bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 18 ஏப்ரல், 2019

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.

இடதுசாரி அரசியலே தீர்வைத் தரும்
அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி தவிர வேறு குறுக்கு வழி கிடையாது. இன்று  எல்லா நாட்டு மக்களும் பயனடைய புதிய உலக வர்த்தக உறவை உருவாக்க போராடும் நாடுகளோடு நாமும் இணையாமல் மீட்சி இல்லை. சுருக்கமாக இந்த ஞானம் ஆட்சியாளர்களுக்கு வரவேண்டும். அல்லது இந்த ஞானம் உள்ளவர்களை ஆட்சி யில் அமர்த்த வேண்டும்.
(2) இடதுசாரிகளின் போராட்டமும், சந்திக்கும் பிரச்சனைகளும்
இன்றையத் தேதியில் அந்நிய முதலீடு என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உருவாக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகையே மீட்கும் ஆற்றல் இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்குத்தான் உண்டு. ஆனால் இன்றைய இந்திய அரசின் நிலைபாடு உலகை மீட்க கிடைத்த வாய்ப்பை கவனியாமல் நெருக் கடி குழியில் விழவே சில்லரை வர்த்தகத்திலும் அந்நிய முதலீடு என்கிறது.அதற்கு காரணம், நமது நாட்டு பெருமுதலாளி வர்க்கமும், அவர்க ளால் பராமரிக்கப்படும் அமைச்சர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்களும் அந்நிய முதலீட்டு மோகத்தில் வீழ்ந்து கிடப்பதே
ஒரு காலத்தில் நமது நாட்டு பெரு முத லாளிகள் தங்களது வளர்ச்சிக்கு குந்தகம் விளை வித்த அந்நிய முதலீடுகளை எதிர்த்து  போராடி னார்கள். இன்று கனவு உலகில் சஞ்சரிக்கி றார்கள். சோவியத் யூனியன் மறைவால் மேலை நாட்டு பணத்திமிங்கலங்களோடு  பேரம் பேசும் ஆற்றல் பறி போய்விட்டதை மறந்து விட்டனர். இன்று கூட்டணி வைக்கவும், அவர்களோடு சேர்ந்து உலகளவில் பணத்தை பெருக்க வாய்ப்பு வந்ததாக கனவு காண்கின்றனர். எதையும் பண மாக்கி பெருக்கும் ஆசைதான் தொத்து நோயாக பரவி மேலை நாட்டை உலுக்கி வரும் எதார்த்த நிலையை பார்க்கவே அவர்களுக்கு பிடிக்கவில்லை. வட்டார அரசியல் கட்சிகளும், அதி கார மையத்தை ஆட்டிப்படைக்கும் பெருமுத லாளிகளும் அந்நிய முதலீட்டு வருகையை வரவேற்கிற பொழுது,இடதுசாரி அரசியல் கட்சிகளின் வழி காட்டலில் உழைப்பாளி, விவ சாய மக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட   அரசியல் இயக்கமே சரியான தீர்வை காணமுடியும்.
நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள்
அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று பேசிய கட்சிகள் அனைத்தும் நாடாளு மன்றத்தில் எதிர்த்து வாக்களித்து இருந்தால் 282  வாக்குகள் எதிராக பெற்று அரசின் தீர்மானம் தோற்று இருக்கும். அதேநேரம் அரசிற்கும் ஆபத்து ஏற்பட்டிருக்காது. இடதுசாரிகள் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானத்தை தோற்கடிக்கவே வியூகம் வகுத்தனர். அரசை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கில்லை என்பதை துவக்கத்திலேயே அறிவித்து தங்களது முயற்சிக்கு ஆதரவு திரட்டினர். இடதுசாரிகள் மற்ற எதிர்க்கட்சிகளுக்கு வேண்டு கோள்விட்டனர். நாடாளுமன்றத்தில் உங்களது உறுப்பினர் அளிக்கிற வாக்கால் யார் பயனடைவார்கள் என்பதை பரிசீலித்து வாக்களியுங்கள், அந்நிய முதலீடு என்ன நோக்கத்தோடு வருகிறது என் பதையும் கணக்கிலெடுங்கள். பிற நாட்டு அனுபவங்களை கவனியுங்கள் என்று வலுவான அடிப்படைகளை காட்டி நேர்மையாக போராடின. ஆனால் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக  கூறிய கட்சிகள் சில அதற்கு விசுவாசமாக இல்லை..
