bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 28 மே, 2019

நாடாளுமன்றத்தில் உயர்சாதி ஆதிக்கம்


தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், ஒரு முக்கியமான உரையாடல் சமூகதளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய மக்களவையில் இருக்கும் சாதிகளின் பிரதிநிதித்துவம் பற்றிய உரையாடல்.

பா.ஜ.க நிலைநிறுத்துவதன் பின்னணி.


சமீபத்தில் நடந்திருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அசுர பலத்துடன் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. பா.ஜ.க-வின் முயற்சிகள் படுதோல்வி அடைந்த தென் இந்தியாவில், தமிழ்நாடு முக்கியமான மாநிலம். தனக்கான அரசியல் என்னவென்று எல்லா காலத்திலும் தொடர்ந்து தமிழ்நாடு பறைசாற்றியே வந்திருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.,வின் தலைமையில் அமைந்திருக்கும் அரசாங்கம் யாருக்கான அரசாங்கமாக அமைகிறது என்பதை அவதானிப்பதிலிருந்து உண்மையை நாம் பெற்றிட முடியும்.

பா.ஜ.க தலைமையில் அமையவிருக்கும் மக்களவையில், பெரும்பான்மையான பிரதிநிதிகள் உயர்சாதியினர். சமூகதளங்களில் தொடங்கிய உரையாடலைத் தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
அக்கட்டுரையில், பா.ஜ.க.,வின் உயர்சாதித்தன்மையைத் தோலுரித்து காட்டியிருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க போட்டியிட்ட 147 பொது தொகுதிகளில் இருந்து 80 உயர்சாதி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில் 33 பேர் பிராமணர்கள்.
30 பேர் ரஜபுத்திரர்கள்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சியும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் அதிகரிக்க காரணமாக இருந்தன. இந்தி மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தலையெடுக்க தொடங்கிய பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறையத் தொடங்கி தற்போதைய மக்களவையில் மிக குறைந்த எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
அதற்கு இந்தத் தேர்தலில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி தோல்வியே எடுத்துக்காட்டு. நாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் இந்தி பேசும் மாநிலங்கள் தற்போது உயர்சாதிகளின் கையிலிருக்கின்றன என்பது உவப்பான செய்தி அல்ல.

கலைஞரின் ஆதரவோடு வி.பி சிங் அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளே தமிழ்நாட்டைக் கடந்து பிற மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான அரசியலை முன்னெடுக்கும் தேவையை உருவாக்கியது.

ஆனால், உயர்சாதி ஆதிக்கத்துக்கு எதிரான சித்தாந்தமாக அந்த தேவை உருமாறாமல் தேங்கியதால், தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவமும் வளர்ச்சியும் இந்தி பேசும் மாநிலங்களில் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இனி வரும் இந்திய அரசியலுக்கான அடிப்படையாக இருக்கவிருக்கும் காரணியை, இந்தப் பிரதிநிதித்துவ திருட்டை ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும்.
 இந்தி பேசும் மாநிலங்களில் 20%க்கும் குறைவாகவே இருக்கிற உயர்சாதிகள், பிற சாதியினருக்கான பிரதிநிதித்துவத்தை அபகரித்து அதிக பிரதிநிதித்துவத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பதற்கான ரகசியம் ஒன்றுதான். ‘இந்து’ என்கிற அடையாளத்தை சொல்லி, தாங்களும் பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றே என்ற மாயையை உயர்சாதி பா.ஜ.க உருவாக்கியது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகளை வென்று நாடாளுமன்றத்துக்கு செல்கையில் தாங்களும் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் என்றுமே ஒன்றில்லை என நிரூபித்திருக்கிறார்கள்.
‘இந்து’வுக்கும் ‘இந்துத்துவ’த்துக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
இந்து மதத்தில் இருக்கும் பெரும்பாலானோர் உயர்சாதி அல்ல. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளே. ‘உயர்சாதியினர் அதிகாரத்துக்கு வர வேண்டும். ஓட்டு போடுங்கள்’ என பா.ஜ.க வாக்கு கேட்டால், மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

 ‘இந்து’ என சொல்லி தங்களை பெரும்பான்மையுடன் இணைத்து கொள்ளும் நாடகத்தை நடத்தினால் மட்டுமே வாக்கு விழும். அதையே இந்தி மாநிலங்களில் பா.ஜ.க சாதித்திருக்கிறது என்பதையே புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
‘இந்து’க்கள் வணங்கும் கடவுளரை, ‘இந்துத்துவம்’ பேசும் உயர்சாதியினர் வணங்க மாட்டார். ‘இந்துத்துவ’ கடவுளை கருவறையில் நின்று ‘இந்து’க்கள் வணங்க முடியாது. இந்துக்கள் பேசும் மொழி இந்துத்துவ கடவுளருக்கு புரியாது.
 இந்துத்துவ கடவுளர் பேசும் மொழி இந்துக்களுக்கு புரியாது. இந்துக்களை இந்துத்துவர்கள் தீண்டக்கூட மாட்டார்கள்.
இந்த உண்மைகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குப் புரியாமல் இல்லை.
சாதியை தூக்கிக்கொண்டு மக்களிடம் சென்றால், வீழ்த்தப்பட்டுவிடுவோம் என்பதைத் தெரிந்துகொண்டு, சாமானிய மக்களிடம் அவர்கள் மதத்தை தூக்கிச் செல்கிறார்கள்.
 அதுதான், அவர்களுக்கு வட நாட்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த வித்தியாசம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்ததால்தான் இந்துத்துவத்தை தேர்தலில் தீண்டவே இல்லை.
இனி வரும் இந்திய அரசியல் இந்துத்துவத்தை முன்னிறுத்தியே இருக்கப் போகிறது.

அதை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ் எந்தவித எல்லைக்கும் செல்லும். குறிப்பாக இந்திய நாட்டின் பெரும்பான்மைக்கு அதிகாரமும் கல்வியும் வாழ்க்கையும் மறுக்கப்படும். அதை மறக்கடிக்க வேறு வதந்திகள் பரப்பப்பட்டு மக்கள் திசை திருப்பப்படுவார்கள்.
இடஒதுகீட்டுக்காக முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கான சூழலை மீண்டும் இந்தியா மீது பா.ஜ.க‌ திணிக்கும்.
அதை எதிர்க்க பெரியார் கண்ட தமிழ்நாட்டிலிருந்து திராவிடச் சிந்தனை வடக்குக்கு நீளூம்.
அதுவே இந்த பேராபத்தில் இருந்து காத்துக்கொள்வதற்கான ‘விடுதலை’.
                                                                                                                                            -
-ராஜசங்கீதன்
 நன்றி:-கலைஞர் செய்திகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...