bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 30 ஜனவரி, 2018

பலி வாங்கும் எம்.ஆர்.ஐ


மருத்துவர் ரவி

எப்படி பலி வாங்குகிறது  ஸ்கேன் எந்திரம்?
மருத்துவமனை லேப்களில் பயன்படுத்தப்படும் பல வகை ஸ்கேன் மெஷின்களில் முக்கியமானது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின். 
இதன் மூலம் உடலின் எந்த பாகத்தையும் நுணுக்கமாக ஆராயலாம். ஆனால், கொஞ்சம் ஆபத்தானதும்கூட. 
கவனக்குறைவாக இருந்தால் நம்மை உள்ளிழுத்து, உயிரையே எடுத்துவிடும். 
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினில், அதன் திறன், விலைக்கு ஏற்ப பல வகைகள் உள்ளன. `டெஸ்லா’ (Tesla) என்பது ஸ்கேன் மெஷினின் திறனைக் குறிக்கும் அறிவியல் சொல். 
0.5 டெஸ்லா முதல் 3 டெஸ்லா திறனுடைய ஸ்கேன் மெஷின்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. 
பூமியின் காந்தப்புலம் 0.5 காஸ் (gauss). 
ஒரு டெஸ்லா என்பது 10,000 காஸ். 
அப்படியானால், 0.5 டெஸ்லா என்பது 5,000 காஸ். 3 டெஸ்லா என்றால் 30,000 காஸ். இதிலிருந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் காந்த ஈர்ப்பு சக்தியை நாம் புரிந்துகொள்ளலாம்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள் டைட்டானியம், பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களைத் தவிர மற்ற அனைத்து உலோகங்களையும் ஈர்க்கக்கூடியவை. 
ஸ்கேன் அறைக்குள் பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட படுக்கை (MRI compatible Strecher) மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டும். மும்பையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனைஊழியர்களின் அலட்சியத்தாலேயே நடந்திருக்கிறது. 
மும்பை நாயர் மருத்துவமனையில் ராஜேஷ் மாருதி என்ற 32 வயது இளைஞருடைய  உறவினர் ஒருவரைச் சேர்த்திருந்தார்கள். 

உறவினர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது உறவினரின் ஸ்கேன் பயன்பாட்டுக்காக ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்திருக்கிறார் ராஜேஷ். அப்போது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இயங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. 

ஆக்ஸிஜன் சிலிண்டர் இரும்பாலானது என்பதால், ஸ்கேன் மெஷின் அதிவேகமாக அதை ஈர்த்திருக்கிறது. சிலிண்டரில் இருந்து நீர்ம நிலை ஆக்ஸிஜனும் அதே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. 
அதை சுவாசித்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு, 6 வயது சிறுவனை ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது, மெஷினின் காந்தப்புலத்தால் ஆக்ஸிஜன் சிலிண்டர் அதிவேகமாக ஈர்க்கப்பட்டது. 
சிலிண்டர் சிறுவனின் தலையில் மோதியதால், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 
இதேபோல இன்னொரு சம்பவம்... டெல்லியிலிருக்கும் மருத்துவமனையில் வேலை செய்பவர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டதில், அவரின் உள்ளுறுப்புகள் செயலிழந்தன. 
இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை.
 ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில்இதற்காகவே பல அடுக்குப் பரிசோதனைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்திருக்கிறோம். 
நோயாளிகளையும், உடன் வருபவர்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே, ஸ்கேன் அறைக்குள் அனுமதிக்கிறோம். 
ஸ்கேன் மெஷின் இருக்கும் அறையின் சுவர்கள், காந்தப்புலம் வெளியே செல்ல அனுமதிக்காத பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, மருத்துவமனை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் .
ஸ்கேன் அறைக்குள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. 
கைக்கடிகாரம், மோதிரம், சாவி கொத்துகள், ஹெட்போன்கள், சில்லறைக் காசுகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்த உலோகப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. 
குறிப்பாக வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றால், அவை செயலிழந்துவிடும். ஸ்கேன் அறைக்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினால்  அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
பொதுவாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இருக்கும் அறைக்குள் உலோகப் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. இதிலுள்ள மிக அதிகமான காந்தப்புலம், உலோகங்களை ஈர்த்துக்கொள்ளும். 
இதனால் பல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 
இதுபோன்ற விபத்துகள் பெரும்பாலும் ஆக்ஸிஜன் சிலிண்டரை ஸ்கேன் அறைக்கு எடுத்துச் சென்றதாலேயே நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் நிகழ்ந்த விபத்தும் இது போன்றதுதான்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...