bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 19 நவம்பர், 2018

எங்கே முதல்வர்...?

நமக்கு வாய்த்த முதல்வர்....,



தமிழகத்தில் கஜா புயலால் நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன.
 56உயிர்கள் பலியாகியுள்ளன.

ஒரு லட்சத்து 70ஆயிரம் மரங்கள் அடியோடு சாய்ந்திருக்கின்றன. 
சுமார் ஒரு லட்சம் வீடுகள் கடுமையான சேதமடைந்திருக்கின்றன.

 கஜா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என முன்கூட்டியே அறிவித்த தமிழக அரசு பலக்கூட்டங்கள் போட்டு தான் புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதுபோல் காட்டியது.
அதன் செயல்பாடுகள் அனைவரையும் திருப்தி கொள்ளவைத்தது.எதிர்க்கட்சிகள் கூட அரசை பாராட்டியது.
 ஆனால் புயல் தாக்கியபின் அதன் சேதத்தை கண்டு அதற்கேற்றவாறு மீட்பு நடவடிக்கைகளுக்கான முன் ஏற்பாடுகளை செய்யாமல் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் தள்ளியுள்ளது.


கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களின் கிராமப்புறங்களில்எங்கு திரும்பினாலும் 
"நாங்கள் சாப்பிட்டு நாளாகிறது, தண்ணி இல்லை... குழந்தைகளுக்கு காய்ச்சல்.. பால் இல்லை.. கரண்ட் இல்லை.."
 என்றகூக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஆனால் தமிழக அமைச்சர்கள் கூறும் மீட்பு நடவடிக்கைகள் ஊடகங்களில் மட்டுமே நடக்கிறது. க
ஜா புயலில் பாதிக்கப்பட்டிருக்கும் 90 சதவிகிதமான கிராமப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்விநியோகம் இல்லை. 

பகலில் கூட ஓரளவு தற்காத்துக்கொள்ளும் மக்கள், இரவு நேரங்களில் கடும் குளிரில் மின்சாரமின்றி படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல.

குறிப்பாக கஜா புயல் கரையை கடந்த வேதாரண்யம் பகுதி முற்றிலும் உருக்குலைந்து, தனித்தீவாக மாறியிருக்கிறது. 
நாகை, திருவாரூர்,தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. 

பல பகுதிகளுக்கு இதுவரை அதிகாரிகள்யாரும் செல்லவே இல்லை. 
போதிய மீட்பு நடவடிக்கைக்கான திட்டமிடல் இல்லாத நிலையால் மக்கள் மேலும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 
குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். 

வேதாரண்யம் போன்ற பகுதிகளில் ஒரு தண்ணீர் கேன் ரூ. 250,ஒரு லிட்டர் பால் ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்கும்அவல நிலை பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வளவு துயரங்கள் அரங்கேறும் நிலையிலும் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கஜாபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடச் செல்லவில்லை. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறகூட மனம் இரங்கவில்லையே! பாதிக்கப்பட்டமக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட வேறு என்னமுக்கியப் பணி ஒரு முதல்வருக்கு இருந்திட முடியும் ?
மக்கள் தங்கள் உடமைகளை மட்டும் இழக்கவில்லை. 
வாழ்வாதாரமாக விளங்கிய கால்நடைகள், விளைபயிர்கள், தென்னை, வாழை,மா என அனைத்தையும் இழந்து இருக்கின்றனர். போக்குவரத்து- தொலைத்தொடர்பு, மின்சாரம் என முற்றிலும் இழந்த நிலையில் இருக்கும்மக்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுஎடுத்திட வேண்டும். 
மத்திய அரசு உடனேபேரிடர்ஆய்வுக்குழுவை அனுப்பி மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிட வேண்டும். போதிய நிவாரண நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கி மீட்புநடவடிக்கைகளை முன்னெடுக்க வகை செய்ய வேண்டும். 
அரசு மட்டுமின்றி அனைத்து பகுதி மக்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க முன் வரவேண்டும்.

நிதி வாங்க மோடியை சந்திக்க டெல்லிக்குப்போவதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமியார் முதலில் பாதிப்பில் கதறும் மக்களை சந்திக்க நாகை ,தஞ்சை மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட வேண்டாமா?



எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புயலுக்கு அடுத்தநாளே சென்று நிர்வாணப்பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு ஆறுதல் சொல்லி வந்த பின்னரும் கூட தமிழகத்தின் முதல்வர் என்று சொல்லித்திரியும் எடப்பாடி பழனிச்சாமியார் சேதமடைந்தப்  பகுதிகளுக்கு செல்ல நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருப்பது ஏன்?

அதைவிடக்கொடுமை ,அரசு விழாக்களிலில் கலந்து கொள்வதும் , மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடும் படங்களை வெளியில் பகிர்ந்ததுதான்.

