bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 8 நவம்பர், 2018

இரண்டாம் ஆண்டு இரங்கல்.


இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, இன்றுடன் (நவம்பர் 8-ம் தேதி) இரண்டாண்டுகளாகிறது. 
 கடந்த எழுபதாண்டு இந்திய பொருளாதார வரலாற்றில் எடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய அரசியல் பொருளாதார முடிவாகும். இதன் விளைவுகள் அரசியல், சமூக பொருளாதார தளங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியள்ளன.

தொடக்கத்தில் இது கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு "துல்லியமான தாக்குதல்" (Surgical Strike) என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்துத்தரப்பு மக்களையும் துறைகளையும் தாக்கியுள்ள, மேலும் தாக்கிவிருக்கின்ற ஒரு "தரைவிரிப்பு குண்டு வீச்சு" (Carpet Bombing) என்றுதான் வர்ணிக்கவேண்டியுள்ளது.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு அரசால் சொல்லப்படும் காரணங்கள், நிலையானதாக இல்லை. தொடர்ந்து மாறிவந்துள்ளது.
நவம்பர் 2016ல் பிரதமர் உரையிலும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புகளிலும் சொல்லப்பட்ட நோக்கங்கள் இரண்டு மட்டுமே:
1. கறுப்பு பணம் ஒழிப்பு,
2. கள்ளப் பண ஒழிப்பு. இதற்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும் ஒரு நோக்கமாகச் சொல்லப்பட்டது.
அதற்குப் பின்னர் இந்த நடவடிக்கை குறுகிய காலத்தில் துன்பத்தை கொடுத்தாலும் நீண்ட காலத்தில் பலன் கொடுக்கும் என்று சொல்லப்பட்டது.
இன்று வரை மத்திய அரசோ ரிசர்வ் வங்கியோ அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு நோக்கங்களில் எந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால், பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் அனைத்தும், அதாவது 15.44 லட்சம் கோடியும் கிட்டத்தட்ட வங்கிக்கு வந்துவிட்டது. இதன் பொருள் எந்த கருப்பு பணமும் பிடிக்கப்படவில்லை என்பதுதான்!
ஆனால், வங்கிக்கு வந்த பணம் அனைத்தும் வெள்ளையானது அல்ல என்று ஒரு வாதம் வைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது தெரியவில்லை.


சொத்துக்களாகவும் வெளிநாட்டு வங்கிகளில் அந்நிய செலவாணிகளாகவும் இருக்கும் கறுப்பு பணத்தை எடுக்க அரசு முயற்சிக்காமல் இந்தியாவில் ரொக்கமாக உள்ள சிறு அளவிலான கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதாக சொல்லி இவ்வளவு பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் மற்றும் கடன் அட்டை மூலமான பரிவர்த்தனை இந்த நடவடிக்கை மூலமாக உயர்ந்துள்ளது ஒரு நன்மையாகும். ஆனால், இந்த நடவடிக்கையின் அடிப்படை நோக்கம் அதுவல்ல.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாம் அடைந்த பலன்கள் எதுவும் பெரிய அளவில் இல்லாத நிலையில் பாதிப்புகள் கடுமையாக உள்ளன.
ஓட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்நடவடிக்கை காரணமாக 7.9 விகிதத்தில் இருந்து (Q2 2016) 5.7 விகிதத்திற்கு (Q2 2017) குறைந்துள்ளது. இதையே பழையமுறையில் கணக்கிட்டால் Q2 2017ன் வளர்ச்சி விகிதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே.
இது ராஜி கிருஷ்ணா என்ற பொருளியல் அறிஞர் குறிப்பிட்ட "இந்து வளர்ச்சி விகிதத்திற்கு" அதாவது முப்பது, நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
2007-2008 உலக பொருளாதார சரிவுக்குப் பின் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த வண்ணம் இருந்தது. ஆனால், தற்போது உலக பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரும்போது இந்திய பொருளாதாரம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
தொழில் துறை, விவசாயத் துறை, ஏற்றுமதி என்று அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முறைசாரா துறைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறுகிய காலத்தில் சிறு குறு வர்த்தகர்களும் உற்பத்தி நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விவசாயம் போதுமான கடன்பெறும் வசதி இல்லாமல் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக எல்ல மாநில அரசுகளும் வரி வருவாயை இழந்து வருகின்றன. அரசு செய்யவேண்டிய பல நடவடிக்ககைளில் தடை ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணப் பட்டுவாடா செய்யமுடியாமல் பல மாநில அரசுகள் தவிக்கின்றன.
மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் தவிப்பதை செய்தித்தாள்கள் எழுதித் தீர்த்துவிட்டன. வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை மக்கள் குறைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை இந்திய பொருளாதாரம் நீண்ட கால மந்த நிலையில் இருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கயைின் அடிப்படை நோக்கமான கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு ஆகியவற்றில் எந்த வெற்றியும் அடையாத சூழலில் இந்த பாதிப்புகள் நமக்கு தேவைதானா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆனால் இந்த நடவடிக்கையிலிருந்து இனிமேலாவது நாம் சில படிப்பினைகளைப்பெற வேண்டும். அதில் முக்கியமான ஒன்று பொருளாதார அறிஞர்களின் ஆலோசனையின்றி எந்த ஒரு பெரிய பொருளாதார கொள்கை முடிவுகளையும் அரசு எடுக்கக் கூடாது.
உயர் மதிப்புப் பணத்தாள்களைச் செல்லாது என்று அறிவிப்பது இந்தியாவிற்குப் புதிதல்ல !.
1946இல் கறுப்புப்பணம் பெருகியதால் பிரித்தானிய அரசு 10 பவுண்ட் மதிப்புள்ள பணத்தைச் செல்லாது என முதன்முறையாக அறிவித்தது. அப்போது ஒரு பவுண்ட் என்பது 1.25 அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது. 
1978இல் மொரார்ஜி தேசாய் அரசு ரூ. 10000, ரூ. 5000, ரூ. 1000 பணத் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது.
இவ்விரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவே இல்லை. 1946ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த 70 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலர் 65 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
2016 நவம்பர் 8ல் பிரதமர் மோதி ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். பொருளாதாரக் கோட்பாடுகளின்படி பணம், பரிவர்த்தனை, முன்னெச்சரிக்கை, யூக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இக்கருத்தின்படி பொருளாதாரத்தில் பணத்தின் சுழற்சி இருந்து கொண்டே இருக்கும். 132 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் பெரிய சந்தையாகக் கருதப்படுகிற இந்தியாவில் முன்னெச்சரிக்கை, பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்காகப் பணத்தைக் கையாள்வோர் 90 விழுக்காட்டினர். எஞ்சிய கறுப்புப் பணக்காரர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தை வரிக்கட்டாமல், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கியுள்ளனர்.
இந்தியாவில் கறுப்புப்பண அளவைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. செல்வாக்குமிக்க அரசியல் தலைமையிடமும், உயர் அதிகாரிகளிடமும் உள்ள ரகசியத் தொடர்பு காரணமாக பணம் பதுக்குவோரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடியவில்லை.
2013ல் தேசியப் பொது நிதியியல் மையம் (National Institute of Public Finance and Policy) அன்றைய நிதியமைச்சரிடம் இந்தியாவில் ஆண்டுதோறும் 23 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது என்ற அறிக்கையை அளித்தது. ஆனால், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுங்கூட, அது தொடர்பான முழுவிவரங்களை நடுவணரசு வெளியிட மறுக்கிறது.
பனாமா தீவுகளிலுள்ள பணத்தின் அளவை 190 ஊடகங்களின் கூட்டமைப்புதான் கண்டுபிடித்து வெளியிட்டது. 2016இல் வந்த புள்ளிவிவரங்களின்படி சேனல், பிரித்தானிய வெர்ஜின், கேமன், வனட்டு நாட்டுத் தீவுகள், பஹரைன், நவுரு நாடுகளில் பெருமளவு கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையின் முன்னாள் உயர் அலுவலரும், தேசியப் பொது நிதியியில் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் தீக்'த் சென் குப்தா இந்து நாளிதழில் (ஏப்ரல் 11,2016) குறிப்பிட்டுள்ளார்.
