bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அன்றே பெரியார் சொன்னார்....,

 பெரியார் 141 வது பிறந்ததின தொகுப்பு.
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் முதல் குரல் எழுப்பினார்.

1924ம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்தி மொழி எதிர்காலத்தில் திணிக்கப்படும் என்பதை உணர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராகப் பேசியும், தனது குடியரசு நாளிதழில் இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து எழுதியும் வந்தார்.
 ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்பு பற்றி ‘குடியரசில்’ (7.3.1925) ‘தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதப்பெற்ற கட்டுரையின் சில பகுதிகள் :

இந்திக்காக செலவாகியிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. 
இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பார்ப்பனர்கள்.
 தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 100க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதாராயிருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயுள்ளனர்.
பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். 
இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.
ஆனால் இந்திக்கு எடுத்துக் கொள்வதைப் போல 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்கு பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு?


இனி கொஞ்சகாலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.

(அன்றே பெரியார் சொன்னது இன்றும்  நடக்கிறது.)
பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப் பிரச்சாரம் செய்யக் கற்பித்துத்தரும் ஒரு வித்தையாகிவிட்டது.
இந்த ரகசியத்தை நமது நாட்டுப் பாமர மக்கள் அறிவதே இல்லை; இரண்டொருவருக்கு அதன் ரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்துகொண்டு தாங்களும் ஒத்துப்பாடுகிறார்கள் யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத்துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள்.
தமிழ்மொழி நம்முடைய தாய் மொழி;
அது மிகவும் உயர்ந்த மொழி;
அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி;
 சமயத்தை வளர்க்கும் மொழி;
பழமையின் மொழி;
உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப் பெறுகின்ற காரணத்தால் நான் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை.

தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால் தமிழைவிட இந்தி மோசமான மொழி; தமிழைவிட இந்தி எந்தவிதத்திலும் மேலான மொழி அல்ல;
தமிழைவிட இந்தி கீழான மொழி;
தமிழுக்குப் பதில் நமக்கு இந்தி வரத்தகுதியற்றது;
இந்தி வருவது நன்மை அல்ல என்ற காரணத்திற்காகத்தான்.

அரசு நடந்துகொள்ளும் போக்கில் இந்தியைக் கட்டாயமாக்குவதும், அதை அரசியல் மொழியாக்குவதும் அலுவல் தகுதிக்கு இம்மொழிப் பாண்டித்யத்தைச் சேர்ப்பதும் திராவிட மக்களை வம்புச் சண்டைக்கு இழுக்கும் அகம்பாவ ஆணவக் காரியமாகும்.
“இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை இல்லை.
அதனால் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை உண்டாகும்; தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும்” என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.
இதுமட்டுமல்லாமல், 1924ல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அப்போதே இந்தியை எதிர்த்து முழங்கினார்.

1924ம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாலையில் நடைபெற்ற 30-வது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியார் தமது உரையில் கூறியதாவது :
“தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், உரோமாபுரி, பாலஸ்தீனம் முதலான தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கு ஏற்ற தொழில்கள் நாட்டில் நிறைந்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச்செய்யும்.
வங்காளிக்கு வங்க மொழிப் பற்றுண்டு.
மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு.
 ஆந்திரனுக்கு அவன் மொழியில் பற்றுண்டு.
ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை. இது பொய்யோ?
 தமிழ்நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்?
ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்?
என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கும்.
தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்” என்று பேசினார் பெரியார்.
பெரியாரின் திராவிட இயக்கம் அவர் வகுத்துத் தந்த பாதையில் இன்றும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து களம் கண்டு வருகிறது.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டு 61 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்த படுபாதக சம்பவம் குறித்தான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
ஆனால், தேசப்பிதாவின் படுகொலைக்குப் பின்னால் எந்த சக்தி இருந்தது? என்பதை அன்றே தோலுரித்துக் காட்டிய தந்தை பெரியாரின் செயல் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுவதற்கு பெரியாரின் அசாத்திய துணிச்சலும், ஒரு பிரச்சினை குறித்த நுண்ணிய அவதானிப்புமே காரணமாகும்.
காந்தியார் மறைவையடுத்து திராவிட இயக்கம் அதிர்ச்சி அடைந்தது.
தந்தை பெரியார் மகாத்மா காந்தியின் படுகொலையை துக்கநாளாக அறிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் மகாத்மாவுக்காக அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன.

காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த பெரியார், “காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.

இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்திருக்கவே வேண்டும்.

அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலிஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும்.
இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (குடிஅரசு, 31-1-1948) என்று தனது அனுதாபத்தை தெரிவித்தார்.
 மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள சதியை அவர் அப்போதே அம்பலப்படுத்தினார்.
காந்தியார் கொலைக்குப் பிறகு வடஇந்தியாவில் நிலவி வரும் மதவெறி தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்கக் கூடாது என்று தந்தை பெரியார் உறுதியாக இருந்தார்.

இதுகுறித்து அவர், “பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார்.
மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது.

அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை ஏற்றுவிட்டன.
காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதரப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.
இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.
வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை.
மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர் (குடிஅரசு,7-2-1948) என்று கூறினார்.

திராவிடர்கள் ஒதுபோதும் மதவெறிக்கு பலியாகமாட்டார்கள் என்று பெரியார் உறுதிபடக்கூறினார். இதுமட்டுமல்ல இந்துத்துவா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் - ஜனசங்கம் ஆகியவற்றை தடைசெய்வதோடு மட்டுமல்லாமல் வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

இதுகுறித்து‘காந்தியார் முடிவு’ என்ற தலைப்பில் 7.2.1948 தேதியிட்ட குடியரசு இதழில், ‘காந்தி பலியாக்கப்பட்டதன் காரணமாய், இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது.
வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்திய சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக்கூடாது.
இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்வார்களேயானால் இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும் ஒரே அடியாய் தீர்ந்துவிடும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்றவற்றைத் தடைசெய்வது மட்டும் போதாது’ என்று அறிக்கை வெளியானது.
ஆக, காந்தியார் படுகொலைக்குப் பிறகு பெரியார் தடை செய்யச் சொன்ன வர்ணாசிரமங்களும், இத்துத்துவ அமைப்புகளும் தமிழ்நாட்டிற்குள் தங்கள் பேயாட்டத்தை ஆட முயற்சித்தும் முடியாமல் போவதற்கு காரணம், தந்தை பெரியார் என்ற ‘தமிழரின் உயிர்வேலி’ தமிழரையும், தமிழகத்தையும் காத்து நிற்பதால்தான்.
                                                                                                                                 -பி.என்.எஸ்.பாண்டியன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...