் என்பதும் கைதேர்ந்த பித்தலாட்டக்காரர்களின் மோசடி, தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
 நாம் சமதர்மம் அடைய ஆசைப்பட்டு இறங்கிவிட்டோம். 
இனி இப்புரட்டுக்கும் முட்டாள்தனத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என வேண்டிக் கொள்ளுகிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
"விடுதலை", 7.10.1968

செவ்வாய், 18 டிசம்பர், 2018

எப்படிப்பா இப்படியெல்லாம் செய்றீங்க ?

அதிரவைக்கும் மாயக்காட்சி திறனாளர்.
பார்க்கையிலே மதிமயக்கம் உண்டாகிறது.


தண்ணீரை கூட பல்லில் படவிடவில்லை என்றார்களே?

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இந்த ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும்   தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துவருகின்றனர்.


அங்குதான் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்து அப்பலோ மருத்துவமனையின் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஊடகங்களுக்கு வெளியானது.

அதில், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஒட்டு மொத்தமாக ஆறு கோடியே எண்பத்து ஐந்து லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவாகியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கையில்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்றால் சுயநினைவின்றி அல்லது சந்தேகத்துக்கிடமான முறையில் அப்பலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததுக்கும் அளவுக்கு அதிகமாக அரசுப்பணம் இறைக்கப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா ஒரு இட்லி தின்றார்,அல்வா சாப்பிட்டார் என்றும் அவர் சுய நினைவே இல்லாமல் இருந்து உயிர் பிரிந்தார்.


அல்லது இறந்த பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு வந்து வைத்து படம் போட்டார்கள் என்று விசாரணை ஆணையம் வைத்து உண்மைக்காக  விசாரிக்கையில் அப்பலோ தந்துள்ள ஜெயலலிதா உணவுக்கான செலவு விபரம் தலை சுற்ற வைக்கிறது.

75 நாட்களுக்கு ஜெயலலிதாவின் உணவு செலவு 1கோடியே 17 லட்சம் ரூபாய்களாம்.

ரிச்சர்ட் பீலே                            ஜெ 'உடலம்      
ஜெயலலிதா உணர்வுடன் இருந்து பத்து வேலை 5 நட்சத்திர ஓட்டலில் வாங்கி சாப்பிட்டாலும் கூட இவ்வளவு செலவாகுமா?


இது போல் கணக்கு காட்டத்தான் அப்போலோவில் உள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் அகற்றப்பட்டது போல் தெரிகிறது.


அதுமட்டுமின்றி  ஜெயலலிதா உடல் நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு மட்டும்  ஆறு கோடியே எண்பத்து ஐந்து லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாக அப்பலோ  தெரிவித்திருக்கிறது. 

இதில் இன்னும் 44 லட்ச ரூபாய் வராமல் பாக்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

 முதற்கட்டமாக காசோலை மூலம் 41 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும் ,

இரண்டாவது கட்டமாக அவரது மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி ஆறு கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்றும் 

பாக்கி  44 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் இன்னும் தரப்படவே இல்லை என்றும் அப்பலோ சார்பில் கூறப்பட்டுள்ளது. 

லண்டனிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே வரவழைத்து சிகிச்சையளித்த செலவு 92 லட்ச ரூபாய், 

சில உயிர்காக்கும் மருந்துக்கள் வாங்கியவகைக்கு சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ஒரு கோடியே 29 லட்ச ரூபாயும் செலுத்தப்பட்டிருக்கிறது. 

தனி விமானத்தில் ஜெயலலிதாவை சிங்கப்பூர் கொண்டு சென்றால் கூட இவ்வளவு செலவாகாது என்பதே பல மருத்துவர்களின் கருத்து.

இன்னும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வந்து பரிசோதித்து,சிகிசை அளித்த செலவும் இருக்கிறது.அது தனிக்கணக்கு.இது அப்பலோ காலங்கள் கணக்கு மட்டும்.

75 நாட்கள் உணவுக்காக மட்டும் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதுதான்  தற்போதைய அதிரடி செய்தியாக வளம் வருகிறது.

அவரைப்பார்க்கவந்தவர்கள் சாப்பிட்டாலும் மருத்துவமனைக்குள் முக்கியத்துவர்களைத்தவிர யாரையும் விடவில்லை.
வந்தவர்களும் ஆளுநர்,பிரதமர் உட்பட அரை மணிநேரத்துக்கு மேல் தாங்கவில்லை.தண்ணீர் கூட குடித்ததாக தெரியவில்லை.