அதே வேளையில் கட்சிகளின் வர்க்க தன்மை,  அரசியல் தலைவர்களின் சொல்லிலும் செயலிலும் உள்ள முரண்பாடுகள், இடதுசாரிகளின் எதிர் நீச்சல் எல்லாம் ஊடகங்களின்  உதவியால்  மக்கள் காண நேரிட்டுள்ளன. நாடாளுமன்றத்திற்குள் கடந்த 20 வருடங்களாக  உருவாகி வரும் ஒரு அரசியல் அசிங்க கலாசாரத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் அறிய நேர்ந்துள்ளது.
ஒரு அரசியல் நிபுணர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் சொல்லும் செயலும் பல ரகமாக இருந்தது என்பதை பட்டியலிடுகிறார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆளும் அணிக்குள் இருந்துகொண்டே வாயால் எதிர்ப்பு காட்டுகிற கட்சிகள், எதிர்கட்சிகளில் அரசையும் அந்நிய முதலீட்டையும் எதிர்க்கும் கட்சி, அந்நிய முதலீட்டை ஆதரித்து அரசை எதிர்க்கும் கட்சி , எதிர்ப்பதாக கூறி வாக்களிக்க மறுக்கும் கட்சி என்று பலமுனை தர்பாராக நாடாளுமன்றம் விவாதம் நடந்ததாக குறிப்பிடுகிறார். 38 கட்சிகள் அங்கம் பெறும் நாடாளுமன்றத்தில் சில கட்சிகள் நடத்திய கூத்தே அரசின் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு திணிப்பு முயற்சிக்கு ஓ போட்டுள்ளது.
543 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 254 உறுப்பினர்களே அந்நிய முதலீட்டை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அப்படி வாக்களித்தவர்களிலும்  அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம். ஆனால் அரசை காப்பாற்றவே வாக்களிக்கிறோம் என்று சொன்ன கட்சிகளும் உண்டு.மனசாட்சிபடி வாக்களியுங்கள் என்று சொல்லியிருந்தால் அந்நிய முதலீட்டை ஆதரித்து மன்மோகன் சிங்கை தவிர, தேர்தலில் சந்திக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு பயந்து யாரும் வாக்களித்திருக்க மாட்டார்கள்.
பொதுமக்களின் மனத் தவிப்பை புரிந்து கொண்ட மம்தா, ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் அந்நிய முதலீடா! எங்க ஏரியா உள்ளே விடமாட்டோம் என்கின்றனர். தொழில் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை நம்பி நிற்கிற  மாநில அரசுகள் அன்றாட செலவிற்கே, மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கும், கடனுக்கும் மனுப் போட்டு காத்திருப்பவர்கள் எப்படி தடுப்பார்கள்(!) . அந்நிய முதலீடு என்ன லாரியிலா வருகிறது மாநில எல்லைக்குள் நுழைவதை தடுக்க என்று நிபுணர்கள் முதலமைச்சர்களின் சந்தை பொருளாதார ஞானம் சூன்யமாக இருப்பதை பார்த்து  புருவத்தை உயர்த்தி அவதூறு வழக்கிற்கு பயந்து ஓரமாக நின்று சிரிக்கின்றனர். அந்நிய முதலீடு மொத்த வர்த்தகத்தை கைப்பற்றுவதின் மூலமும், ஆன்லைன் மூலமும் வருகிறது என்பதை காண இயலாத தமிழக முதலமைச்சரின்  முழக்கம் வீறாப்பல்ல வெறும் பசப்பு என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது. வால்மார்ட் நுழைவு மூலம் மொத்த வர்த்தகத்தை அந்நிய முதலீடுக்கு பலியிட அனுமதித்த பிறகு சில்லரை வர்த்தகம் என்னவாகும் என்பதை அம்மாவிற்கு நன்றாகவே தெரியும்.
