bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 22 ஆகஸ்ட், 2015

தேர்தல் வரும் பின்னே !

வழக்கு வரும் முன்னே?

2G வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அடித்த கமெண்ட் தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது. சி.ஏ.ஜியின் குற்றச்சாட்டான "1,76,000 கோடி நட்டம்" என்பதை அவர் எப்படி புரிந்துக் கொண்டார் என்பது இது வரை விளங்கவில்லை.
"Mind boggling", என்றார். அதிமுகவின் நாலாந்தர பேச்சாளர் சந்துமுனையில் நின்று "நட்டம்" என்று முழங்கியது போலவே. சிபிஐ சூராதிசூரனாய் ஊடகங்கள் முன் குதித்தது. 
கோர்ட்டில் கதகளி ஆடியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுத்தது போலவே பத்திரிக்கைகள், ஊடகங்கள் பொங்கி தீர்த்தனர். இன்று நாடாளுமன்றம் முடங்குவதற்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க அன்று எதிர்கட்சியாய் நின்று, நாடாளுமன்றத்தை முடக்கி நேர்மைக்கு மொத்தக் காவலனாய் காட்டிக் கொண்டது.
கீழ் கோர்ட் விசாரிக்கும் வழக்கு தன் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இந்தியாவின் உயர்ந்த அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டது. 
இவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கொரு கோணத்தில் நின்று, "ஒற்றை மனிதரை" பிடுங்கித் தின்று, நீதியை நிலைநாட்டுவதாய் காட்டிக் கொள்ள துடியாய் துடித்தனர்.

ஆனால் அவர் துவளவில்லை, அசரவில்லை, அயர்ந்து வீழ்ந்து விடவில்லை. கைது செய்து அடைத்த போதும் பயந்து விடவில்லை. நெஞ்சுரத்தோடு விசாரணையை எதிர்கொண்டார். 
எப்.ஐ.ஆர் போடப்பட்ட போது தான் , 1.76,000 கோடி நட்டம் காணாமல் போய்,4,000 கோடி நட்டம் பதிவு செய்யப்பட்டது.
அது தவறு என சி.ஏ.ஜி வாதிடவில்லை. தனது வேடத்தை திறம்பட கட்டியதில் திருப்திப்பட்டு உறங்கிப் போனார். மூளை ஸ்தம்பித்தவர் , கோமா நிலையிலேயே இருந்து விட்டார். குறைந்தத் தொகை தான் நட்டம் என காதில் போய் சொல்லி இருந்தால், மீண்டிருப்பார் பாவம். அந்த பழி சி.பி ஐயையே சேரும்.
சி.பி.ஐ வழக்கமான பூச்சாண்டி எல்லாம் காட்டியது. இந்தியா முழுதும் ரெய்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என செய்திகளை கூவியது. ஊழல் எதிர்ப்பு புண்ணியாத்மாக்கள் வெதும்பி வெடித்தார்கள்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
1.76 லட்சம் போய், 4000 போய், 200 கோடி பரிவர்த்தனை தான் குற்றம் என இறுதி செய்யப்பட்டது. இந்த வித்தியாசமும் "பரமாத்மாக்களின்" கண்களில் படவில்லை.
வழக்கு நீதிமன்றத்தில் துவங்கியது. அவர் ஓடி ஒளியவில்லை. வாய்தா வாங்கவில்லை. வழக்கறிஞர்களின் கருப்பு கவுனுக்கு பின் போய் பதுங்கவில்லை.
நாள் தவறாமல் கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்டவராய் பதிலளித்தார். சாட்சியாய் கூண்டில் ஏறி சாட்சியளித்தார். வழக்கறிஞர்களுக்கு குறிப்பெடுத்துக் கொடுத்தார். 
ஒரு கட்டத்தில், அவரே வழக்கறிஞராய் நின்று வாதாடினார். டில்லி வக்கீல்கள் அவரது வாதத் திறமை கண்டு, மனதிடம் கண்டு பிரமித்துப் போயினர்.
சி.பி.ஐ தடுமாறியது, வழக்கின் போக்குக்கு தாக்கு பிடிக்க முடியாமல். அடுத்த வழியை தேடியது. அமலாக்கத் துறை களமிறங்கியது. அதே ரெய்டு, அதே விசாரணை. ஆனால் அடுத்த வழக்கு. பிரிவுகள் அதே, குற்றச்சாட்டு அதே.
அனுமதி வழங்கப்பட்டதில் தவறு என்றும், பணம் கைமாறியது என்றும் நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். திடீரென விசாரணை முடியவில்லை என்றார்கள், 
வாய்தா கேட்டார்கள்.
கடுப்பான நீதிபதி நேரடியாகவே கேட்டார்,"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கமாக வழக்கை இழுத்தடிப்பார்கள். அவர் ஒத்துழைக்கிறார், நீங்கள் இழுத்தடிக்கிறீர்களே. உங்கள் நோக்கம் என்ன?"
பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி போட்டார்கள், வெளிநாட்டுக்கு பணம் சென்றதை கண்டு பிடித்து விட்டார்கள். பரபரத்தனர்.
பிரதமர் முதல்வர் சந்திப்பு நடந்தது.
மீண்டும் ரெய்டு, மீண்டும் விசாரணை. ஊடகங்கள் பரபரப்பு. புதிய வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு. ஆவணங்கள் சிக்கின என்று ஆரவாரம்.
மூன்று முறை ரெய்டு செய்ததும் அதே இடம். மூன்று முறை ஆய்வு செய்ததும் அதே ஆவணங்கள். மூன்று முறை விசாரணை செய்யப்பட்டதும் அதே நபர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புது பரபரப்பு. ஆண்டுகள் தான் அய்ந்து உருண்டோடி விட்டன.
இன்னும் எத்தனை நாட்கள் இந்த நாடகமோ? விசாரணையின் போதே தீர்ப்பு கொடுத்து, அதற்கு இப்போது வழக்கு புனைய முடியாமல் தவிக்கிறார்கள்.
அன்று துடித்தெழுந்த நீதிவான்களை காணவில்லை. மீண்டும், மீண்டும் தலைப்பு செய்தி போடும் பத்திரிக்கைகள் அத்தோடு சரி, வழக்கு ஏன் அரசு தரப்பில் இழுத்தடிக்கப் படுகிறது எனக் கேட்க மனமில்லை.
கழுகுக் கண் கொண்டு நோக்கிய உச்ச நீதி கனவான்களுக்கு, கண் அவிந்தே போனது.
நேர்மை திறம் அற்றவர்கள், நெஞ்சில் வஞ்சம் நிறைந்தவர்கள்.
ஆ. ராசா இதையும் எதிர் கொள்வார். வென்று வருவார்.
உண்மையை மறைத்து, வீண் பழி போட்டு வெற்றியை மீண்டும் களவாடத் துடிக்கிறார்கள்.
                                                                                                                               எஸ்_எஸ்_சிவசங்கர்‬,
இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

