bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

மாமல்லபுர சந்திப்பு

தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் முக்கியமான லாகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய-சீன பிரதமர்கள் சந்திப்பு ,பேச்சு வார்த்தை,ஒப்பந்தம் நடந்துள்ளது.

இந்த சந்திப்பு, இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை குறைக்குமென நம்பப்படுகிறது.
தற்போதுள்ள பதற்றத்திற்குக் காரணம் சீனா என இந்திய மக்களும், இந்தியா என சீன மக்களும் கருதுகின்றனர்.
 இரண்டு நாடுகளுக்கு இடையே என்ன பதற்றம்?

 டோக்லாம் பகுதிதான் இப்போது இருநாடுகள் இடையே நிலவும் முரணுக்குக் காரணம் .

 சிக்கிம் மற்றும் பூடானுக்கு இடையில் 'சும்பி பள்ளத்தாக்கு' பகுதியில் சீனா அமைக்கும் சாலை, டோக்லாம் மைதானம் என்று அறியப்படும் பகுதி வரை செல்கிறது.

சீனா, பூடான் இரண்டுமே டோக்லாம் பகுதிக்கு உரிமை கோருகின்றன. திபெத் மற்றும் பூடானின் கால்நடை மேய்ப்பாளர்கள், கால்நடைகளை மேய்க்க இந்தப் பகுதியை பயன்படுத்துகின்றனர்.

சீனா இங்கு சாலையை உருவாக்கி, ஆயுதங்களைக் குவிக்கமுடியும் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. அது ராணுவரீதியாகவும், பிற வகைகளிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கான பாதையும் இங்கிருந்தே செல்கிறது.
அகலம் குறைந்து நீண்டதாக தோன்றும் இந்த பாதை, இந்தியாவில் 'சிலிகுரி பாதை' அல்லது 'சிக்கன்ஸ் நெக்' என்று அறியப்படுகிறது. இந்த பாதை சிக்கிம் மற்றும் பூடானை பிரிப்பதோடு, அசாம் மற்றும் இதர வடகிழக்கு பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கிறது.

சரியாக சொல்ல வேண்டுமானால் சர்ச்சையென்னவோ பூடானுக்கும் சீனாவுக்கும் இடையில்தான். 1910 ஆம் ஆண்டு, 'பிரிட்டன் இந்தியா'வால் பாதுகாக்கப்பட்ட நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரிட்டன் இந்தியாவின் ஆட்சியின்கீழ் வந்தது.

1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது, தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பூடானும் ஒன்று. அப்போதிருந்தே, இந்தியா மற்றும் பூடான் இடையே நெருங்கிய இணக்கமான உறவு தொடர்கிறது. 1950இல் சீனா திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, இந்தியாவுடனான பூடானின் உறவு மேலும் நெருக்கமானது.

பூடானின் எல்லை குறித்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. 1949இல் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே 'நட்பு ஒப்பந்தம்' ஏற்பட்டபோது, பூடானின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின் 'வழிகாட்டல்' பெறுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து செயல்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தியா-பூடான் இடையிலான நட்பு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டு 2007இல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, பூடானின் வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவின் வழிகாட்டுதல்கள், இறையாண்மை மூலம் மாற்றியமைக்கப்பட்டது.

பூடான் புவியியல் ரீதியாக மிகவும் முக்கியமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. பூடானில் ஏற்படும் எந்தவிதமான பதற்றமும் அதன் எல்லைகளை மாற்றியமைக்கலாம், இந்தியா ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசியமும் ஏற்படலாம்.
 இந்தியாவின் தலையீடு இல்லாமல் பூடானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பீஜிங் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறது.

ஆனால், இந்த விசயத்தில் இந்தியா மற்றும் பூடானின் நிலை தெளிவாக இருப்பதாக, ஜூன் மாதம் 30ம் தேதியன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 16-ஆம் தேதியன்று டோக்லாம் வந்த சீனாவின் கட்டுமானக் குழுவினர் டோக்லாமில் சாலைகளை அமைக்க முயன்றனர்.
அதன்பிறகு, ஒருதலைபட்சமான இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, சீன ராணுவத்திடம் ராயல் பூடான் ராணுவம் கூறியது.
டோக்லாம் பகுதியிலிருந்த இந்திய ராணுவ வீரர்களும் பூடான் தரப்பு கருத்துக்கு ஆதரவாக பேசி, தற்போதைய நிலையில் எந்தவித மாற்றமும் செய்யவேண்டாம் என்று கூறினார்கள்.
புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம் மூலமாக, பூடான் தூதர் சீன அரசுக்கு தங்கள் நாட்டின் ஆட்சேபனையைத் தெரிவித்தார். பூடான் தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருக்கிறது.
அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
சீனாவின் அண்மை நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கவலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளும், தற்போதைய நிலையில் மாறுதல்களையும் ஏற்படுத்துவதும் இந்தியாவின் பாதுகாப்புக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாகச் சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளிடையே எல்லை தொடர்பான விவகாரங்கள் ஆலோசனைகளுக்குப் பிறகு தீர்மானிக்கப்படும் என்று 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாடுகளின் எல்லை இருக்கும் பகுதியில் ஒருதலைபட்சமான நடவடிக்கை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பது இந்தியாவின் வாதம்.
இரு நாடுகளுக்கு இடையிலான வேறு இதர தவறான புரிதல்களும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.