கரன்சி புழக்கத்தை ஒழுங்கமைக்கும் அதி காரம் யார்கையிலே இருக்கிறதோ அவர்களே அந்நிய முதலீடு நுழைவால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும். அந்த அதிகாரம்  மத்திய அரசின் கையிலே உள்ளது. மத்திய அரசின் பணப் புழக்க கோட்பாடு மாற்றமே பாதிப்பை தடுக்க முடியும். மாநில அரசுகளின் இந்த வீறாப்பு வெறும் வீண் பேச்சே, மத்திய அரசின்  கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்கும் இடதுசாரிகளோடு  நிற்காமல் இந்த வீறாப்பால்  ஒரு துரும்பை கூட  அசைக்க இயலாது.
இன்று இந்தியாவில் உலக அளவில் மவுசுள்ள பங்குகளை கொண்ட பங்கு நிறுவனங்கள் குறைவு. பொதுத்துறை நிறுவனங்களை பங்கு நிறுவனங்களாக மாற்றினாலும் போதாது. மேலும்  சில சரக்குகளே பியுச்சர்களாக  உள்ளன. எனவே இந்திய பங்கு சந்தையில் புகுவதை விட சரக்கு சந்தையில் புகுவது உடனடியாக சாத்தியம் என்பதால் அந்நிய முதலீடுகளை  சில்லரை வர்த்தகத்தில் புகுத்துவது  என்ற பெயரில் மொத்த வர்த்தகத்தை முழுங்க வருகிறது.
அந்நிய முதலீட்டின் நோக்கம் எதுவாக இருந்தாலென்ன, நமக்கு கொஞ்சம் நல்லது நடந்தால் போதாதா? கொஞசம் பேருக்கு வேலையும், கொஞ்சப்பேர்  பணத்தை குவிக்கவும் புதிய வழிகள் பிறக்கின்றன அது போதாதா? என்று பரவலாக  கருதுவதால் ஏற்படும் ஆபத்தையும் இடதுசாரிகட்சிகள் உணர்ந்திருப்பதால்  பொருளாதாரம் பற்றிய ஞானத்தை உழைப்பாளி மக்களுக்கு உணர்த்த விரிவான பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ளனர்.
உலக வர்த்தக அமைப்பின்  தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (L.P.G) என்ற முழக் கத்தின் உண்மை பொருள் கொள்ளை அடி (Loot) ஏழையாக்கு (Pauperize) டாலரால் ஆட்சி செய் (Gover) என்பதை அந்த பிரச்சாரம் அம்பலப்படுத் தும். அதோடு தீர்வுகள் பற்றி தெளிவான பார்வையும் கொடுப்பதே அந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். மூலதனம் என்பது ஒரு சொத்தல்ல. அது ஒரு சமூக சக்தி என்ற விஞ்ஞான பார்வையைப் பெற அதன் வரலாற்றை மக்கள் அறிவது அவசியம். அடுத்த பகுதி அதை விளக்குகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள சில வாக்கியங்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. அது மூலதனத்தின் இயக்கத்தை புரிவதற்கு உதவும்.