புயல் பாதித்தப்பகுதிகளுக்கு செல்லாத காரணமாக் கூறுவது "ஏற்கனவே ஒப்புக்கொண்ட அரசு நிகழ்ச்சிகள் உள்ளதால் செல்ல முடியவில்லையாம்.
பேரிடர் காலங்களில் அரசு எந்திரமே அப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்பது கூட தெரியாதவர் தமிழகத்தின் முதல்வரா?

தூத்துக்குடியில் 13 பேர்கள் சுட்டுக்கொல்லப் பட்டபோது" தொலைக்காட்சியைப் பார்த்துதான் செய்தி தெரிந்து கொண்டேன் "என்று அசட்டையாக கூறியவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.?

நமக்கு வாய்த்த முதல்வரே இப்படி இருக்கையில் பிரதமர் மோடி சேதப்பகுதிகளைப் பார்க்க வரவில்லையா என்று கேட்பது கோபச் சிரிப்பைத்தான் வரவைக்கிறது.

செம்பரம்பாக்கம் நிகழ்வை அரங்கேற்றியவர்களின் நீட்சிதான் இது. 

அம்மா வழி ஆட்சி தான் இது என்பது மீண்டும்  உண்மையாகியுள்ளது.


சேதங்களைப்பார்வையிட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை:-
"நான்கு நாட்களாகப் பரிதவிக்கும் மக்களை நேரில் பார்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரமும் இல்லை, மனதும் இல்லை. ஏற்கனவே, திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடும் திட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக ஒரு முதலமைச்சர் சொல்கிறார். பேரிடர் காலங்களில் சராசரி மனிதர்களுக்கே இதயம் துடிதுடிக்கும். தங்களால் முடிந்த அளவில் உதவி செய்வோம் என்ற எண்ணத்துடன் ஓடோடிப்போய் உதவுவார்கள். முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மாநிலத்தின் மக்கள் படும்பாட்டைக் கண்டு இதயம் துடிதுடித்திருக்க வேண்டாமா? ரிப்பன் வெட்டவும், கொடி அசைக்கவுமான நிகழ்ச்சிகளுக்காக புயல் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடுவதைத் தள்ளிப் போடுகிறார் என்றால் முதலமைச்சருக்கு இருப்பது இருதயமா? இரும்பா? அல்லது உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே பெரிய பள்ளம் மட்டுமே உள்ளதா?
தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கடைசிவரை முதலமைச்சர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. இப்போது கஜா புயல் தாண்டவமாடிய நிலையில், வேறு எங்கோ சுற்றிக்கொண்டு, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையை அமைப்போம் என்று முதலமைச்சர் கூறுகிறார் என்றால் விவசாயிகளையும் பொதுமக்களையும் இதைவிட மோசமாக அலட்சியப்படுத்த முடியுமா? ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல சொந்தக் காரணங்களுக்காக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
முதலமைச்சர் எவ்வழியோ மற்ற அமைச்சர்களும் அதே வழிதான். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்தத் தொகுதியான பாபநாசம் புயலால் சர்வநாசம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பாதிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். மன்னார்குடி நகரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துவிட்டன. 
வீசிய புயலிலும் கொட்டிய மழையிலும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். ஆனால், உணவு அமைச்சர் காமராஜ் அவர்களின் வீடு மன்னார்குடியில்தான் உள்ளது. அவர் நேரில் வர முடியாவிட்டாலும் -மனமில்லாவிட்டாலும் அதிகாரிகளையாவது அனுப்பி, வீழ்ந்த மரங்களை அகற்றிப் போக்குவரத்தை சரிசெய்ய ஆவன செய்திருக்கலாம். 