அங்கேயே இருந்தது சில அமைச்சர்கள்தான் அவர்கள்தான் ஒருகோடி 17 லட்சத்துக்கு தின்று தீர்த்தார்களா?
அவர்களானால் தங்கள் தலைவி மரணப்படுக்கையில் இருக்கையில் பச்சைத் தண்ணீரை கூட  பல்லில் படவிடவில்லை என்றார்களே?


இவ்வளவு பணம் செலவிட்டு ஜெயலலிதா உயிரைக்காப்பாற்ற முடியாமல் என்ன சிக்கிசை
இவ்வளவு செலவும் ஜெயலலிதா உயிரை காப்பாற்றவா?

அல்லது உடலை பாதுகாக்கவா என்று ஐயத்திற்கும் , விமர்சனத்திற்கும் -கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது.

மக்கள் நலத்திட்டங்களில்தான் புகுந்து விளையாடினார்கள் என்றால்.தங்கள் தலைவி உயிர் காக்கும் கடமையில் கூட இப்படியா என்று விமர்சிகின்றனர்.

என்ன செய்ய அவர்கள் வளர்ந்தவிதம் அப்படி!

திங்கள், 17 டிசம்பர், 2018

இந்தியாவிலிருந்து பிரிட்டன் திருடியது எப்படி ?


இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி ?

ந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறது. 

அந்த பயங்கரமான கதை என்னவெனில், ‘பிரிட்டனுக்கு இந்தியாவில் எந்தவித பொருளாதார நலனும் கிட்டவில்லை. சொல்லப்போனால் இந்தியாவை நிர்வகித்ததில் பிரிட்டனுக்குத்தான் செலவு’. 
அதாவது பிரிட்டன் தன்னுடைய இரக்க குணத்தின் காரணமாக நீண்ட காலம் இந்தியாவில் தாக்குப்பிடித்தது!
பிரபல பொருளாதார நிபுணரான உத்சா பட்னாயக், சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை, மேற்சொன்ன கதையை தவிடுபொடியாக்குகிறது. 

1765 முதல் 1938 வரையான இரண்டு நூற்றாண்டு கால வரி மற்றும் வர்த்தக விவரங்களை கணக்கிட்ட பட்னாயக், 45 டிரில்லியன் டாலர் (45 இலட்சம் கோடி ரூபாய்) களை இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிக்கொண்டு போனதாக தெரிவிக்கிறார்.
கிழக்கிந்திய கம்பெனி


இது மிகப்பெரிய தொகை. உதாரணத்துக்கு 45 டிரில்லியன் டாலர் என்பது, இன்றைய இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 17 மடங்கு அதிகமாகும்.
இந்தியாவை பிரிட்டன் எப்படி சுரண்டியது ?
வர்த்தகத்தின் மூலமாக இந்த சுரண்டல் நடந்தது. காலனியாக்கத்துக்கு முன் பிரிட்டன் இந்தியாவிடமிருந்து அரிசி, துணி உள்ளிட்ட பொருட்களை காசு கொடுத்து வாங்கியது. 
காசு என்பது அந்தக் காலத்தில் வெள்ளியாக தரப்பட்டது. 
1765-ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறியது. கிழக்கிந்திய கம்பெனி,  துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து இந்திய வர்த்தகத்தில் ஏகபோகத்தை நிறுவியது.

அந்த சுரண்டல் அமைப்பு எப்படிப் பட்டது தெரியுமா? 
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரியை வசூலித்தது. இந்த வரி வருவாயிலிருந்து ஒரு பெரும் பகுதியை இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கப் பயன்படுத்தியது. 
வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தங்கள் பணத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, பிரிட்டன் வர்த்தகர்கள் ‘இலவசமாக’ பொருட்களை வாங்கிக்கொண்டு போனார்கள். 
விவசாயிகளும் நெசவாளர்களும் வரியை கட்டினார்கள்; அதில் ஒரு பகுதியை திரும்பப் பெற்று பொருட்களையும் கொடுத்தார்கள்.
இது ஒரு முறைகேடு – மிகப் பெரும் அளவில் நடந்த திருட்டு!
இந்தியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. வரி வசூலிப்பவர் வேறொருவராக இருந்தார், தங்களிடமிருந்து பொருட்களை வாங்குகிறவர் மற்றொருவராக இருந்தார். ஒருவரே இதைச் செய்திருந்தால், அவர்களால் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்கும்.