(3)
மூலதனத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
மேலை நாடுகளில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து பொருளாதாரம் என்றால் பொருள் உற்பத்தி, நுகர்வு, பரிவர்த்தனை, விநியோகம் ஆகிய நான்கு கூறுகளை பற்றியதா அல்லது செல்வத்தை திரட்டும் கலையா என்ற சர்ச்சை நடந்து வருகிறது. ஒரு பக்கம் தத்துவ ஞானிகள் இதுவா, அதுவா என்று மோதிக் கொண்டே இருக்கும் பொழுதே 15ம் நூற்றாண்டிற்கு பிறகு வர்த்தகத்தின் மூலம்  தங்கம் வெள்ளியை  திரட்டுவதே செல்வமாகும் என்ற கருத்து (அதாவது பொரு ளாதாரம் என்றால் செல்வம் சேர்க்கும் கலையே) ஐரோப்பிய சமூகத்தை கவ்வியது. பின்னர் அதுவும் மலையேறி, அரசு உத்திரவாதம் செய்யும்  தாள் பணம் கொண்ட சூட் கேஸ்களே செல்வமானது. இன்று அதுவும் போய் எதையும் வங்கிகளிலே கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் பணமாக்குவதே செல்வமாக கருதும் கட்டத்திற்கு உலகமே வந்துவிட்டது. இந்த திகில் நிறைந்த வரலாற்றை சுருக்கமாக இங்கே பார்ப்பது அவசியம்.
இன்று சினிமாக்கள், இலக்கியங்கள், விஞ்ஞானம் இவைகளே நாடுகளை இணைக்கும் பாலமாகவும் பயன்படுவதைப் போல, 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் கடல் கடந்த வர்த்தகம் என்பன மக்களிடையே பாலமாக இருந்தன. வர்த்தகம் பண்பாடுகளை இணைத்தது. இருக்கிற பொருளை கொடுத்து இல்லாத பொருளை பெற உதவி யது. அதோடு அறிவு வளர உதவியது., இத்தாலி நாட்டு மார்க்கோ போலோ போன்ற  வணிகர் கள் சீனா, இந்தியா வந்து கொண்டு போன தங்கம், வெள்ளியை விட அறிவு சொத்தே , மேற்கே விஞ்ஞானம் பிறக்க வழி கோலியது. இந்திய பூஜ்ஜியத்தை வைத்து தசாம்ச எண் கணித முறை ஐரோப்பாவிற்கு வர்த்தகர்கள் மூலம் போகவில்லையானால் நவீன வானசாஸ்திரம் பிறந்திருக்காது. நவீன வான சாஸ்திரம் இல்லையானால்  ஐரோப்பியர்களால்  7 கடல்களை இணைக்கும் மார்க்கங்களை கண்டு பிடித்திருக்க முடியாது.  நியூட்டனின் கண்டுபிடிப்பே மலிவான தரமான சரக்குற்பத்தி செய்ய வேண்டும் என்ற வர்த்தகர்களின் உந்துதலே அடிப்படை காரணமாகும். படையெடுத்து கொள்ளை அடிக்காமலே தங்கத்தையும் வெள்ளியையும் திரட்டும் வழிகளை  ஐரோப்பியர்கள் புராதன இந்தியாவிடமிருந்தே கற்றனர். தங்க சுரங்கமே அவ்வளவாக இல்லாத இந்தியாவில் படைபலமும் அவ்வளவாக இல்லாத மன்னர்கள் வசம் தங்கம், வெள்ளி மலை போல் திரள வர்த்தகம் உதவியதை கண்டனர்.  இந்தியா காட்டிய வழியில் சரக்கு உற்பத்தியில் புதுமையைப் புகுத்தி வர்த்தகம் மூலம் தங்கத்தை திரட்டுவதை பிரிட்டன் முதன்மைபடுத்தியது. மற்ற ஐரோப்பிய மன்னர்கள் கடற் கொள்ளையை முதன்மைபடுத்தினர். ஒரு கட்டத்தில் ஐரோப்பியர்களும் விஞ்ஞானத்தை புகுத்தி சரக்குகளை மலிவாக தயாரிக்க போட்டி போட்டனர். பங்கு நிறுவனங்கள் மூலம் தொழில்களை வளர்த்தனர். ஆனால் உழைப்பாளி மக்கள் வறுமையை தழுவ தள்ளப்பட்டனர். இப்பொழுது வர்த்தகம் திசை மாறியது. சுதந்திர வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் நாடுகளை அடிமைப்படுத்தினர். இரண்டு உலக யுத்தங்களை, நடத்தினர். சமூகத்தில் நவீன பாட்டாளி வர்க்கமாக உழைக்கும் மக்கள் திரண்டதால் பொருளாதாரம் என்றால் பொருள் உற்பத்தி , நுகர்வு, பரிவர்த்தனை, விநியோகம் இவைகளில் எழும் பிரச்சனைகளை தீர்க்கும் விஞ்ஞானம் என்ற கருத்து முன்னுக்கு வந்தது. மூதனத்தை ஒரு சமூக சக்தியாக கருதியே இயக்க வேண்டும் என்ற கருத்து முன்னுக்கு வந்தது. அதுவே விஞ்ஞான சோசலிசம் ஆனது. அதுவே அரசிலதிகாரத்தை மக்கள் கையில் கொடுக்கும் அரசியலானது.