சீனா மற்றும் இந்தியாவுக்கான பதற்றத்தை அதிகரிப்பது போட்டி மட்டுமல்ல, 1962ம் ஆண்டு சீனாவுடனான போரில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியிலிருந்து மீளமுடியாத இந்தியாவின் பரஸ்பர வெறுப்பும் ஒரு காரணம் என்று சீன நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது 1962 இல்லை, 2017 என்று குறிப்பிடும் இந்தியா, இந்தப் பதற்றத்தை ராணுவத்தால் எதிர்கொள்ளமுடியும் என்று கூறுவதற்கு வேறு காரணம் இல்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உட்பட சீனாவை தீவிரமாக எதிர்க்கும் குழுவிற்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாகச் சீனா கருதுகிறது.

சீனா-பாகிஸ்தானின் நெருக்கம் இந்தியாவிற்கு கவலை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் பரிமாற்றத்தையும் தவறு என்கிறது இந்தியா.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுபொருள் விநியோகக் குழு போன்ற சர்வதேச குழுக்களில் இந்தியா உறுப்பினராவதற்குச் சீனா வேண்டுமென்றே தடை ஏற்படுத்துவதாக இந்தியா கருதுகிறது.
பீஜிங்கில் மே மாதம் நடைபெற்ற 'வலயமும் பாதையும்' மாநாட்டில் (Belt and Road Forum) இந்தியா கலந்து கொள்ளாதது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு உதாரணம் என்று சீன ஊடகங்கள் கூறுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் அதிகரித்தாலும், ஒன்றை மற்றொன்று தவறாகப் புரிந்து கொள்ளும் போக்கும் தொடர்கிறது.

 இப்படியான சூழலில்தான் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த சீன -இந்திய பிரதமர்கள் சந்திப்பு முக்கியத்துவம்பெற்று உழைக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
                                                                                                                                                                                                                    நன்றி:பி.பி.சி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியா
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.
 ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில் உள்ள முக்கிய வேதிப்பொருளான பாலிஸ்டைரீனின் கட்டமைப்பை உடைத்து அதை மட்க செய்யும் திறன் படைத்த எக்ஸிகியூயோபாக்டீரியம் சிபிரிகம் ஸ்ட்ரைன் டிஆர்11,
 எக்ஸிகியூயோபாக்டீரியம் உண்டே ஸ்ட்ரைன் டிஆர்14 ஆகிய
இரண்டு வகை பாக்டிரியாக்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நீர் நிலையில் கண்டறிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய கோப்பைகள், உறிஞ்சு குழல்கள், பொட்டலம் இடும் தாள்கள் உள்ளிட்டவற்றின் கழிவுகள் உலகம் முழுவதும் பல்கி பெருகி வருகின்றன.
 இதன் காரணமாக நீர் நிலைகள் தொடங்கி பல்வேறு நிலைகளிலும் சூழலியல் சீர்கேடு ஏற்படுகிறது.

இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த இரண்டு பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை கார்பன் ஆதாரமாக பயன்படுத்துவதுடன், பையோபிலிம்கள் எனும் ஒருவித உயிர் மென்படலத்தை உருவாக்கி பாலிஸ்டைரீனின் பண்புகளை மாற்றிவிடுகின்றன.
பாலிஸ்டைரீன் சங்கிலிகளை உடைக்க ஹைட்ரோலைசிங் என்சைம்களை வெளியிடுவதன் மூலம் இயற்கையான சிதைவுறுதலுக்கு இந்த பாக்டீரியாக்கள் வழி செய்கின்றன.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ரூபா மஞ்சரி கோஸ், பேராசிரியர் பிரியதர்ஷினி தலைமையிலான ஆய்வாளர்கள் குழுவினருக்கு தான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும், இதன் மூலம் உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை இயற்கையான முறையின் மூலம் மட்க செய்யும் கனவு நனவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை 2022ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் தடை செய்யும் இந்திய அரசின் நோக்கத்துக்கு இந்த கண்டுபிடிப்பு பெரிதும் துணையாக இருக்கும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு உயிரியல் தீர்வு காணும் வகையில் இந்த இரண்டு வகை பாக்டீரியாக்களின் வளர்சிதை மாற்றம் குறித்து ஆராயும் பணியில் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஷிவ் நாடார் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...