ஆனால், அவரது வீடு உள்ள தெருவிலேயே மரங்கள் விழுந்தபோதும் ஆட்சியாளர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
வேதனை ஆரண்யமாகக் காட்சியளிக்கும் வேதாரண்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். பெயரளவுக்கு நகரப் பகுதிகளை சுற்றி வந்து ஊடக வெளிச்சத்திற்குத் தன்னை முன்னிறுத்திக் கொண்டவரால், வாழ்க்கை இருளான கிராமப்புற மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. குடிநீர், உணவு, மின்சாரம் என எந்த வசதியும் இல்லாமல் திண்டாடிய கிராமமக்கள் கோபம் கொண்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் தாமதமாக வந்த அமைச்சரின் அரசாங்க கார் முற்றுகையிடப்பட்டதால், அவர் காரிலிருந்து இறங்கி சுவர் ஏறிக் குதித்து தப்பித்து ஓட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க மகளிர் அணியைச் சேர்ந்த கமலம் அவர்கள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சொல்லி இருக்கிறார் மக்களைப் பற்றிய அக்கறை அமைச்சருக்கு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதாக சொல்லவாவது வேண்டும். அதை விடுத்து, "உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைக் கேளுங்கள்" என்று எரிந்து விழுந்துள்ளார். 
அமைச்சர் சென்றபிறகு, கமலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைப்போல அராஜகம் வேறு இருக்க முடியுமா? பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு, அ.தி.மு.க.வுக்கு மட்டும் தான் அமைச்சரா? எல்லோருக்கும்தான் அவர் அமைச்சர். புயலால் இதுவரை கண்டிராத சேதத்தை சந்தித்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் பாதிப்புகளை மீடியாக்களில் காட்டக் கூடாது என்று ஊடகங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டுவதாகவும், நிருபர்களையும் கேமராக்களையும் ஊருக்குள் விடாமல் தடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
 பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. ஒவ்வொரு மக்கள் கையிலும் இருக்கும் செல்போன் மூலமாக பாதிப்புகளை எடுத்து பரப்பி வருகிறார்கள். இந்த கொடூரமான சோக நேரத்திலும் அராஜகம் செய்வதை விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர்களோ புண்பட்டிருக்கும் மக்களின் உணர்வுகளின் மீது ஊசி கொண்டு குத்திக் கிழிக்கிறார்கள்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அடிக்கடி புயல் வந்தால்தான் குடிநீர் பஞ்சம் தீரும் என பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியிருப்பது அறியாமையா, ஆணவமா, தமிழ்நாட்டிற்குப் பிடித்த சாபக்கேடா எனத் தெரியவில்லை. 
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான மக்கள் விரோத நடவடிக்கைகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் புயலைவிடவும் மோசமான நிலைமையை உருவாக்கியுள்ளது. பல இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மக்கள், தங்கள் கோபத்தை ஆறுதல் சொல்ல வருவோரிடமும் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டத்தின் பாதிப்புகளைப் பார்த்துவிட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வந்தபோது, அங்கே போராடிக்கொண்டிருந்த மக்கள் என்னிடமும் கோபக் குமுறலைக் கொட்டினர். அவர்களின் நியாயமான உணர்வைப் புரிந்துகொண்டு, ஆறுதல்படுத்தித் திரும்பினேன். 

மக்களின் கோபம் தார்மீகமானது. 4 நாட்களாக அடிப்படைத் தேவைகள் இல்லாத நிலையில் அவர்கள் கோபப்படுவதைத் தவிர என்ன செய்ய முடியும்? 
மின்சாரம், போக்குவரத்து வசதிகள் முடங்கியுள்ளதால் பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனப் புயல் பாதிப்பு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வைக்கும் கோரிக்கை நியாயமானது. அதனை உயர்கல்வித்துறை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பல இடங்களில் போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது. 
பாதிப்படைந்துள்ள சாலைகள், குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுவதில் தன்னார்வலர்களும் இளைஞர்களும் காட்டுகின்ற அக்கறையை ஆட்சியாளர்கள் காட்டுவதில்லை எனப் பொதுமக்கள் குமுறுகிறார்கள். 
அரசு அலுவலர்களும் அரசு ஊழியர்களும் இந்தப் பேரிடர் காலத்தில் மேற்கொண்டு வரும் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன. ஆனால், அவர்களையும் பணி செய்யவிடாதபடி ஆளுந்தரப்பினர் செய்யும் அடாவடிகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளன.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் திருமதி. செல்வி அவர்கள் மீது கீழ்வேளூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாக்குதல் நடத்தி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு, நிவாரணப் பணிகளை முடக்கியிருக்கிறார். இதுகுறித்து வட்டாட்சியர் வரை புகார் தெரிவித்தும், ஆளுங்கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் அனுமதிக்காததால், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 


ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்கை சீற்றமான கஜா புயல் தாக்கிய பிறகு காட்டப்படும் அலட்சியத்தால் செயற்கை சீரழிவுகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு, உடைமை இழப்பு, பயிர் இழப்பு எனப் பல வகை இழப்புகளை சந்தித்துள்ள புயல் பாதித்த பகுதிகளில் முறையான நிவாரணப் பணிகள் இல்லாத காரணத்தால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் உண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏற்கனவே டெங்கு - பன்றிக்காய்ச்சல் போன்ற கொடூர நோய்களுக்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், மர்மக் காய்ச்சல் என மறைத்த காரணத்தால் தமிழ்நாட்டில் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக புயல் பாதித்த பகுதிகளிலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ள நிலையில், மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.
மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை நேரில் காண்கிறேன். .குவிந்த கைகளும் கோரிக்கை மனுக்களுமாக கண்ணீர் வழியக் கதறுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆறுதல் கூறுகிறேன். அவர்களின் கோரிக்கைகளை ஆளுங்கட்சியிடம் எடுத்துரைக்கும் கடமையையும் உணர்கிறேன். பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்றத்தனமாக செயல்படும் நிலையில், களத்தில் இறங்கி செய்ய வேண்டிய நிவாரணப் பணிகளைக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பணிகள் மேலும் விரிவடைய வேண்டும். நம்மால் ஆனவற்றைச் செய்வோம். ஆணவத்துடன் செயல்படும் ஆட்சியாளர்கள் அதிலிருந்து பாடம் கற்கட்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்ட மக்கள் தக்க பாடம் கற்றுத் தருவார்கள்."

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...