ஐரோப்பிய, அமெரிக்க பாட்டாளி வர்க்க அரசியல் வீச்சு காரணமாக 19ம் நூற்றாண்டி லிருந்து 1970 வரை குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பதை கிரிமினல் குற்றமாக கருதப்பட்டன. மேலை நாட்டு அகராதியில் பக்கெட் ஷாப், பாயிலர் ரூம் போன்ற சொல் தொடர்கள் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் நேர்மையற்ற  ரகங்களை குறிப்பிடும் சொற்களாகும். அங்கு பங்குசந்தை துவங்கிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையால் வாயையும், வயிறையும் கட்டி சேமித்த பணத்தைக் பெருக்க சிலர் கையாளும் வழிகளை குறிப்பிடும் சொற்களே இவைகள்.  அவைகள் கிரிமினல் குற்றமாக்கப்பட்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பதுக்கல், கள்ள சந்தை, கந்து வட்டி எல்லாம் சிறிய அளவில் நடந்தால் இன்றும் கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது.  இன்று  அந்த திருட்டு வழிகள் எல்லாம் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பணத்தின் மதிப்பிழப்பை தடுக்கும் விஞ்ஞான வழி என்று ஆக்கப்பட்டுவிட்டன. இந்த ஏமாற்றுக்களை பியுச்சர் பேஸ்டு காமெர்ஸ் போர்ட் போலியோ மெனேஜ்மென்ட் ரிஸ்க் அட்ஜஸ் டெட் பெர்பாமென்ஸ், ஹெட்ஜ்பன்டு டிரான் சாக்சன்ஸ் என்று அழைக்கிறார்கள். தினசரி வர்த்தக செய்தியை கேட்கிறவர்களுக்கு இந்த சொற்கள் புரியாமல் போகாது. மற்றவர்களுக்கு இது ஒரு விடுகதையே.
ஜான்கால்ரெயித் போன்ற சில மேலை நாட்டு பொருளாதார நிபுணர்களே பணத்தை பெருக்க இப்படி ஈடுபடுவதை இன்னோசென்ட் பிராடு என்று குறிப்பிடுகிறார்கள். அர்ஜென்டைனா முன்னாள் ஜனாதிபதி லுலா  இந்தியா வந்திருந்த போது மன்மோகன் சிங் அருகிலே இருக்க நிருபர்களிடம் சொன்னது மேலை நாட்டு முதலாளித்துவம், உலகமயம் என்ற பெயரில் உலக நாடுகளின் பொருளாதாரத்தை சூதாட்ட களமாக ஆக்க முயற்சிக்கிறது.
எங்கும் வியாபித்து இருப்பது உழைப்பே!