The Drivers and Dynamics of Illicit Financial Flows from India: 1948-2008 என்ற ஆய்வறிக்கையில் இந்தியாவினுடைய கருப்புப்பண நடவடிக்கைகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன. மொத்த சட்ட விரோத சொத்துக்களில் 72.2 விழுக்காடு - 32 இலட்சம் கோடி - அளவிற்கு வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் 27.8 விழுக்காடு - 12 இலட்சம் கோடி - அளவில் பதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பெரும் முதலாளிகளே உள்ளனர்.
இந்தப் பின்னணியில் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகப் பணத்தைப் பயன்படுத்தியவர்களும், தங்களின் சிறுசிறு வணிக நடவடிக்கைகளுக்காகவும். முன்னெச்சரிக்கை நோக்கத்திற்காகவும் சேமித்த விவசாயிகள், சிறுகுறு தொழில் முயல்வோர், நடுத்தரப் பிரிவினர் நவம்பர் 8, 2016ல் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
2017ல் ரிசர்வ் வங்கி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக சுழற்சியிலிருந்த 15.28 இலட்சம் கோடி ரூபாய் பணம் (99 விழுக்காடு) மீண்டும் வங்கிகளுக்கே வந்துவிட்டதாக அறிவித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுழற்சியில் இல்லாத, கணக்கில் வராத பணத்திற்கு இந்நடவடிக்கையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதற்குச் சான்றாக, உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 2016இல் அமெரிக்காவின் கோடீசுவரர்கள் 4.6 விழுக்காடும், ஐரோப்பிய நாடுகளில் 1.2 விழுக்காடும், ஆசியா நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முறையே 22.15 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில் பணக்காரர்களின் செல்வமும் வளமும் உயர்வதற்கு இப்பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இருந்திருக்கலாம். மேலும். ஒரு விழுக்காடு பணக்காரர்கள் 21 விழுக்காடு செல்வத்தையும் பணத்தையும் வைத்திருப்பதாக ஆய்வு புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.
2014-15ல் இந்தியாவினுடைய தொழில் உற்பத்தி 5 விழுக்காடாக இருந்தது. 2015-16இல் 3.3 விழுக்காடாகக் குறைந்து 2016-17இல் 4.6 விழுக்காடாக சிறிதளவே உயர்ந்துள்ளது. உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் உள்நாட்டு சேமிப்பு வீதம், குறிப்பாக, குடும்ப சேமிப்பு 23.5 விழுக்காடாக இருந்தது 2015-16ல் 19.2 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது
உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதியின் அளவும் குறைந்து வருகிறது. தனியார், பொதுத்துறைகளில வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. ஆனால், பல இடர்களைச் சந்திக்கும் வேளாண் துறையின் பங்கு நாட்டின் சரியவில்லை. இந்தியாவில் தொன்றுதொட்டு இயங்குகின்ற நெசவு, கைவினைத் தொழில்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இதனால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
பன்முக வறுமையின் அளவு இந்திய மக்கள்தொகையில் 50 விழுக்காடாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிய 50 தனியார் நிறுவனங்கள் 15 இலட்சம் கோடிக்கு மேல் திரும்பச் செலுத்தாததால் வாராக்கடனாக மாறியுள்ளது. இதனால் வங்கிகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குக் கடன் வழங்க இயலவில்லை.
வங்கித்துறையில் ஏற்பட்ட தொய்வைச் சரி செய்வதற்கு 1.35 லட்சம் கோடியை மூலதனமாக நடுவணரசு அறிவித்துள்ளது. இது யாருடைய பணம்? ஏழை தொடங்கி எல்லோரும் அளிக்கும் வரிப்பணத்தின் ஒரு பகுதியாகும்.
மேற்கூறிய புள்ளிவிவரங்கள் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முழு அளவில் தோல்வியடைந்ததையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
                                                                                                                                                      -மு. நாகநாதன்,க. ஜோதி சிவஞானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...