2 ஜி வழக்கில் கோர்ட் உத்தரவின் படி வருவாய் அமலாக்க துறை, வருமான வரி துறை, சி.பி.ஐ., என 3 துறைகளும் பரிமாறி எடுத்த முடிவின்படி , 2004 முதல் 2010 வரை எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் வருமான ஆவணத்தை கேட்டு பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. 
2013 ல் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷி , கோர்ட் உத்தரவின் படி நாங்கள் நடத்திய சோதனையில் ராஜாவிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து இல்லை என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளார்.
 தொலைக்காட்சிகள் ஒப்புக்கொண்டதை இதனை நான் விளக்கி இருக்கிறேன். 
இத்தனையும் மீறி, டில்லி சி.பி.ஐ.,க்கு தெரியாமல் சென்னை சி.பி.ஐ., சோதனையும் செய்துள்ளனர். 
சி.பி.ஐ., ஒரு வழக்கு பதிவு செய்து இருப்பது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுகிறது. சி.பி.ஐ,.,க்குள் மோதல் உள்ளதையே இது காட்டுகிறது. 

பிரிவினை உள்ளது என்றே தோன்றுகிறது. 
சுப்ரீம் கோர்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது. 
இது குறித்து சி.பி.ஐ., புலன் அதிகாரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அனைத்து உண்மைகளையும் சொல்லியிருக்கிறேன். 
மறைந்த சாதிக்பாட்சாவின் சொத்து கிரீன் ஹவுஸ், என்னுடையது என்று சொல்லியிருக் கிறார்கள். 
ஆனால் கோர்ட் குற்றப்பத்திரிகையில் இல்லை. 

இதற்கு அரசியல் காரணம் உள்ளது. 2014ல் நான் நீலகிரியில் போட்டியிடும் போது வெளியிட்ட சொத்துக்கள் இணையதளத்தில் அப்பேட் செய்துள்ளேன். 
இதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ராஜா தங்கம் வைத்து கொள்ளக்கடாது என்று சட்டம் சொல்லவில்லை. 
இதற்கு மேல் என்னிடம் இல்லை. 
என்மீது சொத்துக்குவிப்பும் இல்லை. 
தங்களிடம் உள்ள ஆவணங்களை ஆராயாமல், இவ்வாறு வழக்கு பதிவு செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இது கோர்ட்டுக்கு எதிரானது. 
தேர்தல் நேரத்தில் வேண்டும் என்றே வழக்கு பதியப்பட்டுள்ளது. 
சென்னை வந்த மோடி-ஜெயலலிதா சந்திப்புக்குப் பின்னர் பழைய குப்பையை சி.பி.ஐ.கிளறுவது தேர்தல் கால பழி வாங்கல், திமுகவுக்கு ஆதரவாக குவிந்து வரும் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் அசிங்கமான அரசியல் தந்திரம் தான்.இதற்கு பொது நிறுவனமான சி.பி.ஐ துணை போவது மிக ஆபத்தானது.
இவ்வாறு ராஜா கூறியுள்ளார். 

=================================================================================

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தமிழ்நாடு மின்சார வாரியம்

 அல்லது

அம்மா “கமிசன்” மண்டி!

ம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.
பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனுக்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.
அதானி ஒப்பந்தம்
சூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.
பொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.
“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை  யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.
அதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.
கமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன? “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.
அம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட்  ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.
தமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.
திட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.
எண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.
2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.
நாகல்சாமி
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.
“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சேர்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.”  என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.
அரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.
நாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான்  செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன?
                                                                                                                                             – இளங்கதிர்______________________________
நன்றி:புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
_______________________________

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...