திருடப்பட்ட சில பொருட்கள் பிரிட்டனில் விற்கப்பட்டன. 
மீதியிருந்தவை வேறு நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன.
 உத்சா பட்னாயக்.

 பிரிட்டன் தன்னுடைய தொழில்மயமாக்கலுக்கு தேவையான இரும்பு, தார், மரக்கட்டை போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தது.
 இப்படி மறு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் வாயிலாக பிரிட்டன் தன்னுடைய நிதி புழக்கத்தை மேம்படுத்திக்கொண்டது. 
இந்தியாவில் அமைப்பாக்கப்பட்ட திருட்டின் மூலமே பிரிட்டனில் தொழில் புரட்சி சாத்தியமானது.


இதில் முக்கிய விசயம், பிரிட்டிசார் திருட்டு பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்கும்போது தாங்கள் ‘வாங்கிய’ விலையைவிட அதிகம் வைத்து விற்றனர். 
பொருளின் உண்மையான மதிப்பை மட்டுமல்லாது, அதன் மீது வந்த இலாபத்தையும் தங்கள் பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.
பிரிட்டிஷ் அரசு இந்திய துணைக்கண்டத்தை 1847-ஆம் ஆண்டு கையகப்படுத்திக்கொண்டபின், காலனியர்கள், வரி வசூலிப்பது – வாங்குவது என்ற அமைப்பில் ஒரு சிறப்பு திருப்பத்தை கொண்டுவந்தார்கள். 

கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் உடைபட்டவுடன், இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை நேரடியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.  
ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை இலண்டனில் மட்டுமே செலுத்த முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அது இன்னொரு வகையான சுரண்டல். 
இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க விரும்பும் மற்ற நாடுகளுக்கென்று, பிரிட்டிஷ் அரசு பிரத்யேகமான பணத்தாளை அறிமுகப்படுத்தியது. 
அந்தப் பணத்தாளை தங்கம் அல்லது வெள்ளி கொடுத்து வாங்கிக்கொண்டு, இந்திய பொருட்களை இலண்டனிலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.  
இந்திய வியாபாரிகள் பொருட்களை விற்பதன் மூலம் சேர்த்த பணத்தாளை உள்ளூர் காலனி அலுவலகத்தில் கொடுத்து, இந்திய பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
 இந்த பரிமாற்றத்தின் போது, வரிப்பணம் பிடித்தம் செய்துகொள்ளும் பிரிட்டிஷ் அரசு. மீண்டும் இந்தியர்கள் சுரண்டப்பட்டார்கள், மோசடி செய்யப்பட்டார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிட்டதட்ட மூன்று தசாப்தங்களாக, கணிசமான அளவில் இந்தியாவின் உபரி வர்த்தகம் மற்ற நாடுகளுடன் நடந்துகொண்டிருந்தபோதும், தேசிய கணக்குகளில் பற்றாக்குறை இருப்பதாகக் காட்டியது பிரிட்டிஷ் அரசு. 
ஏனெனில் இந்திய ஏற்றுமதியின் உண்மையான வருவாய், பிரிட்டன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

இப்படி உருவாக்கப்பட்ட ‘பற்றாக்குறை’ என்பதை பிரிட்டனின் சொத்தாக இந்தியா இருந்தது என்பதற்கான ஆதாரமாகவும் கொள்ளலாம்.  இந்திய உற்பத்தியாளர்களின் பெரும்பகுதியான வருமானத்தை பிரிட்டன் இடையிட்டு பறித்துக்கொண்டது. 
இந்தியா பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது.
 அதே நேரத்தில், ‘பற்றாக்குறை’ என்ற காரணம், இந்தியா வேறு வழியில்லாமல் பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ள உதவியது. 
எனவே, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தேவையில்லாமல்  தங்கள் காலனியாளர்களுக்கு கடனாளிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
 இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை மேலும் உறுதியாக்கியது.
இந்த மோசடி முறையிலிருந்து பெற்ற செல்வத்தை பிரிட்டன் தனது ஏகாதிபத்திய வன்முறைகளுக்காகப் பயன்படுத்தியது. 
1840களில் சீனாவில் ஊடுருவவும், 1857ல் நடந்த இந்திய சிப்பாய் கலகத்தை ஒடுக்கவும் இந்திய சுரண்டல் பணத்தை பயன்படுத்தியது. 
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்,  இந்திய வரிவசூலை வைத்து தன்னுடைய போர் செலவை செய்தது பிரிட்டன் அரசு.
 பட்னாயக் இப்படி குறிப்பிடுகிறார், “இந்திய எல்லைக்கு வெளியே பிரிட்டன் நடத்திய போர்களுக்கான நிதி, இந்திய வருமானத்தை முழுமையாகவும் முதன்மையாகவும் சார்ந்தே இருந்தது”.