இன்று முன்பு போல் எந்த நாடும் சரக்கு உற் பத்தியில் தனித்துநிற்க இயலாது. மத்திய ஆசியாவின் பெட்ரோலிய எண்ணெயும், பிற நாடுகளிலிருந்து கச்சாப் பொருளும், உழைப்பு சக்தியும், ஐரோப்பிய விஞ்ஞானமும் இல்லையா னால்  அமெரிக்க பொருளாதார சக்கரம் சுழலாது. பிற நாடுகளிலிருந்து கனிமங்களும் கச்சாப் பொருளும் இல்லையானால் சீனா, ஜப்பான் பொருளாதார சக்கரம் சுழலாது. அது கியுபாவிற்கும், வட கொரியாவிற்கும், இந்தியா விற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பொருந்தும். குண்டூசியிலிருந்து, விண்கலன் வரை சரக்கு உற்பத்தி என்பது உலகத் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை இணைப்பதின் மூலமே சாத்யம் என்ற நிலை இன்று உள்ளது. இது தான் எதார்த்தமான உலகமயம். இன்று உலகை இணைப்பது பணமல்ல, இந்த உழைப்பு சக்தியே. உழைப்பு சக்தியை பிரதிபலிக்கிற வரைதான் பணத்திற்கு மதிப்பு. அதிலிருந்து துண்டித்து பெருக்க முயன்றால்  அது மதிப்பிழந்து காணா மல் போய்விடும். அதை மேலை நாட்டு நிபுணர்கள் பபுள்( நீர்குமிழி) என்கின்றனர். இதனால் பல கோடி மக்களின் சேமிப்பு காணாமல் போய் நடுத்தெருவிற்கு வருகின்றனர். எல்லாம் இருந்தும் மேலை நாடுகள் தவிக்க காரணம் பணத்திற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது என்பது பற்றிய அறியாமையும். பேராசையும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதே. உலகம் தழுவிய உழைப் பாளி மக்களின் கூட்டு முயற்சியே  அதாவது அரசியலே முதலாளி வர்க்கத்தின் விறுப்பு வெறுப்பு பேராசை இவைகளுக்கேற்ப தறி கெட்டலையும் மூலதன சக்தியை ஒழுங்கமைக்க முடியும். சமூகத்தில் பெரும்பான்மையினர் உழைப் பால் உயரவே விரும்புகின்றனர், திறமையை காட்டியே புகழ் பெற முயற்சிக்கின்றனர். இவர் கள் அரசியலிலே கை கோர்த்து நின்றால்தான் ஒரு பொன்னுலகை மானுட கூட்டுழைப்பால் உருவாக்க இயலும். அது வரை பூ உலகு உழைப்பாளிகளுக்கு நரகமாகவும், சுரண்டும் கூட்டத் திற்கு சொர்க்கமாகவும் இருக்கும்.  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (கார்ல்மார்க்ஸ்-ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
  1. முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின் கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது. மத்திய காலக் கம்யூனிலோ ஏ7 ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது. இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனி யிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் ‘மூன்றாவது வகையின’  34 மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன் பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடி யாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக் குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முத லாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்ப தற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
  2. முதலாளியாக இருப்பதற்கு உற்பத்தியில் தனக்கே உரிய சொந்த அந்தஸ்தை மட்டுமின்றி, ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றிருக்க வேண்டும். மூலதனம் என்பது கூட்டுச் செயல்பாட்டின் விளைவுப் பொருள். சமுதாயத்தின் பல உறுப் பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே மூலதனத்தை இயங்க வைக்க முடியும். ஆக, மூலதனம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சக்தியல்ல; அது ஒரு சமூக சக்தியாகும்.
எனவே, மூலதனம் பொதுச் சொத்தாக, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் சொத்தாக மாற்றப்படும்போது, அதன்மூலம் தனிநபர் சொத்து சமூகச் சொத்தாக மாற்றப்படவில்லை. சொத்துடைமையின் சமூகத் தன்மை மட்டுமே மாற்றப்படுகிறது. அது தன் வர்க்கத் தன்மையை  இழந்து விடுகிறது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       நன்றி:மார்க்சிஸ்ட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...