இவை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து கிடைத்த நிதி புழக்கத்தைப் பயன்படுத்தி,  ஐரோப்பாவுக்கும் ஐரோப்பாவின் குடியேற்றங்கள் நிகழ்ந்த கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கும் முதலாளித்துவத்தை நீட்டிக்க நிதியளித்தது பிரிட்டன். 
எனவே, பிரிட்டனின் தொழில்மயமாக்கல் மட்டுமல்ல, மேற்குலகின் தொழில்மயமாக்கலும் காலனிநாடுகளிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திலிருந்தே நடந்தது.

1765 முதல் 1938 வரை காலனியாக்க இந்தியாவின் பொருளாதாரத்தை மூன்று தனித்துவமான காலங்களாக இனம்கண்டுள்ள பட்னாயக், அந்தக் காலக்கட்டத்திலிருந்து உறிஞ்சப்பட்ட வருவாயை கணக்கிட்டு, தற்போது வரை அதற்கான குறைந்தபட்ச வட்டியை கூட்டியுள்ளார். 

 அதன்படி, 44.6 டிரில்லியன் டாலர்கள் இந்தியாவிடமிருந்து சுரண்டியிருக்கிறது பிரிட்டன். இந்த மதிப்பு தோராயமானது என தெரிவிக்கும் இவர், காலனியாக்க காலத்தில் பிரிட்டன் அரசு, இந்தியாவின் தலையில் கட்டிய கடன்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்கிறார்.

இது மிக மிகப் பெரிய தொகை. ஆனால், இந்த சுரண்டலின் உண்மையான மதிப்பு கணக்கிடப்பட முடியாதது. ஜப்பான் செய்ததுபோல் இந்தியா தன்னுடைய வரி வருவாயையும் அந்நிய செலாவணியையும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தியிருந்தால், வரலாறு வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
 இந்தியா பொருளாதார அதிகார மையமாக உருவாகியிருக்கும். நூற்றாண்டுகால வறுமையும் வேதனையும் தடுக்கப்பட்டிருக்கும்.
வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான்.

இப்படிப்பட்ட கசப்பான பின்னணி இருக்க, பிரிட்டனில் உள்ள ஆற்றல் மிக்க சில நபர்கள் சில புனைகதைகளை கிளப்பி விட்டனர்.
 கன்சர்வேடிவ் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் ‘முன்னேற்ற’த்துக்கு உதவியது என்றார். டேவிட் கேமரூன் பிரதமராக இருந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு உதவியாக இருந்தது என்பதை வலியுறுத்தினார்.

அதிகார மட்டத்திலிருந்து கிளப்பட்ட இந்த புனைவு வெகுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டு பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 50% மக்கள் காலனியாதிக்கம் அந்தந்த நாடுகளுக்கு உதவியது என கருத்துச் சொன்னார்கள்.

200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் உயரவே இல்லை. 
உண்மையில், 19 நூற்றாண்டின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ்  தலையீட்டின் விளைவால் இந்தியாவின் வருமானம் பாதியாகக் குறைந்தது.

 1870 முதல் 1920 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைந்தது. பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கிய பஞ்சத்தின் காரணமாக உயிரிழந்தார்கள்.

பிரிட்டன் இந்தியாவை முன்னேற்றவில்லை. 
பட்னாயக்கின் ஆய்வில் தெரியப்படுத்துவது என்னவெனில், பிரிட்டன் இந்தியாவால் முன்னேறியது.
                                                                                                                                                                                                                                                  நன்றி:வினவு.           

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...